விசாலம்

எப்போது நவம்பர் மாதம் வந்தாலும் எனக்கு கார்த்திகைப் பண்டிகையுடன் குருநானக்ஜி அவர்களின் ஞாபகமும் வரும். தில்லியில் வாரத்தில் ஒரு தடவையாவது குருத்வாரா போகும் வழக்கம் வைத்திருந்தேன்.

குருத்துவராவுக்குள் நுழைந்தாலே அங்கு இருக்கும் சுத்தம் நம்மைக் கவரும். பெரிய செல்வந்தர்கள் தங்கள் காரில் வந்து இறங்கி குருத்வாராவின் பளிங்குப் படிகளை ஒரு துணியைக் கொண்டு துடைப்பார்கள். சிலர் பிரசாதம் வழங்குவதிலும் சிலர் இலைப் போட்டு பரிமாறுவதிலும் பங்கு கொள்வார்கள்.

உள்ளே அவர்கள் வணங்குவது ஒரு புத்தகத்தை ……… அதுவே “குரு கிரந்த சாஹேப்”. அந்தப் புத்தகம் அவர்களது குரு. அதுவே அவர்களது தெய்வம். அந்தக் கிரந்தம் ஒரு மேடையில் வைக்கப்பட்டு மிக அழகான பட்டு அல்லது சாடின் துணியினால் போர்த்தப்பட்டிருக்கும். அந்தத் துணியின் வேலைப்பாடு மிக அழகாக நல்ல சரிகை வேலைப்பாடுடன் இருக்கும்.

அந்தத் துணியினால் மூடப்பட்டிருக்கும் கிரந்தமும் அந்த மேடையையும் பார்க்கும் போது நம்மை அறியாது நம்மை ஒரு சக்தி இழுப்பதை உணர்கிறோம். அத்துடன் சில குருமார்கள் மிக அழகான சபத் என்ற குரு நானக்ஜியால் இயற்றப்பட்ட பஜன்களை மிக அழகான ராகத்துடனும் லயத்துடனும் பாடுவார்கள்.

ஹார்மோனிய ஒலியுடன் நாலு பேர்கள் பாடுவது ஒருவர் பாடுவது போலவே இருக்கும். அங்கு வழங்கும் ஸூஜி ஹல்வா பிரசாதம் போல் வேறு இடத்தில் நான் சாப்பிட்டதில்லை. அதற்கு ஒரு ஸ்பெஷல் டேஸ்ட் தான். திருப்பதி லட்டு போல ……

சரி இனி நாம் குரு நானக்ஜியிடம் வருவோம். சத்குரு நானக் ஜி என்பவர் சீக்கிய மதத்தை ஸ்தாபித்தவர். நம் கார்த்திகைத் தீபத் திருநாள் அன்றுதான் இவருக்கும் ஜயந்தி வரும். சில சமயம் மாறுபடும், இந்த வருடம் வந்தது போல். இவரை நினைக்கும் போதெல்லாம் கூடவே அமிர்த்சரஸ் பொற்கோயிலும் நம் கண்முன் வந்து நிற்கும். சீக்கியர்கள் இன்றும் உலகில் எந்தக் கோடியில் இருந்தாலும் குருவின் போதனைகளை மீறாமல் அப்படியே கடைப்பிடித்து வருகிறார்கள்.

அவர்களுக்கு ஐந்து க {k}  மிக முக்கியம் அதாவது கேசம், கடா, கங்கி, கிர்பான், கச்சு. கேசம் என்றால் முடி கடா என்றால் கையில் போடும் பெரிய காப்பு, கங்கி என்றால் சீப்பு, கிர்பான் என்றால் சிறு கத்தி. கச்சு என்றால் நீண்ட ஜட்டி எனும் உள்ளாடை.

பஞ்சாபியில் சீக் என்றால் ஒழுக்கம் எனக் கொள்ளலாம். கற்றுக் கொள் என்ற அர்த்தமும் வரும். சீக்கிய மதம் ஒரே கடவுள் என்ற கொள்கையைக் கொண்டது. அதனால் நம் ஹிந்து மதம் போல் பல பண்டிகைகள் அங்கு வருவதில்லை. நாம் ஸ்கந்தசஷ்டி,  கணேச சதுர்த்தி, நவராத்திரி, சிவராத்திரி என்று பல திரு நாட்களைக்கொண்டாடுகிறோம். ஆனால் சீக்கியர்கள் மகத்சங்கராந்தி, பைசாக்கி, ஹோலி தவிர அவர்களது பத்து குருமார்களின் தினங்களையும் கொண்டாடுகிறார்கள்.

குருவின் மூலமாகத்தான் கடவுளிடம் ஐக்கியமாக முடியும் என்ற கருத்தும், அந்தக் குருவும் நம் கீதைப் போல் ஒரு புத்தகமாக “குரு கிரந்த சாஹேப்” என்ற பெயரில் இருக்க அதையே குருத்வாராவில் வைத்து வழிபடுகிறர்கள்.  வீட்டிலும் இந்த புண்ய கிரந்தம் தான் அவர்களது குரு கடவுள் எல்லாம். அவர்கள் வாயில் எப்போதும் வருவது “வாஹே குரு கால்ஸா”.

இந்து தர்மத்தில் இருக்கும் சில அங்கும் இருக்கின்றன, அதாவது மறுபிறவி உண்டு என்பதும் போன ஜன்மக் கர்மபலனையே வரும் ஜன்மங்களில் அனுபவிக்கிறோம், ‘பகவத் சிரமணம்’ ‘மானுஷ சேவா சத்தியம்’ முக்கிய அம்சமாக இருக்கிறது என்பதும் நாம் இரு மதங்களிலும் பொதுவாகக் காண்கிறோம்.

ஆனால் சீக்கியர்கள் அசைவர்களாக இருப்பதும் மதுபானம் எடுப்பதைத் தவறாக நினைக்காததும் சற்று வித்தியாசமானது தான்.

ஆனால் இரு மதங்களும் அகங்காரம் பொறாமை, பேராசை, மோகம், குரோதம் போன்றவைகளை அறவே ஒழிக்கச் சொல்கின்றன. இவர்களைப் போல் நாட்டிற்காகத் தியாகம் செய்வர்கள் மிகவும் குறைவுதான். நம் நாட்டில் சீக்கியர்கள் தான் அதிகமாகப் போர் வீரர்களாகச் சேருகின்றனர். தேசப்பற்று மிகவும் அதிகமானதால் நாட்டிற்காகப் பல குருமார்கள் தங்களையே அர்ப்பணம் செய்திருக்கின்றனர்.

குருநானக் ஜி பாத யாத்திரையாக கார்கில், சிக்கிம், லடாக் போன்ற பல இடங்களுக்குச் சென்றிருக்கிறார். லடாக்கின் தலைநகரமான “லே” என்ற இடத்தில் ஒரு குருத்வாரா “பத்தர் சாஹேப்” என்ற பெயரில் இருக்கிறது. இங்கு பலர் குருநானக்ஜி அவர்களை ‘லாமா குரு’ என்று அழைக்கின்றனர். ஒரு பெரிய பாறை மலைஉச்சியிலிருந்து உருண்டு இவர் மேல் விழுவது போல், வர இவர் தன் ஒரு கையினால் அதைத் தடுத்து நிறுத்தினாராம். அந்தப் பாறை அவரை அணைத்துக் கொள்வது போல் இருக்கிறது.

என் சீக்கியதோழி இதன் வரலாறைக் கூறினாள். அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

குருநானக்ஜி அவர்கள் ஒருசமயம் யாத்திரையின் போது “நிமு” என்ற கிராமத்தைக் கடந்து வந்து கொண்டிருந்தார். இரண்டு பக்கமும் பீடபூமியும் நடுவே பெரிய பள்ளத்தாக்கும் இருக்கும் இடம் இது.  ‘இண்டஸ் ரிவர்’ என்று சொல்லும் சிந்து நதியும் இங்கே அழகாக ஓடிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

நடுவில் சாங்க்லா கணவாய் என்று ஒன்று இருக்கிறது, அதன் அருகில் இருந்த மக்கள் நானக்ஜியிடம் அங்கு ஒரு தீயசக்தி ராட்சசன் போல் இருப்பதாகவும் அவன் தினமும் மிகவும் தொல்லை கொடுப்பதாகவும் கூறி அதற்கு எதாவது வழி செய்யுமாறு வேண்டிக் கொண்டனர்.

கொஞ்சம் நாள் பிறகு குருஜி அந்த வழியாக வேண்டுமென்றே சென்றார், அந்த அரக்கனும் அவரைப் பின்பற்றினான். நடுவே நானக்ஜி ஒரு குருத்வாராவில் தங்கிப் பல அறிவுரைகள் கூறிய பின் திரும்ப நடக்கத் தொடங்கினார், அந்தத் தீய மனிதன் குன்றின் மேல் ஒளிந்து நின்று கொண்டிருந்தான். குருஜி அந்தப் பக்கம் வந்தவுடன் ஒருபெரிய பாறையை உருட்டி விட்டான். அவர் தலையில் இது விழுந்தால் அவர் தப்பவே முடியாது என்ற எண்ணத்தில் உருட்டினான்.

அந்தப் பாறாங்கல் உருண்டு வந்தது, அவர் அதைத் தன் உள்ளங்கையால் நிறுத்த அத்தனை பெரிய பூதாகாரமான கல் அப்படியே நின்றது. அந்தச் சாய்ந்த இடத்தில் ஒரு பொருளும் நிற்க இயலாது, சரிவானதால் கீழேதான் விழ வேண்டும். ஆனால் இந்தப் பெரிய பாறையோ அப்படியே நின்று விட்டது. நேரில் அதைப் பார்க்க அப்படியே அவரை அணைத்துக் கொண்டது போல் இருக்கிறது.

இந்த இடத்தில் தான் பத்தர் சாஹேப் எனும் குருத்வாரா இருக்கிறது. அது மிகப் புண்ணிய க்ஷேத்ரமாக சீக்கியர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆனாலும் பல இந்துக்களும் அங்கு போய் வழிபடுகின்றனர்.

நானக்ஜி 22 செப்டம்பர் 1539 அன்று மறைந்தார். அவர் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் பொதுவான ஆன்மீக அன்பராக இருந்ததால் ஒரு முறை அவர் இறந்த பின் அவர் உடலைப் புதைக்கவா அல்லது எரிக்கவா என்ற பேச்சு நடந்ததாம்.

இதன் முடிவு தெரியாததால் குரு நானக்ஜி ஒரு தீர்ப்பு சொன்னார், இரு சாரர்களும் ஒவ்வொரு பூ மாலையை வாங்கி உடலின் இரு பக்கங்களில் வைக்க வேண்டும். மூன்று நாள் கழித்துப் பார்க்க வேண்டும். எந்தப் பக்கம் பூ மாலை வாடாமல் இருக்கிறதோ அந்தப் பக்கம் இருக்கும் சாரார் அவர்கள் வழிப்படி அந்திம் கிரியை செய்யலாம்.

இது இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் மூன்றாம் நாள் துணியைத் திறந்து உடலைப் பார்க்க உடல் அங்கு இல்லை. இரு பூ மாலைகளும் வாடாமல் இருந்தனவாம். பின் இந்து மதப்படி ஒரு சாரார் அந்தப் பூமாலையை எரிக்க ,மற்ற சாரார் அதைப் புதைக்கக் கதை முடிந்தது.

பல நதிகள் இருந்தால் என்ன?. சேரும் இடம் ஒன்றுதானே. எந்த மதமாக இருந்தால் என்ன! அங்குத் தோன்றிய மஹான்கள் சரித்திரம் நம்மைப் பரவசப்படுத்துகின்றன.

வாஹே குரு வாஹே குரு வாஹே குருஜி
சத்நாம் சத்நாம் சத்நாம் ஜி.

 

குரு நானக் படத்திற்கு நன்றி

பொற்கோவில் படத்திற்கு நன்றி

கடா,கிர்பான்,கங்கி படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "ஓம் சத் ஸ்ரீ அகால்"

  1. நான் நமது இராணுவத்தின் சீக்கியர்களின் படைப்பிரிவு ஒன்றில் பணியாற்றியவன்.  ஒவ்வொரு ஞாயிறுக் குருத்வாரா பரேட் (Gurudwara Parade) என்று ஒரு பரேட் நடக்கும்.  ஞாயிறு காலை 9:00 முதல் 11:00 வரை நடக்கும் இந்த வாராந்திர கூட்டுப்பிரார்த்தையின் போது மத வேறுபாடின்றி, மேல் மட்ட அதிகாரிகள் முதற் கொண்டு சாதாரண சிப்பாய் வரை அனைவரும் சரி சமமாகக் கலந்து கொண்டு “ஏக் ஒம் கார்” என்னும் ஒங்காராத்தை வழிபடுவோம்.  அனைவரும் ’சத்நாம் வாஹே குரு’ என்ற ஜபத்தை சொன்னபடி இருப்போம்.  நான் இன்னமும் என் வலது கையில் கடா அணித்துள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.