Tag: பேரா. ம. பரிமளா தேவி

  • வாத்தியார்

    பேராசிரியர் ம. பரிமளா தேவி

    ஒப்பதவாடி ஒன்றியத்துல இருக்குற நடுநிலைப்பள்ளிக்கு டிரான்ஸ்சர் வாங்கிட்டு வரும்போது அவ்ளோ சந்தோசம் ஜானகி டீச்சருக்கு. எவ்ளோ பெரிய வேலையிலிருந்தாலும் உள்ளூருல வேலைப்பாத்தா மரியாதை இல்லைன்னு சொல்வாங்க.  ஆனா பல வருச கனவு தான் படித்த பள்ளியில வேலைப்பாக்கனும்னு. அந்த ஆசை இப்போதான் நிறைவேறியது.

    வண்டியில போனா பத்து நிமிச்சத்துல போயிரலாம். அப்படி போகாம நடந்து போய்க் கொண்டிருந்தாள் ஜானகி. சின்ன வயசுல தான் நடந்து போகும்போது அவ்ளோ சந்தோசமா இருக்கும். வழியில போகும் போது பூத்திருக்குற ஊமத்தப் பூ குவளைப்பூ எல்லாம் பறிச்சு கையில வைச்சுக்கிட்டு போயிருக்கேன்.  முதல் முதல்ல பள்ளிக்கூடம் போனபோது என்னோட பிறந்த தேதியை வாத்தியார் கேட்டாங்க.

    ஏனோ அம்மாவுக்கு ஞாபகத்துல இல்லை. ஏன் எழுதி வைக்கலையான்னு கேட்டத்துக்கு எரவானத்துல எழுதி வைச்சிருந்தேன் எங்கயோ காணாமப் போயிடுச்சு என்றாள். ஜப்பசி மாசம் நல்ல மழைபெய்ஞ்சுட்டு இருந்துச்சு. அப்போ தான் இவ பொறந்தா சார்ன்னு அம்மா சொன்னாங்க. வாத்தியார் சிரிச்சிட்டு அவரா நவம்பர் பதினாலுன்னு எழுதிட்டாரு. அது போலத்தான் என் வீட்ல இருந்து படிக்கப்போன எல்லாத்துக்கும் வாத்தியார் எழுதினதுதான் பிறந்த தேதி. ஓடை வழியாத்தான் பள்ளிக்கூடத்துக்கு போகனும். மழைக்காலங்களில் நிறைய ஊமத்தப் பூ பூத்திருக்கும்.

    வெள்ளையா நிமிர்ந்து பீப்பீ போல அழகா இருக்கும். அத பார்த்துட்டே போனா அவ்ளோ சந்தோசமா இருக்கும். பள்ளிக்கூடத்துக்கு சீக்கரமா போய் பசங்க எல்லாம் கிரவுண்டல வாத்தியார் வர வரைக்கும் விளையாடிட்டு இருப்போம். விளையாட்டு ஆக்கபூர்வமாக எல்லாம் இருக்காது. ஆலமர விழுதை பிடிச்சுத் தொங்கிட்டு இருக்குறது. பச்சை குதிர தாண்டுறது. பட்டாட்டம், கில்லி ஆடுறது, கோலி, பம்பரம்னு விளையாடிட்டு இருப்போம். வாத்தியார் வந்ததும் முதல்ல வேலைக் குடுப்பாரு. எல்லாரும் வாங்க.

     

    கிரவுண்டல இருக்குற குப்பையை எடுக்கன்னு சொல்வாரு. பொம்பள பிள்ளைகள வகுப்பறையை கூட்ட சொல்வாங்க. ஆயம்மா இல்லாத பள்ளிக்கூடம். எங்க வேலைகளை நாங்களே பாத்துகுவோம். மஞ்சுமில் போத்திய கூரையிலும் மரத்தடியிலும் படிச்சோம். இப்போ பள்ளிக்கூடத்துக்கு கட்டிடம் சுற்றுச்சுவர் எல்லாம் வந்துருச்சு. பள்ளிக்டம் எவ்ளோ மாறிபோச்சு.

    டீச்சா் …சத்தீஷ் என்ன கிள்ளிட்டான்

    பாலு பொய் சொல்றான் டீச்சா்.

    சத்தீஷ் பொய் சொல்றான் டீச்சா்.

    டேய்.. வாங்க ரெண்டு பேரும். போடுங்க தோப்புக்கரணம் ஐம்பது வரைக்கும்.

    இனி இப்படி செய்யமாட்டோம்னு சொல்லிட்டே போடுங்க. ஆறாம் வகுப்பில் நடந்துக்கொண்டிருந்த கூத்தைப் பாத்துட்டே ஏழாம் வகுப்புக்குச் சென்றாள்.

    குட்மானிங் டிச்சா்….

    குட்மானிங்.

    எல்லாரும் அட்டனன்ஸ் சொல்லுங்க.. என்று வருகைப் பதிவு நோட்டை எடுத்து ஒவ்வொரு பெயர்களாக அழைத்தாள்.

    கார்த்திகா.

    உள்ளேன் டீச்சா்.

    தனுஷ்.

    உள்ளேன் டீச்சர்.

    திருப்பதி.

    உள்ளேன் டீச்சா்.

    ராஜா.. ராஜா…

    உள்ளேன் டீச்சா்.

    “அட்டனென்ஸ் சொல்லாம என்ன பண்ணிட்டு இருக்க.. டீச்சா் இவன் என்ன கருப்பான்னு கூப்பிடுறான் டீச்சா்”. “திரு இங்க வா இனி யாரையும் இப்படி கூப்பிடக் கூடாது பேர் சொல்லித்தான் கூப்பிடணும் சரியா”

    ராஜா “டீச்சர் நீங்க ஒன்னும் ஃபீல் பண்ணாதிங்க இளைய தளபதி விஜய் கருப்புத்தான் எனக்கு ஒன்னும் பிராப்பளம் இல்ல” என்றான். எனக்கு சிரிப்பா வந்தது. சினிமா சின்னக்குழந்தைக்கு எப்படி போய்ச் சோ்ந்திருக்குன்னு. இந்தக் காலத்து பசங்க ரொம்ப மாறிட்டாங்கன்னு தெரியுது. அப்போ மூக்கின்னு கூப்பிட்டத்துக்காக மாசக்கணக்கில பேசாம இருந்தது ஞாபத்துக்கு வந்தது. கருப்பி, முட்டக்கண்ணி, குள்ளச்சி, ஓட்டப்பள்ளன், சின்னக்குஞ்சி, மூத்திரவண்டி இப்படி எல்லாம் பேர் சொல்லி கூப்பிட்டு இருக்கோம்.

    இப்ப போல எல்லாம் மாணவர்கள் தப்பு பண்ணா கண்டிக்காம தண்டனை குடுக்காம அப்போ இருந்ததில்லை. சமூக அறிவியல் வாத்தியாருன்னா வகுப்புலே ஒன்னுக்கு போயிருவோம் அவ்ளோ பயம். வகுப்புல சாக்பீஸ் எடுத்து சின்ன வட்டத்தை போட்டுவிடுவார். அந்த வட்டத்துகுள்ள நிக்க சொல்வார். யார் வீட்டுப்பாடத்தை செய்யலையோ அவங்கள வட்டத்துக்குள்ள நிக்கவைச்சு அவங்க கையை தன் கையில பிடிச்சிட்டு சூத்தாம்பட்டையில அடிப்பார். வட்டத்தை விட்டு வெளியே வரக்கூடாது.  அப்படி அடிக்கும்போது வெளியே வந்துட்டா இன்னும் பலமாக விழும். அவர் வகுப்புல மட்டும் மூணு நாலு மூங்கில் குச்சி உடையும்.  கிளாஸ் லீடா் வீட்ல இருந்து வரும்போது தினமும் மூங்கில் குச்சி கொண்டு வரணும். இல்லைன்னா முதல்ல அவனுக்கு விழும்.  எல்லா டீச்சரும் கையிலத்தான் அடிப்பாங்க. கணக்கு டீச்சர் மேரி மட்டும் ஸ்கேல் வைச்சு கையைத் திருப்ப சொல்லி முட்டில அடிப்பாங்க. இரண்டு மூணு நாளைக்கு கையைத் தூக்கி எந்த வேலையும் செய்ய முடியாது.

    வாத்தியார் எவ்ளோ அடிச்சாலும் ஒருத்தங்களும் வீட்டுக்கு போய் சொல்ல மாட்டோம். பள்ளிக்கூடத்துக்கு பின்னாடி இருந்த டோரியா பூந்தோட்டத்துல எல்லாரும் போய் கூட்டம் போட்டு வாத்தியார் தப்பு பண்ணா நம்மள அடிக்கிறாரு. மத்தப்படி நம்மள எவ்ளோ நல்லா பாத்துகிறாரு. தினமும் மத்தியானம் என்ன நடக்குது தெரியாதா உனக்கு. வகுப்புல உக்காந்து சாப்பிடற எல்லா வாத்தியாரோட டிபன் பாக்சையும் பிள்ளைகளை கழுவச் சொல்றாங்க. அவங்க பையை தூக்கிட்டு போறது. அவங்க வீட்டுக்கு போய் வேலை செய்ய சொல்றது, இத எல்லாம் செஞ்சிட்டு இருந்தோம். அப்ப அவர்தான மத்த டீச்சருங்கிட்ட நமக்காக சண்டைப் போட்டாரு.  மாணவர்கள் உங்க வீட்டு வேலைக்காரர்கள் இல்லை அவங்க படிக்கத் தான் வந்திருக்காங்கன்னு சொல்லி.. கூட்டம் முடிந்தது.

    ஊர்ல டீவியெல்லாம் இல்லை.  பஞ்சாயத்தில மட்டும் தான் இருந்தது. செய்தி மட்டும் போட்டுட்டு நிறுத்திருவாங்க. படம் எல்லாம் பாத்ததே இல்லை. கூலி வேலை பாக்கற அப்பா அம்மா வாழ்க்கையை நடத்துறத்துக்கு ரொம்ப கஷ்டபட்டாங்க. பள்ளிக்கூடத்துக்கு மாணவர்களை படத்துக்கு கூட்டிட்டு போகணும்னு ஆணை வந்திருந்தது. எல்லா பிள்ளைகளையும் தன் சொந்த செலவுல வாத்தியார் கூட்டிட்டு போனாங்க.

    அப்போ பார்த்த படங்கள் தான் அனகோண்டா, ஜீராசிக் பார்க், டைட்டானிக் படம் எல்லாம். அவர் இல்லாட்டி சினிமா எப்படி இருக்கும்னு கூட தெரியாம போயிருக்கும். அறிவியல் கண்காட்சி, கலைவிழான்னு எல்லா ஊருக்கும் கூட்டிட்டு அலைஞ்சி திரிஞ்சவர். மதியம் சாப்பிட போகும்போது   ஒரு திருக்குறள் சொல்லிட்ட தான் சாப்பிடனும். வாத்தியார் எங்ககூடவே நின்னுட்டு இருப்பார். ரொம்ப அன்பாக நடந்து கொண்டு இருந்தார். என்னவோ தெரியல பள்ளிக்கூடத்துக்கு வாத்தியார் வரல. என்ன நடந்ததுன்னு தெரியல. மத்தவங்கள கேட்கவும் பயமா இருந்தது. எல்லா வாத்தியாரும் அவரப் பத்தி தப்பா பேசிட்டு இருந்தாங்க.

    பள்ளிக்கூடத்துல இருந்து விட்டு வந்த இந்த பதினைஞ்சு வருசத்துல ஒரு முறைக்கூட வாத்தியார பாக்கல. ஆனா அடிக்கடி நினைச்சுட்டு இருப்பேன். ஏனோ ஒரு தயக்கம் என்னன்னு சொல்லத் தெரியல. அவரைப் பாக்கும் போது எப்பவும் வாத்தியாரா நான் பாத்ததே இல்லை. நல்ல தந்தையைப் போல் என் படிப்பில் அவ்வளவு அக்கறையோடு இருந்தவர். முகம் வாடி இருந்தா அவருக்கு தாங்கிக்கவே முடியாது.

    என்ன ஆச்சு ஜானகி உடம்புக்கு முடியலையா. மாத்திரை வாங்கிவரவான்னு கேட்பார். நோட்ஸ் வாங்க வீட்டுல பணம் கொடுக்கலங்கற தெரிஞ்சதும் அவரோட நோட்ஸ் எடுத்துக் கொடுத்திட்டாரு. பரிட்சை வரை படிச்சிட்டு திரும்ப கொடுத்திருன்னு சொன்னதும் நானும் வாங்கிப் படிச்சசேன். கல்லூரியில என்னத்துறை எனனோட எதிர்காலத்திற்கு நல்லா இருக்குன்னு அப்பாவிடம் சொல்லிட்டு போனதா பின்னாடித்தான் எனக்கே தெரிஞ்சது.

    என் வாழ்க்கையில என் வாழ்க்கையில முக்கியமான தருணங்களில் அவர் தான் முடிவு பண்ணியிருக்காருங்கறதும் எனக்கு தெரியில. ஒரு நாள் திடீா்ன்னு என் மொபைல்க்கு தெரியாத எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. “அம்மா ஜானகி நல்லா இருக்கியாமா?.. ம்ம்.. நீங்க யாருன்னு…. நான் தாம்மா வாத்தியாரு மறந்துட்டியா? சந்தையில அப்பாவ பாத்தேன் மா. அவருகிட்ட உன் நம்பர வாங்கினேன். நேரம் கிடைச்சா பேசுமான்னு வைச்சிட்டாரு..” எனக்கு கொஞ்ச நேரம் தலைக்கால் புரியல. இத்தனை வருசம் கழிச்சும் என்ன ஞாபகத்துல வைச்சி இருக்காருன்னு.

    வாத்தியார் எங்க அப்பா கிட்ட பொன்னு நல்லா படிக்கறா ஏன் அவள இங்கலீஸ் மீடீயத்துல போடக்ககூடாதுன்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு. எங்க அப்பா மேயுற மாடு எங்க மேய்ஞ்சா என்ன சார்ன்னு சொல்லிட்டாரு. எங்க அப்பா மேல கோப கோபமா வந்துச்சு . நம்மள வாத்தியாரு முன்னாடி மாடுன்னு சொல்லிட்டாரேன்னு.

    அன்பரசு என் கூட படிச்ச பையன். இன்னிக்கு பெரிய வேலையில இருக்கறதுக்கு என் வாத்தியார் தான் காரணம். ஒரு வாரமா பள்ளிக்கூடத்துக்கு வராத அன்பரச தேடிட்டு வாத்தியார் அவன் வீட்டுக்கே போயிட்டாரு. அங்க போன அப்ப தான் அவன் நிலைமை என்னனு வாத்தியாருக்கு தெரிஞ்சது. நார்மில்லுக்கு வேலைக்கு போயிட்டு வரும்போது வேகமா வந்த கார் மோதி விபத்துல அவனோட அப்பா இறந்துப்போனது தெரி்ந்தது.

    அவங்க அம்மா இனி எப்படி இவன பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியும். எனக்கு இருந்த ஓரே ஆதரவு இவங்க அப்பா தான். மூணு பிள்ளைகளை நான் ஒருத்தி எப்படி கரையேத்த முடியும்னு அழுதாங்க. வாத்தியாருதான் அவங்கள சமாதானப்படுத்தி அன்பரச தன் வீட்ல இருந்து படிக்க வைச்சு பெரிய ஆளாக்கிவிட்டார். இன்னிக்கு அன்பரசு அரசாங்க வேலையில இருக்கறதுக்கு அவர்தான் காரணம்.

    பள்ளிக்கூடத்துல யாராச்சும் சாப்பிடாம இருந்தா தன் சாப்பாட்ட அப்படியே எடுத்துக் கொடுத்துடுவார். டீ.வி.எஸ். பிப்டில தான் பள்ளிக்கூடத்துக்கு வருவார். வண்டில வரும்போதும் போகும்போதும் இரண்டு மூணு பிள்ளைங்க கூட்டிட்டு போய் அவங்க வீட்ல விட்டுத்தான் போவார்.

    வாத்தியாருக்கு கல்யாணம் ஆகி பதினைஞ்சு வருசமாகியும் குழந்தையே இல்லை. அவர் வகுப்பில் இருக்கிற அத்தனை குழந்தைகளையும் தன் குழந்தையாகவே பாத்துக்கொண்டவர். பள்ளிக்கூடத்துல ஜானகியை வகுப்புல மாணவர்கள் முன்பு கன்னத்தை கிள்ளி செல்லமா உன்னோட பிறந்த நாளுக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கன்னு மகிழ்ச்சியா பேசிட்டு இருந்தத.. மேரி டீச்சா் பாத்துட்டு போய் தலைமையாசிரியிடம் ஆசிரியர் மேல் பாலியல் ரீதியா புகார் சொன்னதும் அதனால மனம் உடைஞ்சு வாத்தியார் வேலையை விட்டு நின்னது யாருக்கும் தெரியாமல் போனது.

    Share
  • வெண்ணிலை: பாலியல் சிக்கலும் பெண்களின் நிலையும்

    -பேரா.ம. பரிமளா தேவி

    முன்னுரை

    பெண்ணின் ஆளுமை இதுவரை பெண்கள் பற்றிச் சொல்லப்பட்டு வந்த நியாயங்கள், உருவாக்கப்பட்டு வந்த மதிப்புகள், கற்பிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட புனிதங்கள், என்பனவற்றை அடையாளம் கண்டு விளக்குவது, பெண்ணின் சுயமான விருப்பங்கள், உணா்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் இவற்றின் முறிவுகள் முதலியவை புனைவுகளில் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராய்வது. புனைகதை கால சிருஷ்டியே எனினும் சமுதாய மாற்றத்தை மாறும் சமுதாயத்தின் நிலையைக் காட்டும் வரலாற்றுச் சான்றாகவும் விளங்குகிறது. சிறப்பான கதைக்களங்கள் சமகாலச் சான்றாக வரலாற்றாசிரியராலும் சமூகவியலாளர்களாலும் போற்றப்படுகின்றது என்கிறார் கா.சிவத்தம்பி (நாவலும் வாழ்க்கையும், கா.சிவத்தம்பி. ப.20)

    வெண்ணிலை சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் பெண்களை மையப்படுத்தி எழுதியுள்ள தீராக்குறை, கிடந்த கோலம், தாய்மை, பாரம் சுமக்கிறவள், உள்ளிருந்து உடற்றும் பசி, வயிற்றுப்புருசன், வெண்ணிலை, பேரிளம் பெண், பேதை, கொடிகொம்பு, தொப்புள்கொடி முதலிய கதைகளில் பாலியல் சிக்கலும் பெண்களின் நிலையும் எவ்வாறு இடம்பெற்றுள்ளது  என்பதை பெண்ணிய நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    பெண்ணடிமை

    தற்போதைய சூழலில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும்போது குடும்பத்தைப் பொருளாதார ரீதியில் மேம்படுத்திக்  கொண்டு செல்ல வழியுண்டு. படித்த பெண்களை வீட்டிற்குள்ளே பூட்டிவைக்க தேவையில்லை என்கிற கருத்து நிலவி வருகின்றது. அவர்களின் உழைப்பிற்கு மதிப்பூதியம் அளிக்கப்படாமல் சம்பளம் இல்லாத வேலைக்காரியாகப் பெண்கள் இருந்தது அந்தக்காலத்தில். ஆனால் தற்போது பெண்களும் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு வேலைக்குச் செல்கின்றனா். ஆணும் பெண்ணும் வேலைக்குச் செல்கின்ற குடும்பத்தில் இருவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்ததும் கணவன் மனைவியிடம் அதிகாரம் செலுத்துபவனாகவே இருக்கின்றான். ஆண் வீட்டு வேலைகளைச் செய்வது கேவலமானது, மற்றவர்களால் நகைப்பிற்குரியச் செயலாகப் பார்க்கப்படும் என்கிற எண்ணமானது அவனுடைய பொதுபுத்தியில் ஆழமாக பதிந்துள்ளது. மேலும் ஆண்களின் கண்ணோட்டத்தில் வீட்டில் வெளியில் வேலைகளைச் செய்வதற்கும் குழந்தைகளைப் பராமரிப்பது அவர்களுடைய வேலை என்றும் அவர்களின் அனுமதி இல்லாமலும் பாலுறவு வைத்து கொள்ளலாம் என்கிற எண்ணமும் தன்னை எதிர்த்து பேசக்கூடாதவளாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்ற நிதர்சன உலகத்தை அப்படியே கிடந்த கோலம் கதையில் காட்சிகளாக்கியுள்ளார்.

    “கிடந்த கோலம்” என்கிற கதையில் பெருமாள், வனிதா இருவரும் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள்.  இருவருக்கும் வார விடுமுறை நாள் எவ்வாறு இருக்கின்றது என்பதை இக்கதையானது சித்திரிக்கின்றது.   திருமால் பாற்கடலில் பள்ளிக்கொண்டிருப்பதுபோல் படுத்துக்கொண்டு ஆனந்த விகடனைப் புரட்டிக் கொண்டிருக்கின்றான் பெருமாள். சிலிண்டா் தெருவில் இருக்கு, தூக்கி கொண்டு வந்து உள்ள வைய்யி என்கிறாள்.  எப்பப் பார்த்தாலும் நய்யி நய்யின்னு சொல்லிக்கொண்டிருப்பியா, தூக்கி உள்ள வைச்சா வைய்யி இல்லைன்னா பேசாம கெட என்கிறான்.  அரைமுடி தேங்காயாவது வாங்கிக்கொண்டு வந்துகொடு என்கிறாள். சமைக்கும்போது குழாயில் தண்ணீா் வந்துவிடுகின்றது. குடத்தைக் கொண்டு போய் வரிசையில் வை என்கிறாள். தண்ணீா் பிடிக்கிறது, துணி துவைக்கிறது, கடைக்குப் போவது, பாத்திரம் துலக்குவது, சமைப்பது, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, அடுத்த நாள் வகுப்பிற்கான பாடத்திட்டத்தை எழுதுவது என ஓயாமல் வேலை செய்து கொண்டிருக்கின்றாள் வனிதா.

    தமிழ்ச் சமூகத்தில் குடும்ப அமைப்பானது பெண்கள் இல்லற பந்தத்திலிருந்து எளிதாக வெளிவர முடியாத குடும்பச்சிறையாக உள்ளது.  எந்தவொரு முடிவையும் பெண்ணால் எடுக்க இயலாத சூழலே உள்ளது. ஓர் ஆண் தன்னை எளிதில் இல்லற வாழ்விலிருந்து விடுவித்துக்கொள்ள அத்தனை நியாங்களையும் அவனுக்கான இடத்தையும் சுதந்தரத்தையும் வழங்கியுள்ளது. பெண் கட்டுப்பாடுகளுடன் வளா்க்கப்பட்டவள். அவளுடைய சிந்தனையும் குடும்பம், குழந்தை, சமூகம் என அனைவரின் எதிர்பார்ப்புகளையும் ஈடுசெய்பவளாகவே இருக்கின்றாள் என்பதையும் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார்.

    “கல்யாணம் செய்யாமலே இருந்து இருக்கலாம். ஏதோ சம்பாதிக்கிறோம் பிழைக்கிறோம் என்று வாழ்க்கையை ஓட்டியிருக்கலாம். யார் அழுதார்கள் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தே தீர வேண்டுமென்று புலம்புகின்றாள்”. (பக்க எண் 75  ) குழந்தைகளை நினைத்தும் அப்பா அம்மாவை நினைத்தும் உடன் பணியாற்றுபவர்கள் தன்னைத் தவறாக நினைத்து விடக்கூடாது என்றும் அவள் துன்பங்களை அடிமனதில் போட்டு அமுக்கிவிடுகின்றாள்.

    எதிர்ப்பு:

    தன்னுடைய எல்லாம் துயரங்களையும் அடக்கிக்கொண்டு அவனோடு வாழ்ந்து வரும்போது இருக்கிற தலைவலியில இன்னும் தலைவலி எதுக்குன்னு அவனுடைய  கட்டாயப் பாலியல் உறவுக்குத் தயாராகின்றாள். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யாத காரணத்தினால் காண்டம் வாங்குவதிலும் கணவன் ஆர்வம் காட்டுவதில்லை.  இவள் கடைக்குச் சென்று காண்டம் வாங்கிவருகின்றாள் மிகவும் வருத்தத்துடன். சில சமயம் உருப்படியாகப் பல சமயம் சொதப்பலாக உறவுகொள்கின்றதைப் பார்த்து அடக்க மாட்டாமல் சிரிக்கின்றாள். இறுதியாக “இதுக்கு மட்டும் தான் நீயா ” (பக்க எண் 77 ) என்று அவனைப் பார்த்துக் கேட்பதாக முடிகின்றது. பெண்ணை உடல் உறவினால் மட்டும் மகிழ்ச்சியா வாழ வைக்கமுடியும் என்கிற பிம்பத்தை உடைகின்றார். பெண்கள் பாலியல் உறவில் மட்டும் மகிழ்ச்சியை அடைவதில்லை. அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதைத் புரிந்துக்கொண்டு வாழ்க்கையை நடத்தினால் மட்டும் இல்லறம் மகிழ்ச்சியாக இருக்கும் என்கிற கருத்தை உணர்த்துகின்றார்.

    ஒருதலைக் காதல்

    சங்கீதா ஒன்பதாவது படிக்கும் போதே செபாஸ்டின் அவளைப் பின்தொடா்ந்து போயிட்டு இருந்தான்.  அவள் காதலைச் சொல்லவில்லை.   நீ இல்லன்னா நான் செத்துருவேன். சங்கீதாவைக் காதலிக்கிறன்னு சொன்ன இன்னொரு பையனை அடித்து உதைக்கிறான்.  அவள் நினைவாவே ஊா்ல சுற்றிக்கொண்டு இருக்கின்றான். ஒரு முறை இரத்தத்தில் காதல் கடிதம் எழுதிக்கொடுக்கின்றான்.  நாலு வருசமா அவள் பின்னாடியே சுற்றிக்கொண்டு இருந்தவன். அவளுக்கு என்னைய பிடிக்கலைன்னாலும் பரவால்ல. நான் அவளக் காதலிக்கிறேன்னு பிடிவாதமாக இருந்தவன். ஒருநாள் வேன் ஓட்டிட்டு போகும்போது மரத்தில் மோதி அடிபட்டு இறந்து போக   அவனுடைய நண்பர்கள் “ஆணவக்காரியால் உன் உயிர் உதிர்ந்தது.  நண்பர்களிடம் உன் நினைவுகள் என்றும் மலர்ந்தபடி இருக்கும்” என்னும் வால்போஸ்டர் அடிக்கின்றனா்.  அதைப்பார்த்து கண்ணீர் விடுகின்றாள்.

    ஒருதலையாகக் காதலித்து கையைப் பிளேடால அறுத்து, இரத்தத்தில் கடிதம் எழுதியது, நீ இல்லையின்னா செத்துருவேன் என்று பயமுறுத்தியது, அடிதடி, சண்டை இது தான் சங்கீதா வாழ்க்கையையில நடந்தது.  பள்ளிக்கூடத்தில் ஒன்பதாவது படிக்கின்ற பெண்ணைத் துரத்தித் துரத்தி காதலிப்பது என்பது பொருத்தமில்லாத ஒன்று.  பெண்ணின் மனம் காதலிக்கும் பக்குவத்தை அடையும் வயது என்பது வேறு.  மேலும் தான் காதலைச் சொல்லாத காரணத்தினால் தன் நினைவினால் தான் வண்டியை ஓட்டி இறந்துவிட்டான் என்று நம்புவது. ஆண் எது சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற மனநிலை.  செபாஸ்டின் நண்பர்கள் அடித்த வால்போஸ்டா் பெண்ணை அடிமையாய் பார்க்கும் ஆண்களின் பொதுப்புத்தியைக் காட்டுகிறது. சமூக அமைப்பானது தான் செய்யாத தவறுக்கும் குற்றவுணா்ச்சிக்கும் எவ்வாறு ஆளாக்குகிறது என்பதனை அறியமுடிகின்றது.

    உள்ளிருந்து உடற்றும் பசி

    இக்கதையானது வாசகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒன்று.  அண்ணன் தங்கைகளுடன் பாலியல் உறவு வைத்துள்ளான் என்று கதையில் வருகின்றது.  அண்ணன் தங்கை பாலியல் உறவு வைத்துக்கொள்வது என்பது இக்காலக்கட்டத்தில் பொருந்தாக் காமமாகப் பார்க்கப்படுகின்றது. இக்கதையில் ஆசிரியர் அண்ணனின் பாலியல் உறவு குறித்து எந்த இடத்திலும் கண்டிக்கவில்லை. ஆதரித்தும் பேசவில்லை. மிக இயல்பான ஒன்றாக எழுதிச்செல்கின்றார். எப்படி மழையானது பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாமல் உலகில் உள்ள உயிர்களை வருத்துமோ அதுபோல இவ்வுலகத்தில் உள்ளவா்களுக்கு உடல்பசி வருத்தும் என்பதைத் தெரிவித்து இருக்கின்றார். ஆறுமுகம் இரண்டு தங்கைகளைத் திருமணம் செய்துகொடுத்துவிட்டுத் தன் இளமைக்காலம் கழிந்த பின்பு மூன்றாவது தங்கையுடன் நள்ளிரவில் அவள் தொடை மீது படுத்து இயங்க ஆரம்பிக்கின்றான். இருட்டில் அவன் தங்கை பயத்துடன் மிகுந்த பேரதிர்ச்சிக்கு உள்ளாகின்றாள்.   அவன் மிகுந்த முனகலோடு அக்கா அவுங்க ஓங்கிட்ட வேற ஒன்னும் சொல்லலையா என்கிறான்.

    ஆறுமுகத்தின் தந்தை நான்கு குழந்தைகள் பிறந்த பின்பு மற்றொருவன் பொண்டாட்டியை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடிவிடுகின்றான்.  அந்த துயரத்திலே அவன் அம்மா இறந்து விடுகின்றாள்.  சிறு வயதில் இருந்து கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து இரு தங்கைகளைத் திருமணம் செய்து வைக்கின்றான்.  அதற்குள் அவனுக்கு திருமண வயது தாண்டிவிட்டதன் காரணத்தினால் யாரும் பெண்கொடுக்கவில்லை.  மலர் தனக்குத்  திருமணம் வேண்டாம் என்றும் தன் அண்ணாவை தன்னை விட்டால் யார் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைக்கும் பெண்.  தன் அண்ணனினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்ற தங்கைகள் என்பதாக முடிகின்றது.

    மேலும் பெண்களுக்கு எப்பவும் உழைப்பு இருந்துக்கொண்டேதான் இருக்கும்.   “கோடிஸ்வரன் வீட்டுக்குப் போனாலும் பொம்பளைக உழைச்சாதேன் கௌரி கஞ்சி”(பக்க எண் 129) என்கிறாள் மலா்.  பெண் உழைப்பைச் சுரண்டுதல், பாலியல் அடிமையாகப் பயன்படுத்தும் அவலத்தைக் இக்கதையில் காணமுடிகின்றது.

    வெண்ணிலை

    இந்த உலகினில் கைவிடப்பட்ட பெண்களின் சான்றாக வெண்ணிலையின் நாயகி இருக்கின்றாள். வேலைக்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டல் வல்லுறவில் ஈடுபடுதல் என்பது மிகச் சாதாரணமான ஒன்றாக இருக்கின்றது என்பதைப் பார்க்க முடிகின்றது.   பெண் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத நிலையில் உள்ளாள்.  அவள் பேச்சை இந்தச் சமூகம் காதுகொடுத்து கேட்பதே இல்லை.  முள் மீது சேலை விழுந்தாலும் சேலைமீது முள் விழுந்தாலும் சேலைக்குத் தான் நஷ்டம் என்னும் தொடா் நினைவுக்கு வருகின்றது. பெண்ணும் அப்படிப்பட்டவள் தான்.  வெண்ணிலை என்றால் தமிழ் அகராதி அளிக்கும் பொருள் ஈடுகாட்டாது வாங்கும் கடன் என்கிறது. ஆனால் ஆசிரியர் கையறு நிலையில் வெண்ணிலையைப் பயன்படுத்துகின்றார். பதினைந்து வயது பெண் ஜெராக்ஸ் கடையில் வேலைபார்க்கின்றாள். தன் அண்ணன் கைவிட்ட நிலையில் ஊா்விட்டு ஊா் வந்து தன் தாய் தந்தையைக் காப்பாற்ற நினைத்து வேலைக்குச் செல்கின்றாள்.  கடையில் தன் தந்தையின் வயதையொத்த முதலாளி கையைப் பிடித்து இழுத்ததும் அந்த வேலையை விட்டுவிடுகின்றாள். ஆஸ்துமாவினால் இறந்த தந்தையை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குக் கொண்டு போக பணம் இல்லாமல் நடு ரோட்டில் உதவிக்காக காத்திருக்கின்ற அவலம்.

    பேரிளம் பெண்

    நாற்பது வயதைக் கடந்த ஆண் தன்னை இளமையாகக் காட்டிக்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் சமூகம் பெண் தன்னை மாற்றிக்கொள்ள நினைத்தால் அது தவறாகப் பார்க்கப்படும். மேலும் வயது ஏற ஏற தன் இளமை போய்கொண்டிருப்பதை எந்த பெண்ணும் இயல்பாகக் கடந்துவிடுவாள் என்ற பொதுபுத்தி உள்ளது.   ஆனால் ஈஸ்வரி தன்னை அலங்காரம் செய்து கொள்வது குறித்து ஆசிரியருக்கு எந்தப் புகாரும் இல்லை. ஆனால் தன்னை அலங்காரம் செய்து கொள்வதினால் தன்னிடம் உள்ள நல்ல குணங்களும் மாறிப்போனதாகக் காட்டுகின்றார். பேறு காலத்திற்கு வந்திருக்கும் மூத்த மகளை திட்டுவதாக எழுதியிருப்பது, தன்னை அலங்காரம் செய்து கொள்வதினால் பெண்ணின் இரக்ககுணமும் மாறிவிடுமா என்கிற கேள்வியை உண்டாகுகின்றது.  தன் மூத்த மகளின் பேறுகாலம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் ஈஸ்வரி பக்கத்து வீட்டில் நடக்கின்ற நலங்கு நிகழ்ச்சிக்குச் செல்கின்றாள். அப்படிச் செல்லும்போது தன்னை எப்படி அலங்காரம் செய்து கொள்கின்றாள். நலங்கு வீட்டில் எதையெல்லாம் தனக்கு வேண்டும் என்று ஆசை கொள்வதாக கதையானது நகர்கின்றது. நாலு விரல் அளவு கை வைத்த சட்டை தன்கிட்ட இல்லயே.  தைக்க கொடுக்கணும்.  நெஞ்சுத் தெரிய இடுப்பு ஒடுக்கித் தைத்த சுடிதார் இல்லையே. சின்ன மகளின் சுடிதாரை எடுத்து ஒரு நாளேனும் போட வேண்டும் என்று ஆசைப்படுகின்றாள். மேலும் பின் முதுகு தாழ்ந்து தெரியும் படி வைத்த சட்டை, கருப்பு பாடி நலங்குக்கு எடுத்து வைக்கின்றாள். கண்ணாடி முன் நின்று சரிந்த மார்பகங்களை இரு உள்ளங்கைகளால் தூக்கிப் பார்த்து வருத்தப்படுகின்றாள்.  மகளுடைய புதிய ஜட்டியை எடுத்து போட்டு கொள்ள ஆசை.  வெளியில் போகும்போது மட்டும் அணியும் உயர்குதிச்செருப்பு எடுத்து வைக்கின்றாள். ஆனால் தன்னால் நிகழ்ச்சிக்குப் போக முடியாது என்று தெரிந்தவுடன் தன் மகளைத் திட்டுவதாக முடிகின்றது.  தன் இளமைகாலம் தீர்ந்து போய்க்கொண்டிருக்கும் போது தன் இளமையை மீட்டெடுக்கத் துடிக்கும் பெண்ணாகப் பேரிளம்பெண் இருகின்றாள்.

    கொடிகொம்பு

    கணவன் தன் குறையை மறைப்பதற்காகத் தினமும் குடித்துவிட்டு வருகிறான். மனைவியை மலடி என்று திட்டித்தீர்க்கின்றான். வாணி தன் குடிகாரக் கணவனால் தன் வாழ்க்கையே சீரழிந்தும் அவனோடு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றாள். விஜயனிடம் பல முறை சொல்லியிருக்கின்றாள். எல்லோர் முன்னாடியும் என்ன திட்டாதன்னு. ஆனால் அவன் கேட்பதாக இல்லை. அவளுக்குத் தான் மலடி இல்லை என்பதை நீருபிக்கத் தோன்றும். ஆனால் தாய் தந்தைக்காக தன்னுடைய கோபத்தை அடக்கிக்கொள்கின்றாள். பிரியத்தோடு தொட்டால் தூக்கம் வருது, நாளைக்கு என்பான், பயந்தாங்கொள்ளி… நாலாவது நாள் தாண்டினால் சாக்கு சொல்வான் வயிறு வலிப்பதாக… இல்லையென்றால் வீட்டிற்குள் நுழையும் போதே சண்டையிழுப்பான் குடிப்போதையில். எழமாட்டாத பயன்.  பம்முவதற்குத்தானோ இந்தக் குடி என்று நினைக்கின்றாள்.

    தன்னுடைய இயலாமை வெளிக்காட்டாமல் மனைவியை மலடி என்று குற்றம் சுமத்தும் கணவன். கெட்ட வார்த்தையில் திட்டுவது அவமானப்படுத்துவது எனத் தொடர்ந்து செய்கின்றான். இறுதியில் தன் மாமனார் குளித்துக்கொண்டிருக்கும் போது தெரியாமல் குளியலறையின்  உள்ளே நுழைந்து விடுகின்றாள். அப்போது அவள் உடனே வெளியேறாமல் அவர் மீது தண்ணீர் அடித்து விளையாடுகின்றாள் என்று கதையானது முடிகின்றது. தன்னை நீருபிக்க அவள் எடுக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது.

    தொப்புள்கொடி

    மனநலம் பாதிக்கப்பட்ட கார்த்திகா ஊரில் சுற்றிக்கொண்டிருக்கின்றாள்.  ஒரு நாள் குழந்தையை பெற்றெடுக்கின்றாள்.  ஊரில் உள்ளவர்கள் அனைவரும் வருத்தம் அடைகின்றனா்.  இந்த பயித்தியத்தக் கூட விட்டு வைக்கவில்லையே என்று.கார்த்திக்காவுக்குக் குழந்தைக்குப் பால்கொடுக்க தெரியவில்லை. குழந்தை இறந்துவிடுகின்றது. கார்த்திகா இறந்த குழந்தையை  கையில் வைத்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றி வருகின்றாள். ஊரில் உள்ளவர்கள் எல்லாம் இழிவாகப் பேசுகின்றனா்.  இறுதியில் கார்த்திகாவின் பெற்றோரே அவளை விஷம் வைத்து கொல்கின்றனா். கார்த்திகா பிறக்கும்போது தரணி ஆளப்பிறந்தவள் என்று தாய் மகிழ்ச்சியடைகின்றாள். இறுதியல் மகளை விஷம் வைத்து கொள்கின்றனா்.

    முடிவுரை

    வெண்ணிலைத் சிறுகதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் பெண்கள் அனைவரும் கைவிடப்பட்டவர்களாகத் துயரம் நிறைந்தவர்களாகப் பிறரிடம் உதவியை எதிப்பார்க்கின்றவர்களாகவும் அடிமைப்படுத்தப்பட்டும் கிடக்கின்றனா். பெண்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சிக்கல் பாலியல் சார்ந்ததாகவே இருக்கின்றது. கிடந்த கோலம் கதையில் அவள் எவ்வளவு துன்பம் அடைந்தாலும் அவன் இரவு படுக்கும்போது திரும்பிக்கொள்ளக்கூடாது என்று நினைக்கின்றாள். அதற்காகவே காண்டம் வாங்கிவருகின்றாள். கடமைக்கு பாலியல் இச்சைக்கு உறவுக்கொள்ளும் அவனைப் பார்த்து சிரிப்பதன் மூலம் பாலியல் உறவின் மூலம் என்றும் அடிமைப்படுத்திவிட முடியாது என்பதையும் அறியமுடிகின்றது. உள்ளிருந்து உடற்றும் பசி மிக முக்கியமான சிக்கல் அண்ணனுக்கும் தங்கைகளுக்குமான பாலியல் உறவு. வெண்ணிலை கதையிலும் தன் மகளை ஒத்த வயதுடைய பெண்ணிடம் முதலாளி பாலியல் சீண்டலில் ஈடுபடுவது. பேரிளம் பெண் கதையில் தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டு செல்லும் ஈஸ்வரி மற்ற ஆடவர்களை நினைக்கின்றாள். மேலும் தன் கணவனையே மயக்க வேண்டும் என்று நினைக்கின்றாள். அதன் மூலம் தான் ஆசைப்பட்டதையெல்லாம் அடைய முடியும் என்று நம்புகின்றாள். கொடிகொம்பு கதையில் தன் கணவனிடம் குறையை வெறுத்து தன் மாமனாரின் மேல் ஆசைப்படுவதாக கதையை முடிகின்றார். தொப்புள்கொடியில் பெண் பயித்தியமாக இருந்தாலும் போகப் பொருளாக பார்க்கப்படுகின்றாள் என்பதைக் குறிப்பிடுகின்றார். மேற்குறிப்பிட்ட கதைகளில் பெண் உடல் சார்ந்து எவ்வாறு அடிமைப் படுத்தப்பட்டிருக்கின்றாள் என்பதை அறிய முடிகின்றது.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியா்,
    தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி,
    திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்.

     

     

    Share
  • ஒரு நாள் கூத்து!

    -பேரா. ம. பரிமளா தேவி

    உன்கூட எல்லாம் மனுசன் பேசுவானா என்று கேட்டுவிட்டு போனைத் துண்டித்தான் தமிழ். இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஒரு வார்த்தை தெரியல. குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு அம்மாக்கிட்ட இருந்து போன் வந்ததுமே யாழினிக்குப் பதட்டம் அதிகமாயிடுச்சி. நேத்துதான் கொண்டுபோய் விட்டுட்டு வந்து இருந்தாள். ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங்னால சென்னை வரைக்கும் போக வேண்டி இருக்கு. காலையில போனா பத்து மணிக்குள்ள வந்துரமுடியும். இவதான் டீம் லீடா் வேறயாரையும் அனுப்ப முடியாது. இத எப்படி சொல்றதுன்னு தெரியாம பெட்ரூமுக்குள் நுழைந்தாள்.

    என்னங்க ..லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தமிழ் திரும்பிப் பார்த்தான். ம்… இப்ப இயல்பாதான் பாக்குறானா? இல்ல கோபமா இருக்கானான்னு ஒன்னுமே புரியல யாழினிக்கு.

    நாளை ஆபிஸ்ல மீட்டிங்..

    நாளைக்கா…

    சனிக்கிழமை..

    செகண்ட் சாட்டா்டே கூட லீவ் இல்லையா.

    ம். இல்ல.

    அப்போ இந்த வாரம் கூட வீட்ல இருக்கமாட்டியா என்றான்.

    இல்ல. முக்கியமான மீட்டிங் பாஸ் என்னத்தான் போகச் சொல்லியிருக்காரு என்றாள்.

    குழந்தையை யாரு பாத்துக்கிறது.

    நீங்க பாத்துக்கங்க.

    இல்ல என்னால பாத்துக்க முடியாது . உங்க அம்மாவ பாத்துக்க சொல்லு…

    தமிழ் அப்படி சொன்னதுமே அவளுக்கு ஏனோ கடுப்பா இருந்தது. வருண் அவ்ளோ அடம். செல்லம். அவன் வேகத்துக்கு அம்மாவால ஈடுகொடுக்கவே முடியாது. எல்லா குழந்தையைப் போலவும் வருண் இல்ல. ஒவ்வொரு முறையும் சாப்பாடு கொடுக்கவே அவ்ளோ கஷ்டமா இருக்கும். துறுதுறுன்னு ஓடிட்டே இருப்பான். அம்மா சொல்வாங்க இவன் ரொம்ம சுட்டியா இருக்கான் பாப்பா. சொல்லறத கேக்கவே மாட்டேங்குறான். நிறைய அடம் பிடிக்குறான். எனக்கும் வயசாகுதில்ல. ஸ்கூல் போனதும் நானேகூட பாத்துகிறேன். இப்ப நீயே கொஞ்சநாள் பாத்துகோன்னுவாங்க. சில நேரங்களில் கோபம் தரக்ககூடியதா இருந்தாலும் அதுலயும் உண்மை இருக்கத்தானே செய்யுதுன்னு தன்னைத்தானே சமாதானம் செய்துகொள்வாள். பாவம் அவங்களுக்கும் ஓய்வு வேணாம்மா. பதினைந்து வயசுல இருந்து கஷ்டப்பட்டுத்தான் யாழினியைப் படிக்கவைச்சு கட்டிக்குடுத்தாங்க. எவ்ளவோ ஓடி ஓடி உழைச்சாச்சு. கருப்பை பிரச்சனை முட்டிவலின்னு ஒவ்வொரு மாசமும் அவ அம்மா பட்ட வலியெல்லாம் பக்கம் இருந்து பாத்தவ. பொண்ண கட்டிக்குடுத்தப் பின்னாடியாச்சும் நேரத்துக்குப் சாப்புட்டு ஒய்வாக இருக்க முடியல. அண்ணன் குழந்தை தம்பி குழந்தன்னு எல்லாத்தையும் பாத்துக்கிறாங்க. தன்னால கூட்டிவந்து பாத்துக்க முடியலன்னு குற்றவுணா்ச்சியே அவளுக்கு. என்னதான் அம்மாவுக்குத் தேவையைப் பாத்துபாத்துச் செஞ்சாலும் அம்மா ஆசைப்படறதெல்லாம் பொண்ணு சோ்ந்தாப்பல நாலுநாள் கூட இருக்கனும். போனமுற வந்து போனதிலிருந்து இப்ப வரைக்கும் என்ன நடந்ததுன்னு சொல்ல நிறைய கதைகள் இருக்கும். அதெல்லாம் அம்மா சொல்ல சொல்ல ம் கொட்டிட்டே கேக்க யாழினிக்கு ரொம்ப பிடிக்கும். தன் கை சாப்பாடே பிடிக்கல பாப்பான்னு சொல்வாங்க. உன் கையால எதாச்சும் செஞ்சிக்குடுன்னு கேப்பாங்க. அவ்ளோ ருசியா செய்யலன்னாலும் ஆசையா செய்யறதால நிஜமாவே அவ்ளோ நல்லா இருக்கும்.

    யாழினிக்கு நல்லா வாசிக்கிற பழக்கம் உண்டு. அது அவ அம்மாக்கிட்ட இருந்து வந்தது. அம்மா அந்தக் காலத்துலே பத்தாவது படிச்சவங்க.  தனக்கு வந்த அரசாங்க வேலையை விட்டுட்டுக் குழந்தை கணவன்னு வீட்டோட இருந்துட்டாங்க. அப்ப தன்னோட பொழுதுபோக்குன்னா அது ஒன்னே ஒன்னு புத்தகம் மட்டும் தான். ஊருல நூலகம் எல்லாம் கிடையாது. அஞ்சு கிலோ மீட்டா் பஸ்ல போய் ராணி குமுதமுன்னு வாங்கிட்டு வந்து ஒரு வாரம் வச்சு வச்சு படிப்பாங்க. புத்தகத்த அம்மாவுக்குத் தெரியாம எடுத்துப் படிச்சிட்டு மறைச்சு வைச்சுருவா யாழினி. படிக்கிற பிள்ளைக்கு எதுக்குக் கதை புத்தகம். ஒழுங்காப் படின்னு சொல்வாங்க. ஆனா எல்லாத்தையும் படிச்சிட்டு இருந்ததுனாலதான் தனக்கு எப்பயெல்லாம் ஓய்வுகிடைக்குதோ அப்பெல்லாம் புத்தகம் படிக்கத்தோனும். அது இப்ப வரைக்கும் தொடர்வதற்குக் காரணம் அம்மாதான்.

    அவங்க பேரக்குழந்தைகளோட நம்ம குழந்தையைப் பாத்துகறதுக்கு என்ன உங்க அம்மாவுக்கு. இங்க வாங்கன்னு கூப்புட்டா ஒருமுறையாச்சும் வராங்களா. டவுன்ல எல்லாம் வந்து இருந்து பழக்கம் இல்லைங்கறாங்க. நீண்ட பெருமூச்சு விட்டு.. சரிங்க போன்ல ஒரு வார்த்தைச் சொல்லிடுறேன். நீங்கப் போய் விட்டுட்டு வந்துருங்க என்றாள்.

    விடியற்காலையிலே கிளம்பனும். காலையிலே டிபன் செய்யவா. வேணா நான் பாத்துகிறேன். அப்பாடா இன்னிக்காவது திருவாயில் இருந்து சமைக்க வேணாம்னு வந்துச்சே. அதுவே பெரிய ஆறுதலா இருந்தது. தமிழுக்கு நிறைய கொள்கை எல்லாம் இருக்கு. அது என்னன்னா இவ்ளோ படிச்சிட்டு யாராச்சும் வீட்ல இருப்பாங்களா. பொண்ணுங்களும் வேலைக்குப் போகனும். அப்படி போகும்போது விடியகாலையில எந்திரிக்கனும். வாசல் தெளிச்சு கோலம் போடனும். பெட் காப்பி கொடுக்கணும். வேலைக்காரி வைக்கக்கூடாது. எல்லா வேலையும் செஞ்சுட்டுத்தான் வேலைக்குப் போகணும். சமைக்கும்போது மாமனார் மாமியார் என்ன சாப்பிடுவாங்களோ அததான் காலையில செய்யணும். மத்தியானதுக்கு அவங்களுக்குச் சாப்பாடும் செய்து வைக்கணும். ஏன்னா மாமியார் சமைக்கமாட்டாங்க. வேலைக்குப் போறவங்க எல்லாம் சமைக்காம தான் போறாங்களா என்பான். அந்தச் சாப்பாடு வருணுக்குத் தமிழ்தான் ஊட்டுவான். ஊட்டும் போதே திட்டிட்டே ஊட்டுவான். அரிசியை இன்னும் குழைய விட்டிருக்கலாம் இல்ல. அரைமணி நேரமாச்சும் அரிசியை ஊர வைக்கணும் இல்ல. குக்கா்ல செய்யாம நல்லா வடிக்கணும். அதயும் எடுத்து மிக்சில போட்டு அரைச்சு கொடுக்கனும். அப்போதான குழந்தைக்குச் சக்தி கிடைக்கும்னு தினமும் பாடுற புராணத்தை முடிச்சிருவான். ஏழரை மணி பஸ்ஸ பிடிக்க நைட்டு முடிக்காம விட்ட எல்லா வேலையும் செஞ்சிட்டு டிபன் பாக்ஸ் கையோடு ஓடிப்போய்தான் பஸ்ஸயே பிடிப்பாள் .அப்பவும் சொல்வான் கொஞ்சம் முன்னாடி எழுந்தா என்ன. ரிலாக்ஸா வேலையை முடிச்சிட்டுப் போலான்னு இலவசமா புத்திமதி தருவான்.

    யாழினிக்குச் சின்னச் சின்ன கனவு எல்லாம் இருந்தது. காலையில குளிச்சு முடிச்சிட்டு நல்ல பில்டா்காபி போட்டு அத ஆவிபறக்க ஊதி ஊதி நிறைய நேரம் குடிக்கணும். காபியை ரசிச்சு ருசிச்சு குடிக்கிறதுல இருக்கற சொகமே  தனிதான். காப்பி குடிக்கும்போது நாக்கு நுனியில சா்க்கரையோட சுவை இருந்துட்டே இருக்கும். காலையில டிபன் சாப்பிட வரைக்கும். அந்தச் சா்க்கரை எப்படி ஒவ்வொரு நாளும் சுவைதருதோ அதுபோல வாழ்நாள் முழுக்க வாழ்க்கையும் சுவையா இருக்கும்னு அவளுக்கு ஒரு நம்பிக்கை. வருண் வயித்துல இருக்கும்போதுதான் கண்டுபிடிச்சாங்க பெண்களுக்குப் பேறுகாலத்துல வர சா்க்கரை நோய் இருக்குன்னு டாக்டா் சொல்லிட்டாங்க. அவன் பொறந்ததும் இரண்டு மாசத்துல சா்க்கரை இல்லை. இருந்தாலும் அவளால தனக்குச் சர்க்கரை இருந்ததா. எப்படி இவ்ளோ வயசாகியும் தன் அப்பா அம்மாவுக்கு இல்லாத ஒன்னு தனக்கு எப்படின்னு யோசிக்கும் போதுதலையே வெடிச்சிரும் போலயிருக்கும். அப்ப இருந்து இப்ப வரைக்கும் காபில சுகா் இல்லை. காபியைக் குடிச்சிட்டே நியூஸ் பேப்பரை காலையில படிக்கணும். ஆபிஸ் போயிட்டு வந்து நைட்ல படிக்கறதல என்ன சுவாரசியம் இருக்கு. சமைக்கும்போது இளையராஜா பாட்டுக் கேக்கணும். இல்ல தானாச்சும் பாடிட்டே சமைக்கணும். ஆனா அப்படி எதுமே நடக்காது .ஒவ்வொரு நாளும் காலையில என்ன சமைக்கணும் மத்தியானம் என்ன சமைக்கணும் குழந்தைக்கு என்ன செய்யணும் ஆபிசுக்கு என்ன மெயில் அனுப்பணும்.. ஆபிஸ்ல வொர்க் எப்ப முடிக்கணும். மூளைக்குள்ள அவ்ளோ வேகமா வேலைகள் ஓடிட்டே இருக்கும்.

    ஆபிஸ்ல வேலை முடிச்சிட்டுச் சோர்ந்து வீட்டுக்குப் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கத்தோணும். தெருவிலே மாமியார் பாத்துட்டு வருணு தங்கம் அம்மா வந்துட்டாங்க பாருன்னுவாங்க. அவங்க டியூட்டி டைம் அதுவரைக்கும்தான். என்கிட்ட கொடுத்துட்டுச் சீரியல் பாக்கப் போயிருவாங்க. அவங்களயும் கொற சொல்ல முடியாது. குழந்தையோட கொஞ்சநேரம் இருந்துட்டு மறுபடியும் பாத்திரம் தேய்ச்சு வீடு கூட்டி நைட்டுச் சாப்பாடு எடுத்து வைச்சு சாப்பிட உக்காரும் போது நைட்டுப் பத்தாயிரும்.

    எவ்வளவு சோர்வா இருந்தாலும் அடுத்த நாள் ஆபிஸ்ல என்ன செய்யணும் என்ற நெனப்பு ஒருபுறம் இருக்க, பெண்டிங் வொர்க் எல்லாம் முடிக்க நைட் எப்பவுமே பன்னிரண்டு ஒரு மணி ஆகும். தினசரி வாழ்க்கை இதுதான். இதுலஒரு மாற்றமும் இல்லை. இதவிட நிறைய சோர்வு என்னன்னா யாழினிக்கு எதையும் தமிழ்கிட்ட சோ் பண்ண முடியாது.

    ஆபிஸ்ல என்ன நடந்தாலும் அத உடனே வந்து சொல்லும் போதும் சரி அப்படியா அத தவிர வேற ஒன்னும் வராது.

    ஏதாவது பிரச்சனை வந்தா அத ஏன் என்கிட்ட சொல்ற வாசலுக்கு வெளியே செருப்ப கழட்டும்போதே எல்லாத்தையும் விட்டுரணும். அதையும் தாண்டி அலுவலகத்தில் சில நுண்ணரசியல் செயல்களையெல்லாம் தாங்காம சொல்லும் போதும் நீ தைரியமா இருக்கணும் வேலையை இன்னும் நல்லா செய்யின்னு சொல்லிட்டுப் போயிருவான். இதயெல்லாம் சொல்லாமலே அவளுக்கே தெரியணும். அவளுக்கு எப்பவுமே தோணும் தான் சோர்வா இருந்தா தோள்சாய அவன் இருக்கணும். தலையை வருடிக்கொடுக்கணும். உனக்கு நான் இருக்கன்னு சில வார்த்தைகள். இப்படிப்பட்டஆசைகள் எதுவுமே நடப்பது இல்லை.

    சமைக்கப்போறீங்களா. நான்மட்டும் தான ஓட்டல்ல வாங்கிறேன். பொதுவாக ஓட்டலில் சாப்பிடபோலாம்னாலோ இல்லை போனாலோ பெரிய பிரசங்கம் பண்ணுற ஆளு. மாசத்துக்கு ஒரு முறை போனாக்கூட ஓட்டல் சாப்பாடு உடம்புக்கு நல்லது இல்ல. எப்பவும் வீட்டுச் சாப்பாடுதான் நல்லதுன்னு சொல்வான். அப்படியே போனாலும் உனக்கு என்ன வேணுமோ அதஎல்லாம் ஆா்டா் செய். லேட் பண்ணாத எனக்கு வேலை இருக்கு உடனே கிளம்பணும்னு சொல்லும் போதே சாப்பிடற ஆசையே அவளுக்கு விட்டுபோயிரும். தினமும் நான் சமைச்சு நானே சாப்பிடுறேன். ஒரு டேஸ்ட்டுக்கு சேஞ் பண்ணிசாப்பிட்டா நல்லா இருக்குன்னுதானே பொண்ணுங்க வராங்க . அதுக்கூட புரியாதா இவங்களுக்கு எல்லாம் என்று மனசுக்குள்ளத் தோணும் யாழினிக்கு.

    ஓட்டலுக்குப் போயிருந்தபோது முழுக்க தன்னுடைய பார்வையால் சுழலவிட்டிருந்தாள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனா். உடனே தான் பார்த்த படத்தில் ஒரு காட்சி அவள் நினைவுக்கு வந்தது. நாயகனும் நாயகியும் சாப்பிட ஓட்டலுக்குப் போறாங்க. இன்ஜினியரிங் முடிச்சிட்டு வேலைக்கு வந்த கிராமத்துப் பெண்ணாகக் காட்டியிருப்பாங்க. சாப்பிட உட்கார்ந்ததும் எல்லோரையும் பார்க்கும்போது நிறைய பெண்கள் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். அய்ய இந்த ஊா்ல பொம்பளைங்க சமைக்கமாட்டாங்களா.. இங்க வந்து சாப்பிடுறாங்க. எங்க ஊா்ல எல்லாம் கழனி வேலைக்குப் போற பொம்பளைங்க எல்லாம் தூக்குச் சட்டியில சாப்பாடு கொண்டு போவாங்க என்பாள். இப்படி எல்லாம் யோசிக்கறவன் மட்டும் என் கையில் கிடைச்சான்னா கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனாலும் போயிருவேன். என்ன வாழ்க்கை எங்க போனாலும் எதப்பாத்தாலும் ஊா்ல இருக்கிறவன் எல்லாம் பொண்ணுங்களுக்கே கருத்துச் சொல்லிட்டு இருக்காங்க. சூடான பேல்பூரியை ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டே கொண்டே தமிழைப் பார்த்தாள். அவன் திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தானோ அப்படித்தான் இப்பவும் இருக்கானா என்கிற கேள்வி எழுந்தது.

    அலுவலகத்தில் போன வாரம் பெண்கள் தினத்திற்குப் பேச விருப்பம் உள்ளவர்கள் பெயரைப் பதிவு செய்ய சொல்லியிருந்தாங்க. எல்லாரும் சொன்ன ஓரே பெயர் யாழினி. அவங்க பேசுனா சரியா இருக்கும் எனும் பதில் வந்தது.  யாழினியைப் பொறுத்தவரைக்கும் பெண்ணுக்கான இடத்தை யாருக்காகவும் விட்டுத்தரமாட்டாள். பெண் அப்படிங்கறதாலேயே சலுகையை எதிர்பார்க்க கூடாது. பிறருடைய அனுதாபத்தை விரும்பாதவள்.

    காலையில ஐந்து மணிக்கு எழுந்து டிபன் செஞ்சு லஞ்ச் பேக் பண்ணி பசங்கள ஸ்கூலுக்கும் கணவனை ஆபிஸ்க்கும் அனுப்பிட்டு எனக்கு டயா்டா சேச் சே நான் தான்… லைன் ஹனி குடிக்கறனே.. டீவில ஒரு பெண்  விளம்பரத்துல சொல்றதும்  பாத்ததும் இதை ஏன் ஆண் சொல்றது போல எடுக்கறதில்ல.. யோசிட்டே பெண்கள் தினத்துல என்ன பேசலான்னு குறிப்புகளைத் தயார் செய்தபடி இருந்தாள். தனக்கு எப்பவும் பிடித்துப் பிளாக் கலா்ல காட்டன் சேரியைக் கட்டிகொண்டு ரொம்ப நேரமாகக் கண்ணாடி முன்னாடி நின்னு பாத்துட்டே இருந்தாள்.  தான் கல்லூரியில் படித்த நாட்கள் எல்லாம் கண் முன்னாடி வந்தது. அப்போவெல்லாம் பெண்கள் படித்தால் வேலைக்குப் போனா  சுயமரியாதையுடனும் யாருக்கும் அடிமை யில்லாமலும் இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தவள். ஆனா படிப்பு வேலை அவள் வாழ்க்கைக்குப் பாதுகாப்பாக இருக்குமே ஒழிய அவளுக்குகான சுதந்திரவெளியைச் சுயமரியாதையைக் கொடுத்துறாதுன்னு இப்பத்தான் புரிஞ்சது.

    நீண்ட பெருமூச்சுவிட்டு புன்னகையோடு அனைவருக்கும் வணக்கம் என்றாள். உங்க எல்லாருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன். ஏன் ஒரு நாள் மட்டும் கொண்டாடணும் எல்லாம் நாளும் அவர்களுக்குக்கானது தான் என்று முற்போக்குச் சிந்தனை கொண்டவர்களுக்கும், பெண்கள் தினத்துல கூட தான் பார்க்கும் எந்த பெண்ணுக்கும் வாழ்த்து தெரிவிக்க தயங்குற பிற்போக்கான எண்ணம் கொண்டர்வா்களும் இன்று ஒரு நாள் தனக்கானது என்று மகிழ்ச்சியாக இருக்கின்றவா்களும் முதலில் இந்தத் தினத்திற்கான முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

    பேச்சின் முடிவாக “நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்களை விடுவிக்காமல் மனிதகுல விடுதலை சாத்தியமல்ல என்ற லெனின் வாசகத்தையும் வீட்டு வேலைகளில் ஆணும் பெண்ணும் சமமாக ஈடுபட வேண்டும் என்பதைச் சோவியத் நாடு சட்டமாக்கியது குறித்தும் சொல்லிய பின்பு” நம்முடைய சிந்தனையில் மாற்றம் வந்தால் ஒழிய இந்த பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறி முடித்தாள்.

    “வீட்டு வேலைக்கு ஒரு பெண்ணை வைப்போமா எனக்கு அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கு, குழந்தையையும் பாத்துக்கணும் கஷ்டமா இருக்கு”.

    “இப்பவே இவ்ளோ குண்டா இருக்க.  உன்னைப் போல வீட்டையும் பாத்துட்டு வேலையையும் செய்றவங்க யாருமே இல்லையா. கொஞ்சமாச்சும் வேலை செஞ்சு உடம்பைக் கொற”.

    கோவத்துல தீபாவளிக்கு வாங்கிட்டு வந்து இருந்த மொத்த ஸ்வீட்டையும் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினாள்!

    *****

    கதாசிரியர் – உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர்.

    Share