பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

11212317_828493147204886_734930307_n

95465846@N04_rதிரு. கோகுல்நாத் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (09.05.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

48 thoughts on “படக்கவிதைப் போட்டி! (11)

  1. இரு வேறு சிற்பமாக…

    இரவெல்லாம் புரண்டு 
    கொண்டே கிடக்கும் 
    குழந்தையின் 
    கனவில் வந்து கொண்டிருப்பது
    நேற்று மாலை -அது 
    தெரியாமல் 
    அழித்து விட்ட 
    மண் சிற்பத்தின் அழுகையாகக் கூட 
    இருக்கலாம்…
    எதுவும் பிடிபடாத 
    யோசனையில் 
    நாங்கள் சிற்பமாகவும்
    முடியாமல்… 
    சிணுங்கிடவும் முடியாமல் 
    இரண்டு பக்கமும்
    அமர்ந்து கிடக்கிறோம்
    ஒரே  மாதிரியான 
    இரு வேறு
    சிற்பமாக…

    கவிஜி 

  2. நாதா என் அன்பே !
    நான் செய்வதை கொஞ்சம் பாராய்!
    கதிரவனின் மெல்லிய ஒளியில் !
    கடல் அலையின் ஓசையில் !
    யாரும் இல்லாத தனிமையில்!
    என் இதய கோட்டையின் வெளிபாடினை !
    நான் உனக்கென்ன ஒரு சாம்ராஜ்யம் உருவாகியுள்ளேன் !-இந்த கடல் மன்னில்
    வா என் அருகே ! நம் இரு இதயம் ஒன்று கூடி , ஆடி பாடி சிரித்து மகிழ்வோம் ,நம் ஆசை தீர !
    _ ரேவதி ஸ்ரேயா

  3. அலையாடிய அழகுப்பாதங்கள்
    அலுத்தோய்ந்து கிடக்க…
    மணலளைந்த மலர்க்கரங்கள்
    கன்றிச் சிவந்திருக்க… 
    கனவு இல்லமொன்றை கடற்கரையில் 
    கட்டுகிறாள் என் காதல் கண்மணி!

    அலையும் காற்றும் அலைக்கழிப்பதாய்
    அடிக்கடி சுணங்கித் தவிக்கிறாள்.
    அவள் மென்னுதடுகளின் முணுமுணுப்பை
    காற்று என் காதில் கிசுகிசுத்துப்போகிறது.

    கவலை வேண்டாமடி கண்மணி!
    உன் கனவை நனவாக்கும் வழிகளைத்தான்
    இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன் இப்போது!

  4. நாதா என் அன்பே !
    நான் செய்வதை கொஞ்சம் பாராய்!
    கதிரவனின் மெல்லிய ஒளியில் !
    கடல் அலையின் ஓசையில் !
    யாரும் இல்லாத தனிமையில்!
    என் இதய கோட்டையின் வெளிபாடினை !
    நான் உனக்கென்ன ஒரு சாம்ராஜ்யம் உருவாகியுள்ளேன் !-இந்த கடல் மன்னில்
    வா என் அருகே ! நம் இரு இதயம் ஒன்று கூடி , ஆடி பாடி சிரித்து மகிழ்வோம் ,நம் ஆசை தீர !
    _ ரேவதி ஸ்ரேயா

  5. அவள் கட்டும் குடும்பக் கோவிலுக்கு 
    அவனிடம் சுவை காணோம் .
    செல்லினத்தில் மூழ்கி இருக்கிறான் .
    அவனைத் தெய்வமாக்கி 
    அவள் சொல்லும் மணற்  கவிதை 
    புரியாமல் .

  6. உன்னகென கட்டிய மண்கோட்டை
    !நீயும் நானும் இங்கு வந்தது !
    சிறுவயதில் என் தோழிகளுடன் ,கடல்மணலில் கோபுரம்கட்டி விளையாடிய ஞாபகம் வந்தது !
    உன்னை இன்பத்தில் ஆழ்த்த இந்த கடல் மண்ணில் உனக்கென்ன ஒரு மண்கோட்டை ஆசையாய் கட்டியுள்ளேன் !
    அலை மகள் தாவி வரும்முன் திரும்பிபார் !என் ஆருயிரே ! உன் மனதின் உள்ளதைஎன் அருகில் வந்து வெளலிப் படுத்து என் கண்ணே

  7. பிறவிப் பெருங்கடல்

    இந்த தம்பதிகள் இல்வாழ்கை
    விந்தை யானது !
    சந்தையில் சலித்த மங்கை !
    சதி பதியாய் வாழ விடாது
    விதி விளை யாடியது !
    பணம் கொடுத்துப் பட்டம் வாங்கிய்
    கணவன் !
    பணம் கொட்டிப் பதி வாங்கிய
    குணவதி !
    பிறவிப் பெருங்கடல்
    நீந்த முடியாது  
    மணக் கோட்டை கட்டித் தினம் 
    பணக்குறைச் சண்டை !
    வேலை யில்லை பதிக்கு !
    மூளை உண்டு படியாத
    பொற்கொடிக்கு !
    சிற்பி அவள்,
    சித்திரம் வரைபவள் !
    விற்றுப் பணம் 
    சம்பாதிப்பவள் !
    தம்பதிகள்
    முகம் நோக்கார் !
    இரு துருவங்கள் !
    இல்லானை இல்லாள் அனுதினம்
    சொல்லால் அடிப்பாள் !
    ஆயினும்
    சோறு போடுவாள் ! 
    மாறாக
    தாறு மாறாய்த் திட்டுவான்
    ஏராளமாய்க்
    குடித்து விட்டு !  
    பிறவிப் பெருங்கடல் 
    நீந்துவர் பணம்
    பெற்ற தம்பதிகள் !
    ஒற்றுமையாய் வாழ்ந்து 
    ஊழியம் செய்து,
    பிறர்க்கு
    உதவி செய்வோர்.
    பிறவிப் பெருங்கடலில்
    மூழ்குவார்
    பிணக்குடன் தினம்
    பணக்குறை உடையோர் !

    சி. ஜெயபாரதன் 

  8. உனக்கென ஓர் மாயக்கோட்டை 
    இங்கே நான் எழுப்ப நீயோ 
    கண்டும் காணாமல் முதுகு 
    காட்டிக் கொண்டு  இருக்கிறாய் ..
    சற்றே திரும்பிப் பாரேன் 
    இம் மணல் கோட்டை 
    மாயக் கோட்டையாய்
    நமக்கென உரு மாற …
     

  9. மணல் கோட்டை

    சின்னச் சின்ன கோட்டை 
    கட்டி
    சிங்கார வீடு கட்டி
    ஒன்னாய் வாழ நினைத்தோம் 
    நாமே ! ஆனால்
    மண்ணாகிப் போனதே 
    எம் வாழ்வே 
    பேரலை அடித்து ! 
    சீச்சீ  நீ 
    சின்ன வீடமைத்து
    சிதைந்ததே  
    என்மணக் கோட்டை ! 
    அலை அடித்து
    அழிந்ததே
    என் மணல் கோட்டை !

    சி. ஜெயபாரதன்

  10. இரு துருவங்கள்

    அவள் கட்டுவாள் மணக் கோட்டை
    அவன் இடிப்பான் மணல் கோட்டை
    அவள் கட்டுவாள் பணக் கோட்டை
    அவன் புரிவது தின வேட்டை
    குடித்துக் கரைப்பது பண நோட்டை

    சி. ஜெயபாரதன்

  11. உள்ளத்தின் உள்ளிருப்பு
    கைவண்ணத்தின் வெளியீடு
    மண்ணாலான அழகமைப்பு!

  12.  கல்லிலே கலைவண்ணம் கண்டவனின் மகள்,
    மணலிலே கோட்டை கட்டி பெருமிதம் அடைந்தாள் 
    அவள் காதலனோ வாழ்வில் கோட்டை கட்ட நினைக்கின்றான் 
    கடலோர  காதலர்களின் மனக்கோட்டையா! மணற்கோட்டை யா!

    கடல் அலை ஆவேசம் கொண்டு  கலைத்தாலும் 
    நான் உன்னை விட்டு பிரிய நேர்ந்தாலும், 
    என் மனக் கோட்டையில் உன்னை வைத்துக் காத்தாளும் 
    நாம்    வாழப் போவதோ  மலைகோட்டையில்தானே !

    நிரந்தரமற்ற  வாழ்க்கை  என்பது மணல்  கோட்டை 
    கண்மூடி  திறப்பதற்குள் முடிந்துவிடும் வாழ்வு 
    முனைப்போடு நீ கட்டிய மணற்கோட்டை 
    என்னை நினைத்து கட்டிய மனகோட்டையா ! மணற்கோட்டையா ! 

    ரா.பார்த்தசாரதி 

  13. ஒரு பெண் தன் காதலனுக்காக கட்டிய ஓவியம் !
    கார்மேகம் சூழ !சூரியஒளி தெளிக்க !மெல்லிய தென்றல் தீண்ட !அலை கடல் ஓசை இசைக்க !உண்ணக்கென்ன ஆசையோடு இந்த மன்மாளிகை உனக்கு பரிசாக தர கட்டியுள்ளேன் கொஞ்சம் திரும்பிபரடா !எழுந்து வா என் அன்பே ஆருயிரே ! இருவரும் சேர்ந்து இதயவீணை வாசிப்போம் !அலை மகள் தழுவும் முன்னே !

  14.     படக்கவிதைப்போட்டி    எம். ஜெயராமசர்மா …. மெல்பேண்

           மனக்கோட்டை
       ————————–
        மங்கையவள் மனக்கோட்டை
        மண்மீது தெரிகிறது
        மாகடலே நீயவளின்
        மனமுடையச் செய்யாதே

         காதலனும் காதலியும்
         கட்டிடுவார் பலகோட்டை
         காத்திருந்து கட்டுகிறாள்
         காரிகையாள் மணல்க்கோட்டை

          மண்கோட்டை உடையுமென
          மனசுக்குத் தெரிந்தாலும்
          மாகாதல் உந்தலினால்
          மணல்கோட்டை எழுகிறது !

  15. என் செய்வாள் பெண் ?

    தொடுவானில் பரிதி பணி முடித்து
    விடை பெற்றது !
    கடற்கரை மாலையில்
    காதலோடு உலாவச் சென்றார்.
    மங்கையும் ஆர்வமாய்
    ஆலய மொன்று கட்டி
    அழகு பார்ப்பாள் ! 
    ஆனால் அவன் பாரான் !
    ஆண்மகனுக்கு வேலை யில்லை,
    சிற்ப வடிவை
    அற்பமாய் நினைத்து
    பாரா முகமாய்
    ஏறிட்டு நோக்கான் பாரீர் ! 
    காதலி எதிர்பார்ப்பது 
    ஆதரவளிப்பு,
    கலைத்திறம்
    மெச்சிடும் காதலன் ! 
    ஆனால்
    காதலன் வேண்டுவது
    காதலி உடல் நெருக்கம் !
    இச்சை இல்லாப் பெண்ணென்று
    துச்சமாய் எண்ணித் 
    தூரத்தில் அமர்ந்தவனை 
    என் சொல்வாள்
    பெண்மணி ?
    என் செய்வாள்
    கண்மணி ?

    சி. ஜெயபாரதன்

  16. சின்னச் சின்ன கோட்டை கட்டி

    சிங்காரமாய் வாழ்ந்திடுவோம்!
    சிறிய செல்லிடப்பேசியிலே
    சின்னதாகப் படம் பிடிப்பாய்!
    சின்னப் பெட்டி அல்ல உன் உறவு!
    சிறியவள் நானும் உன்னிடத்தில்
    சிறப்பாய் வாழ கூறுகிறேன்.
    வண்ண வண்ண வானவில்லாய்
    வானம் எட்டும் ஆசைகளால்
    இல்லறம் கசந்திட வழிவகுக்கும்
    ஈந்து மகிழ்ந்து சிறப்புடனே
    இருப்பதைக் கொண்டு வாழ்ந்திட்டால்
    ஈசனும் நமக்குத் துணையாவான்.

  17. சங்கடங்கள் இலஞ்ச மணல் வீடுகளாய்
    சாயமிட்ட புவி பொம்மைகளாய்
    சிற்பமாக உருமாற்றி வைத்தேனே!
    சீறி வரும் சுயநல கடலலையால்
    சுனாமிப் பாவங்கள் பெருகி வந்திடுமே!
    சூழ்ந்திடும் சங்கடங்கள் மணல் வீடு யாவையுமே
    செங்கதிரோன் நேர்மைக் கதிர்வரவால்
    சேய்மைப் பந்துகளாய் குதித்தோட
    சொன்னபடி இணையத்தில் செய்திடுவாய்!
    சோம்பலின்றி உழைத்திடுவோம்
    சௌக்யமாக வாழ்ந்திடுவோம்!

  18. சுண்ணாம்புச் சுவர்கள் மத்தியில்
    தோளோடு குழைந்தவள் கன்னங்குழியச்
    சிரித்தபடி நீயும் நானும்..
    படமென்னவோ பகட்டாகத்தான்..!

    காதலர்களாய் கைகோர்த்துத் திரிந்த போது
    இணைந்த மனங்கள் ஆனந்தத்தில்
    சுதந்திரப் பறவைகள்..!
    அப்போது தெரியவில்லை சிக்கிக் கொள்வேனோ?

    போராடி வாயாடி மணம் முடிந்ததும்
    கழிந்து போனதோஅதற்குள்ளாக
    முப்பது நாளும் அறுபது நாளும்…?.
    இப்போது புரிகிறது சிக்கிக்கொண்டது..!

    அமாவாசையன்று கூட பௌர்ணமியென
    எந்தன் முகத்தைக் கையேந்திக்
    கொஞ்சியவன் தானே நீ…?

    இன்றோ.பௌர்ணமி…இருந்தும் ஏனோ
    அமாவாசையாய் நீ முகம் கவிழ்த்து
    ‘அன்ராயிட்’டுக்குள் உன்னை அடமானம்
    வைத்துக் கொண்டாய்…!

    உன்னோடு வாய் ஓயாமல் பேசுபவள்
    உனது ‘ஸ்மார்ட்’ கைபேசி..!
    உன்னையே நேசித்து தோற்றுப் போனேனா
    இந்த வாய்பேசி..?

    உனதழகு ‘வொய்ஃபை’ ஓரந்தள்ளி
    அழ வைப்பவள் அந்த ‘ஆப்பிள்’ அழகி…
    அவளே எனக்கு ‘வைஃபை’ அரக்கி..!

    நீ ‘வாட்ஸ் அப்’பில் உறைந்து கிடக்கும்
    வேளையில் நானும் ‘வாட்ஸ் நெக்ஸ்ட்’
    என்று கேட்காமல் உறங்கிக் கிடப்பேன்…!

    காதலியாய் நான் கட்டிய மனக்கோட்டைகள்
    மனத்துள் புதைந்து ‘அந்தநாள்’
    ஞாபகப் பொக்கிஷமாயின ..!
    உனக்குத் தான் உள்ளங்கையே
    பொக்கிஷமாச்சே ..!

    மீண்டும் என்று வரும் நாம்
    கடந்து வந்த பொற்காலம் ..?
    பொன்னந்திப் பொழுதிலே
    ஸ்ருங்காரமாய் சிங்காரித்து
    நெஞ்சம் ஆனந்தக் கும்மியடிக்க,

    நித்தம் கடற்கரையில் பாதங்கள் பதிவிட்டு
    ஈர மணலோடு போராடிப் போராடி பொறுமையாய்
    நான் கட்டிய மணற்கோட்டை அன்று..!

    கடலே சாட்சியாய் உனது கைபேசியில்
    காதலனாய் ஆர்ப்பரித்தவன்
    மணற்கோட்டை வலம்வந்து
    பலவிதமாய் அடக்கிக் கொண்டாய்…!

    ஆடிவரும் கடலலைக்கும் கட்டளையிட்டாய்..!
    கரைந்து போகுமே என காவல் நின்றாய்..!
    அடம்பிடிக்கும் ஒரு குழந்தையாய் அன்று நீ,..!

    இன்றும் என் உள்ளத்து ஆல்பத்தில்
    பதிந்து போனப் புகைப்படம் அது..!
    இன்றும் நீ குழந்தை தான்..
    நிமிடத்தில் மறந்து போய் அலைபாயும்
    மனம் கொண்ட குழந்தை நீ..!

    மனக்கோட்டையும் மனற்கோட்டையும்
    ஒருபோதும் நிரந்தரமில்லை என்றறியாப்
    பைத்தியக்காரி தான் நான்..!

    அன்றும் பாரேன்…!
    நான் என் வழியில்….நீ உன் வழியில்..1
    அருகில் இருப்பதென்ன..
    கனவுகளைப் போட்டுப் புதைக்கும்
    புதைகுழியா? ஒன்றுமே புரியவில்லை போ…!

    இளமைக் கால நினைவுகளில்
    காலம் கொடுத்த நினைவுச் சின்னமாய்
    இந்த நிழற்படம் மட்டும் எனது
    நெஞ்சை நிறைக்கட்டும் விடு..!

  19. நிஜ உலகம் இதுதான்

    இதுதான் நிஜ உலகம்
    இதுதான் நம் வாழ்வு
    இதுதான் அனுதினக் காட்சி 
    இதுவே சாட்சி !
    இதுவே ஊழ்விதி !
    ஒருபுறம்
    ஆக்கவினை புரிந்து
    கலைத்துவ
    ஆலயம் கட்டுவாள்
    கன்னி ஒருத்தி !
    எதிர்ப்புறம் 
    எதற்கு அதுவென வெறுத்து
    எதிர்ப்பான்
    காளை ஒருவன் !
    இருவர்
    போராட்டத்திற்கும்
    இடையே
    அழிக்கப் பயமுறுத்தும்
    அடுத்தடுத்து
    ஆழிப்
    பேரலைகள் ! 

    சி. ஜெயபாரதன்.

  20. மணல் சிற்பம்…குறும்பாக்கள்
    ========================================ருத்ரா

    மணல்

    கனவுகளை பிசைந்தனர்.
    கையில் வந்ததோ
    கடலின் சதை.

    ____________________________________________

    கைவிரல்கள்

    உருவம் தேடி அளைந்தனர்.
    நெருடியது
    நண்டின் கொடுக்குகள்.

    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_______________________________________________

    அலைகள்

    தொட்டுப்பிடிச்சு விளையாடுவோம்
    என்று வந்தன
    துடைத்து அளிக்க.

    ________________________________________________

    பரிசு

    உலகப்போட்டியில் இதற்கே பரிசு.
    இதன் தலைப்பே காரணம்
    “இது பரிசுக்கு அல்ல”

    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________________________

    இருவர்

    அகங்களில் அணைத்திருக்க‌
    முகங்களில் பட்டிமன்றம்.
    மண முறிவா? மண மகிழ்வா?

    __________________________________________________

    மனிதன்

    கடவுள் ஒத்திகை.
    அரங்கேறும்போதோ
    இருவரும் அங்கு இல்லை.
    ___________________________________________________

    கடவுள்

    இங்கே மணல் துளிகள் எத்தனை
    என்று எண்ணிக்கொண்டிருங்கள்.
    “நான் இல்லை”என்று தெரியும் வரை.
    ___________________________________________________

    சிற்பம்

    பிரம்மன் தோற்றான்.
    மனிதன் வென்றான்.
    உளி இங்கே உள்ளம் அல்லவா.
    ______________________________________________________

    உதயம்

    இன்று ரொக்கம் நாளை கடன்.
    “போர்டு” மாட்டியிருக்கிறது கிழக்கில்.
    விடியாததன் பெயரே விடியல்.
    _______________________________________________________

    கோட்டை

    உதிரும் என்று தெரியும்.
    கலையும் என்றும் தெரியும்.
    நம்பிக்கை இங்கு லட்சம் ஆண்டுகள்.

    __________________________________________________________

    சுண்டல்

    தேங்காய் மாங்காயோடு
    காகிதம் சுற்றியிருந்தது.
    முண்டகோபனிஷதம் அச்சிட்டது.

    ___________________________________________________________

    காற்று

    வாங்க வந்தேன்.
    கவிதையெல்லாம் வேண்டாம்
    இங்கே ஏற்கனவே குப்பை.

    ____________________________________________________________

    மணல் சிற்பம்…குறும்பாக்கள்
    ========================================ருத்ரா

    மணல்

    கனவுகளை பிசைந்தனர்.
    கையில் வந்ததோ
    கடலின் சதை.

    ____________________________________________

    கைவிரல்கள்

    உருவம் தேடி அளைந்தனர்.
    நெருடியது
    நண்டின் கொடுக்குகள்.

    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_______________________________________________

    அலைகள்

    தொட்டுப்பிடிச்சு விளையாடுவோம்
    என்று வந்தன
    துடைத்து அளிக்க.

    ________________________________________________

    பரிசு

    உலகப்போட்டியில் இதற்கே பரிசு.
    இதன் தலைப்பே காரணம்
    “இது பரிசுக்கு அல்ல”

    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________________________

    இருவர்

    அகங்களில் அணைத்திருக்க‌
    முகங்களில் பட்டிமன்றம்.
    மண முறிவா? மண மகிழ்வா?

    __________________________________________________

    மனிதன்

    கடவுள் ஒத்திகை.
    அரங்கேறும்போதோ
    இருவரும் அங்கு இல்லை.
    ___________________________________________________

    கடவுள்

    இங்கே மணல் துளிகள் எத்தனை
    என்று எண்ணிக்கொண்டிருங்கள்.
    “நான் இல்லை”என்று தெரியும் வரை.
    ___________________________________________________

    சிற்பம்

    பிரம்மன் தோற்றான்.
    மனிதன் வென்றான்.
    உளி இங்கே உள்ளம் அல்லவா.
    ______________________________________________________

    உதயம்

    இன்று ரொக்கம் நாளை கடன்.
    “போர்டு” மாட்டியிருக்கிறது கிழக்கில்.
    விடியாததன் பெயரே விடியல்.
    _______________________________________________________

    கோட்டை

    உதிரும் என்று தெரியும்.
    கலையும் என்றும் தெரியும்.
    நம்பிக்கை இங்கு லட்சம் ஆண்டுகள்.

    __________________________________________________________

    சுண்டல்

    தேங்காய் மாங்காயோடு
    காகிதம் சுற்றியிருந்தது.
    முண்டகோபனிஷதம் அச்சிட்டது.

    ___________________________________________________________

    காற்று

    வாங்க வந்தேன்.
    கவிதையெல்லாம் வேண்டாம்
    இங்கே ஏற்கனவே குப்பை.

    ____________________________________________________________

  21. கன்னி மனம் மகிழ்வாளா?

    அலைகடலின் ஓரத்தில்
    அந்திசாயும் நேரத்தில் 
    சந்திக்க வந்தவனோ
    சற்றேதான் தூரத்தில்

    மற்றொரு நாளென்றால்
    மன்னிப்புத் தந்திடுவாள்
    இன்றைக்குப் பிறந்தநாள்
    இயற்கையின் பேரழகில்

    மயங்கியே  ரசித்திடஓர்
    மந்திரம் சொன்னவளை
    சந்தித்த வேளையிலா
    சச்சரவு எழவேண்டும் 

    உச்சமான கோபத்தில்
    உட்கார்ந்த காதலனும்
    கட்டழகி அருகிருந்தும்
    கவனிக்கும் நிலையிலில்லை

    தவம்அது செய்வதுபோல்
    தனிமையிலே தவிக்கின்றாள்
    கனியே முத்தே என்றேதான்
    கவிதைமழை பொழிந்தவன்

    தவிக்கின்ற பெண்ணைவிட்டு
    தனியேதான் இருக்கின்றான்
    இனிமையான பொழுதுதான்
    இம்சையைத் தருகிறது

    அம்சமுள்ள மணல்கோட்டை
    அவனுக்காய் கட்டுகின்றாள்
    கவனித்தால் மகிழ்ந்திடுவான்
    கலையதனை ரசித்திடுவான்

    அலைவந்தால் அழிந்துவிடும்
    அத்தனையும் மறைந்துவிடும் 
    சித்திரப் பாவையிவள்
    சிற்பமாய் வடித்திருக்கும்

    அற்புதக் காதல் மட்டும்
    அழியாது எப்பொழுதும் 
    கழிந்தே காலமும் போகிறதே
    கன்னி மனம் மகிழ்வாளா?

  22. மணல் வீடு…..

    ஒவ்வொரு முறையும் 
    காத்துக் கிடக்கின்றேன்
     முகம் காட்ட மறுக்கும் 
    முரட்டுப் பிடிவாதத்துக்குப்
    பின்னான முரண்படுதலில்களில் எல்லாம் 
    யாசிப்பவளாக மட்டுமே ….

    பூங்கொத்துக்கள் பரிசளிக்கவே
    விரும்புகின்றவள் 
    என்றான போதும்…..கீறிடும்
    முட்களைப் பற்றிய 
    முன்னெச்சிரிக்கையில்
    மெல்லக் கூம்பி இதழ் 
    உதிர்க்கிறது என் தனிமை…..

    கடந்து போன ஒன்றுக்குள் இருந்து
    என்னைத் தொலைப்பவனும்
    தொலைந்து போகும் ஒன்றுக்குள் இருந்து
    என்னை மீட்டெடுத்துக் காப்பவனும்
    என்றாகிப் போன உனக்கு….

    இம்முறையும் பரிசளிக்கிறேன்
    மணலால் செய்த மாளிகை ஒன்றை
    உனக்கான காயங்கள் ஏதுமின்றி 
    வழமை போல கலைத்து விட்டுப் போ….

    எனக்கான நேசத்தில் 
    குறைவற்றுப் போகும் வரை
    உனக்கான முகத் திருப்பலுக்காய்
    முயற்சிக்க வைத்தலில்
    குறை ஒன்றும் இல்லை…..

  23. ஆக்கம், எதிர்ப்பு, அழிவு

    கடற்கரை பாரீர் ! கலைக்கோயில் ஆக்கம் 
    இடப்புறம் காண்பீர் எதிர்ப்பு – வடபுறம்
    தாக்கவரும் பேரலைகள், தாரணி ஊழ்விதியே
    ஆக்கமுண் டாக்கும் அழிவு.

    சி. ஜெயபாரதன்

  24. செந்நிற வானத்துச்
    சில்லென்ற நிழலில்
    சிங்காரக்கடல் தவழ
    கரையோரக் கனவுகளாய்
    எழும்பி நின்றது
    மணற்கோபுரம்..!

    என் மனக்கோபுரத்தில்
    நீயிருக்க
    இந்த மண்கோபுரம்
    உனக்கெதற்கு?
    பரஸ்பர அன்பும்
    அது தரும் தெம்பும்
    தானே உயர்ந்த கோபுரம்..!

    காலாற நடக்கலாம்
    மனதாரப் பேசலாம்
    என்று தானே இங்கு
    வந்தோம்….!
    இங்கும் உனக்குக்
    கைபேசியில் கட்டளையோ?

    இயற்கை திறந்தே
    கிடந்தாலும்
    குறுஞ்செய்திக்
    குட்டைக்குள் சிறைபட்ட
    உனக்கு காடும் வீடும்
    ஒன்றுதானோ?

    கடல் காற்றின் இதமும்
    அலைகளின் அழைப்பும்
    அருகிருக்கும் நானும்
    எழில் மணற்கோட்டையும்
    உன்னை எதுவும்
    செய்யவில்லையா.?

    மாலைப் பொழுதின் மயக்கம்
    என்னுள் எழுந்த ஏகாந்தம்
    ஈர மணல் தந்த ஆர்வம்
    வெறும் ஈரமணல்
    அல்ல உட்பொருள்
    எனது இதய சாம்ராஜ்யத்தின்
    கனவுத் துகள்கள் அது..!

    நீ பாராவிட்டால் போ..
    அலை வந்து அள்ளுமுன்னே
    உன் செல்லிலாவது
    அள்ளியெடு..!

    இன்ப நாளின்
    இனிய பொழுதொன்றில்
    அம்மாவின் கைவண்ணமே
    மண் மாளிகையானதென்று
    நாம் பெற்ற செல்வங்கள்
    வாய் பிளக்கக்
    காட்டிடலாம் பார்..!

    இந்த ஊடல் இன்று போதும்
    ஊதக் காற்று
    கெடுக்கும் முன்னே
    வீடு போய் சேர்ந்திடலாம்
    வா..!

  25.                          அழியாது ஆயுளுக்கும் ….!!
                                “““““““““““““““““““““`
    அலையாடும் கரையோரம் 
    அழகான மணற்சிற்பம் 
    அன்பிற்கடை யாளமாக  
    அக்கறையாய்ச் செதுக்கிட்டேன்
    அர்ப்பணிப்பேன் உனக்காக 
    அன்பேநீ   திரும்பிப்பார்  !

    அடிவானம் கருத்திருச்சு
    அடைமழைக்கும் வாய்ப்பிருக்கு 
    அலைகளெல்லாம் ஆர்ப்பரித்து 
    அருகினிலே வருகிறது
    அச்சமென்னுள்  தோன்றிடுது 
    அழிந்திடுமோ சிற்பமென ….!

    அதற்குள்நீ சீக்கிரமாய்  
    அலைபேசிக் காமராவில் 
    அடுக்கடுக்காய்ப் படம்பிடிப்பாய்  
    அசலழிந்து போனாலும் 
    அற்புதமாய்ப்  பதிந்தநகல் 
    அழியாது ஆயுளுக்கும் …!!
     

  26. அன்பே அன்பே..

    எதைத் தேடிக்கொண்ட்டிருக்கிறாய்
    அன்பே அலைபேசி தன்னில் ; 
    அலைகடல் ஓரமாய் உனக்காய் 
    நான் அமர்ந்திருக்க !

    இணையத்தில் உலகைச் சுற்றும் நீ
    ஒரு முறை எனைச் சுற்ற வேண்டாம்
    உன் இதயத்தைச் சுற்றும் எனை நீ 
    ஏறெடுத்துப் ஒரு பார்வையேனும் 
    பார்க்க மாட்டாயா ?

    விளையாட்டாய் நினைத்து நீ 
    வேடிக்கை பார்ப்பதற்குமோ 
    தகுதியை இழந்திருக்கிறது 
    உனக்கான என் கனவு மாளிகை

    அலையது கூட இதைக் காக்க
    முன்னேற்றவில்லை அன்பே! 
    உன் விழிகளிரண்டும் இதை விட்டு 
    எங்கோ அலைபாய்வது ஏனடா 

    தனித்திருக்கும் நமை இணைத்திருக்க வேண்டிய காதலே
    மண் கோட்டையாய் என் கைகளில் 
    மாட்டிக்கிடக்கும் பொழுதுகளில் 
    எப்படி இந்தக் காதல் மீண்டு வந்து
    உனக்குள் எனை மாட்டிவிடும் 

    எவ்வளவு விசித்திரம் அன்பே இந்தக் காதல் 
    எனக்கான நீ உனக்கான யாரையோ 
    தேடுவதை 
    என் கண் முன்னே காட்டிக் கரைய வைக்கிறதே! 

    ஏற்றுக்கொள்வேனடா எனைப் பிரிவதில் தான் 
    உன் மகிழ்ச்சி ஒளிந்திருக்கிறது என்றால்!
    ஆனால் இப்பொழுது உடனே எழுந்து சென்று விடாதே 
    உன்னால் களைந்த பாவம் வேண்டாம்
    நமக்கான ம(ன)ண் கோட்டைக்கு.

    இந்த அலைகளிடம் எப்படியாவது 
    அழிக்கச் சொல்கிறேன் அன்பே 

  27. இரண்டும் ஒன்றாய்…

    சிற்பம் அழகாய் மணலினிலே
         செய்தவள் உள்ளம் பாராமல்,
    கற்பனை உலகில் சஞ்சரிக்கும்
         கணவன் மனமும் மாறாதோ,
    அற்பமாம் ஆசைகள் புறந்தள்ளி
         அன்பிலே ஒன்றாய் இணைந்தாலே,
    கற்பனை மிஞ்சிய நல்வாழ்வு
         கனிந்திடும் இனிய இல்லறத்திலே…!

    -செண்பக ஜெகதீசன்…

  28. திரும்பிப் பார்  ! 

    எனக்குநான் கட்டிய தாஜ்மஹால் !  ஆனால்
    உனக்குத்தான் செய்தேன் நினைவாய் ! – மனத்தில்
    விரும்பிப்பார் நாதா இவ்வெட்டாம் வியப்பை ! 
    திரும்பிப்பார் பேரலைக்கு முன்பு.  

    சி. ஜெயபாரதன்

  29. எட்டாம் வியப்பு 

    எனக்குநான் கட்டிய தாஜ்மஹால் !  ஈதோ
    உனக்குத்தான் செய்தேன் நினைவாய் ! – மனத்தில்
    விரும்பிப்பார் கண்முன் இவ்வெட்டாம் வியப்பை ! 
    திரும்பிப்பார் பேரலைத் தீங்கு !  

    சி. ஜெயபாரதன்

  30. காத்திருப்பு

    காத்திருந்த சிற்பத்தைக் காதலன் காணும்முன்
    தாக்குமலை கள்தான் தகர்த்துவிடும் – பார்த்திட
    வேண்டாத கோயிலை வீழ்த்தட்டும் பேரலைகள்
    ஆண்டவன் கட்டளை ஆம் ! 

    சி. ஜெயபாரதன்

  31. ஒரு காலத்தில்

    நெஞ்சோடணைத்த தழுவல்களையும்

    மெல்லிதழ் முத்தங்களையும்

    சுமந்து கொண்டிருந்த கைபேசி – இன்று

    கோபங்களையும் கடுகடுப்பையும்

    சமயங்களில் சற்றே அதிகமான

    படபடப்பையும் சுமந்து கொண்டிருக்கிறது !

    கடல் மணலில் கால் புதைத்து

    அலையினூடாக இருவரும் ஒருவராய்

    இறுகக் கைப்பற்றி இனிமையாய்

    பொழுதை கழிக்க வந்தவிடத்தில்

    காளை அவனை கையடக்க கைபேசி

    புது உலகில் இட்டுச் செல்ல

    மங்கை அவளோ – உள்ளக் கனவுகளுக்கு

    உருக்கொடுத்து – தங்களுக்கே தங்களுக்கென

    புது மணல் மாளிகையே எழுப்பி விட்டாள் !

    நீண்ட நெடிய தொலைபேசி உரையாடல் முடிந்து

    மெல்ல தலை திருப்பி பார்க்கும் கணவனுக்கு

    மனைவியின் கைவண்ணத்தில் மண் கோட்டை

    காதல் கோட்டையாய் காட்சி தருமா ? – அல்லது

    கவனக் குறைவாய் கைபட்டு – எழிலாய் எழுந்திருக்கும்

    ஆசைக் கோட்டையும் சரிந்து விட – அதை

    அறியக்கூட முடியாத அளவுக்கு

    பணிகளும் சுமைகளும் அவனையே

    ஆக்கிரமித்து விடுமா ?

  32.     கவிதைப்போட்டி  எம். ஜெயராமசர்மா … மெல்பேண்

              கடலம்மா சொல்லிவிடு !
        ——————————————
            செவ்வானம் கடல்பார்க்க
            சிற்றிடையாள் கோட்டைகட்ட
            சிங்காரக் காதலனும்
            சிந்தனையில் மூழ்கிநிற்கும்

            காட்சிதனை காணுகின்ற
            கடலம்மா சொல்லிவிடு
            கைகோர்த்து நிற்பாரா
            கைவிரித்துப் போவாரா ! 

           

  33. அற்ப ஆயுள்

    கயல்விழியாளே !
    கடற்கரையில் கட்டாதே
    கண்கவரும்
    கலைக் கோயில்.
    கணவன் மூக்கு நுகராது
    கற்பூர வாசனை !
    ஆங்காரப்
    பேரலைக்கும் பிடிக்காது உன்
    கரையோரச் சிற்பம் !
    மெய்வருந்திப் படைக்கும்
    சிற்பத்துக்கு
    அற்ப ஆயுளா ? 

    சி. ஜெயபாரதன் 

  34. மணல்கொண்டு
    மனக்கோட்டை கட்டவில்லை சுந்தரா
    உன் துனைகொண்டுவாழ
    மாதிரி கோட்டை கட்டுகிறேன் நமக்காக!

    குறித்துக்கொள் குறிப்புகளை
    அப்படியே தேடிக்கொள் 
    அதற்கான தகவல்களை…

    வடக்கு பார்த்த வாசல்
    மேற்கில்  பரந்த தோட்டம்!
    வடக்கு பக்கம் நீர்நிலை
    தெற்கு பக்கம் பெட்டக அறை!
    மூண்றடுக்கு மாளிகை
    முதலடுக்கில் மஞ்சம்!
    ஈன்றெடுக்கும் பிள்ளைக்கு
    ஈரடுக்கில் சவுகரியம்!
    நாற்புரமும் உயர்மதில்
    எப்புரமும் ஒளிமயம்!
    ஐந்தடியில் தலைவாசல்
    பூவேலை கதவினில்!
    பொன்வண்ண வெளிப்பூச்சு
    இளவண்ண உட்பூச்சு!
    திரைசீலை தொங்கவிட்டு
    அழகாய் அதை மடித்துகட்டி!
    என்னிரண்டு அறைகளோடு
    மிளிரவேண்டும் நவீனகலை!

    இதில்…
    உனை பிரிந்த நிமிடம்
    எந்த நாளிலும் வேண்டாம்!
    நம்மை பிரித்த நாள்
    நம் வாழ்நாளிலும் வேண்டாம்!
    பனி பொழியும்
    உன் பார்வையில்
    உன் பணிசெய்து நானிருக்க…
    உடல் சார்ந்த நெருக்கம் பின்தங்கி
    உணர்வு சார்ந்த நெருக்கம்
    நம்மை தாங்க
    இதயங்கள் கலந்து
    இடைவெளி கரைந்து
    இணக்கத்தில் வாழ்வோம் இதிலே!

  35. அடியேய் சிங்கி
    இங்கன ஓடியாந்து
    பாரடி என் பார்வதி ..!
    நம்ப ராகுலும்
    நம்ப மருமவ
    ஐஸும் கடலு பக்கமா
    காத்து வாங்க போனவுக
    கடலோரக் கவிதையா
    மண்ணுல அளகா
    கோட்டை கட்டி
    அதையும் அப்படியே
    படமா புடிச்சி
    நாம காண
    அனுப்பியிருக்காக
    அமெரிக்கா போனா என்னா
    நம்ம கூட
    ஆண்டிப்பட்டில இருந்தாத்
    தான் என்னா
    பெத்த புள்ளைங்க
    அவுங்க ஆனந்தத்தை
    நம்ம நினைப்போட
    மடல் போட்டு
    அதில் அவுங்க
    படம் போட்டு
    அனுப்பி வெச்சு
    நமக்கும் ஆனந்தம்
    தராங்க பாரேன்…
    இது தாண்டி
    நாம பெத்த வரம்…
    பார்த்துப்புட்டு சொல்லடி
    என் அருமை சிங்கி…!

    ம்கும்…போதும் போதும்..
    எம் மருமவ தான்
    எம்புட்டு அருமையா
    கோபுரம் கட்டியிருக்கா
    அதைப் பார்த்து
    ரசிக்காமே எதையோ
    பார்த்து ரசிக்கிற
    அவனை நான்
    ரொம்பத் திட்டுனதா
    சொல்லி பதில்
    போடுங்க ஆமா
    நான் சொல்லிப்புட்டேன்..!

  36. புதுப்பித்தல்

    திங்கள் முதல் சனி, வரை

    அலுவகத்தில் அவனுக்கு

    இடையறாத வேலை

    அவளுக்கோ அலுவலகம்

    வீடு என இரட்டைக்குதிரை

    சவாரிஎன்ன செய்வார்கள்?

    ஞாயிறு   வந்தால் போதும்

    மெல்ல எழுந்து மெல்ல குளித்து

    சமையலறைக்கு ஓய்வுகொடுத்து

    ஹோட்டலில் சாப்பிட்டு 

    கடற்கரை கண்டார்கள்

    அவரவர் சுதந்திரத்தில்

    அவரவர் தலையிடாமல்

    சின்ன வயசு சந்தோஷத்தை

    சிறைபடுத்தி மண்ணிலே

    கலையுணர்வு  காண

    அவனோ.  நண்பர்களிடம்

    குறுக்கீடு இல்லாமல்

    கடலைபோட்டும்

    கேண்டிகிரஷ் ஆடியும்

    தங்களை தாங்களே

    புதுப்பித்துக்கொண்டிருந்தார்கள்

    அடுத்த  நாள்  விடியலுக்காக

    பாவம் அவர்கள்

    வேலைப்பளு, வில்

    இந்த சின்ன சந்தோஷத்திற்காக

    கடற்கரை  மணலில்  ஹாயாக!

    யாரும் டிஸ்டர்ப் செய்யாதீர்கள்

    அந்த சின்னஞ்சிறுசுகளை

    சரஸ்வதிராசேந்திரன்

  37. புதுப்பிப்பேன்

    கட்டினேன் கோயிலொன்று, காதலன் கண்காணான் !
    சட்டெனத் தாக்குமோ பேரலைகள் ? – பட்டெனப்
    போனாலும் மீண்டும் புதுப்பித்து நான்மகிழ்வேன் !
    வீணான வேலையா சொல் !

    சி. ஜெயபாரதன். 

  38. வல்லமை படக்கவிதை 11
    கலைப்பித்து

    நேர்த்தியாயொரு மாளிகை நான்
    வார்த்து முடியும் வரை
    பார்க்காது இந்தப் புறம்
    சேர்த்திடு காதல் வரிகள்.
    காதல் பித்தம் ஏறியும்
    கலைப் பித்து முற்றிட
    காவற்காரனாய் நீ மாற
    ஆவல் தீர்க்கிறேன் நான்.

    பா ஆக்கம் 
    பா வானதி வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.
    8-5-2015.

  39. துருவங்கள் இரண்டு உள்ளங்கள் ஒன்று

    மணற் சிற்பமொரு புறம் இங்கே
    அணங்கயர்தல் அழகு காண்! அங்கே
    உணர்வுடன் நீ வரையும் பா
    கணக்காயுலகக் கார் விரட்டட்டும்.
    உன் ஆதரவு எனக்கு என்றும்
    என் ஆதரவு உனக்கு! இனி
    நம் கலைகள் வளர எது
    எம்மைத் தடுக்கும் சொல்!

    (அணங்கயர்தல் – விழாக் கொண்டாடுதல்)

    பா ஆக்கம் 
    பா வானதி வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.
    8-5-2015

  40.   
     இறப்பு வரை

    அன்று
    கடலோரம் நீ
    காதலால் கட்டிய கோட்டை
    மணல் கோட்டையாகுமென
    மனதாலும் நினைக்கவில்லை

    உச்சி சிலை
    உயிர் காக்கும்
    சாமி என்றாய்

    மீசை இரண்டும்
    நம் ஆசை காக்க
    ஆண்டவன் இட்ட
    வேலி என்றாய்

    சின்ன உருவமெல்லாம்
    நாம் சேர்ந்து வாழ
    வண்ணக் கவிபாடும்
    வானத்து தேவர் என்றாய்

    அத்தனையையும் பொய்யாக்கி
    பொல்லா நோய்க்குள்
    நீ ஏன் 
    புதைந்து போனாய்

    உன் சிரித்த முகத்தையும்
    சிந்திய சொற்களையும்
    கைபேசியில் அடைத்து வைத்து
    கண்ணீரில் வார்த்தெடுத்து
    தினமும்
    கனவுகளில் கரைகிறேன்

    மண் காணும் இடமெல்லாம்
    உன் மணல் கோட்டையும்
    இடிந்து போன 
    என் மனக் கோட்டையும்
    இன்னமும் இதயத்தில் விரிகிறது
    இனியும் விரியும்
    என் இறப்பு வரை

  41. பருவக் குழந்தை மணல்கொண்டு செய்யும் 
    உருவக் கலைக்காணா நெஞ்சில் –கருக்கொண்ட 
    மேகம் கடல்மேல் மழையாய் பொழிதற்கு 
    யூகம் வகுக்கும் நிலை 

    சோகக் கருட நிழல்வட்ட பாம்பொன்றின் 
    மோகம் திருடா திருடனின் –தாகம் 
    அறியா தவளோ அரியா சனத்தை 
    நிறுவிய நெஞ்சுள் நிஜம்.

    வெளிச்சத்தில் நின்று இருளுக்குள் செல்ல 
    உளியற்ற எண்ணம் செதுக்கும் –களிப்பற்ற 
    பாதை கடக்கும்  பயணமன்றோ காதலெனும்  
    போதை சரிக்கும் புயல்.

    அணிந்த சிவப்பு அறிவிப்பை ஏற்றுத் 
    துணிந்து துடியாய் துடிக்க – கணித்த 
    கடவுளின் நீதி கடற்கரை காதல் 
    படகிற் கெவரோ  துடுப்பு?
    *மெய்யன் நடராஜ் 

  42. சிற்பங்கள் சொல்வதென்ன?

    எண்ணக் கருவாக்கி
    எனக்கோர் உருவமிட்டு
    வண்ணக் கனவுகளை
    வார்த்து எடுக்கின்றாள்!

    வாழும் வாழ்வினிலே
    வந்துபோகும் எண்ணமெலாம்
    வாழ்ந்தால் வரலாறு
    வீழ்ந்தால் வரும்நாளும்!

    மனங்கள் ஒன்றாக
    மணலே சாட்சியாக
    மன்னன் துணையாக
    மங்கை மகிழ்வாக

    மண்ணின் சிற்பங்கள்
    சொல்லும் சேதியென்ன?

    வாழ்வில் இருபக்கம்
    வசந்தம் ஒருபக்கம்
    வாடும் மறுபக்கம்
    வளைத்துப் பழகிக்கொள்!

    வாழ்வே சுகமாகும்
    வளர்தமிழ் தினம்படித்து
    வள்ளுவம் ஏகிடுவாய்
    வாழ்வின் நெறிவிளங்கும்!

    துருவ முனைபோல
    இருதிசை இருந்தாலும்
    ஒருமுகம் பார்த்திருக்க
    உறவும் பெருகிடுமே!

    அலைகள் அழித்துவிடும்
    அழகிய எனைக்கூட!
    அதற்கென அழுவதில்லை
    அழகாய்ச் சிரித்திடுவேன்!

    அழிவினை நினைத்திருந்தால்
    ஆக்கமும் வந்திடுமோ?
    ஊக்கமும் கொண்டிடுவாய்
    ஏக்கங்கள் தொலைந்திடுமே!

    வாணும் வையகமும்
    வானவர் போற்றுதலும்
    வளைக்கரம் பெற்றிடவே
    வான்புகழ் கொண்டிடவே!

    நாயகன் மனமாறி
    நங்கையின் முகம்பார்க்க
    நற்துணை யாயிருந்து
    நயமுடன் வாழ்வதற்கு!

    நானும் உருப்பெற்றேன்
    நாழிகை வரம்பெற்றேன்
    நானிலம் பார்த்துவிட்டேன்
    நானுனைச் சேர்ந்தும்விட்டேன்!!

    கலையென மகளிருக்க
    கண்ணிலும் மறைத்திருக்க
    காட்சியும் தெரியலையோ
    காளையின் மனதிற்கு?

    கருத்தாய் எழுந்துவிடு
    காலமும் கரம்சேர்த்து
    கலைநிகர் படைப்பதற்கு
    கன்னியும் இருக்கின்றாள்!

    கணத்தினில் மறந்துவிடு
    கடந்தன துன்பமெலாம்
    கடலலை கரைக்குமுன்னே
    கண்கவர் சிலையெனைப்பார்!

    கன்னியின் துணையாலே
    கண்டிட்டேன் இன்பம்யான்
    காத்திரு உனக்குமவள்
    கலைநிகர் வார்த்தெடுப்பாள்!

    நம்பிக்கை கொண்டெழுவாய்
    நாயகி கைகோர்ப்பாய்
    நாளையும் வந்திடுவாய்
    நானுனில் கலந்திருப்பேன்!

    மணலினின் தேடாதே
    மானுடம் தேடிஎடு
    காற்றினில் கலந்துவந்து
    கடவுளாய் வாழ்த்திடுவேன்!!

    அன்புடன்
    சுரேஜமீ

  43. சிலையாகும் ஒரு மணல் மாளிகையில்

    கண்ணீர் துகள்களின் சேர்க்கையாய்
    மணல்துகள்கள் அவள் கைகளுள்!
    கைகள் பிசைந்ததில் பிரசவித்துக்
    கொண்டிருந்தன மணல் கோட்டைகள்!
    மனக் கோட்டைகளின் பிரதிபலிப்பாய் !
    கண்ணீரின் உப்பும் மணல் துகளில்
    கடல் நீரின் உப்புடன் சேர்ந்தே இருந்தது !\
    தொலைத்து விட்ட பிள்ளைப் பராயத்தைத்
    தேடிக் கொண்டிருந்தன அவள் கைகள்
    சிலையாகும் ஒரு மணல் மாளிகையில்!
    கரை தழுவும் கடல் அலைகள் -அதைக்
    கரைத்தும் செல்லும் யதார்த்தங்கள்
    அவள் ஆழ் மனதின் ஏக்கங்கள் போல
    அழிந்து பொசுங்கித் துகள்கள் ஆக்கலாம் ……………..
    சில பொழுதாவது சிதைந்து போகாத
    அழகியல் நிலையை ரசித்துக் கொண்டே
    நிர்மாணித்துக் கொண்டிருந்தாள் – தன்
    உள்ளக் கிடக்கையைப் பகிரங்கமாக!
    மணல் மாளிகை நிறைத்த அறைகள் யாவும்
    தன் அன்பை நிறைத்திருந்தாள்
    தன் தந்தையும் தாயும் கொஞ்சிக் குலவிய
    எஞ்சிய அன்பின் எச்சங்களாக ………..!
    கெஞ்சல்களையும் அஞ்சலையையும்
    கொஞ்சமும் அறியாமல் அவனோ
    புறமுதுகிட்டே .. புறக்கணிப்பு நிகழ்த்துகிறான்
    புரிந்தோ புரியாமலோ ………யாரறிவார்
    அவனுக்கே அதுவும் தெரிந்திருக்கும் !
    கரை தழுவ நினைக்கும் அலைகள் –தைரியமாகக்
    கரைத்துச் சென்றன அவள் மணல் மாளிகையையும் !!

    புனிதா கணேசன்
    09.05.2015

  44. கனவு வீடு

    ஏழடுக்கு மாளிகையில் 
    ஏற்றமுடன் நாமிருந்தோம்
    காற்று அடித்ததுவோ 
    கடும் புயல் வந்து தாக்கியதோ
    வீசும் கடும் புயலில் 
    கீற்றாய் நாம் பிரிந்தோம்
    வேற்று மண் தனிலே
    நாற்றாய் நடப்பட்டோம்
    வீட்டுக் கனவு மட்டும்
    நெஞ்சில் வேரூன்றி விட்டதம்மா -இங்கு
    கீற்றுக் கொட்டகையில்
    கிழிந்து கிடக்கின்றொம்
    நேற்றுக் கடற்கரைக்குச் 
    சென்று மண் அளைகையிலே
    வீட்டுக் கனவு வந்து 
    கையது தன்னாலே
    கட்டியது மணல் வீடு
    கனவினில் கண்டது
    நிஜத்தினில் வந்து நிற்க​
    பனித்தது எந்தன் கண்கள்
    என் கனவு வீட்டைப் பாரீர்

    ராதா மரியரத்தினம்
    09.05.15

  45. ஒத்திகை

    செவ்வானம் படர்ந்திருக்க​
    தூவானம் அடிப்பதைப் போல்
    வெண் அலைகள் ஆர்ப்பரிக்க​
    பெண்ணொருத்தி அகம் அமைக்க​
    ஆடவனோ வரைகிறான்
    இங்கிவர்கள் சமைத்த​ கனவு வீட்டுக்கு
    வரவு செலவெழுதி ஒத்திகை 
    பார்க்கையிலே தெரிகிறது 
    அப்பன் ஆத்தாள் பட்ட கஸ்ரமெல்லாம்
    வீட்டுக்குத் தெரியாமல் 
    திருமணம் செய்ய​ எடுத்த​ முடிவை
    ஒத்தி வைத்து
    வீட்டுக்குப் போக்கின்றனர் இருவரும்

    ராதா மரியரத்தினம்
    09.05.15

  46. ஆட்டமும் பாட்டமும் அன்போ டியைந்திட்டு
    வாட்டமாய் நாம்வாழ வாசல் பலவைத்து
    மேட்டு நிலத்தினில் மாளிகை போன்றதோர்
    கோட்டையைக் கட்டு கிறேன்

    ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

  47. எண்ணத்தில் கோட்டை எழுப்புகின்ற ஏந்திழையே
    திண்ணமாய்ச் சொல்வேன், திருந்திவிடு! – வண்ணவெழில்
    வாலைக் குமரிகளை வாவென் றழைத்தலைத்துக்
    காலம் கடத்தும் கடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *