பவள சங்கரி

 

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

பவள சங்கரி எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (30.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on "படக்கவிதைப் போட்டி (167)"

  1. நிழற்படம் சொல்லும் கதைகள்…!
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    -ஆ. செந்தில் குமார்.

    துள்ளித் திரிந்த கதைகளைச் சொல்லும்…
    துடிப்புடன் இருந்த காலத்தைச் சொல்லும்…!
    எள்ளி நகைத்த உலகைச் சொல்லும்…
    ஏதும் அறியா வயதைச் சொல்லும்…!

    வெள்ளி முளைத்தநம் வாழ்வைச் சொல்லும்…
    வெதும்பி வாடியத் தருணத்தைச் சொல்லும்…!
    அள்ளித் தந்த கருணையைச் சொல்லும்…
    ஆறுதல் அளித்த நட்பைச் சொல்லும்…!

    கொள்ளை கொண்ட மனதைச் சொல்லும்…
    கொடுத்து வைத்த நிகழ்வைச் சொல்லும்…!
    பிள்ளைப் பருவத்து நினைவைச் சொல்லும்…
    படிப்பை முடித்துப் பறந்ததைச் சொல்லும்…!

    எல்லையே வானமாய் இருந்ததைச் சொல்லும்…
    எதிலும் நிறைவை உணர்ந்ததைச் சொல்லும்…!
    கிள்ளை மொழிகள் பகன்றதைச் சொல்லும்…
    கனவைச் சுமந்த இதயத்தைச் சொல்லும்…!

    தொல்லைகள் இல்லா நிலையைச் சொல்லும்…
    துன்பத்தில் மீண்ட அமைதியைச் சொல்லும்…!
    நல்லவை மனதில் நிலைக்கச் சொல்லும்…
    நிம்மதி அனைத்தையும் நிழலாய்ச் சொல்லும்…!

  2. பிள்ளையாய்…

    பிள்ளைநிலா கறைபடவில்லை,
    பிள்ளை மனதில்
    மனிதகுல மாசு ஒட்டுவதில்லை..

    பிஞ்சு நெஞ்சில்
    இன்னும்
    வஞ்சம் கலந்திடவில்லை..

    முகம்போல
    அகமும் அழுக்காகவில்லை,
    கண்ணாடியில் தெரியும்
    முக அழகைவிட
    தெரியாத
    தெரியாத அக அழகு
    இன்னும்
    அதிகமானது..

    மனிதனே நீயும்
    பிள்ளையாய் இரு-
    உள்ளத்தில்…!

    செண்பக ஜெகதீசன்…

  3. உன்னைப் பெற்ற
    அன்னைக்குப் பெருமை..!
    ====================

    (பெண் குழந்தைக்கு அலங்காரம் செய்து பார்த்த அன்னையைப் புகழும் விதத்தில் ஓர் அறுசீர் விருத்தம்)

    தினமும்தான் உனக்குத் தின்ன
    ……….தின்பண்டம் தந்தாள் அம்மா..!
    கனவில்நீ வருவாய் என்றே
    ……….கனவுலகில் கழிப்பாள் காலம்,,!
    சினமில்லா அன்னை உன்னைச்
    ……….சிங்காரம் செய்ய வந்தாள்..!
    மனமார வாழ்த்தும் அன்னை
    ……….மங்கைநீயும் மகிழ வேணும்..!

    கண்ணாடி முன்னே நின்று
    ……….கண்ணழகு..காட்டும் கண்ணே..!
    பெண்களானால் அழகு சேரும்
    ……….பட்டாடை கூட்டும் மேலும்..!
    வண்ணமிகும் அழகு நீலம்
    ……….எண்ணமிகும் அம்மா பார்த்தால்..!
    கண்களையே இமைகள் காக்கும்
    ……….காவலாளி போன்ற அம்மா..!

    =============================

    காய்=மா=தேமா = அறுசீர் விருத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.