பெண் கவிஞர்களின் கவிதைகளில் சமூகப் பிரச்சனைகள்

0

முனைவர் ரா. திவ்யா
உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,
என்.ஜி.எம்.கல்லூரி,பொள்ளாச்சி.
dhivyaudhithr@gmail.com

முன்னுரை

ஒரு மொழியின் செல்வாக்கை அம்மொழியின் இலக்கிய வளத்தால் அறியலாம். பல்வேறு காலங்களில் காலத்தின் தேவைக்கேற்ப இலக்கியங்கள் தோன்றின. அவ்விலக்கியங்களில் ஒன்றான கவிதை நடைமுறையில் அரசியல், பொருளாதாரம், கல்வி, திருமணம், உடல் மொழி, தாய்மை, உழைப்பு மக்களின் வாழ்வியல் போன்ற உண்மைகளை வெளிப்படுத்துகிறது. பெண் என்றாலே அவள் தாயின் கருவறையிலிருந்து கல்லறை செல்லும் வரை பிறர் சுமைகள் மற்றும் எண்ணற்ற பிரச்சனைகளையும் சந்திப்பவளாகவே திகழ்கின்றாள், மேலும் பிரச்சனைகளை கவிதைகளில் பார்ப்பதோடு உலகத்தில் பெண்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் பெண் கவிஞர்கள் தங்கள் கவிதையில் முன் வைக்கின்றனர். இதனை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெண்ணின் வாழ்க்கை என்பது காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ற மாறுபட்டு இருந்துள்ளன. பெண்ணின் அறிவிற்கும் அவரது விருப்பத்திற்கும் ஏற்றவாறு வாழ்க்கை அமையும் கவிதை தனக்கான இடத்தை கட்டமைக்கிறது.  நிதர்சனங்களை பேசி வருகிறது கவிதை இன்பம் மட்டுமல்ல ரத்தமும் சதையுமாக நம்மோடு கலந்திருக்கும் ஒன்றென உருமாறி விட்டது.  இவ்வாறு மாற்றத்தை தன் கவிதைகளில் ஏற்படுத்தியவர்களின் பெண்ணிய கவிஞர்களின் பங்கானது முக்கிய இடத்தை வைக்கிறது .

பெண்கல்வி

தமிழ்ச் சமுதாயத்தில் ஆண்கள் கற்கத் தடையில்லை. பெண்கள் கற்பதில் வீட்டிலும், வெளியிலும் தடையேற்படுகிறது. வரதட்சணை அதிகமாகக் கொடுக்க வேண்டுமெனவும் கருதிப் படிப்பைப் பாதியிலே நிறுத்தி விடுகின்றனர். கிராமத்தில் உள்ளவர்கள் கையெழுத்துப் போடுவதற்கும். கடிதம் எழுதுவதற்கும், ஊர்ப்பெயரை அறிந்து பேருந்தில் பயணம் செய்வதற்கும் போதுமான அளவு படித்தால் போதும் என்ற குறுகிய மனநிலையில் இருக்கின்றனர் இத்தகைய குறுகிய எண்ணம் கொண்ட பெற்றோர்களின் செயலை கவிதையின் காண முடிகிறது.

“அப்பா மேலே படிக்கவேணும் என்றேன்
தப்பாப் பேசாதே மாப்பிள்ளை பார்த்தாச்சு என்றார்
அம்மா வகுப்பிலே நான் தான் முதல் என்றேன்.
சும்மா இரு சமையல் தெரியுமா என்றான்
அண்ணனாவ கைகொடுப்பான் என்றால்
வண்ணக் கனவில் மூழ்கியிருந்தான்
அடுத்தது அவன் முறையாயிற்றே”    (தாமரை-ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்)

பெண்கள் பிறக்கும் பொழுதே அவர்களின் திருமண வயதைப் பெற்றோர்களே நிர்ணயித்து விடுகின்றனர்.

“அம்மா நான் மிக நலம்
அடிக்கடி வர வேண்டாம்
அழுவதை நான் நிறுத்திவிட்டேன்
அடுத்தமுறை அங்கே
வரும்போது
ஒரு சிநேகிதியை அழைத்து
வருவேன்…
முடிந்தால் அவளையும்
மகளே என்று விளி…”    (தாமரை-ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்)

படிப்பிற்காக விடுதியில் தங்கியிருக்கின்ற நிலையில் அம்மா அப்பாவின் பிரிவினை தாங்கியிருக்க முடியாத சூழலில்  யாழ்ப்பாணத்துக்கார பெண் கூறிய கதைகளில் நான் அழுவதை நிறுத்தி விட்டேன் என்று கூறியிருக்கின்ற கதை மற்ற பெண்கள் படிப்பின் சூழலைக் கண்டு வேதனையை கவிதை வெளிப்படுத்துகிறது. ஒரு புறம் படிக்கும் சூழல் பெண்களை பாதிக்கும் நிலையினை  காணமுடிகிறது.

திருமணம்

ஆணும், பெண்ணும் இணைந்து ஒருமித்து வாழும் நிகழ்ச்சியே திருமணமாகும். ஆனால் திருமணம் என்ற நிகழ்வானது இன்றைய குழலில் குடும்பம் என்ற அமைப்பின் பொருளாதாரத்தைச் சார்ந்தது ஆகும். கைப்பிடிக்க வேண்டிய கணவனே, பெண்ணைப் பொருளீட்டும் கருவியாகப் பார்ப்பதை காணலாம்.

‘மூக்கும் முழியும் சுமார் தானாம்
எனக்கு முத்தும் வைரமுமாய்
மூக்குத்தி நேர் செய்து விடுவோம்
கணக்கு அப்பாவின் வங்கி இருப்பு
முழுதும் துடைத்தாயிற்று ஸ்கூட்டர்
கேட்ட வாயை அடைத்தாயிற்று”

                    (தாமரை ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்)

ஆண் தன் தேவைகளைத் தீர்த்துக் கொள்ளக் கிடைத்த வாயிலாகவே பெண்ணைக் கருதும் நிலை வெளிப்படுகிறது. இன்றை நிலையில் திருமணம் தன் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஆண் தேடிக்கொள்ளும் பண முதலீடாக நினைக்கின்ற அவல நிலை சமுதாயத்தில் அரங்கேறிக்கொண்டே  இருக்கிறது.

“அப்பா சொன்னாரென
பள்ளிக்குச் சென்றேன்
தலைசிவினேன், சில
நண்பர்களைத் தவிர்த்தேன்
சட்டைபோட்டுக் கொண்டேன்,
பல்துலக்கினேன், வழிபட்டேன்,
கல்யாணம் கட்டிக்கொண்டேன்
காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று… ” (கனிமொழி – கருவறை வாசனை)

கற்பதில் வேகமாகக் நிறுத்தி செல்தற்கும் பயணம் குறுகிய பெண்கள் தன் வாழ்க்கைத் துணையைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லாமல் இருப்பதும், பெற்றோர்களின் விருப்பத்திற்காக மனதிற்குப் பிடிக்காத வரை திருமணம் செய்து கொள்ளுதலும், தானே தன் வாழ்க்கை முறைகளையும், பழக்க வழக்கங்களையும் அமைத்துக் கொள்ள முடியாத அடிமை நிலையில் ஏற்படும் சிக்கலான வாழ்க்கையையும் உரிமையற்ற நிலையையும் இக்கவிதை வெளிப்படுத்துகிறது.

கற்புநிலை

ஆண்வர்க்கம் போலியான கதைகளைக் கற்புக்குச் சொல்லி வந்ததம் தான் இன்னும் கற்பில் சிறந்தவர்கள் யார் என்னும் கேள்வி தேட வந்து கொண்டிருக்கிறது.

“கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா?
நூறாண்டுகள் ஓடியும்
மக்களுக்கு சந்தேகம் தீரவில்லை”

                                                  (தாமரை – ஒரு சுதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்

என்று கவிஞர் சமுதாய மக்களின் அறியாமையைக் காட்டுகிறார்.  பாலியல் ரிதியான கொடுமைகளையும், தீராத ரணங்களையும், உணர்வு சார்ந்த நிலையில் வெளிப்படுத்துகின்றனர். ஆணாதிக்கம் பெண் உடலில் மறைக்கப்பட்ட இடங்களின் அசைவுகளைக் கண்களால் இமைக்காமல் பார்க்கின்றனர்.

“உடலின் அசைவுகளில்
மறைக்கப்பட்ட பகுதிகளில்
இமைகளே யற்று
பதியும் கண்கள்” (சல்மா – பச்சை தேவதை)

ஏதும் அறியாச் சிறுமியைப் பாலியல் வன்முறை செய்வதைச் சுட்டுவதாக இக்கவிதை அமைகிறது. தங்கள் விடுதலையை விட்டுக் கொடுக்கவும், தங்கள் தேவைகளை அடக்கிக் கொள்ளவும், தங்கள் உணர்வுகளை மறைத்துக் கொள்ளவும், எல்லாவற்றிலும் தங்களைப்  பழகியவர்கள் இந்தியப் பெண்கள். எனவே அவர்கள் தனி உரிமை என்பது தங்களுக்குத் தேவையில்லை என்று ஒரு தவறான தத்துவத்தின் கீழ் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கவிஞர் பிரேமா,

“வளர வேண்டிய வேர்கள்
வரையறுக்கப்பட்ட தொட்டியில்
இந்தியப் பெண்கள்” (இரா.பிரேமா 2000) எனும் கவிதையில் இந்தியப் பெண்களின் அவலமான நிலையினை சித்தரிக்கிறார்.

தாய்மை

ஒரு பெண் தாய்மையில் தான் முழுமையடைகிறாள். இது பெண்ணின் உரிமை எனவும், தாய், சேய் உறவு என்பது பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கிடையிலும் இயற்கையாக அமைந்த உயிரியல் அம்சமாகும்

“எனக்குள் இருந்த குமிழ்
இன்று
எல்லாம் நிறைந்த பிரபஞ்சம்”  (மாலதிமைத்ரி – சங்கராபரணி)

வளமைச் சமூகத்தின் குறியீடாக அமைந்தது தாய்மை இந்த யதார்த்தத்தைப் பதிவு செய்துள்ள கவிஞர்கள், கரு சுமப்பது பெண்களால் மட்டுமே இயலக்கூடிய அற்புதமான ஒரு நிகழ்வாகும். ஆனால் இன்றை தாய்மை என்பது சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது என்பதை உணரலாம்.

“குன்றும் சரிவுமாய் உருமாறி வரும்
என் நிலத்தின் பிரசவத் தழும்புகள்” (சுகிர்தராணி -இரவு மிருகம்)

அகழ்ந்தெடுத்த இடத்திலெல்லாம்  பெண்ணை, பிள்ளைப் பெற்றுத்தரும் இயத்திரமாக மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிற ஆண்கள் நிறைய பேர் பத்து மாதக் காலம் அவர்கள் படுகிற அவஸ்தைகளையும், துயரங்களையும் பெரும்பான்மையோர் மனதளவில் கூட உணர்வதில்லை.

உழைக்கும் பெண்களின் நிலை

பெண்கள் வீட்டில் இருப்பதால் அவர்களின் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்ய கணவனை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. இதைச் காரணமாக வைத்து பெண்களை அடிமைப்படுத்துகின்றனர் என்று ஒரு காலத்தில் கூறினார்கள். ஆனால் இன்று கல்வி கற்று பாதிக்கு மேல் பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். அவ்வாறு வேலைக்குச் சென்றாலும் தங்களுடைய அன்றாடத் தேவைகளை நிறைவு செய்யக் கணவனிடமும் மாமனார், மாமியாரிடமும் கேட்சு வேண்டியிருக்கிறது இதனை கவிஞர்

“அலுத்துக் களைத்து
உள்ளே நுழைந்தால்
அதட்டல் அவர்தான்”

               (தாமரை – ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்)

என்று மனைவியைத் திட்டும் கணவனின் செயலை சுட்டிக் காட்டுகிறார்.

ஆணாதிக்கச் சமூகம்

சில ஆண்கள் மனைவியை விட்டுவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து உல்லாசமாக வாழ்வர். மனைவியோ கைம்பெண்ணாக வாழ்வாள் குழந்தைகளை வளர்க்க முடியாமல் பெண்கள் அல்லல்படுவர் பிற பெண்ணுடன் தொடர்புடைய தந்தை தங்களுடன் இருந்த செயலை அங்கதச் சுவையுடன் கவிஞர் குறிப்பிடுகிறார்.

“அந்த மாலை நாள் இரவை
எங்களால் மறக்கவே முடியவில்லை
அன்று தான் அப்பா எங்களுடன் இருந்தார்
அம்சவேணி வீட்டுக்குப் போகாமல்”

                                                            (தாமரை – ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்)

பெண்களின் எதிர்வினை

பெண்கள் இன்று விழிப்புணர்வு பெற்றுவிட்டனர் அடிமைத்தனத்திலிருந்து ஓரளவு மீண்டு வந்துள்ளனர். நீ அன்பு செய்தால் நான் அன்பு செய்வேன். நீ கொலை செய்யத் துணிந்தால் நாள் அமைதியாக இருக்க மாட்டேன் என்று பெண்கள் எதிர்க்கின்றனர்.

தொகுப்புரை

ஆணாதிக்கச் சமூகம் உருவாக்கிய மரபை, கட்டுப்பாட்டை அடக்கு முறையை மீறி, சுய உணர்வோடு யதார்த்தமாக, பெண்ணின் பிரச்சனைகள் அவளின் சிக்கல்களை மட்டுமே அதிகமாக மையப்படுத்தி கவிதைப் புனைந்துள்ளனர் பெண் கவிஞர்கள் உரிமையை நிலை நாட்டுதல் விழிப்புணர்வூட்டல், ஊக்கப்படுத்துதல், வேட்கையை வெளிப்படுத்துதல் பெண்ணின் எதிர்வினைகள் போன்ற நிலைகளிலும் பெண்ணியக் கருத்துக்களோடு கவிதை வெளிப்படுத்துகிறது. பெண்மையின் வலிமை, சமூகக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான எதிர்ப்பு, உடல் சார்ந்த அரசியல், தன்னுணர்வு மற்றும் சம உரிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு வெளிப்படுகின்றன.

துணைநூற்பட்டியல்

  1. கவிஞர் தாமரை      –   ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்  குமரன் பதிப்பகம், சென்னை-17 பதிப்பு ஆண்டு: 1999
  2. கவிஞர் கனிமொழி – கருவறை வாசனை, வ.உ.சி பதிப்பகம், சென்னை. பதிப்பு-2004
  3. கவிஞர் சல்மா – பச்சைத் தேவதை, காலச்சுவடு பதிப்பகம்
  4. மாலதி மைத்ரி  – சங்கராபரணி, காலச்சுவடு பதிப்பகம் . ஆண்டு 2013

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.