சமநிலை போக்கினால் அனைத்துமே குலையும் !

0
Screenshot

Screenshot

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமைழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா 

நீரும் வேண்டும் நெருப்பும் வேண்டும்
மழையும் வேண்டும் பனியும் வேண்டும்
இருளும் வேண்டும் ஒளியும் வேண்டும்
எல்லாம் இணைவதே இயற்கையின் ஒழுங்கு

ஒழுங்காய் அமைந்தால் உலகம் செழிக்கும்
ஒழுங்கு குலைந்தால் வளங்கள் மறையும்
இயற்கை என்றுமே இன்னல் விளைக்கா
இன்னல் விளைக்கவே மனிதன் வந்தான்

காட்டில் வாழ்ந்தான் கடும் உழைப்பாலே
வீட்டைக் கட்டினான் வீதிகள் அமைத்தான்
நுண்மாண் அறிவால் விண்ணைத் தொட்டான்
மண்ணை விண்ணை தன்வச மாக்கினான்

மாநிலம் எங்கணும் மனிதனின் சாதனை
பல்கிப் பெருகி பேருரு வானது
இயற்கையின் போக்கை வளைத்திட  முனைந்தான்
ஒழுங்குகள் தவறி விபரீதம் விளைந்தது

எல்லை என்பது தொல்லை அல்ல
தாண்டா திருந்தால் தவறுகள் நிகழா
தவறெனத் தெரிந்தும் தாண்டியே நின்றால்
தாங்காத் தண்டனை வந்துதான் சேரும்

இயற்கை அமைப்பு ஒழுங்காய் அமைந்தது
சமநிலை என்பதே இயற்கையின் ஒழுங்கு
நுண்மாண் அறிவினால் உயர்ந்தோ மென்று
சமநிலை போக்கினால் அனைத்துமே குலையும் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.