பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 30

0

 

 

63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (2)

 

திருஞானசம்பந்தர் எனும் அந்த அருட்குழந்தையை சீர்காழியின் மக்கள் அனைவரும் திரண்டெழுந்து வந்து வரவேற்று அவருடைய இல்லம் சேர்ப்பித்தனர். ஏழாவது வயது தொடங்கியது அக்குழந்தைக்கு. வேதியர்கள் தங்கள் குலமரபை எடுத்துக்கூறி அவருக்கு முப்புரிநூல் அணிவிக்கும் உபநயனச் சடங்கினைச் செய்து `மறை நான்கும் தந்தோம்` என்று மந்திரங்கள் மொழிந்தனர் மறையோர். ஆனால் ஏதும் ஓதாதுணர்ந்த அந்த அருட்குழந்தை வேதங்களையெல்லாம் எடுத்து இயம்பினார். வேதங்களின் பல பகுதிகளையும் அவற்றின் பொருளோடு ஓதக் கேட்ட அந்தணர்கள் வேதங்களில் தங்களுக்கு இருந்த ஐயங்களை ஞானசம்பந்தரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர். ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி, அந்தி நேரத்தில் அந்தணர்கள் ஓத வேண்டிய மந்திரம் வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாய் விளங்கும் திருவைந்தெழுத்தின் சிறப்பை, `துஞ்சலும் துஞ்சல்` என்று தொடங்கிப்பாடி அனைவர்க்கும் உணர்த்தி அருளினார். ஞானசம்பந்தப் பெருமான் சீர்காழியில் தங்கியிருந்த நாட்களில் மொழி மாற்று, மாலைமாற்று முதலிய பல திருப்பதிகங்களைச் சித்திரகவிகளுக்குரிய இலக்கியங்களாகப் படைத்து சீர்காழி இறைவனைப் பாடி இன்புற்றார். திருநீலகண்டயாழ்ப்பாணரும் அவர்தம் துணைவியார் மதங்கசூளாமணியாரும் அப்பதிகங்களை யாழில் இணைத்து இசைத்து மேலும் சிறப்பு செய்து வாழ்ந்து வந்தனர்.

அருட்குழந்தையின் அற்புத அருளிப்பாட்டினைக் கேள்வியுற்ற அப்பரடிகள் அத்தவச் செல்வனை காணப் பெரிதும் விரும்பி சீர்காழி நோக்கிப் புறப்பட்டார். உபநயனச் சடங்கு முடிந்து ஞானசம்பந்தர் சீர்காழியில் தங்கியிருக்கும் பொழுது, கல்லைப் புணையாகக் கொண்டு கடலிடைக் கரையேறிய நாவுக்கரசர் பெருமைகளைக் கேட்டறிந்திருந்தவர் அவர் தன்னைக் காண வருகின்றார் என்பதை அறிந்து அன்பர்களோடு சென்று அவரை எதிர்கொண்டு அழைத்தனர். தூய வெண்ணீறு பூசிய பொன்மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடிதைவரும் நெஞ்சும் அன்பு பாய்வது போல் கண்ணீரும்கொண்டு முதுமைக் கோலத்தில் வந்த திருநாவுக்கரசரை ஞானசம்பந்தர் வணங்கினார். நாவுக்கரசரும் அவரை வணங்கித் தன்னை வணங்கிய ஞானசம்பந்தரைத் தம் மலர்க்கையால் எடுத்து `அப்பரே` என அழைக்க அவரும் அடியேன் என மகிழ்ந்துரைக்க, இருவரும் அளவளாவி மகிழ்ந்து திருத்தோணியப்பரை வழிபட திருக்கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். பின்னர் ஞானசம்பந்தர் அப்பரைத் தம் திருமாளிகைக்கு அழைத்துச் சென்று, இருவரும் திருவமுது கொண்டு அளவளாவி மகிழ்ந்தனர். சில நாட்கள் சீர்காழிப் பதியில் தங்கிப் போற்றிய அப்பர் பெருமான் பிரியா விடைபெற்றுச் சோழ நாட்டுத் திருத்தலப் பயணம் மேற்கொண்டார்.

திருஞானசம்பந்தர் தன் தந்தையாரான சிவபாதஇருதயரிடம் மீண்டும் தமது பயணத்தைத் தொடரும் விருப்பத்தைத் தெரிவிக்க, தமது பிள்ளையைப் பிரிய மனமில்லாத தந்தை சில தலங்கட்கு உடன் வருவதாகக் கூறி தாமும் அவரோடு உடன் செல்ல திருப்பயணம் சிறப்பாகத் தொடர்ந்தது.

திருஞானசம்பந்தர் திருத்தோணிபுரப் பெருமானை வணங்கி விடைபெற்றுப் பயணம் மேற்கொண்டார். திருக்கண்ணார்கோயில், புள்ளிருக்கு வேளூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு காவிரி வடகரை வழியே மழவர் நாட்டுத் திருப்பாச்சிலாச்சிராமம் சென்றடைந்தார். பண்டைய நாளில் மழவ நாடு என்று அழைக்கப்பட்ட, திருப்பாச்சிலாச்சிரமம் எனும் அழகிய ஊர், தற்போது திருச்சி மாவட்டத்தில் திருவாசி என வழங்கப்படுகிறது. குறுநில மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பாக இருந்த அந்நகரில் வாழும் குறுநில மன்னனாகிய கொல்லி மழவன் தம் முன்னோர் வழி ஈசனடியவராக இருந்தவர். வளர்ந்து மங்கைப் பருவம் எய்தியுள்ள அவனது மகள், பெற்றோர் திருமணம் செய்ய முடிவெடுத்த வேளையில் உணர்வுகள் இருந்தும், உணர்ச்சிகள் இல்லாததொரு மயக்க நிலையை எட்டியிருந்தாள்.

 

தன் மகளைப் பல்வகை மருத்துவம் செய்தும் குணப்படுத்த இயலாத நிலையில் கொல்லிமழவன் அவளை பாச்சிலாச்சிராமத்து ஆலயத்தில் இறைவர் திருமுன் கிடத்தி நம்பிக்கையுடன் பெருமானை அனுதினமும் வேண்டி நின்றார். இந்நிலையில் .திருஞானசம்பந்தர் திருத்தலப் பயணமாக அங்கு வந்ததை அறிந்த அம்மன்னன் நகரை அலங்கரித்து நன்முறையில் அவரை வரவேற்று ஆலயத்துக்கு அழைத்துச் சென்றான். ஆலயத்தின் கொடிமரத்தின் முன் இளம்பெண் ஒருத்தி உணர்வற்ற நிலையில் நிலத்திற் கிடத்தலைக் கண்டு மன்னனை அழைத்து அப்பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நோயைப் பற்றி அறிந்து ஈசனருளை வேண்டிப் பணிந்து, `துணிவளர்திங்கள்` என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார்.

 

துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்     

        சுடர்ச்சடை சுற்றிமு டித்துப்    

    பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ     

        வாரிட மும்பலி தேர்வர்    

    அணிவளர் கோலமெ லாஞ்செய்து பாச்சி     

        லாச்சிரா மத்துறை கின்ற    

    மணிவளர் கண்டரோ மங்கையை வாட     

        மயல்செய்வ தோஇவர் மாண்பே.  

 

அப்பெண் மயக்கம் தெளிந்து நல் உணர்வு பெற்று எழுந்து ஞானசம்பந்தரை வணங்கிப் போற்றினாள். மழவனும் மகிழ்ந்து அவர் திருவடிகளை வணங்கினான்.

திருப்பாச்சிலாச்சிராமத்துப் பரமனைத் தாள்பணிந்துப் போற்றிய ஞானசம்பந்தர் அவ்வூரினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞீலி, ஈங்கோய்மலை முதலான பல தலங்களையும் வழிபட்டுத் திருக்கொடிமாடச் செங்குன்றூர் எனப்படும் திருச்செங்கோடு எனும் திருத்தலத்தைச் சென்று சேர்ந்தார். அங்கு பல மாதங்கள் தங்கியிருந்து மாதொருபாகரைப் போற்றி அருகிலுள்ள திருநணாவை வழிபட்டு, திருச்செங்குன்றூர் வந்து திருமடம் ஒன்றில் தங்கியிருந்தார். அக்காலம் பனிக்காலம் என்பதால் அப்பகுதியில் தோன்றும் பனி நோய் என்னும் குளிர் சுரம் அவருடன் வந்த அடியார்களைப் பற்றி வருத்தியது. அதனை அறிந்த ஞானசம்பந்தர் அடியவர்களைப் பற்றியிருந்த அந்நோய் தீருமாறு நஞ்சுண்டு அமரர்களைக் காத்த திருநீலகண்டப் பெருமானைப் போற்றி `அவ்வினைக்கு இவ்வினை` என்னும் திருப்பதிகம் அருளிச் செய்தார். அக்கணமே அடியவர்களுக்கு மட்டுமின்றி கொங்கு நாடெங்கிலும் அந்நோய் வாராது நீங்கியது.

 

அவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்;
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

சம்பந்தப்பெருமானின் நினைவு இல்லம் அமைக்கப்பட வேண்டிய இடமான, அந்நாட்களில் அப்பெருமான் தங்கியிருந்த அத்திருமடம் இன்றும் திருச்செங்கோடு திருத்தலத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

திருஞானசம்பந்தர், திருச்செங்குன்றூரிலிருந்து புறப்பட்டு, பாண்டிக் கொடுமுடி, வெஞ்சமாக்tகூடல், கருவூர் ஆனிலை முதலிய தலங்களைப் பணிந்து சோழ நாடு மீண்டு திருச்சிராப்பள்ளி முதலிய காவிரித் தென்கரைத் தலங்களை வணங்கிக்கொண்டு திருவலஞ்சுழி வந்தடைந்த அந்த காலம் இளவேனிற் பருவம் தொடங்கிய காலம். திருவலஞ்சுழி இறைவனை வணங்கிப் பழையாறை மேற்றளியையும் திருச்சத்தி முற்றத்தையும் பணிந்து நண்பகல் பொழுதில் பட்டீச்சுரம் திருத்தலம் வந்தடைந்தார். அந்த உச்சிப் பொழுதில் கடும் வெப்பம் தாக்க அதனைச் சற்றும் பொருட்படுத்தாது பயணத்தைத் தொடங்கினார்.

 

அப்போது இறையருளால் சிவபூத கணங்கள் வானத்தில் மறைந்து நின்று பட்டீசுரர் அளித்த முத்துப் பந்தரை ஏந்தியவாறு `எம்மை விடுத்து அருள்புரிந்தார் பட்டீசர்` எனக் கூறி ஞானசம்பந்தரின் சிவிகையின் மேல் ஏந்தி நிழல் செய்தன. அடியவர் வானினின்று இழியும் அப்பந்தரை ஏந்தியவர்களாய்த் தண்ணிழலில் ஞானசம்பந்தரை ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர். இறைவன் திருவருள் இதுவானால் ஏற்றுக்கொள்ளத் தகுவது எனக்கூறிப் பணிந்தார். ஞானசம்பந்தப் பெருமான் இறைவனது பெருங் கருணையை வியந்தவாறு `பாடல் மறை` பதிகம் பாடிப் பட்டீச்சுரரை வழிபட்டு மகிழ்ந்தார். அங்கிருந்து புறப்பட்டு பல தலங்களையும் வழிபட்டுத் திருவாவடுதுறையைச் சென்று சேர்ந்தார்.

 

வழிபாடு செய்து தங்கியிருந்தபோது சிவபாத இருதயர் அன்பு மகனைக் காண வந்தவர், தான் வேள்வி செய்தற்குப் பொருள் வேண்டுமென ஞானசம்பந்தரிடம் தெரிவித்தார். ஞானசம்பந்தர் தந்தையாருக்கு அளிக்கப் பொருள் இல்லையே என வருந்தியவராய் `இடரினும் தளரினும்` என்ற திருப்பதிகத்தால் இறைவனிடம் விண்ணப்பித்தார்.

 

இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே

 

சிவபூதம் ஒன்று ஆயிரம் பைம் பொற்காசுகள் நிரம்பிய உலவாக்கிழியை ஆலயத்தில் மாசிலாமணியீசர் சந்நிதியில் உள்ள பீடத்தில் வைத்து மறைந்தது. ஆளுடைய பிள்ளையார் உலவாக் கிழியைத் தலைமேற் கொண்டு போற்றி அதனைத் தந்தையார் கையில் கொடுத்து, இக்கிழியின் பொன்னைக் கொண்டு தந்தையாரையும் கழுமலத்திலுள்ள ஏனைய அந்தணர்களையும் நல் வேள்விகள் பலவும், செய்யுமாறு கூறி வழியனுப்பி வைத்தவர், இப்பதிகத்தை நம்பிக்கையோடு ஓதும் அடியவர்களுக்கும் வழித்துன்பம் நீங்கி, இன்பம் பெருகும் என்பதையும், சம்பந்தர் வாக்கு சத்தியவாக்கு என்பதையும் விளங்கச் செய்கிறார்.

ஞானசம்பந்தரும், அடியார்களும் திருக்கோழம்பம் வைகல் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு திருத்தருமபுரம் எனும் அருட்பதியை அடைந்தனர். தருமபுரம் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தாயார் பிறந்த ஊர் என்பதால் அங்கு வாழும் அவரது சுற்றத்தார் ஞானசம்பந்தரையும், யாழ்ப்பாணரையும் அன்புடன் வரவேற்றுப் போற்றினர்.

 

பாணர் தம் உறவினர்களோடு உரையாடுகையில் பிள்ளையாரின் திருப்பாசுரங்களை யாழில் வாசிக்கும் பெரும்பேறு பெற்றமையை சிந்தை மகிழச் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அவர்கள் ஞானசம்பந்தரின் திருப்பதிக இசைச் சிறப்புக்கு பாணரின் யாழ் வாசிப்பே காரணம் எனக் கூறினர். அதைக் கேட்டு பதைபதைத்த பாணர் மனம் பொறாது சிந்தை நொந்து ஞானசம்பந்தரைப் பணிந்தவர், யாழ்க்கருவியில் அடங்காத திருப்பாசுரத்தை பாடியருள வேண்டும் என விண்ணப்பித்தார். ஞானசம்பந்தரும் கண்டத்திலும் கருவியிலும் அடங்காத,  இசைக் கருவிக்கு அப்பாற்பட்ட கூறுடைய `மாதர் மடப்பிடியும்` என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.

 

மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்  

    நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர் 

பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்  

    அவர் படர் சடை நெடு முடியதோர் புனலர் 

வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை  

    இரைந்து தாழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை இரைந்து தாழிவினி 

கரை மலர்ச்சிறை வண்டறை  

    எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.

 

யாழ்ப்பாணர் எப்போதும் போல அப்பாடலைத் தம் கருவியில் வாசிக்கத் தொடங்கியவர், அப்பாடல் யாழ்க்கருவியில் அடங்காததை உணர்ந்து நடுக்கமுடன் அவர் திருவடிகளில் வீழ்ந்து பணிந்தவர், அதனை உடைத்தற்கும் ஓங்கினார். ஆனால் ஞானசம்பந்தர் ஓங்கிய கையைப் பிடித்து, அதனைத் தடுத்து, இறைவன் திருவருட்கருணையெல்லாம் இவ்யாழில் அடங்குமெனக் கருதல் கூடாது. ஆயினும் சிந்தையில் அளவுபடாப் பதிக இசை, செயலிலும் எய்தாதலின், இந்த யாழ் கொண்டே இறைவர் திருப்பதிக இசையினை இயன்றவாறு வாசிப்பீர், ஏழிசையாய் உள்ள எம்பெருமான் திருப்புகழை எவ்வாறு கருவியால் கட்டுப்படுத்த இயலும் என்று கூறினார். பாணரும் பின்னர் அப்பாடலை யாழில் இட்டு வாசித்தார். சில நாட்கள் அப்பதியில் தங்கி, திருநள்ளாறு அடைந்து `போகமார்த்த பூண் முலையாள்` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடி நள்ளாற்று ஈசனை வணங்கித் திருச்சாத்த மங்கைக்கு எழுந்தருளினார்.

 

சாத்தமங்கை என்பது சோழ நாட்டுத் திருத்தலம். தற்போது நாகப்பட்டிணம் தாலுக்காவில் அமைந்துள்ள தலம் இது. சீலமிக்க நீலநக்கர் எனும் அந்தணர் ஒருவர் அங்கு வாழ்ந்து வந்தார். திருச்சாத்த மங்கையில் அயவந்தி என்னும் ஆலயத்திலுள்ள பெருமானையும், அடியவர்களையும், தம் குருநாதரான பிள்ளையாரையும் போற்றிப் பரவும் பெற்றியர் அவர். ஞானப்பிள்ளையார் தம் ஊர் நோக்கி வரும் செய்தியறிந்து பெருமகிழ்வுற்றவர், அவரை எதிர்கொண்டழைத்துத் தம் திருமனையில் திருவமுதளித்து உபசரித்தார். இறைவனை வழிபட்டவர், அத்தலத் திருப்பதிகத்தில் நீலநக்கரின் அன்பின் திறத்தையும் பாடினார். அவர் இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்து திருநாகைக் காரோணமுடையாரைப் பணிந்து, பின்னர் பல பதிகளையும் வழிபட்டுத் திருச்செங்காட்டங்குடியை அடைந்தார். திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சுரம் சென்று `பைங்கோட்டு மலர்ப் புன்னை` எனத் தொடங்கிப் பதிகம் பாடிப் பரவினார். அத்திருப்பதிகத்தில் சிறுத்தொண்டர் பக்திச் சிறப்பைப் பாராட்டித் திருமருகல் சென்றடைந்தார். திருஞானசம்பந்தர் மருகற் பெருமானை வழிபட்டுச் சிலநாள் அங்குத் தங்கியிருந்தார். அப்பொழுது ஓர் அற்புத நிகழ்ச்சி நடந்தது.

 

ஊரே ஆழ்ந்த அமைதியில் இருந்த அந்த நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது. தொடர்ந்து விடியும்வரை அந்தக் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஞானசம்பந்தர் அதிகாலை எழுந்து புனித நீராடி ஆலயம் செல்லும் வழியில் அழுகுரல் வந்த திக்கு நோக்கிச் சென்றார். அங்கு ஒரு பழைய மடம் இருந்த்து. அங்கு அவர் கண்ட காட்சி மிக அவலமானதாக இருந்தது. அம்மடத்தின் ஒரு புறத்தே ஒரு மனிதன் இறந்து கிடக்க மற்றொரு புறத்தே ஒரு பெண் ஆறாத்துயரத்தோடு கதறியபடி இருந்தாள். சம்பந்தப் பெருமானைக் கண்ட அந்தப் பெண் அவர் திருப்பாதங்களில் விழுந்து கதறினாள். தன் விவரமும் கூறினாள். வைப்பூர் எனும் ஊரைச் சேர்ந்த தாமன் செட்டியார் என்பவரின் மகள் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். அவனுக்கு மகளிர் எழுவர்.  இறந்து கிடக்கும் அவன் தன் மாமன் மகன் என்றும் கூறினாள்.

 

வணிகனான அவன் முறைப் பெண்ணான தன்னை உடன் அழைத்துக் கொண்டு தனது ஊருக்குச் செல்லக் கிளம்பியிருந்தான். மாலை நேரம் ஆனதால் மேலும் பயணத்தைத் தொடர முடியாமல் திருமருகல் ஆலயத்தின் அருகிலுள்ள ஒரு திருமடத்தில் தங்கியுள்ளார்கள். இரவில் அவள் மாமனை நாகம் தீண்டிவிட, அதன் விடம் தலைக்கேறி மயங்கிச் சரிந்துள்ளான் அவன். அவளோ மணமாகாத நிலையில் அவனைத் தொடவும் முடியாதவளாய் செய்வதறியாது குழம்பி நிற்கிறாள். பெற்றோருக்கும் கூடத் தெரியாமல் அவனுடன் வந்தவள் என்பதால் மேலும் திகைப்புற்று அழுது அரற்றினாள். அவளுடைய தந்தை அவனிடம் பெரும் பொருளைப் பெற்றுக்கொண்டு அவளுடைய தமக்கைகளைத் தருவதாகக் கூறிவிட்டு, அடுத்த பெண்ணை உனக்குத் தருகிறேன் என்று ஆறுதல் கூறிக்கொண்டே ஆறு பெண்களையும் இவ்வாறே பிறருக்கு மணம் முடித்து வந்தார். ஒவ்வொருவரையும் வேறு ஒரு மணமகனுக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டதால், தந்தையின் சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக அவனை மணமுடிக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறுகிறாள். அவன் மீது கொண்ட காதலால் அவள் தன் வீட்டை விட்டு வெளிவரவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினாள்.

 

ஞானசம்பந்தரும் அவள் கதையைக் கேட்டு மனம் நெகிழ்வுற்றாலும், இறந்தவர்களையெல்லாம் எழுப்புவது தன் பணியல்ல என்று நினைத்தாலும் ஆண்டவனையே சரணடைந்து சத்தியத்தைக் காக்க வந்த அடியவளுக்கு இது நேர்ந்திருக்கலாகாது என்று கருதி மருகல் பெருமானைப் பணிந்து அம்மங்கைக்கு நீதி நல்க வேண்டி நின்றார். `சடையாயெனுமால்` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். அந்நிலையில் வணிகனும் உயிர்பெற்று எழுந்தான். இருவரும் தங்கட்கு வாழ்வளித்த ஞானசம்பந்தர் திருவடிகளைப் பணிந்தனர். ஞானசம்பந்தர் அவ்விருவருக்கும் இறைவன் திருமுன்னிலையில் மணம் புணரும் பெருவாழ்வு வழங்கி வாழ்த்தினார்.
திருஞானசம்பந்தர் திருமருகலில் பெருமான் திருவருளில் சிலநாள் மூழ்கியிருந்தபோது, சிறுத்தொண்ட நாயனார் அவரை வணங்கி மீண்டும் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளுமாறு வேண்டினார். திருமருகற் பெருமானை வணங்கி விடைபெறச் சென்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் செங்காட்டங்குடிக் காட்சியைக் காட்ட இரு தலங்களையும் இணைத்து `அங்கமும் வேதமும்` என்ற திருப்பதிகம் பாடிப் போற்றிச் சிறுத்தொண்டருடன் செங்காட்டங்குடி சென்று கணபதீச்சுரத்தை வழிபட்டுக் கொண்டு, பின்னர் சிறுத்தொண்டருக்கு விடையருளித் திருப்புகலூர் எனும் அருட்தலத்தை சென்றடைந்தார்.

தொடரும்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.