தினமுமே மகிழ்ந்திடலாம் !
( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா )
அளவுடனே உணவுண்டால்
ஆரோக்கியம் அமைந்துவிடும்
அளவுமீறி ஆகிவிடின்
அனைத்துமே அழிந்துவிடும் !
வாழ்வதற்கும் பணந்தேவை
பணம்மட்டும் வாழ்வல்ல
பணமெண்ணி வாழ்ந்துவிடின்
பாழாகும் வாழ்க்கையது !
படிக்கவேணும் வாழ்க்கையிலே
பலவற்றை யாவருமே
பட்டம்மட்டும் வாழ்வல்ல
பண்பும்சேர்ந்து வரவேணும் !
கோவிலுக்குப் போகவேணும்
குறைசொல்லல் தவிர்க்கவேணும்
பாவம்பற்றி எண்ணாமல்
பலருக்கும் உதவவேணும் !
மூத்தோரை வாழ்க்கையிலே
முதலிடத்தில் வைக்கவேணும்
ஆத்திரத்தை அடக்கிவிடின்
அமைந்துவிடும் நல்லவாழ்வு !
பொய்யென்னும் வார்த்தையினை
பொசுக்கிவிட்டு வாழவேணும்
மெய்யாக வாழ்ந்துவிடின்
மேதினியே மகிழ்ந்துவிடும் !
முன்னோர்கள் மொழிந்தவற்றை
பொன்னாகக் கொள்ளவேணும்
எம்மாலே இயன்றவரை
எல்லோர்க்கும் உதவவேணும் !
யார்மனதும் நோகாமல்
நாமிருந்தால் நலன்பயக்கும்
ஊருலகம் பழிப்பவற்றை
ஒதுக்கிவிட்டால் உயர்வுவரும் !
அப்பாவை அம்மாவை
அழவிடுதல் முறையல்ல
அவராசி கிடைப்பதுவே
அனைவருக்கும் வாழ்வாகும் !
மனம்மகிழ வாழ்வதற்கு
வழிகள்பல இருக்கிறது
தேர்ந்தெடுத்து வாழுங்கள்
தினமுமே மகிழ்ந்திடலாம் !