நினைவஞ்சலி – நாகேஸ்வரி அண்ணாமலை

0
Nageswari Annamalai 1

அண்ணாகண்ணன்

எழுத்தாளர், முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை (85 வயது), 2025 ஆகஸ்டு 1 அன்று மறைந்தார் என்ற கொடும் செய்தி, இன்று வந்து சேர்ந்தது. இது குறித்து அவர் கணவர், பேராசிரியர் இ.அண்ணாமலை விடுத்துள்ள உருக்கமான மடல் இங்கே:

Nageswari, my wife of nearly sixty years of companionship and comfort, left me, and us, at 5.00 p.m. on August 01 in hospital. She passed away peacefully. She was 85. Her lungs got weaker in the last few months as her body got progressively more fatigued from poor appetite and reduced intake that started with some health problems in the last year. I feel that a part of me slipped away and another part says that she is still around me, supporting and critiquing. Yet, emptiness weighs me down.

My Soliloquy

‘சாதலும் புதுவது அன்றே’
புரிகிறது புறம்

உண்மை உறவு மரிப்பதில்லை.
தெரிகிறது அதுவும்.
இருந்தும்,

தோளோடு தோள் நின்ற தோழமையைத்
தோளிலிருந்து இறக்க முடியவில்லை.
இறப்பை, இழப்பை மறக்க முடியவில்லை.

என் செய்வேன்?

பேராசிரியரின் கைகளைப் பற்றிக்கொள்கிறோம். உங்கள் துயரில் பங்கு கொள்கிறோம். நாகேஸ்வரி அம்மா, மறையவில்லை. நம்முடனே, நம் சிந்தையில் வாழ்கிறார். தமது ஈர எழுத்துகளில், அறம் சார்ந்த ஆக்கங்களில் வாழ்கிறார்.

சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற நாகேஸ்வரி அவர்கள், 1966 முதல், அமெரிக்காவில் வசித்தவர். கணவருடன் கருத்தொருமித்து வாழ்ந்தவர். அமெரிக்காவின் எந்த ஆடம்பரமும் இவர்கள் மீது ஒட்டவே இல்லை.

வல்லமைக்கு நாகேஸ்வரி அவர்களின் படைப்புகள், பெரும் வலுச் சேர்த்தன. அதன் பெருமையை உயர்த்தின. அமெரிக்காவின் புதிய தரிசனங்களை, அதன் துல்லியமான சித்திரங்களை வல்லமையில் தொடர்ந்து எழுதினார். சொந்த அனுபவத்துடன் கூடவே, சமூகவியல் காரணங்களுடன், அரசியல் விமர்சனங்களுடன் தனது பார்வைகளை முன்வைத்தவர்.

வல்லமை மின்னிதழில் மிகச் சிறப்பான கட்டுரைகள் பலவற்றை அவர் எழுதினார். பத்தி எழுத்தாளராக, அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் எழுதி வந்தார். இவை உண்மையான, நேர்மையான, ஆழமான கட்டுரைகள். அதே நேரம், எளிமையானவை. கடினமான சொற்களோ, கரடு முரடான வரிகளோ இல்லை. நீரோட்டம் போன்ற நடையில், நறுக்கென மனத்தில் தைக்கும் விதமாக எழுதினார். நாகேஸ்வரியின் கட்டுரைகளை வியந்து கொண்டாடி, தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியோர் பலர்.

நாகேஸ்வரி அண்ணாமலை கட்டுரைகள்

நாகேஸ்வரி அவர்கள், துணிவும் பரிவும் ஒருங்கே கொண்டவர். தமிழ்நாட்டில் பேருந்தின் படிகள் உயரமாக இருக்கின்றன, அதில் ஏற எனக்குச் சிரமமாக இருக்கிறது என எழுதினார். கல்வித் துறையில் முனைவர் பட்டங்களும் துணைவேந்தர் பதவிகளும் காசுக்கு விற்கப்படுவதைக் கண்டித்து எழுதினார். ஊழல் அரசியல்வாதிகளைச் சாடினார். அதிபர், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் அவரது விமர்சனங்களுக்குத் தப்பவில்லை.

அமெரிக்காவைப் பற்றி மட்டுமல்லாது, பாலஸ்தீனம், இஸ்ரேல், கியூபா, வியட்னாம் எனப் பல நாடுகள் குறித்தும் எழுதினார். இவற்றுள் பயண இலக்கியமும் உண்டு. வல்லமையில் இவர் எழுதிய கட்டுரைகள், பின்னர் நூல் வடிவம் பெற்றன. இணையத்தில் வேறு இதழ்களிலும் எழுதத் தொடங்கினார். தனி நூல்களும் படைத்தார். *அமெரிக்காவின் மறுபக்கம்*, *அமெரிக்க அனுபவங்கள்*, *பலஸ்தீன–இஸ்ரேல் போர்*, *கியூபாவின் விடுதலை வெற்றி*, *வியட்நாமில் அமெரிக்கப் போர்*, *ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை* ஆகிய நூல்கள், அவரது அழுத்தமான பங்களிப்புகள்.

எளிய கிராமத்துப் பெண்ணாகத் தம் வாழ்வைத் தொடங்கிய நாகேஸ்வரி, பழுத்த அனுபவத்துடன், பரந்த உலகை வலம் வந்தவர். வளமான, வசதியான வாழ்க்கை அமைந்த பிறகும் எளியவர்கள், ஒடுக்கப்பட்டோர், வஞ்சிக்கப்பட்டோர் பக்கமே அவர் எப்போதும் நின்றார். அவர்களின் நியாயங்களுக்காகக் குரல் கொடுத்தார்.

வல்லமைக்குப் பெரும் தூணாக, தமிழ்கூறு நல்லுலகின் சுடர்மிகு எழுத்தாளராகத் திகழ்ந்த முனைவர் நாகேஸ்வரி அவர்களின் மறைவுக்கு வல்லமை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

நாகேஸ்வரி அம்மா, என்றென்றும் நம் நினைவுகளில் வாழ்வார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.