Author: சேட்டைக்காரன்

  • வரிவடிவங்கள்–’நெவர்தலெஸ்’ சீவாகன்

    வேணுகோபாலன்

    நடாத்தூர் சீனிவாச ராகவன்! முதல்முறையாக வந்த மின்னஞ்சலைப் பார்த்தபோதுதான், எல்லாரும் விதிவிலக்கின்றி ‘சீவாகன்’ என்று அழைத்து வந்தவரின் நிஜப்பெயர் தெரிய வந்தது. தன்னை எல்லாரிடமும் ‘சீவாகன்’ என்றுதான் அவரே அறிமுகம் செய்துகொள்வார். கேட்பதற்கு வினோதமாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறதே என்று முதலில் கேட்பவர்கள் புருவத்தை உயர்த்துவது வாடிக்கை!

    ”என்  நெஜப்பேரு கொஞ்சம் நீளம் ஜாஸ்தி! அப்பல்லாம் எல்லாருக்கும் நிறைய ஓய்வு இருந்திருக்கணும். இல்லாட்டா ஒரு சின்னக்குழந்தைக்கு இவ்வளவு பெரிசா பேரு வைச்சிருப்பாங்களா?” என்று அவரே, மற்றவர்களின் வியப்பைக் கண்டறிந்தவர்போல சொல்லிச் சிரிப்பார். சீவாகனின் சிரிப்பு வசீகரமாக இருக்கும். வெற்றிலை, புகையிலை புழங்கியிராத வாயென்பதால், பற்கள் விளம்பரத்தில் காண்பிக்கப்படுபவைபோல சுத்தமாக, பளிச்சென்றிருக்கும். உதடுகள் பெண்களைப் போன்று அடர்சிவப்பாக, அதிகம் வெடிப்புகளின்றிக் காணப்படும். பெரும்பாலும் கண்ணாடியை சட்டைப்பையிலேயே வைத்திருப்பார். தலை முற்றிலும் நரைத்திருந்தபோதிலும், பின்மண்டையில் அடர்த்தியாக, சீப்பின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அடங்கிப் படிந்து காணப்படும்.

    நெற்றியின் பரப்பளவை செங்குத்தாகப் பிரிப்பதுபோல, சற்றே புருவமட்டத்துக்குக் கீழேயிருந்து தொடங்கி அவரது முன்வழுக்கை முடிந்து, மயிர்ப்பரப்பு தொடங்குமிடமிடம் வரைக்கும் துல்லியமாக ஒரு அடர்சிவப்புக்கோடு! சிரிக்கும்போது முகத்தில் தெரியும் சிற்சில சுருக்கங்களைக் கவனிக்காமல்விட்டால், அவர் ஒரு வங்கியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு, ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தில் இன்னும் பணிபுரிந்து கொண்டிருப்பவர் என்று சொல்வது கடினம். உடம்புவாகு அத்தனை திடகாத்திரம்!

    ஆங்கிலத்தில் ஒன்றும், தமிழில் ஒன்றுமாக இரண்டு செய்தித்தாள்களுடன் பழவந்தாங்கலில் ரயில்பிடிப்பார். வலதுபக்க மூலையிலிருக்கும் ஜன்னலோர இருக்கையில்தான் பெரும்பாலும் அமர்வார். எவரேனும் ஏற்கனவே அமர்ந்திருந்தால், அதிருப்தியுடன் புருவத்தை நெறித்துவிட்டு, வேறேதேனும் ஜன்னலோர இருக்கை கிடைக்குமா என்று பார்த்துவிட்டு, கிடைக்காவிட்டால் எவ்வளவு இருக்கைகள் காலியாக இருந்தாலும், வலதுபக்க ஜன்னலோர இருக்கை காலியாகும்வரை நின்றுகொண்டே வருவார். ”உட்காருங்களேன் சார்!” என்று யாரேனும் சொன்னால்கூட, திரும்பிப்பார்த்து ’உங்கள் கரிசனத்துக்கு நன்றி!’ என்பதுபோல ஒரு அரைப்புன்னகையை அளித்துவிட்டு, ‘இருந்தால் ஜன்னலோரம்; இல்லாவிட்டால் நின்றேதான் பயணம்’ என்று சபதம் மேற்கொண்டவர்போல, பிடிவாதமாக நின்றுகொண்டே வருவார்.

    ’நெவர்தலெஸ்’ – இது சீவாகன் அடிக்கடி உபயோகப்படுத்துகிற ஒரு வார்த்தை. எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தாலும், எப்படியாவது ஒரு பொருத்தமான இடத்தில் ‘நெவர்தலெஸ்’ என்ற வார்த்தையை, அபத்தமாக இல்லாமல் சொல்லி விடுவார். அதுதவிர, பெரும்பாலும் ஆங்கிலம் கலக்காமலே பேசுவார். சொல்லப்போனால், ஆங்கிலத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மட்டம்தட்டிப் பேசுவதில் அவருக்கு அலாதியான மகிழ்ச்சி ஏற்படும். சபைநாகரீகம் கருதி சில விஷயங்கள் பேசுகிறபோது, அதை ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, அதையே தமிழில் சொல்லியிருந்தால் எத்தனை அருவருப்பாக இருக்கும் என்று சிரித்துக்கொண்டே கேட்பார்.

    ”எல்லாத்துக்கும் ரொம்ப நாகரீகமா நாலு வார்த்தையைக் கண்டுபிடிச்சு வைச்சிருப்பானுங்க! என்னமோ நாள் முச்சூடும் அதை எல்லார்கிட்டேயும் சொல்லிட்டிருக்கப்போறா மாதிரி, அப்படியொரு பசப்பு! நேச்சர்ஸ் கால்னு சொல்லுவான்; மேக்கிங் லவ்னு சொல்லுவான்! உன்னைத் தவிர அடுத்தவனுக்குப் பத்து பைசா புரயோஜனம் இல்லாத சங்கதிக்கெல்லாம் தேடித்தேடி வார்த்தை கண்டுபிடிச்சு வைச்சிருப்பானுங்க! ஆனா, அவனைத்தான் ரொம்பவும் நாசூக்கானவன்னு நாமெல்லாம் சொல்லிட்டிருக்கோம்!”

    எல்லா ரயில் நிலையங்களில் ஏறுகிறவர்களிலும் ஓரிருவராவது சீவாகனுக்குப் பரிச்சயமானவர்களாக இருப்பார்கள். அதில் நிறைய பெண்மணிகளும் இருப்பதுண்டு. சட்டென்று சினேகிதம் பிடிப்பதில் கெட்டிக்காரர். பக்கத்திலோ எதிரிலோ எவரேனும் உறங்கிக்கொண்டு வருவதைப் பார்த்தால், அவர்களை உறங்கவிடாமல் எதையாவது யாருடனாவது உரக்கப் பேசி, அவர்கள் சட்டென்று கண்விழித்து மலங்க மலங்க விழிப்பதைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்.

    ”என் கணக்குப்படி ஒவ்வொரு டிரெயின்லேயும் குறைஞ்சது ரெண்டு மூணு பேராவது தூங்கிட்டு அடுத்த ஸ்டேஷன்லே கண்முழிக்கிறவங்க இருப்பாங்க!” என்று ஒரு முறை சொன்னார். “ரயில் பிரயாணத்துலேயே இப்படி அசட்டையா இருக்கிறவன், வாழ்க்கையிலே என்னத்தைக் கிழிச்சிடப்போறான்?”

    கடற்கரை ரயில் நிலையம் வரைக்கும், இரண்டு செய்தித்தாள்களும் மடக்கியது மடக்கியபடியே இருக்கும். ஒரு முறைகூட பயணத்தில் அவர் வாசித்துப் பார்த்ததாக ஞாபகமில்லை. யாராவது இரவல் கேட்டாலும் தர மாட்டார். யோசித்துப் பார்த்தால், அவரிடம் செய்தித்தாள் இரவல் கேட்டு, அவர் ‘முடியாது’ என்பதுபோலத் தலையசைத்துவிட்டு, அழிச்சாட்டியமாக ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்த அந்த நாள்தான் அவரை முதலில் கவனித்து மனதில் பதிந்துகொண்ட நாள் என்பது புரிகிறது. ஆனால், நாளாவட்டத்தில் தினசரி அவரைப் பார்க்கப் பார்க்க, எதிர்பாராமல் ஒரு ரயில் சினேகம் உருவானபிறகு, அன்றைக்கு அவர் அப்படி நடந்து கொண்டதற்கும் ஏதாவது காரணம் வைத்திருப்பார் என்று தோன்றியது. சொல்லப்போனால், அவருடன் பேச ஆரம்பித்த சில நாட்களில், அவரிடம் காணப்பட்ட பல சுவாரசியங்களை அறிந்தபின்னர், அந்தச் சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கவேண்டிய அவசியமேயில்லையோ என்றும் தோன்றாமல் இல்லை.

    சீவாகனிடமிருந்து கற்றுக்கொள்ள நிறையவே விஷயமிருந்தன. குறிப்பாக, எவரையும் அவரவர் வழியில் சென்று நட்புறவாடுகிற சாதுர்யம்.

    ”என்னம்மா, மெடிக்கல் ஸ்டூடண்டா?” இப்படித்தான் ஒரு நாள், எதிரே அமர்ந்திருந்த அந்த இளம்பெண்ணின் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்து விசாரித்தார். அந்தப் பெண் திரும்பிப்பார்த்து, ‘ஆமாம்’ என்பதுபோலத் தலையாட்டிவிட்டு, அதற்குமேல் பேச விரும்பாதவள்போல முகம்திரும்பிக் கொண்டாள்.

    ”அனாடமி புஸ்தகத்தோட அப்துல் கலாம் புஸ்தகமும் படிக்கிறியாம்மா?” என்று அடுத்த கொக்கியைப் போட்டபோது, அந்தப் பெண் மீண்டும் திரும்பி, பதிலேதும் சொல்லாமல் புன்னகைத்தாள்.

    ”அப்துல் கலாம் டாக்டர்களுக்காக என்ன கண்டுபிடிச்சிருக்கார் தெரியுமோ?”

    இப்போது அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல, சீவாகனுக்குப் பக்கத்திலும் எதிரிலும் அமர்ந்திருந்த அனைவருக்கும் ஒரு திடீர் ஆர்வம் பொங்கியது. என்னவாக இருக்கும்?

    ”என்ன சார்?”  ‘தெரியாது’ என்று சொல்லவிரும்பாத அந்தப் பெண் வியப்புடன் கேட்டாள்.

    ”லாப்ரோஸ்கோபிக் சர்ஜரிக்குப் பயன்படுற ஒரு ‘கன்’ கண்டுபிடிச்சிருக்காரு தெரியுமா? அதுக்குப் பேரே கலாம் கன்!”

    ”இஸ் இட்?” அந்தப் பெண்ணின் பார்வையில் திடீரென்று மரியாதை அதிகரித்தது. தனக்குத் தெரிந்திராத ஒரு தகவல், இந்த ‘அங்கிளுக்கு’த் தெரிந்திருக்கிறதே என்ற வியப்பு.

    ’இதெல்லாம் உங்களுக்கு எப்படி சார் தெரியும்?’ என்று யாரோ கேட்க, ’இதெல்லாம் ஊருக்கே தெரிஞ்ச விஷயம். எனக்குத் தெரிஞ்சதுலே என்ன ஆச்சரியம்?’ என்று சொல்லி, ’இந்த மனிதர் பெரிய அறிவாளி போலிருக்கிறதே’ என்று மற்றவர்களுக்கு திடீரென்று ஏற்படும் பிரமிப்பை சட்டென்று அடக்கி, நானும் மற்றவர்களைப் போலத்தான் என்று சகபயணிகளோடு தன்னையும் சட்டென்று பிணைத்துக் கொண்டுவிடுவார். மறுமுறை, அந்தப் பெண் அதே நேரத்தில், அதே ரயிலில், அதே பெட்டியில் ஏறினால், வருஷக்கணக்காகப் பழகியவளைப் போல நேராக சீவாகனுக்குப் பக்கத்திலோ, எதிரிலோ அமர்ந்து அளவளாவ ஆரம்பித்து விடுவாள்.

    ”நேத்து புக் எக்ஸிபிஷன் போயிருந்தேன். மொத்தம் ஐநூறு ஸ்டால்னு சொல்றா.  நெவர்தலெஸ், அதுலே ஒரு ஸ்டால்லே இருக்கிற மொத்தப்புஸ்தகங்களையும் படிக்கிறதுக்கே இந்த ஆயுசு பத்தாது! இதுலே நான் நிறையப் படிச்சிட்டேன்; உனக்கு எதுவும் தெரியலேன்னு மனுசங்க பேசறதைவிடப் பெரிய கேலிக்கூத்து இருக்குமோ?”

    வயது, அந்தஸ்து எல்லாவற்றையும் தாண்டி, சீவாகனுக்கென்றே அந்த ரயில் பெட்டியில் நிறைய ரசிகர்கள். புதுக் கணினியோ, புது செல்போனோ, புதிய வாகனமோ எதுவாக இருந்தாலும் அவரிடம் வந்து சிலர் ஆலோசனை கேட்பார்கள். பெரும்பாலான விஷயங்களுக்கு உடனடியாக அவரிடம் ஆலோசனைகள் தயாராக இருக்கும். இல்லாவிட்டால் ‘உங்க ஈ-மெயில் ஐ.டி.சொல்லுங்க! நான் பார்த்துட்டு உங்களுக்கு விபரம் அனுப்பறேன்’ என்று சொல்லுவார். அனேகமாக அன்றிரவே அவரிடமிருந்து மின்னஞ்சல் சென்றுவிடும்.

    கோட்டையிலிருந்து கிளம்பியதுமே, இருக்கைகளிலிருந்து எழுந்துசென்று வாசல்பக்கமாகக் கம்பியைப் பிடித்து நிற்பவர்களைப் பார்த்துப் பரிகாசமாகச் சிரிப்பார் சீவாகன்.

    ”இது அவசரயுகம் அவசரயுகம்னு பயமுறுத்தறதுக்காகவே இப்படியெல்லாம் அனாவசியமா பதட்டப்படறா பாருங்க! இப்படித்தான் பஸ் ஸ்டாப்புலே, சினிமா தியேட்டர்லே, கோவில்லேன்னு எங்க பார்த்தாலும் தேவையில்லாம முண்டியடிக்கிறா! பீச் ஸ்டேஷன் வராமலா போயிடும்? இவங்கதான் இறங்காம இருக்கப்போறாங்களா? வேணும்னே டென்ஷன் ஆகி, நம்மளை நாமளே வருத்திண்டு, வாழ்க்கை இயந்திரமாயிடுச்சுன்னு பேசறதெல்லாம் எவ்வளவு பெரிய புரட்டு?”

    சீவாகன் கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்குவதுகூட அலாதியாக இருக்கும். ரயில் முழுதாக நின்றபிறகுதான், இருக்கையிலிருந்து எழுவார். எழுந்தபின்னர் கைகளை உயரத்தூக்கி சோம்பல்முறிப்பார்; நிதானமாக இறங்கி, பிளாட்பாரத்தில் இருக்கும் பெஞ்சுகளில் ஒன்றில் அமர்ந்து, பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து இரண்டுமடக்குக் குடிப்பார். பிறகு, சட்டைப்பையிலிருந்து கண்ணாடியை எடுத்து, கைக்குட்டையால் துடைத்து மாட்டிக்கொள்வார். பிளாட்பாரத்தில் பயணிகளின் நடமாட்டப் பரபரப்பு குறையும்வரைக்கும் பிடித்துவைத்த பிள்ளையார்போல அப்படியே அமர்ந்திருப்பார். ஏறக்குறைய பிளாட்பாரம் காலியானதும், மெதுவாக எழுந்து இரண்டு பேண்ட் பாக்கெட்டுகளிலும் கையை நுழைத்துக்கொண்டு, ஓரடிக்கு அரையடியாக மெதுவாக நடந்து வெளியேறுவார்.

    இந்த மனிதருக்குப் பதட்டமே வராதா? எப்போதும் இப்படித்தானா?

    ஒரு நாள்!

    கிண்டி ரயில் நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்த வண்டி திடீரென்று கிறீச்சிட்டு நின்றது. வாசலருகே நின்றுகொண்டிருந்தவர்கள் பதற்றத்துடன் பேசுவதிலிருந்து, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யாரோ ஒருவர்மீது ரயில் மோதிவிட்டதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

    ’அடப்பாவமே!’ என்று உச்சுக்கொட்டியபடி, தற்செயலாக சீவாகனைப் பார்த்தபோது, அவர் முகத்தில் வியர்வை துளிர்த்திருந்தது. கண்கள் லேசாகச் செருகிக்கொள்ளத் தொடங்கியிருந்தன. என்னவென்று புரிந்துகொள்வதற்குள், சட்டென்று மூர்ச்சையாகிக் கீழே விழுந்தார் சீவாகன். தண்ணீர் தெளித்து அவரை சுயநினைவுக்குக் கொண்டுவந்தபோது, மெதுவாகக் கண்திறந்து அவர் கேட்ட முதல் கேள்வி:

    ”டிரெயின் கிளம்பிடுச்சா இல்லே அங்கேயேதான் நிக்குதா?”

    ”இன்னும் கிளம்பலை சார்! என்னாச்சு சார்? ஏன் மயங்கிட்டீங்க?”

    சீவாகன் பதில் சொல்லவில்லை. ஆனால், பின்னால் யாரோ ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்தது மட்டும் காதில் விழுந்தது.

    ”அவரோட சம்சாரம் ரயில்லே அடிபட்டுத்தான் இறந்தாங்களாம். பழவந்தாங்கல் ஸ்டேஷன்லே….!”

    *********

    Share
  • வரிவடிவங்கள்-பல்லில்லி்!

     

    சேட்டைக்காரன் (எ) வேணுகோபாலன்

    அவன் பெயர் ஒன்றும் எல்லாரும் அழைப்பதுபோல ‘பல்லில்லி’ இல்லை; பாலகிருஷ்ணன் என்று அழகான பெயர். இந்த ‘பல்லில்லி’ என்ற பெயரை யார், எந்தக் காரணத்திற்காக வைத்தார்கள் என்பதையெல்லாம் சரியாக நினைவுபடுத்திச் சொல்ல முடியவில்லையென்றாலும், அப்படித்தான்  எல்லாராலும் அழைக்கப்பட்டான். இல்லாவிட்டாலும் அவனை யார் எந்தப் பெயரைச் சொல்லி அழைத்தாலும், அவன் திரும்பிப் பார்த்திருப்பான். ஒரு விசில்; ஒரு கைதட்டல் அல்லது ஒரு ‘டேய்’ அவனைத் திரும்பிப் பார்க்க வைக்கப் போதுமானதாக இருந்தது. அனேகமாக அவனுக்கே தனது இயற்பெயர் பாலகிருஷ்ணன் என்பது மறந்திருக்கலாம். ஒருவேளை, அவனுக்குப் பெயரே வைக்கப்பட்டிருக்கவில்லை என்று சொன்னாலும் அவன் கவலைப்பட்டிருக்க மாட்டான் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. அவன் போன்றவர்களுக்கு எப்படி உயிரும் உணர்ச்சியும் இருக்கிறது என்பதை பலரால் உதாசீனப்படுத்த முடிகிறதோ, அதே மூர்க்கத்தனத்துடன் அவனது பெயரையும் அலட்சியப்படுத்த முடிந்திருந்தது. பெரும்பாலானோர் அதைத்தான் செய்தார்கள்

          அவனுக்கும் ஒரு இயல்பான கடந்தகாலம் இருந்தது. பாலகிருஷ்ணன் ஐந்தாம் வகுப்புவரை படித்திருக்கிறான். வயதுக்கு மீறிய உயரம்; மாநிறம்; சுருள்முடியில் அழகாக வகிடெடுத்துக் கொண்டு வருவான். பெரிய படிப்புக்காரனெல்லாம் கிடையாது என்றாலும், தினசரி முதல் மணியடிப்பதற்குள் வகுப்புக்குள் உட்கார்கிற மாணவர்களுள் அவனும் ஒருவனாய்த் தானிருந்தான். பள்ளிக்கூடத்தின் வாசலில் ஈ மொய்க்கிற சவ்வு மிட்டாய், வெள்ளெரிப்பிஞ்சு, மாங்காய் ஆகியவற்றின் மீது ஈர்ப்பில்லாமல், பள்ளி முடிந்ததும் அமைதியாக வீடுதிரும்புவான். கிரிக்கெட், கபடி, கோகோ எதிலும் கலந்து கொள்ள மாட்டான். இயல்பாகவே, அவனுக்கு சினேகிதர்களே இல்லாமல் போனதில் வியப்பொன்றுமில்லை

          ஆனால், அது கடந்தகாலம்!

          இப்போது அவன் முன்னைக் காட்டிலும் உயரம்; உடம்பு கொஞ்சம் மெலிந்து விட்டிருந்தது. பள்ளிக்கூடத்துக்குப் போன காலங்களில் அவனது தோற்றத்தில் தென்பட்ட பொலிவு இப்போது கிடையாது. சில சமயங்களில் ஒரே சட்டை, கால்சராயைப் போட்டுக்கொண்டு அவன் நாட்கணக்கில் சுற்றிக் கொண்டிருப்பான். அவனைப் பார்த்தால் பெண்களும் குழந்தைகளும் ஒதுங்கிச் செல்வார்கள் என்றாலும் அவன் எவருக்கும் எந்த இடையூறும் செய்ததில்லை. சொல்லப்போனால், அவன் தான் பற்பல இடையூறுகளுக்கு இலக்காகி விட்டிருந்தான்.

          இப்போது பல்லில்லியை எந்தத் திண்ணையில் வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் உட்கார வைத்து அவனைப் பேசவைத்து வேடிக்கைப் பார்க்கலாம். மீசை அரும்பத் தொடங்கியவர்கள் முதல் அவனைக் காட்டிலும் இளையவர்கள் வரையில் நிறைய பேர், பேதமில்லாமல் அவனை அழைத்து அருகில் உட்காரவைத்து, அவனைத் தங்களது கேளிக்கைக்குப் பயன்படுத்திக்கொள்வர்.

          ”டேய் பல்லில்லி! கண்ணன் சித்தப்பா பாட்டுப் பாடுறா…”

          இந்த நேயர் விருப்பம் அடிக்கடி நிகழ்ந்தேறும். அழைத்ததும் ஓடிச்சென்று, கேட்டவுடன் தயக்கமின்றிப் பாடுவான் பல்லில்லி!

          ”கண்ணன் சித்தப்பா!

         கருப்பட்டி தின்னாரு

         எப்படித்தின்னாரு…..

         ட்ச்..ட்ச்..ட்ச்…ட்ச்…..” என்று கண்ணன் சித்தப்பா கருப்பட்டி தின்னதை அபிநயித்துக் காட்டுவான்.  நேயர் விருப்பம்  கேட்டவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ‘இன்னொரு வாட்டிப் பாடிக்காட்டுறா…’ என்று ஒன்ஸ் மோர் கேட்பவர்களும் உண்டு. எத்தனை பேர், எத்தனை முறை கேட்டாலும் சங்கோஜப்படாமல், சந்தோஷமாகப் பாடுவான் பல்லில்லி.

          ”டேய், வாசு சித்தப்பா பாட்டு பாடுறா…!” என்று யாராவது கேட்பார்கள். உடனே சுற்றியமர்ந்திருக்கும் பட்டாளமே விசிலடிக்கும்; உற்சாகக்கூச்சலிடும்.

          ”மாட்டேன்!” என்று நாணுவான் பல்லில்லி. எல்லாரும் அவனை வற்புறுத்துவார்கள்; ஆசை வார்த்தை சொல்லுவார்கள்.

          ”பாடுறா டேய்! கதலிப்பழம் வாங்கித்தர்றேண்டா!”

          ”கடலை மிட்டாய்…?”

          ”சரி, கடலை மிட்டாய் வாங்கித்தர்றேண்டா…..!”

          ”ஒரே ஒரு வாட்டிதான் பாடுவேன்…!” பல்லில்லி நிபந்தனை விதிப்பான்.

          ”சரி, பாடு!”

          ”வாசு சித்தப்பா…

          $@!#*&$%^@!#!@#$&@!

          $@!#*&$%^@!#!@#$&@ “

          சுற்றியிருக்கும் கூட்டம் குபீரென்று சிரிக்கும். அந்தச் சிரிப்பொலியைக் கேட்டு, அந்தந்தத் திண்ணைக்குரிய வீட்டிலிருந்து எவராவது வெளிப்படுவார்கள்.

          ”டேய், என்னடா சத்தம் இங்கே? டேய் பல்லில்லி, கிறுக்கா, எந்திரிச்சிப் போடா…போடா அறிவுகெட்டவனே….!”

          பல்லில்லி போகாமல், சிரித்துக் கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்து தானும் விழுந்து விழுந்து சிரிப்பான். அவனுக்கு சற்றுமுன் தான் பாடிய பாட்டின் விபரீதமான பொருள்பற்றிக் கிஞ்சித்தும் தெரியாது. பொழுதுபோகாமல் ஊர்சுற்றித்திரிகிற கும்பல்களுக்கு, தான் ஒரு இலவசமான கேளிக்கையாக இருப்பதும், அவர்களில் சிலர் தனக்குக் கற்றுத்தருகிற சில சங்கதிகளில் வக்கிரம் தோய்ந்து கிடப்பதும், அதையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கேட்டு, அந்த அருவருப்புகளையே தனது அடையாளங்களாக்குவதும் – எதுவும் தெரியாது. சொல்லிப் புரிய வைக்கவும் முடியாது. காரணம் எதுவென்றால், மருத்துவ விபரங்களுக்குள் போகாமல் ஒற்றை வார்த்தையில், அவனுக்கு ‘கிறுக்கு’ பிடித்திருந்தது; அவ்வளவுதான்!

          மாசி மாதத் திருவிழா பத்து நாட்கள் நடக்கும். ஏழாவது நாளன்று ’சப்பரம்’ என்று சொல்லப்படுகிற அலங்கரிக்கப்பட்ட மேடையில், நடராஜரின் திருவுருவத்தை வைத்துக் கொண்டு ‘தில்லையம்பலம்… திருச்சிற்றம்பலம்… ஆடினாரே… ஆடினாரே..’  என்று சுமந்து வருகிறவர்களும் ஆடியவாறே தேரோடும் வீதிகளில் ஓடோடி வருவார்கள். ஒரு வருடம் தெருமுனை வரைக்கும் வந்த ஊர்வலம் உள்ளே வராமல் மாற்றுப்பாதையில் சென்றபோதுதான், பாலகிருஷ்ணனின் அம்மா இறந்த தகவல் பலருக்குத் தெரிய வந்தது.

          அன்று அதிகாலை எழுந்து, கோவில் குளத்தில் குளித்துவிட்டு, அரசமரத்தை வழக்கம்போல் சுற்றிவந்துவிட்டு, முத்தாரம்மன் கோவிலில் எண்ணை விளக்கேற்றிவிட்டு, வீட்டுக்கு வந்தவர் அடுத்த சில நிமிடங்களில் தன் மேல் மண்ணெண்ணையை ஊற்றிப் பற்றவைத்துக் கொண்டு இறந்துபோனார் என்ற செய்தி ஊரெங்கும் பரவியது. ‘ஏன்?’ – இந்த ஒற்றைக் கேள்விக்கு அவரவர் தங்களது அனுமானங்களுக்கேற்ப பல பதில்களைப் பரப்புரை செய்து கொண்டிருந்தனர் என்றாலும், அந்தத் துயரசம்பவத்தின் உண்மையான காரணம் எதுவென்று யாராலும் சரிவர ஊகிக்க முடியவில்லை. அன்றுமுதல் பாலகிருஷ்ணன் பள்ளிக்கூடம் போவதை நிறுத்திவிட்டான் என்பது மட்டும் சகமாணவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அவன் வீட்டை விட்டு வெளியே வராமலிருந்ததுதான் அவன் தாயாரின் மரணத்தைக் காட்டிலும் பெரிய மர்மமானது.

          அவனது வயதுக்காரர்கள் அவனை ஏறக்குறைய மறந்துவிட்ட நிலையில், திடீரென்று பாலகிருஷ்ணன் வெளியே மீண்டும் நடமாட ஆரம்பித்தான். அந்தக் காலகட்டத்தில் தான், முதலில் அதிர்ச்சியூட்டினாலும் நாட்பட நாட்பட பலரின் அனுதாபத்துக்கும் சிலரின் எள்ளலுக்கும் ஆளான அவனது நடவடிக்கைகள், அவனை பாலகிருஷ்ணனிலிருந்து பல்லில்லி ஆக்கின என்று சொல்லலாம். உண்மையில், அந்தப் பெயருக்கு எந்தப் பொருளும் கிடையாது. அவனுக்குச் சூட்டப்பட்ட பட்டப்பெயரும் அவனைப்போலவே குறிக்கோளற்றதாக அமைந்தது.

          திருமணமோ, திருவிழாவோ, ஊர்வலமோ எதுவாயிருந்தாலும் சரி, மேளக்காரர்களுக்குப் பின்னால் சிரித்தபடி ஆடிக்கொண்டே போவான். தெருவில் சுற்றித்திரியும் மாடுகள் வாலைத்தூக்கி அசுத்தம் செய்யும்போது குலுங்கிக் குலுங்கி உரக்கச் சிரிப்பான். காய்கறி விற்பவர்கள் பின்னாலேயே சென்று அவர்களைப் போலவே குரலெழுப்பியபடி தொடர்வான். தபால்காரருடன் தெருவின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று ‘சார் போஸ்ட்’ என்று குரல் கொடுப்பான். இப்படி, இன்னும் அவனது வினோதமான நடவடிக்கைகளின் பட்டியலின் நீளம் மிகவும் அதிகம். ஆரம்பத்தில் அனுதாபம் காட்டியவர்களும் பின்னாளில் ஏனோ அவனை அயர்ச்சியுடன் பார்த்தனர் என்பதை மறுப்பதற்கில்லை.

          அன்று தெருவில் விறகுவண்டிகள் வந்து போயிருந்தன. பல வீடுகளின் வாசலில் விறகுத்தடிகள் இறக்கப்பட்டிருக்க, கோடாரியால் பெரிய பெரிய தடிகள் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தன. எங்கள் வீட்டு வாசலிலும் விறகு வந்து இறங்கியிருந்தது. விறகுவெட்டி வியர்க்க விறுவிறுக்க வேலை செய்து கொண்டிருப்பதை பல்லில்லி வேடிக்கை பார்த்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தான்.

          விறகுவெட்டி ஒவ்வொரு முறையும் கோடாரியை உயர்த்தும்போது தலையைத் தூக்கி, அது வேகமாக விறகின் மீது விழும்போது தலையை அதே வேகத்தில் இறக்கி, வாய்விட்டுச் சிரித்து, கைதட்டி மகிழ்ந்து கொண்டிருந்தான். அவனது நடவடிக்கைகள் புரியாமல் முதலில் சிரித்தபோது ‘ஐயோ பாவம், சிரிக்காதேடா’ என்று என் பாட்டி கண்டித்திருந்தார் என்பதால் குழப்பத்துடன் அவனையே ஜன்னலிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

          ”லேய், தள்ளி உட்காருலே! “ விறகுவெட்டி எச்சரித்துக் கொண்டிருந்தார். “கண்ணுலே சிலாம்பு ஏறுனா பெறகு கதை கந்தலாயிரும்…தள்ளி உட்காருலே!”

          பல்லில்லி தள்ளி உட்காராமல் சிரித்துக் கொண்டிருக்கவே, அந்த விறகுவெட்டி பொறுமையிழந்து அவனை வசைபாட ஆரம்பித்தார்.

          ”ஐயோ பாவம்!” என்றாள் பாட்டி. “தாயில்லாப் புள்ளே எப்படிச் சீரழியுது பாரு!”

           நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் விறகு வெட்டப்படுவதையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று, விறகுவெட்டியின் கோடாரியின் அதிரடியில் ஒரு பெரிய விறகுத்துண்டு ஜிவ்வென்று காற்றில் பறந்து பின்னால் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த பல்லில்லியின்  நெற்றியை ஒரு ஏவுகணை போலத் தாக்கியது.

          ”அம்மா!”

          புத்தி சுவாதீனமில்லாதவன், வலியில் அலறியதைக் கேட்டதும், ‘அம்மா’ என்ற அந்த ஒரு ஒற்றை வார்த்தையின் பொருள் எனக்கு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு மிக அழுத்தமாய்ப் புரிந்தது போலிருந்தது.

                   ***********

    படங்களுக்கு நன்றி:

    http://natarajar.blogspot.in/2008_06_01_archive.html

    Share