டி.ஐ.அரவிந்தன்: ஜெயமோகன் எழுதிய அஞ்சலிக் குறிப்பில் சில சிக்கல்கள்
அண்ணாகண்ணன்
அரவிந்தன் குறித்து ஜெயமோகன் எழுதிய அஞ்சலிக் குறிப்பில் வேறு சில சிக்கல்களும் உள்ளன.
தார்ஷியா என்ற பெயரில் ஆனந்த விகடனில் எழுதிக்கொண்டிருந்த டி.ஐ.அரவிந்தனின் தந்தைதான் எனக்கு முதலில் அறிமுகம் என்ற முதல் வாக்கியமே மயக்கம் கொண்டது. தார்ஷியா என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தவர் டி.ஐ.அரவிந்தன் என்ற பொருளும் இதில் வருகிறது. எழுத்துத் துறையில் அதிக அனுபவம் கொண்ட ஜெயமோகன், இப்படி மயக்கம் தரும் சொல்லாட்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
ஒரு நாள் சில கதைகளை என்னிடம் அளித்தார். அவற்றை செம்மை செய்து வெளியிட்டேன் என்று சொன்னதன் மூலம், அவை செம்மை செய்ய வேண்டிய நிலையில் இருந்தன என்று சொல்கிறார். நான் செம்மை செய்யும் இடத்தில் இருந்தேன் என்றும் சொல்கிறார்.
அச்சகங்களில் வெட்டிப்போட்டபின் மிஞ்சும் விளிம்புத்தாள்களை சேகரித்து குறிப்பேடுகள் தயாரிப்பவர்களிடம் விற்கும் தொழிலை அன்று செய்துகொண்டிருந்தார் என்று சொல்வதில் தவறில்லை. எந்தத் தொழிலும் தாழ்வானதோ இழிவானதோ இல்லை. அந்த இடத்திலிருந்து எந்த இடத்துக்கு அவர் வந்து சேர்ந்தார் என்றும் வாழ்க்கைப் போராட்டங்களிலிருந்து அவர் எப்படி மேலெழுந்து வந்தார் என்றும் தனது படைப்பியக்கத்தை எப்படித் தொடர்ந்தார் என்றும் எழுதியிருக்க வேண்டும். சக படைப்பாளியாக அவரது இடம் எது என்றாவது எழுதியிருக்கலாம்.
கடுமையான உடலுழைப்புக்கு இயலாத சிறிய உடற்குறைபாடு கொண்டிருந்தாலும் அன்று மிகக்கடினமான அப்பணியைச் செய்யவேண்டியிருந்ததது என்பது தேவையற்ற குறிப்பு. உடற்குறைபாடு இருந்தாலும் சவாலான பணிகளைச் செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் நெஞ்சுரத்தைப் பாராட்ட வேண்டும். இயன்றால் உதவ வேண்டும். ஆனால், கழிவிரக்கம் கொள்வதும் உடற்குறையைச் சுட்டிக் காட்டுவதும் உயர்ந்த பண்பு இல்லை.
/அவரும் அவர் தமையனும் அவருடைய தந்தை உருவாக்கிய மூன்று குடும்பங்களின் பொறுப்பையும் ஏற்று உழைத்து முன்னெடுத்துக்கொண்டிருந்த காலம் அது/
அவருடைய தந்தை, மூன்று குடும்பங்களை உருவாக்கியது இங்கே எதற்காக? ஒருவேளை அது உண்மையெனில், மூன்று குடும்பங்களின் பொறுப்பை ஏற்று உழைத்து முன்னெடுத்த அரவிந்தனும் அவர் தமையனும் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவர்கள். எழுச்சி மிகுந்த வீரர்களாக அவர்களை முன்வைத்திருக்க வேண்டும். ஜெயமோகனோ, இதையும் ஐயோ பாவம் எனக் கழிவிரக்கம் கொள்ள வைப்பது போலவே எழுதியுள்ளார்.
எழுத்துத் துறையில், இதழியல் துறையில் 30 ஆண்டுக்காலம் பணியாற்றிய பிறகும் ஒருவரின் முந்தைய தொழில்தான், ஜெயமோகன் நினைவுக்கு வருகிறது. அவரது உடற்குறை, நினைவுக்கு வருகிறது. மாணவராக அவர் இருந்தது நினைவுக்கு வருகிறது. மிக இளைஞராக அவரைச் சந்தித்த முகம்தான் நினைவில் எழுகிறது. அவர் தந்தையாரின் மூன்று குடும்பங்கள், நினைவுக்கு வருகின்றன.
ஓர் ஐந்தாண்டுக்காலம் அவருடன் அணுக்கமான நட்பும் உரையாடலும் இருந்தது எனச் சொல்லும் ஜெயமோகன், அது குறித்து விரிவாகச் சொல்லியிருக்க வேண்டும். அந்த உரையாடலில் இருவரின் நிலைப்பாடு என்ன? முன்வைத்த கருத்துகள் எவை? என்று பேசியிருந்தால், அரவிந்தனைப் பற்றிய நல்ல சித்திரம் உருவாகியிருக்கும்.
ஐந்தாண்டுகள் அணுக்கமான நட்பும் உரையாடலும் இருந்த காலத்திலும் ஜெயமோகனுக்கு இவையே நினைவில் அழுத்தமாக மேலோங்கியிருக்கும் என்பது கசப்பான நிஜம். அரவிந்தன் தானும் ஓர் அறிவுஜீவியாக உரையாடியிருப்பார். ஜெயமோகனோ, மேட்டிமை எண்ணத்துடன் அரவிந்தனை அந்தக் கால வட்டத்திலேயே வைத்திருப்பார். இது இயல்பான, ஆரோக்கியமான உரையாடலுக்கு உகந்த சூழல் இல்லை.
/இந்தியா டுடேயில் அன்றைய நண்பர் மகாதேவன் வழியாக ஆசிரியராகச் சேர்ந்தார்/
இதில் ஜெயமோகன் என்ன சொல்கிறார்? அரவிந்தன், தன் திறமையால், தகுதியால் இந்தியா டுடே இதழில் சேரவில்லை. நண்பர் மகாதேவன் வழியாக ஆசிரியராகச் சேர்ந்தார் என்பது ஏதோ சிபாரிசில் சேர்ந்தது போல் எழுதுகிறார்.
காலச்சுவடு அணியில் இணைந்த பின், என் மேல் அவர் முழுமையான ஓர் எதிர்மனநிலையில் நீடித்தார் என ஜெயமோகன் சொல்வதைக் கவனிக்க வேண்டும். காலச்சுவடு அணியில் இணைந்துவிட்டால், அவர் எதிர்மனநிலைக்குச் சென்றுவிடுவார் என்பது உண்மையில் அரவிந்தனுக்குச் சொந்தமான சிந்தனை இல்லை என்று கூறுவதாக உள்ளது. காலச்சுவடு மீதான விமர்சனமாகவும் இதைக் கருதலாம்.
ஒருவரது வாழ்க்கையில், வரலாற்றில் எத்தகைய விவரங்களுக்கு ஜெயமோகன் முக்கியத்துவம் அளிக்கிறார் என்பது, இதிலிருந்து புலனாகிறது. உண்மையில், ஜெயமோகனின் மனச் சித்திரமே இதில் அதிகம் வெளிப்படுகிறது.
அரவிந்தன் இலக்கியத் தடம் என்ற நூல் வெளிவர வேண்டும். அதுவே, இத்தகைய அக்கப்போர்களுக்கு உரிய பதிலாக இருக்கும்.
