தொழிலாளர் தினக் கொண்டாட்டங்கள்
விசாலம்
‘மே டே’ என்று கொண்டாட்டம் இருப்பது என்னவோ, உண்மைதான். ஆனால் நிலைமை ஒன்றும் மாறவில்லை. காலில் காலணி ஒன்றுமில்லாமல் வயதான ஒருவர், பல மூட்டைகள் அடங்கிய ஒரு வண்டியை இழுக்க முடியாமல் மெள்ள போய்க்கொண்டிருந்தார். பின்னால் வந்த வண்டி ஒன்று பீம் பீம் என்று அலறி, அவரை நகரச் சொல்லியது. அவரால் முடியவில்லை.
உடனே காரின் சன்னல் கீழே இறங்கியது.
ஒருவன் தலையை நீட்டி “ஏ பெரிசு, முடிலேன்னா வீட்லே இருக்க வேண்டியதுதானே, ஏன் இப்படி ரோட்டை பிளாக் செய்யறே”
இதை நான் நேரிலே பார்த்தேன். என் மனம் மிகவும் நொந்து போனது. இந்தத் தொழிலாளர் தினத்தில் இது போல் வேலை செய்ய முடியாத நிலையில் இருந்து ஆனால் நிர்ப்பந்தத்தினால் உழைக்கும் முதியவர்களுக்கு எப்படியாவது உதவினால் இந்தத் தினக் கொண்டாட்டத்திற்கு ஒரு அர்த்தம் இருக்கும் எனத் தோன்றுகிறது.
தொழிலாளர் தினத்திற்காக ஒரு கவிதை. இது கவிதையா? இல்லை இல்லை, என் உணர்ச்சிகளின் தொகுப்பு.
உழைக்கும் வர்க்கம் வியர்வைச் சிந்த
தனி நிர்வாகம் அவர்களை மேலும் உந்த,
வேலையில் ஒரே கட்டுப்பாடு
தினக் கூலியிலும் குறைபாடு,
அடிமையாக்கி அவர்களை மிரட்ட,
சிக்கல்கள் அங்கு பின்னிக்கொள்ள ,
போராட்டங்கள் தலைத் தூக்க,
இரு வர்க்கத்தின் உறவு குன்ற ,
வந்தது முடிவில் கதவடைப்பு,
ஒரு பெரிய அடி ஏழை வயிற்றில்,
குழந்தைகளோ நடுத் தெருவில்
இத்தகைய நிகழ்ச்சி.
பொருளாதார வீழ்ச்சி
வாழ்வுக்கொரு தாழ்ச்சி
உரிமைகளை நிலை நாட்ட
வன்முறைகள் தலைத் தூக்க
ஒரு பெரிய பூட்டு கதவில் சிரிக்க
மனதிலே அழுகிறான்,
நேர்மை உழைப்பாளி.
வளரும் தொழிற்சாலை
நல்லிணக்கத்தால் உயரும் அது
நல்லுரவுகளால் உயரும் அது
தவறுக்குத் தேவை ஒரு மன்னிப்பு.
மெமோ நோட்டீஸ் புறக்கணிப்பு
இணக்கம் குறைவதில்லை,
இயக்கம் நிற்பதில்லை,
உருவாக்கம் பன்மடங்கு பெருக
ஆர்வம் அங்குப் போட்டி இட
வளர்ச்சிக்கு அன்பு உரம் போட்டு
ஆரோக்கியப் போட்டி வளர்க்க
மனம் நிறைந்தத் தொழிலாளி,
மனம் ஒன்றிச் செயல்பட
உற்பத்தி பெருகும்,
பொருளாதாரம் சீர்ப்படும்
தேவை தொழிலாளிக்குத் தொழிலில் அக்கறை
வேண்டும் முதலாளிக்கு அவர்களின் அக்கறை
இரண்டும் நிலைத்தால்
சிறிதளவும் கசப்பல்ல
எல்லாமே இனிப்புத்தான்.
=========================================
படத்திற்கு நன்றி: http://www.telegraph.co.uk