(நினைவுகளின் சுவட்டில் – பாகம்  2 – பகுதி  7)

வெங்கட் சாமிநாதன்

நாக்பூர் வந்து சேரும் வரை பயணம் எவ்வித விக்கினமும் இல்லாது இருந்தது. என்னை அவர்கள் துணைக்குச் சேர்த்துக்கொண்டது, “சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை” என்ற வாசகத்தை நம்பித்தான். ஜனங்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். நாக்பூர் போய்ச் சேர மணி சாயந்திரம் நாலு ஆகிவிடும். இவர்களை அழைத்துக்கொண்டு, நாக்பூர் ஸ்டேஷனில் காத்திருக்கும் கிராண்ட் எக்ஸ்ப்ரஸோடு சேர்க்கப்படும் வண்டியைத் தேடி இடம் பிடிக்கவேண்டும். இந்தப் பாதையில் வருவது இது தான் முதல் தடவை. பிலாஸ்பூர் வரைக்கும் ஒரு தடவை வந்திருக்கிறேன் தான். அது ஜெஸகுட்டாவில் இறங்க மறந்துத் தூங்கிவிட்டதால். என்னைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்த ஊர் பற்றியெல்லாம் கேட்டு வந்தார் திருமதி கிருஷ்ணஸ்வாமி. எப்போதும் புதிதாகப் பழக நேரும்போது நடக்கும் பரிச்சயம் தான். ஆனால் அவரிடம் ஒரு சின்னப் பையனிடம் காட்டும் கரிசனத்தையும் உணர முடிந்தது. குழந்தை வேறு. அது அதிகம் பழக மறுத்தது. அன்றைய தினத்துக்கான சாப்பாடு உடன் கொண்டு வந்ததை நானும் பகிர்ந்துகொண்டேன். எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.

நாக்பூர் ஸ்டேஷன் வந்ததும் சென்னைக்குப் போகும் வண்டியைத் தேடிக் கண்டுபிடிப்பது அவ்வளவு ஒன்றும் கஷ்டமாக இல்லை. எங்களுக்காகக் காத்திருந்தது. இடம் பிடித்துக்கொண்டோம். மூன்று பேருக்கும். உட்கார இடம் கிடைத்தது. பக்கத்தில் ஒரு பெரியவர், நல்ல சிகப்பு. தாட்டியான உடம்பு. பஞ்சகச்சம், மேலே ஒரு சின்ன ஜரிகைத் துண்டு போர்த்தியிருந்தார். தமிழர். அப்படி ஒரு பெரியவர் பக்கத்தில் இருந்தது மனத்துக்கு இதமாக இருந்தது. ஒரு பாதுகாப்பு என்று கூட உணரத் தோன்றியது. அவரும் கொஞ்ச நேரப் பழக்கத்திற்குப் பிறகு தாராளமாகப் பேச ஆரம்பித்தார். எங்கிருந்து வருகிறோம்? எத்தனை பேர் குடும்பத்தில்…? வகையறா வகையறா. அடுத்த நாள் ராத்திரி பிரியப் போகிறோம். இவ்வளவு விவரம் ஒருவரைப் பற்றித் தெரிந்து என்ன செய்யப் போகிறோம் என்ற நினைப்பு இல்லாது வெறும் பேச்சுக்காகவே சேகரிக்கும் விவரமாகத் தெரிந்தது.

என்னைப் பற்றிக் கேட்டதைச் சொன்னேன். திருமதி கிருஷ்ணசாமிக்கு அவர் கேள்விகளுகெல்லாம் பதில் சொல்வது கூச்சமாகவே இருந்திருக்கிறது. இதிலிருந்து அவரை நான் எப்படிக் காப்பாற்ற முடியும்? பேசாதிருந்தேன். அவர் தான் கேள்விகள் கேட்டாரே ஒழிய நாங்கள் அவர் பற்றிக் கேட்கவும் இல்லை. அவர் தன்னைப் பற்றிச் சொல்லவும் இல்லை. இருந்தாலும், அந்தப் பெரியவரை எதுவும் சொல்லவும் முடியவில்லை. பெரியவர் இருப்பது ஒரு துணையாயிற்றே. அது போக எதுவும் சொல்வது மரியாதையும் இல்லை. இந்தக் கூச்சத்தையும் மீறி எங்களிடையே ஒரு சகஜ பாவம் உருவானது என்று தான் சொல்லவேண்டும். அந்த சகஜ பாவத்தில் அந்த அம்மையார் அவரிடம் பேசும் போது ஏதோ உரிமையோடு என்னைக் கேலி பேசவும் செய்தார். கேலி செய்தார் என்பது தான் நினைவில் இருக்கிறதே ஒழிய, என்னவென்று நினைவில் இல்லை. அது எனக்கு ஒரு நெருக்கத்தைக் கொடுத்ததால் எனக்கும் அந்தக் கேலி வேண்டித்தான் இருந்தது.

நேரம் செல்லச் செல்ல, வண்டியில் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போயிற்று. உட்கார்ந்திருப்பவர்கள் நெருக்கியடித்துக்கொண்டு இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். நிற்கும் வண்டியில் தன் இடத்தை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் இருந்தார்களே ஒழிய, கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்ப்ரஸ் வந்தால் அதில் சௌகரியமாக இடம்பிடிக்க முடியுமா என்று எண்ண அவர்களுக்குத் தோன்றவில்லை.

நேரம் செல்லச் செல்ல வண்டியில் ஏறும் கூட்டத்திற்கு ஓர் அளவில்லாமல் போய்க்கொண்டிருந்தது. வழியெல்லாம், சாமான்களை வைத்துக்கொண்டு அடையத் தொடங்கினார்கள். யாரும் தான் இருந்த இடத்தை விட்டு எப்படி வெளியே செல்வது என்பது தெரியாதபடி கூட்டத்தின் நெரிசல் அதிகமாகிக்கொண்டிருந்தது. வழியை விட்டு நகர்ந்து போகச் சொல்வதும், அவர்கள் கேட்காதது போல உட்கார்ந்திருப்பதும், “ஏன்யா நீயே கக்கூசுக்குப் போகணும்னா எப்படிய்யா போவே, அதை நினைச்சியா, இங்கேயே வழியை மறைச்சிட்டு உட்கார்ந்திட்டயே” என்று திட்டினால், “போறப் போ சொல்லுங்க. அப்போ பாத்துக்கலாம். இப்போ சும்மா இரு” என்று இவர்கள் சத்தம் போடுவதுமாக ஒரே கூச்சலும் கலவரமுமாக இருந்தது. இப்படியே தான் சென்னை போகும் வரை இருக்குமா? இந்த மாதிரி ஒரு அனுபவம் இருந்ததில்லை. திருமதி கிருஷ்ணசாமியின் முகத்தில் கலவரமும் பீதியும் தெரிந்தது. “நான் இப்படி தனியா வந்ததுமில்லை. மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்ததுமில்லை, எப்படி குழந்தையோடு நல்லபடியா ஊருக்குப் போகப் போறோமோ தெரியலையே” என்று குரல் தழுதழுக்கச் சொல்லும் போது அழுகையின் வரம்பைத் தொடும் நிலையில் இருப்பதாகத் தோன்றியது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பக்கத்தில் இருந்த பெரியவர், “கவலைப்படாதேம்மா. நாங்க இருக்கோம். பாத்துப்போம். ஒரு நாள்தானே, எப்படியோ கழிந்து விடும்.” என்று ஆறுதல் சொன்னார்.

நான் இருந்த இடத்தை விட்டு நகர முடியாது. இப்படியே எப்படி உட்கார்ந்திருப்பது? தூங்குவது எப்படி? உட்கார்ந்தபடியே? இவர்களை என் பொறுப்பில் என்னை நம்பி, ஆண்பிள்ளைத் துணையென, அனுப்பியிருக்கிறார்களே?” என்று எனக்குக் கவலையாக இருந்தது.

அதெல்லாம் போக, இன்னுமொரு கவலை. என் பையில் அறுநூறு ரூபாய் பணம் வேறு இருந்தது. அதைத் துணிப்பையில் வைத்தால் ஏதும் துணி எடுக்கும் போது விழுந்துவிடும், பையிலேயே இருப்பது தான் பத்திரம் என்று பையில் வைத்திருந்தேன். அதை வேறு காபந்து பண்ணவேண்டும்.

அறுநூறு ரூபாய் என்பது எனக்குப் பெரிய பணம். அதை நான் மாயவரம் போய் ஹிராகுட்டில் இருக்கும் ஒரு காண்ட்ராக்டரின் குடும்பத்துக்குச் சேர்க்கவேண்டும். அவர் அதை மணியார்டரில் அனுப்பக் கூடாதோ? என் மூலம் கொடுத்தனுப்புவானேன் என்று எனக்கு எரிச்சல் வரத் தொடங்கியது அப்போது. அது வரை இதென்ன பெரிய விஷயம் என்று ஒரு மிதமிதப்புடன் அந்தப் பணத்தை ஒப்புக்கொண்டிருந்தேன்.

அந்தப் பணத்தைக் கொடுத்தவர், ஒரு வேடிக்கையான மனிதர். தன்னைப் பற்றி மிக அட்டகாசமாகப் பேசுவதில் பிரியர். தான் செய்ய முடியாத காரியமே இல்லை என்பதே போல. இவ்வளவுக்கும் சிறிய குத்தகைகள் எடுத்துப் பிழைப்பை நடத்துகிறவர். எளிய தோற்றம். தனிக்கட்டையாகத்தான் இருந்தார் ஹிராகுட்டில். அடிக்கடி எங்களிடையே அவர் காட்சி தருவார். அத்தருணங்களில் அவ்வப்போது அவர் திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டது போல, நெற்றியை விரித்த கை விரல்களால் அழுத்திக்கொண்டு, “டேய் திருமலை, ஒரு பேப்பர் எடுத்துண்டு வாடா, ஒரு லெட்டர் டிக்டேட் பண்றேன். எழுதிக் கொடு” என்பார். அது மாயவரத்தில் அவருடைய மனைவிக்கு எழுதுவதாக இருக்கும். ‘பையன் நன்னா படிக்கிறானா, பொண் என்ன பண்றா? போதும், இந்த வருஷத்தோட படிப்பை நிறுத்தச் சொல்லு. அடம் பிடிச்சா நான் சொன்னேன்னு சொல்லு. அவளுக்குக் கல்யாணம் பண்ணனும். விசுவை காலேஜில் சேக்கணும். நான் இங்கே அலைஞ்சிண்டு இருக்கேன். அடிக்கடி வர முடியாது. ரண்டு மாசம் முன்னாலே தானே ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் அனுப்பினேன். அடிக்கடி பணம் அனுப்புன்னு ஒண்ணும் எனக்கு எழுத வேண்டாம். பணம் வந்ததும் அனுப்பறேன். இப்போ ஆயிரம் ரூபாய் அனுப்பறேன்…..” இப்படி போகும்.

”அந்த லெட்டர் எழுதிட்டயா, சரி கொண்டா”, என்று வாங்கி அதில் கையெழுத்துப் போட்டு மடித்து சட்டைப் பைக்குள் வைத்துக்கொள்வார். “சரி போறேன். எனக்கு வேலை இருக்கு. போற வழிலே இதைத் தபாலில் நானே போட்டுக்கறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விடுவார். நாங்கள் எல்லாம் வாயைப் பிளந்துகொண்டிருப்போம் நூறு, நூற்றைம்பது என்று சம்பளம் வாங்கிக்கொண்டு ஊருக்கும் பணம் அனுப்பும் நாங்கள் மாதா மாதம் ஆயிரம் ஆயிரத்தைந்நூறு என்று மூன்று பேர் இருக்கும் மாயவரம் குடும்பத்துக்கு பணம் அனுப்புகிறவரய்யா இவர்” என்று மலைத்து நிற்போம். ஒரு நாள் சம்பத் தான் அவர் குட்டைப் போட்டு உடைத்தான். அவர் சும்மா நம்ம கிட்ட பந்தா பண்றதுக்காக இப்படி பண்றார். அவர் எழுதற லெட்டரையெல்லாம் தபாலில் சேர்ப்பதில்லை. வழியில் கிழித்துப் போட்டு விடுவார். இரண்டு நாள் கழித்து இன்னொரு இடத்தில் இன்னொருத்தனுக்கு இன்னொரு லெட்டர் இரண்டாயிரம் அனுப்புவதாக லெட்டர் எழுதச் சொல்வார். அதையும் வழியில் கிழித்து எரிந்து விடுவார்” என்றான்.

இப்படி நாங்கள் ஒவ்வொருவரும் முறை வைத்து முட்டாளாகியிருக்கிறோம். இடையில் ஒரு நாள் சம்பத் அகப்பட்டான். அவன் வெகு பவ்யமாக அவர் சொல்வதையெல்லாம் எழுதிவிட்டு, கடைசியில், ”நானே அந்தப் பக்கம் தான் சார் போயிண்டிருக்கேன். நீங்க பேசீண்டு இருங்கோ. நானே போஸ்ட் பண்ணிடறேன்” என்று ஆரம்பித்து கொஞ்ச நேரம் அவரோடு வாதாடினான். அவருக்கு ரொம்ப கஷ்டமாகப் போய்விட்டது. திரும்ப வாங்கி விட்டாரென்றாலும், அது சுலபத்தில் நடக்கவில்லை. ஒரு வேளை தன் குட்டு வெளிப்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் தட்டியிருக்கலாம். ஆனால், நாங்கள் சிரித்து வைத்து ஏதும் அவரை மனம் நோகச் செய்யவில்லை.

ஆனாலும் இப்போது அவர் லெட்டரும் என் சட்டைப் பையில். அவர் கொடுத்த பணம் ரூபாய் அறுநூறும் அந்த கவரில் இருக்கிறது. பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். சம்பத் சொன்னான். ”கட்டாயம் கொண்டு போய்க் கொடுடா. அங்கே உன்னைச் சாப்பிடச் சொல்வா. மாட்டேன்னு வந்துடாதே. சாப்பிட்டுட்டு வா. காரணமாத்தான் சொல்றேன்” என்று வேறே தனியாகக் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறான். என்னிடம்.

(நினைவுகள் தொடரும்…….

==============================

படத்திற்கு நன்றி – http://www.flickr.com/photos/28235070@N06/3259644377/

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “அந்த ரயில் பயணத்தில்….

  1. இயல்பாக அமைந்த இந்த கட்டுரையை ரசித்தேன். ரயில் பயணங்கள் சுவையானவை, பார்வையாளனாக மட்டும் இருக்கத் தெரிந்தால். ‘லோகோ பின்ன ருசிஹி!’ என்பதற்கு, ரயில் பயணம் சான்றுகள் பல அளிக்கும். ‘டெக்கான் க்வீன்’ என்ற மும்பை-புனே ரயில் வண்டிக்கு ஆத்மாவே உண்டு. எழுதப்படாத விதிகள் உண்டு. சீட்டாட்டமும் ரெகுலர். கோசாம்பி போன்றவர்கள் நூல்கள் எழுதியதும் உண்டு. எதுக்கு சொல்லவரேன் என்றால், கட்டுரை வெல்கம்.
    இன்னம்பூரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *