Screenshot

Screenshot

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

யாரோடும் பகைகொள்ளல் இல்லென்றால்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது
போரினால் வரும் பொருந்தா நிலையென்ன
ஊரழியும் உயிரழியும் உண்மையும் அழியும்

எங்கும் பிணமும் இரத்த வாடையும்
இடிபாடும் ஓலமும் ஒப்பாரியும் நிறையும்
தங்கு தடையின்றி பஞ்சமும் பெருகும்
தானமும் தர்மமும் தானழுது நிற்கும்

போரிலே மடிகின்ற வீரர்களும் உயிர்தானே
எதிரியாய் எண்ணி எறிகணைகள் வீசி
மடிகின்ற மக்களும் மனித உயிர்தானே
எண்ணியே பார்க்கா இந்தப்போர் ஏனோ

புராணக் கதைகள் போர்பற்றிச் சொன்னது
போர்நடந்த வேளை நாமங்கு இல்லை
கதையிலே போர்பார்த்தோம் கற்பனையி லேற்றினோம்
நிஜமான போரிப்போ கண்முன்னே காண்கிறோம்

வெற்றிக் கொடியில் வீரம் இருக்காது
அற்பத்தனும் அநியாயமும் நிறைந் திருக்கும்
உயிர்களின் ஓலமும் ஊரெரியும் காட்சியும்
வெற்றிக் கொடியாய் கம்பத்தில் பறக்கும்

மனிதம் மடியும் மாண்புகள் அழியும்
மாநிலமே மயனமாய் ஆகியே இருக்கும்
பேயாட்சி நடக்கும் பிணமெங்கும் நிறையும்
போர் கொடுக்கும் பரிசு இப்படித்தானிருக்கும் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.