இந்திய தணிக்கைத்துறையும், நானும்[3]
ஆட்டைத்தூக்கி…!

இன்னம்பூரான்
மார்ச் 13, 2016

joke16

தணிக்கைத்துறை சகலகலாவல்லவனாக இருக்கமுடியாது. ஒரு நாள் கல்லூரி ஆடிட்; அடுத்த நாள் நீர் பாசனம்; அடுத்த நாள் ஆசுபத்திரி;அடுத்த நாள் ராணுவ தளவாடங்கள். எல்லாம் வேஸ்ட் சார்! இது காமன் எரிந்த கட்சி. சார்! கணக்கு வழக்குப் பார்ப்பவனுக்கு நிர்வாகத்தை பற்றி என்ன தெரியும்? ரோடு போடமுடியுமா? பதிலடி கொடுப்போம் இல்லை! இது ரதியும் எரிந்த கட்சி! தணிக்கை செய்யப்பட்ட துறையுடன் ஆலோசனை செய்து, ஆடிட் திட்டமிடப்படுகிறது. அந்த துறையின் பதிலும் உள்ளடக்கம். நாங்கள் உள்ளதை, உங்கள் ஆவணங்களை ஆய்வு செய்து, சொல்கிறோம். எங்கள் அறிக்கையை, அக்கு வேறு, ஆணி வேறாக அலச, சட்டசபையின் பொது கணக்கு கமிட்டி இருக்கிறது. இது காமன் எரியாத கட்சி.

ஒரு பல்கலை கழகத்தின் நூலகம் சிதறி கிடைந்தது. நூல் வாங்க அளித்த பணத்தில் ஹாஸ்டலுக்கு அரிசி வாங்கினார்கள்; பாசனத்துக்கு சுழல்முறையில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். அது தவறினால், அநீதி நிகழும். ஒரு ஆசுபத்திரியில் செத்தவங்களுக்கு சோறு போட்டதாக கணக்கு எழுதினார்கள். போஃபோர்ஸ் பீரங்கி தெரிந்த கதை. கணக்கு வழக்குப் பார்க்கிறவன், தோட்டாவை காணவில்லையே பெட்டியில். நமது சிப்பாய் எதிராளியை தாக்கமுடியாமல் சுடப்படுவானே என்று அங்கலாய்த்தால், அதில் என்ன தவறு?

தணிக்கை என்பது காசுபணம் மட்டும் பார்க்காது. வச்ச காசுக்கு ஆதாயம் இருக்கிறதா என்று தோண்டிப் பார்க்கும். நாக்கை பிடுங்கிறாப்பல நாலு கேள்வி கேட்கும். தணிக்கைத்துறையின் பயிற்சிக்கூடம் 1955 வரை சென்னையில் இருந்தது. பின்னர் சிம்லாவில் அங்கு தான் எங்களுக்கு அக்னிப்பரிக்ஷை.

ஒரு அனுபவம். நான் இராணுவத்துறையில் பணிபுரிந்த போது, பொதுகணக்குத்துறையில் ஆடிட்டுக்கு எதிரணியில் பணி. உரிய நேரத்தில் முடிவு எடுக்காததால் பீர் விலை ஏறிவிட்டது. இத்தனை நஷ்டம் என்று ஆடிட் புகார். நஷ்டமில்லை. விலையில் கூட்டிவிட்டோம் என்று பதில் அளித்தார், ஹரீஷ் ஸரீன் ஐ.சி.எஸ். ஆடிட்டர் ஜெனெரல் ரங்கநாதனும் ஐ.சி.எஸ். ஆபீஸுக்கு வந்த பின் அந்த பதிலில் உள்ள தவறை ஹரீஷ் ஸரீனிடம் காண்பித்தேன். காலையில், முடிந்து போன கதையை மறுபடியும் எடுத்து, தவறை ஏற்றுக்கொண்டு, இரவே இந்த செலவை ஜவான் தலையில் கட்டக்கூடாது என்று எங்கள் தலையில் போட்டுக்கொண்டோம் என்றார், அவர். எல்லாரும் அதை சிலாகித்தார்கள். அந்த காலத்தில் எல்லாருமே மாரல் ஜட்ஜ்மெண்டில் குறியாக இருந்தார்கள். இது நிற்க.

மாஜி ராணுவவீரர்கள் நாள்தோறும் செத்துப்பிழைத்தவர்கள். எல்லாநாடுகளிலும் அவர்களுக்கு தனி மரியாதை, சலுகைகளும் உண்டு. இந்தியாவிலும் தான். ஆனால் நடந்ததை பாருங்கள். மாஜி ராணுவ வீரர்கள், அவரை சார்ந்த குடும்பம், பெற்றோர்கள் ஆகியோருக்கு [47.34 லக்ஷம்: ஏப்ரல் 2015] கைக்காசு செலவழிக்காத வகையில் மருத்துவ உதவி அளிக்க மத்திய அரசு 2002ல் ECDS என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.

சமீபத்தில் நடந்த ஆடிட் முடிவுகள்:

முதல் கோணல் முற்றும் கோணல்: உறுப்பினர்களுக்கு அடையாள சீட்டு அச்சடிக்கும் மிகவும் பொறுப்பான வேலையை ஐந்து வருடங்களுக்கு விதியை மீறி ஒரு நிறுவனத்துக்குக் கொடுக்கப்ட்டது. சந்தை விலையை பற்றி ஒரு விசாரிப்பு இல்லை. அதிகப்படி தண்டம் ரூ.6.69 லக்ஷம் வேறே!

இது இலவச பராமரிப்பு இல்லை. ஒரே தடவை-சந்தா காசு கட்டினால் தான் சிகிச்சை. வேறு செலவை மாஜிகள் தலையில் கட்டக்கூடாது; ஆனால் கட்டினார்கள். கேள்வி முறை இல்லையா?

டில்லியில் மட்டும், மாஜிகளின் சந்தாவில் பணிபுரியும் இந்த ECDSலிருந்து தற்கால ராணுவ மருத்துவ இலாக்காவுக்கு அனுமதியில்லாமல் செய்த செலவு: ரூ.40.78 கோடி. அதான் ஆட்டைத்தூக்கி மாட்டில் போட்டார்கள்!

பல பாலிக்ளினிக்களில் மருந்து பஞ்சம், வருடம் முழுதும்.

காலாவதியான மருந்துகளை தன் செலவில் ஒப்பந்தக்காரர் எடுத்து செல்லவேண்டும் என்று ஷரத்து. ஆனால், அவற்றை திருப்பி அனுப்பாததால் நஷ்டம்: ரூ.73.44 லக்ஷம்.

மற்றும் பல.

ஆடிட் ரிப்போர்ட்டை முழுதும் படித்தால், நான் குறிப்பால் உணர்த்தியது சொற்பம் என்று தெரியும். அது இலவசம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:http://3.bp.blogspot.com/-WMGqGIAUj0c/VJ1FJ7JubTI/AAAAAAAAP8E/rzVaZrxTRFE/s1600/joke16.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.