அஞ்சலி: எழுத்தாளர் அரவிந்தன்
அண்ணாகண்ணன்
எழுத்தாளர், காலச்சுவடு பதிப்பாசிரியர் அரவிந்தன் (D.i. Aravindan) மறைந்த செய்தி, அதிர்ச்சி அளிக்கிறது. சுமார் 25 ஆண்டுகளாக என் நண்பர். 2001 – 2003 காலக்கட்டத்தில் உலகத் தமிழ் மின்னிதழில் அவர் ஆசிரியராக இருந்த போது, அவரை நேர்கண்டேன். தமிழில் இணைய இதழ்கள் என்ற என் எம்.பில். ஆய்வேட்டிலும், அதே பெயரில் பின்னர் வெளியான புத்தகத்திலும் அந்த நேர்காணல் இடம்பெற்றது. அதன் பிறகு பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளிலும் சந்தித்து வந்தோம்.
அமுதசுரபியில் (2003 – 2005) நான் ஆசிரியராக இருந்தபோது, சுந்தர ராமசாமி குறித்த விமர்சனங்களை ஓர் இதழில் வெளியிட்டோம். வெங்கட் சாமிநாதன், கிருஷ்ணன் வெங்கடாசலம் Krishnan Venkatachalam உள்ளிட்டோர், சு.ரா.வை விமர்சித்து எழுதினர். அதற்குப் பிறகு, சென்னை, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் (பிலிம் சாம்பர்) ஒரு முறை சுந்தர ராமசாமி பேசினார். அவர் பேசி முடித்து அரவிந்தனுடன் வெளியே வந்தார். அப்போது, எதிரே நான் வந்தேன். சுந்தர ராமசாமியிடம் அரவிந்தன், இவர்தான் அண்ணாகண்ணன் என அறிமுகப்படுத்தினார். ஓ, நீங்கள்தானா என்று சு.ரா. சற்றே கடுமையாக ஏறிட்டுப் பார்த்தார். நீங்கள் நன்றாகப் பேசினீர்கள் என்றேன். நான் எப்போதுமே நன்றாகப் பேசுவேன் என்றார். நான், சுந்தர ராமசாமியைச் சந்தித்ததற்கு இருந்த ஒரே சாட்சியான அரவிந்தனும் இப்போது இல்லை.
புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, பத்திரிகையாளர்களுக்கான சிறப்புத் திரையிடலுக்கு அழைப்பார்கள். அவற்றில் அரவிந்தனுடன் இணைந்து திரைப்படங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். பிஆர்ஓ நிகில் முருகன், அவரை நல்ல கிரிட்டிக் (விமர்சகர்) என்று அனைவரிடமும் அறிமுகப்படுத்துவார்.
அரவிந்தன், அழுத்தமான விமர்சனப் பார்வை கொண்டவர். ஆனால், மென்மையான, அமைதியான, கனிவான இயல்பு கொண்டவர். அரவிந்தன், இந்தியா டுடே, இந்து தமிழ் திசை போன்ற வணிக இதழ்களில் இருந்தாலும், தீவிரமான நடையிலேயே எழுதி வந்தார். மீண்டும் அவர் காலச்சுவடு நிறுவனத்துக்குத் திரும்பியது, ஒரு வகையில் வீடு திரும்பலே. ஆண்டுதோறும் சென்னைப் புத்தகக் காட்சியில் சந்தித்து வந்தோம்.
எப்போதும் மழித்த முகத்துடன், சிரித்த முகத்துடன் இளைஞராகவே வலம் வந்தார். பெரிதாக எதற்கும் உணர்ச்சிவசப்பட மாட்டார். அவர் மனைவி ஸ்ரீதேவியும் அதே போன்று புன்னகை மாறாமல் இருப்பவர். இந்த இழப்பைத் தாங்கும் வலிமையை அவரும் குழந்தைகளும் பெற வேண்டும். அரவிந்தன், நினைவுகளால் வாழ்வார். நித்தியத்தில் தோய்வார்.
நெஞ்சார்ந்த அஞ்சலி.
