யோகக் கலையை வளர்த்தெடுத்த பதஞ்சலிமுனிவர்
—முனைவர் சி. சேதுராமன்.
யோகக் கலையை வளர்த்தெடுத்தவர்களுள் பதஞ்சலி முனிவர் குறிப்பிடத்தக்கவராக விளங்குகிறார். மக்களிடையே அவர் குறித்து பல்வேறு புராணக் கதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பதஞ்சலி முனிவரின் காலம் தொன்மையானது. இவர் வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாகவும் கூறுவர். இவரைப் பற்றிய புராணக் கதையொன்று மக்களிடையே வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றது.
பதஞ்சலி முனிவரைப் புராணங்கள் திருமாலின் படுக்கையாக விளங்கும் ஆதி சேஷனின் அவதாரம் என்று குறிப்பிடுகின்றன. திருமால் மண்ணுலகில் அவதாரங்கள் செய்ய வந்தபோது இவர் முனிவராக அவதாரம் செய்வதாகவும் கூறுகின்றனர்.
பதஞ்சலி முனிவரின் வரலாறு:
பாற்கடலில் பரந்தாமன் பள்ளிகொண்டிருந்தபோது அவர் சிவபெருமானின் நடனத்தைத் தன் மனக் கண்களால் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தார். திருமாலின் மகிழ்ச்சியால் அவரின் உடல் எடை திடீரென்று அதிகரித்தது. இதனை உணர்ந்து வியந்த ஆதிசேடன் இதற்கான காரணம் என்ன என்று திருமாலிடம் கேட்டார்.
ஆதிசேடனின் வினாவினைக் கேட்ட திருமால் அனைத்திற்கும் மூலாதாரமாக விளங்கக் கூடிய சிவபெருமானின் ஆனந்தமயமான நடனக் காட்சியை உள்ளத்தில் கண்டதையும் அதன் அருமை பெருமையையும் விளக்கமாக எடுத்துக் கூறி அதனால்தான் தான் மகிழ்ந்ததாகவும் அதன் காரணமாத் தன் உடல் எடை அதிகரித்ததாகவும் கூறியருளினார்.
திருமாலின் கூற்றைக் கேட்ட ஆதிசேடன் மனக்கண்ணில் கண்டு மகிழ்ந்ததே பெருங்களிப்பைத் தருமானால் இறைவனின் திருநடனத்தை நேரில் கண்டு வணங்கினால் எத்தகைய பரவச நிலை ஏற்படும் என்று உணர்ந்து தானும் இறைவனின் ஆனந்த நடனத்தைக் கண்டு வணங்க வேண்டும் என்று தனது விருப்பத்தைத் திருமாலிடம் எடுத்துரைத்தார்.
திருமாலும் தாம் கண்டு அனுபவித்து மகிழ்ந்த காட்சியை ஆதிசேடனும் கண்டு மகிழ வேண்டும் என்று எண்ணி அவரைச் சிதம்பரத்திற்குச் சென்று இறைவனைக் கண்டு வணங்கி வருமாறு கூறுகின்றார்.
இறைவனது ஆனந்த நடனத்தைக் கண்டு வணங்க விருப்பமுற்ற ஆதிசேஷன் தான் ஒரு முனிவரின் மகனாகப் பிறப்பதற்குத் திருவுளம் கொண்டார். அதன்படி ஆதிசேடன் பிரம்மாவின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவதாகத் திகழ்பவருமாகிய அத்திரி முனிவருக்கும் மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக்கிய அனுசூயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அதிலும் இவர் மனிதத் தலையும் பாம்பின் உடலும் கொண்டவராகப் பிறந்தார் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
பதஞ்சலி – பெயர்க்காரணம்:
தானும் நடன தரிசனம் காண எண்ணித் தவம் புரிந்தார் ஆதிசேஷன்.அவரைச் சோதிக்கத் திருவுள்ளம் கொண்டார் சிவபிரான். பிரம்மதேவனின் வடிவம் கொண்டு ஆதிசேஷன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் ? எனக் கேட்டார். அவரைப் பிரம்மதேவன் என எண்ணிய ஆதிசேஷன் உம்மால் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை எனக்கூறித் தவத்தில் கருத்தைச் செலுத்தினார். மகிழ்வடைந்த சிவபிரான் பின் தரிசனம் தந்தார். அவரைக் கண்டு வணங்கிய ஆதிசேடன் தான் தங்களது ஆனந்தத் தாண்டவ நடனத்தைக் காண வேண்டும். இதுவே யான் வேண்டும் வரம் என்றார். அதனைக் கேட்ட சிவபெருமான், “ஆதிசேடனே! நீ அத்திரி முனிவருக்கும் அனுசூயைக்கும் குழந்தையாய்ப் பிறந்து வளர்ந்து, சிதம்பரம் அடைவாயாக. அங்கே என் நடனக் காட்சியைக் காண்பதற்குத் தவம் செய்து கொண்டிருக்கும் வியாக்கிரபாத முனிவருடன் சேர்ந்து இருந்தால் அங்கே யாம் எம் நடன தரிசனம் தருகின்றோம்“ என்று இறைவன் அருள் செய்து மறைந்தார்.
அதன்படி ஆதிசேடன் அத்திரி, அனுசுயாதேவி இருவருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது பிறப்பு பற்றி வேறொரு கதையும் வழங்கப்படுவது சிந்தனைக்குரியது. சிவபெருமானின் வரம் காரணமாக ஆதிசேடன் ஒரு நாள் சிவபெருமானைத் தியானித்துக் கொண்டு இறைவனிடம் கையேந்திக் கொண்டிருந்த அனுசூயையின் கைகளில் விழுந்தார். அதனைக் கண்ட அனுசுயாதேவி ஆதிசேடனைச் சாதராணப் பாம்பென்று எண்ணித் தனது கையை உதறிவிட ஆதிசேடன் அனுசுயாதேவியின் பாதத்தில் விழுந்தார். இங்ஙனம் பாதத்தில் விழுந்ததாலும், இறைவனை வணங்கிக்(அஞ்சலித்த) கொண்டிருந்த கைகளில் விழுந்ததாலும் பதஞ்சலி எனக் காரணப் பெயர் பெற்றார் என்ற கதையும் வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு விழுந்த ஆதிசேடனைப் பின்னர் அனுசுயாதேவி தமது குழந்தையாக வளர்த்து வந்தார். பதஞ்சலி முனிவர் வளர்ந்தவுடன் இறைவனின் திருநடனத்தைக் காண்பதற்காகச் சிதம்பரம் நோக்கிச் சென்றார். அங்கு வியாக்கிரபாதருடன் சேர்ந்து சிவபெருமானின் திருநடனத்தைக் கண்டு மகிழ்ந்தார்.
இப்பதஞ்சலி முனிவர், திருமூலர் உள்ளிட்ட எண்மருக்கு யோகக் கலையினை நந்திதேவர் அருளிச் செய்ததாகவும் அவர்களிருவரும் நந்தியிடம் இருந்து கற்ற கலையை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகவும் கூறுகின்றனர். திருமூலர் இதனை,
“நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம்!”
என்று திருமந்திரத்தில் குறிப்பிடுகின்றார்.
நாட்டிய சாஸ்திரம் எழுதிய பதஞ்சலியும், யோகக் கலை எழுதிய பதஞ்சலியும், மஹா பாஷ்யம் எழுதிய பதஞ்சலியும் வேறு வேறு என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனாலும் இவற்றை எல்லாம் எழுதியது ஒருவரே என்பது அறிஞர் பலரின் முடிந்த முடிவாகும்.
பதஞ்சலி முனிவர் ஆதிசேடன் அவதாரமாகத் தோன்றியவர். அதனால் பதஞ்சலி முனிவரின் விஷமூச்சுக்காற்றுப் பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் மாணவர்களுக்கு நேரிடையாக அல்லாது அசரீரியாகவே கலைகளைக் கற்றுக் கொடுத்து வந்தார். மாணவர்களால் அவரைப் பார்க்க முடியாது.
இந்நிலையில் பதஞ்சலி முனிவருக்குத் திடீரென்று ஓராசை மனதினுள் எழுந்தது. தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலைத் தம்முடைய மாணவர்களுக்குத் தாமே நேரிடையாக இருந்து கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அவ்வாசையாகும்.
அவரது எண்ணப்படி பெரிய திரையொன்றைத் தமக்கும் மாணவர்களுக்கும் இடையில் தொங்கவிடுமாறு கூறினார். திரையைத் தூக்கி யாரும் தன்னைப் பார்க்கக் கூடாது என்று மாணவர்களுக்குக் கட்டளையிட்டார். அவரது ஏற்பாட்டின்படி பாடம் வெகு சுவையாகச் சென்று கொண்டிருந்தது. பலநாள்கள் மாணவர்கள் பாடங்கேட்டனர்.
இவ்வாறு இருக்கும்போது ஒருநாள் அம்மாணவர்களுள் கெளடபாதர் என்பவரை மட்டும் பணி காரணமாக வெளியில் அனுப்பிய பதஞ்சலி முனிவர் மற்ற மாணவர்களுக்குப் பாடஞ் சொல்லலானார். மாணவர்கள் தம்மை மறந்து பாடங்கேட்டனர். அப்போது அவர்கள் இத்தகைய ஆசிரியரைத் தாம் நேரிடையாகக் காணாது இருக்கின்றோமே மனத்தில் வருத்தம் எழத் திரையை விலக்கி அனைவரும் அவரைப் பார்க்க முடிவு செய்து அங்ஙனமே திரை விலக்கிப் பார்த்தனர்.
அப்போது பதஞ்சலி முனிவரின் பார்வையும் கடும் விஷமும் பட்டு அவர்கள் அனைவரும் எரிந்து சாம்பலாகிவிட்டனர். ஆசிரியர் கூறிய அனைத்துப் பணிகளையும் முடித்து அங்கு வந்த கௌடபாதர் அங்கு நிகழ்ந்ததை எண்ணி வருந்தினார். பின்னர் பதஞ்சலி அவரைத் தேற்றி அவருக்குத் தாம் கற்ற கலைகள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்.
கௌடபாதரும் தனது ஆசிரியரிடமிருந்து அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். பதஞ்சலி முனிவர் அதன் பின்னர் யோக சூத்திரத்தில் ஆழ்ந்து மூலாதாரத்தில் கனலை எழுப்பி யோகம்புரிந்தார். அப்போது அவரது ஆழ்மனதில் தனது ஆதிசேட அவதாரத்தின் மகிழ்ச்சியான காட்சியைக் கண்டு மெய்விதிர்விதிர்த்தார். சிவபெருமானைத் தியானித்து தில்லைச் சிதம்பரத்திலேயே இறைவனுடன் இரண்டறக் கலந்து சமாதிநிலை அடைந்தார். இவர் பாணினி சூத்திரத்திற்கு விளக்கவுரை (பாஷ்யம்) எழுதினார். பதஞ்சலி யோக சூத்திரம் என்னும் நூல் இவர் பெயரால் விளங்குகின்றது.
புஷ்ய மித்திரர் இவருடைய சம காலத்தவராகக் கருதப்படுகின்றார். புஷ்ய மித்திரரின் காலம் கி.மு.3-ம் நூற்றாண்டு என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அதனால் பதஞ்சலி முனிவரின் காலமும் கி.மு.3-ஆம் நூற்றாண்டு என்று கூறுவர். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான திருமூலரும் இவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாயும், பதஞ்சலி முனிவர் சமஸ்கிருதத்தில் எழுதிய மஹா பாஷ்யத்தின் தமிழாக்கம் தான் திருமூலரின் “திருமந்திரம்” என்று சொல்வோரும் உண்டு. ஆனால் இதற்கு அடிப்படையான சான்றுகள் ஏதும் இல்லை என்பது நோக்கத்தக்கது. இவை எல்லாமே யூகங்களின் அடிப்படையில் அமைந்தவை என்பது ஆய்வாளர்களின் முடிவாகும்.
திருமூலர் திருமந்திரம் என்பது யோகநெறிகளைக் குறிப்பிடுகின்றது. திருமூலர் திருமந்திரம் தனித்ததொரு யோக நூலாகத் திகழ்கின்றது. பதஞ்சலி முனிவரின் யோகசூத்திரம் யோகத்தை விளக்கும் யோகநூலாக விளங்குகின்றது. இருவரும் தனித்தனியே நூல்களை இயற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. பதஞ்சலி முனிவரின் யோகசூத்திரத்தைப் பார்த்தே திருமந்திரத்தை திருமூலர் எழுதினார் என்பது சற்றும் பொருந்தாத் தன்மையுடைய கூற்றாகும்.
பதஞ்சலி முனிவரும், திருமூலரும் கூறிய யோக நெறிகள் அவரவர் பெயர்களிலேயே கூறப்பட்டு வருகின்றன. எது எவ்வாறிருப்பினும் பதஞ்சலி முனிவரும் திருமூலரும் உலகிற்கு யோகநெறிகளை வழங்கிய பிதாமகர்களாக மூலவர்களாக விளங்குகின்றனர். இவர்களது யோகநெறிகள் உலக மக்களை உய்விக்க வந்த வாழ்க்கை நெறிகளாக விளங்குகின்றன.
____________________________________________________________________________________
முனைவர் சி. சேதுராமன்
தமிழாய்வுத் துறைத்தலைவர்
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை
Malar.sethu@gmail.com