-எம் . ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா

மனமெல்லாம் ஒன்றுபட்டு
மகிழ்ச்சிவெள்ளம் பெருக்கெடுத்துத்
தினமெங்கள் வாழ்வுவரின்
தித்திக்கும் தீபாவளி!

பட்டாசு மத்தாப்பு
பட்சணங்கள் அத்தனையும்
சுற்றிவந்து நின்றுவிடின்
சுவைத்துவிடும் தீபாவளி!

எத்திக்கும் உள்ளவெங்கள்
இரத்தபந்தம் எல்லாரும்
எங்களிடம் வந்துநின்றால்
இனித்துவிடும் தீபாவளி!

புத்தாடை தனையுடுத்திப்
புத்துணர்வு கொண்டவராய்
புன்முறுவல் முகம்வந்தால்
பூத்திடுமே தீபாவளி!

மதங்களால் மோதும் மனம் மாறிவிட்டால்
இனங்களைச் சிதைக்கும் குணம் மாறிவிட்டால்
மதுபோதை என்னும் வெறி மாறிவிட்டால்
மண்மீது என்றும் நல்ல தீபாவளிதானே!

பட்டாசு வெடிப்பதைப் பக்குவமாய் வெடித்தால்
பட்சணங்கள் உண்பதையும் பக்குவமாய்ச் செய்தால்
பலபேரின் மனத்தினையும் மகிழ்ச்சிபெற வைத்தால்
பலநாளும் எங்களுக்குத் தீபாவளி அன்றோ!

நரகாசுரராக நாம்மாறி இருந்து கொண்டே
லாபநட்டம் பேசுவதில் நியாயமென்ன இருக்கிறது?
நம்மனதில் அசுரகுணம் நமைவிட்டே அகன்றுவிடின்
நமக்குநல்ல தீபாவளி நாளுமே வந்துநிற்கும்!

மத்தாப்புக் கொளுத்துகின்றோம் மதவெறியும் ஊட்டுகின்றோம்
சத்தியத்தைத் தர்மமதை தலைகுனியச் செய்கின்றோம்
மாபாதகம் அனைத்தும் மனத்தைவிட்டு வெளியேற்றித்
தீயதெல்லாம் தீயிடுவோம் தீபாவளித் தினத்தில்!

தீபாவளித் தினத்தில் சிறுவர்களைக்  காத்திடுங்கள்
தீயினால் வருங்கேட்டைத் தினம்மனதில் எடுத்திடுங்கள்
மத்தாப்பும்  பட்டாசும் மனமகிழ்ச்சி தந்திடினும்
மனம்வருந்தச் செய்துவிடும் மகிழ்ச்சியையும் போக்கிவிடும்!

ஆதலால் அனைவருமே அகமகிழ்ந்து நிற்பதற்கு
அவசரத்தைக் கைவிட்டு அயர்வகற்றி நின்றிடுவோம்
கோபமதைக் குறைத்திடுவோம் குணமுயர்வு பெற்றுநிற்போம்
பூதலத்தில் தீபாவளி பொலிவுபெற நாமிணைவோம்!

கோவில் சென்றுகும்பிடுவோம் குறைசொல்லல் தவிர்த்திடுவோம்
பாவநிறை அத்தனையும் பறந்தோடச் செய்திடுவோம்
தோழமையை வளர்த்திடுவோம் சுயநலத்தை விட்டிடுவோம்
யார்மனமும் நோகாமல் நல்லதீபம் வைத்துநிற்போம்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.