குறளின் கதிர்களாய்…(342)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(342)
சிறைநலனுஞ் சீரு மிலரெனினும் மாந்த
ருறைநிலத்தோ டொட்ட லரிது.
– திருக்குறள் – 499 (இடனறிதல்)
புதுக் கவிதையில்...
மக்கள் பாதுகாப்புக்கு
அரணாகிய நலனும் வலிமையும்
பிற சீரும் இலராயினும்,
அவர்கள்
இருக்கும் இடத்திற்கே
சென்று தாக்குதல்
மிகவும்
சிரமமான செயலாகும்…!
குறும்பாவில்...
அரணாம் நலனும் பிற சீர்களும்
இல்லாதவர்களானாலும் அவர்தம் இருப்பிடம் சென்று
தாக்குதல் மிகவும் அரிது…!
மரபுக் கவிதையில்...
மக்களுக் கரணாம் நலனுடனே
மற்றைச் சிறப்பெலாம் இலராயுள
அக்கம் பக்கம் நாட்டினரை
ஆற்றாப் பகைமை கொண்டேதான்
தக்க வகையில் தாக்காதவர்
தமதாம் இருப்பிடம் சென்றவரை
அக்கரை யோடே தாக்கிடுதல்
அரிது மிகவும் அரிதாமே…!
லிமரைக்கூ..
இல்லை அரணாம் நலனே,
சீர்பிற இலாரெனினும் அவரிருப்பிடத்தில் தாக்கினால்,
சிரமம்தான், இல்லை பலனே…!
கிராமிய பாணியில்...
எடமறியணும் எடமறியணும்
தகுந்த எடமறியணும்,
எதிரியத் தாக்க
ஏத்த மாதிரி
எடமறிஞ்சி செயல்படணும்..
நாட்டு மக்களோட பாதுகாப்பு
வலிமயோட வேற
சீரெதுவும் இல்லாமயிருந்தாலும்,
அவனோட எடத்தில போயி
அவனத் தாக்கிறது செரமந்தான்,
ரெம்ப செரமந்தான்..
அதால
எடமறியணும் எடமறியணும்
தகுந்த எடமறியணும்,
எதிரியத் தாக்க
ஏத்த மாதிரி
எடமறிஞ்சி செயல்படணும்…!