வீட்டுக் கடனுக்குக் காப்பீடு எடுக்கிறீர்களா? உஷார்! உஷார்!

0

எம் எஸ் லட்சுமணன்,
காரைக்குடி

வீட்டுக் கடன் வங்கியில் வாங்கப் போகிறீர்களா? மக்களே உஷார் ! உஷார்!

பிராப்பர்டி இன்சூரன்ஸ் எடுக்கப் போகும் முன் கவனமாக இருங்கள் மக்களே !

10 வருஷ லோனுக்கு 20 வருடம் பிரீமியம் கட்டும் அவலம் !

விழிப்புணர்வுப் பதிவு

நண்பர்களே சமீபத்தில் தேசிய மயமாக்கப்பட்ட மிகப் பெரிய  வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுள்ளேன். வீட்டுக்கடன் எனக்கு வட்டி அதிகமாக வருகிறது என்கிற காரணத்தினால் மற்றொரு தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கியில் லோன் மாற்றலாம் என்று முயற்சி செய்தேன். அங்குள்ள மேலாளர் என்னிடம் வீட்டுக் கடனுக்கான லோனை மாற்றும் பொழுது பிராப்பர்டி இன்சூரன்சையும் மாற்றித் தர வேண்டும் என்று கூறினார்.  பிராப்பர்டி இன்ஷூரன்ஸ் தொடர்பான தகவல்களை  எஸ்பிஐ வங்கியில் சென்று கேட்டேன்.

முன்பே உங்களின் வீட்டிற்கு நகல் வந்திருக்கும் என்று தெரிவித்தார்கள். ஆனால் எனக்கு நகல் வரவில்லை என்று கூறினேன். ஒரு வாரம் என்னை அலைய விட்டு இரண்டு பக்க  நகல்கள் தந்தனர். அதனில் இன்சூரன்ஸ் அலுவலக இடத்தில் முகவரி மட்டுமே இருந்தது. தொடர்பு எண் எதுவுமே இல்லை. மீண்டும் இரண்டு பக்கங்களையும் நன்றாகப் படித்துவிட்டு அதில் உள்ள டோல் பிரீ எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன். இன்சூரன்ஸில் உள்ள, எனது முன்பு குடியிருந்த வீட்டின் முகவரியை  மாற்றுவதற்கு முயற்சி செய்தேன்.

கஸ்டமர் கேரில் 30 நிமிடங்கள் கழித்துத் தான் தொடர்பு கிடைத்தது. அவர்களுக்கு என்னுடைய மெயில் ஐடி மெயில் பண்ணச் சொன்னார்கள். தகவலை ஏன் எனக்குக் காப்பி அனுப்பவில்லை என்று கேட்டேன். அதற்கு உங்களுடைய மெயில் ஐடி அப்டேட் செய்யப்படவில்லை,  மெயில் ஐடி அப்டேட்  செய்திருந்தால் அனுப்பி இருப்போம். கொரோனா காரணமாகத் தபாலில் அனுப்பவில்லை என்றும் தெரிவித்தார்கள் .அதன் தொடர்ச்சியாக பல மெயில்கள் அனுப்பிய பிறகு எனது முகவரி மாற்றப்பட்டது. மீண்டும் எனது பிராப்பர்ட்டி முகவரியும் தவறாக இருந்தது. அதனையும் மாற்ற, பல மெயில்கள் கொடுத்தோம். டோல் பிரீயில் 10 முறை தொடர்பு கொண்டு, விடா முயற்சி செய்து முகவரி மாற்றம் செய்துகொண்டேன்.

இதற்காக எனக்கு எஸ்பிஐ கடன் பெற்ற வங்கியிலிருந்து எந்த விதமான உதவியும் இல்லாமல் இருந்தது. ஆனால் பிராப்பர்டி  இன்சுரன்ஸ் முழுவதுமே அந்த வங்கியின் வழியாகத்தான் செய்யப்பட்டிருந்தது. எனக்கு இன்சூரன்ஸ் தொடர்பான எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மீண்டும் நான் அறிந்துகொள்ள முயற்சி செய்தபோது வங்கியிலிருந்து எனக்குச் சரியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. மிகப்பெரிய எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகவரி மட்டுமே உள்ளது. தொடர்பு எண்கள் (டோல் பிரீ எண்கள் தவிர) எதுவுமே இல்லாதது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வங்கியைத்  தொடர்பு கொண்டால் மேலாளர் அவர்களோ, இன்சூரன்ஸ் நிறுவனத்தினரை டோல் பிரீ எண் வழியாகத்தான் தொடர்பு கொள்வோம்  என்று தெரிவிக்கிறார்கள். என்ன செய்வது மக்களை ஏமாற்றுவதற்குப் பல்வேறு வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். எனது இன்ஷூரன்ஸ் எடுத்துப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சி. நான் 10 ஆண்டுகள் மட்டுமே லோன் போட்டு உள்ளேன். ஆனால் 20 ஆண்டுகளுக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார்கள். இதுகுறித்து மேலாளரிடம் கேட்ட போது, மீண்டும் சரியான தகவல் இல்லை.

இது தொடர்பாக கடந்த ஒரு மாதமாக கஸ்டமர் கேருக்கு மெயில்  வழியாகவும், டோல் பிரீ எண் வழியாகவும் பலமுறை பேசிவிட்டேன். மெயில், டோல் பிரீ எனப் பல  போராட்டங்களுக்கு பிறகு வங்கியில் ஒருவர் இதற்கெனத் தனியாக ஏஜென்ட் போல் செயல்படுகிறார் என்ற தகவல் தெரிந்தது. அவர்களுக்கு குழு மேலாளர்  இருப்பதாகவும் அறிந்தேன். அவர்களுக்கு நோடல்  மேலாளர் திருச்சியில் இருப்பதாகவும் அறிந்தேன். இவர்கள் அனைவருக்கும் பலமுறை நான் மெயில்  போட்டு, என்னுடைய தகவலை  நானே பலமுறை டோல் பிரீ எண்ணில் கேட்ட பிறகுதான் தொடர்பிலேயே வருகிறார்கள். அதன் பிறகும் எனக்குச் சரியான தகவல் வழங்கப்படவில்லை.

10 வருடம் லோன் போட்டு உள்ள எனக்கு 20 ஆண்டுகளுக்கு அவர்களது இன்சூரன்ஸ் செய்துள்ளார்கள். இது தவறு. 20 ஆண்டுகள் உள்ளதைப் பத்தாண்டுகளாக மாற்றிக் கொடுங்கள் என்றால், இல்லை அது முடியாது. நீங்கள் போட்ட பொழுது ஒரு ஸ்கீம் இருந்தது. இப்பொழுது ஒரு ஸ்கீம் இருக்கின்றது. எனவே மாற்ற முடியாது என்று தெரிவித்தார்கள். உங்கள் செயல்பாடு தவறானது, மாற்றிக் கொடுங்கள் என்று கேட்டேன். அப்பொழுது நீங்கள் இந்த பாலிசியை குளோஸ் செய்து கொள்ளுங்கள். மீண்டும் புதிதாக ஒரு பாலிசி எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்கள்.

நானும் இது உங்களின் தவறு. நீங்கள் மாற்றிக்  கொடுங்கள் என்று கேட்டேன். இதற்காக என்னிடம் பலமுறை நான் ஈ மெயில் வழியாகவும், தொலைபேசி வழியாகவும் தொடர்பு கொண்ட பிறகு தோராயமாக ஒரு பதில் தருகிறார்கள். நீங்கள் தற்போது குளோஸ் செய்தால் 11,000 மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கிறார்கள். நான் அப்படி கேட்கவில்லை. 20 ஆண்டுகளை 10 ஆண்டுகளாக மாற்றிக்கொடுங்கள் என்றுதான். ஆனால் இதுவரை அவர்களிடமிருந்து முறையான பதில் இல்லை.

எனவே நான்  தற்போது 20 ஆண்டுகள் போட்டுள்ளதால், 23 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி உள்ளேன். இது 10 ஆண்டுகள் என்றால் எனக்கு   11,000 அல்லது  12,000 தான்  வரும். ஆனால் அவர்கள் இதனை அதிகப்படியாக அவர்களாகவே முடிவு செய்து போட்டுள்ளார்கள். இது குறித்துப் பலமுறை கஸ்டமர் கேரில் தொடர்பு கொண்டோம். எனக்கு இதுவரை சரியான தகவல் கிடைக்கப் பெறவில்லை. எனவே வீட்டுக் கடனுக்கு இன்சூரன்ஸ் செலுத்தும் போது மிக கவனமாக இருங்கள். வீட்டுக் கடன் பெறும் பொழுது பணம் கொடுக்கும் நிலையில் அவர்களை –  மேலாளர்களை நாம் கடவுளாக நினைக்கின்றோம். எனவே அவர்கள் அதனை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இஷ்டப்பட்ட இடத்தில் நம்மிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு அவர்களாக முடிவுகளை எடுத்துக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் நமது தலையில் மிளகாய் அரைப்பதற்குத் தயாராக இருக்கின்றனர்.

எனவே நண்பர்களே, டோல் ப்ரீ என்னை நான் தொடர்பு கொள்ளும்பொழுது 30 நிமிடத்திற்கு மேலாக ஆகின்றது. ஆனால் அவர்களோ ஒரு நிமிடத்தில் நம்மைத் தொடர்பு கொண்டு விடுகிறார்கள். இதுவும் வருத்தமான விஷயம்தான். எனவே நண்பர்களே வீட்டுக் கடன் வாங்கும்போது பிராப்பர்டி இன்சூரன்ஸ் தொடர்பாகத் தெளிவான தகவல்களைக் கேட்டு கொள்ளுங்கள். எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் அவர்கள் உங்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துத் தர உள்ளார்கள்? அது எத்தனை ஆண்டுகளுக்கு எடுக்கின்றார்கள்? எவ்வளவு பிரீமியம்?

ஏனென்றால் எனது நண்பர்கள் இருவர் இதே எஸ்பிஐயில் லோன் வாங்கி, கட்டி முடிக்கும் பொழுது பிராப்பர்டி இன்சூரன்ஸ்க்குப் பல ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டார்கள் என்று தெரிவித்தார்கள். எனவே உங்களது பணம் உங்களது கையில்தான் இருக்க வேண்டும்.  இதில் கொஞ்சம் ஆர்வம் எடுத்து உங்களைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். இதுவரை நீங்கள் இன்சூரன்ஸ் என்ன போடப்பட்டு இருக்கிறது என்று தெரிந்துகொள்ளவில்லை என்றால்  வங்கிக்குச் சென்று உங்களது இன்சூரன்சுக்கான சரியான நகலைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது தொடர்பான தகவலைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தப் பதிவை நான் தரும் நிலையிலும் எனக்கு இதுவரை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து முழுமையான பதில் இல்லை. நான் அடுத்த கட்டத்துக்கு இதனைக் கொண்டு சென்று முழுமையான பதில் பெறுவேன் என்பதில் உறுதியாக உள்ளேன். இந்தப் பதிவு முழுவதுமாக விழிப்புணர்வுக்கான பதிவு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *