நாகேஸ்வரி அண்ணாமலை

2012-இல் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இப்போதே தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பித்து விட்டன.  சாதாரணமாக பதவியில் இருக்கும் ஜனாதிபதியை எதிர்த்து அவர் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் போட்டியிடுவதில்லை.  ஜனாதிபதி பதவியில் இல்லாத இன்னொரு கட்சியில் (அமெரிக்காவில் இரண்டே கட்சிகள்தான்.  தேர்தல் சமயத்தில் மிகவும் சிறிய ஓரிரு கட்சிகள் போட்டியிடுவதுண்டு.  ஆனால் இது பெயரளவில் மட்டுமே.)  பலர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்குத் தங்களைத் தேர்ந்தெடுக்கும்படிப் பிரச்சாரம் செய்ய ஆரம்பிப்பார்கள்.  பல மாநிலங்களில் நடக்கும் முதல் நிலைத் தேர்தல்களில் (primaries)  யாருக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்கிறதோ அவரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்தக் கட்சி அங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஒபாமாவிற்கு இது முதல் தடவை என்பதால் இன்னொரு முறை ஜனாதிபதி தேர்தலில் நிற்பதற்கு அவருக்கு உரிமை உண்டு.  அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சியில் யாரும் நிற்கவில்லையாதலால் போட்டி அவருக்கும் அவரை எதிர்த்து நிற்கப் போகும் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கும் இடையில்தான்.  இப்போது குடியரசுக் கட்சியின் தேர்தல் களத்தில் ஏழு பேர் இருக்கிறார்கள்.  தேர்தல் நாள் வரை நிலைமை இப்படியே இருந்தால் இந்த ஏழு பேரில் ஒருவரும் ஒபாமாவை ஜெயிக்க முடியாது என்று நான் அறுதியிட்டுச் சொல்கிறேன்.  (“அமெரிக்கர்களின் மடத்தனத்தைக் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்.  ஜனாதிபதி புஷ்ஷை இரண்டு தடவை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்த நாடு” என்று ஒரு நண்பர் சொன்னதை இப்போதைக்கு மனதிலிருந்து அகற்றி விட்டுத் தொடர்ந்து எழுதுகிறேன்.)

அமெரிக்கா இப்போதைக்கு இரண்டு யுத்தங்களில் ஈடுபட்டிருக்கிறது.  2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதியோடு ஈராக்கை விட்டு அமெரிக்கா வெளியேறி விடும் என்றாலும் அதன் பிறகும் பத்தாயிரம் அமெரிக்கத் துருப்புகளாவது அங்கு தொடர்ந்து இருக்கும்.  ஆப்கானிஸ்தானத்திலிருந்து இப்போதைக்கு அமெரிக்கத் துருப்புகள் வரப் போவதில்லை.  ஆக ஒரு லட்சம் அமெரிக்கத் துருப்புகள் வெளிநாட்டில் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  பாகிஸ்தானோடு அமெரிக்க உறவு மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.  ஈரானும் வட கொரியாவும் அணு ஆயுத உற்பத்தியில் மும்முரமாக இறங்கியிருக்கின்றன.  மத்தியக் கிழக்குப் பிரச்சினை பற்றிக் கேட்கவே வேண்டாம்.  ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் பாலஸ்தீனத் தலைவர் தனி நாடு கோரி விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு இன்னும் நிலைமை மோசமாகியிருக்கிறது.  இந்த வெளிநாட்டுப் பிரச்சினைகளை எல்லாம் சமாளிக்கக் குடியரசுக் கட்சி வேட்பாளர்களால் முடியுமா என்று நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கேட்கிறது.

முதலாவதாக முன்னாள் மாசசூசெட்ஸ் மாநில ஆளுநராக (அமெரிக்க மாநில ஆளுநர்கள் இந்திய முதல் அமைச்சர்களுக்குச் சமம்) இருந்த மிட் ராம்னி (Mitt Romney) என்பவரை எடுத்துக் கொள்வோம்.  இப்போதைக்கு இவருக்குத்தான் குடியரசுக் கட்சியின் நியமனம் கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது.  இவர் பெரிய தொழில் அதிபராக இருந்தவர்.  பெரிய பணக்காரர்.  ஒரு மாநில ஆளுநராக இருந்த அனுபவம் உண்டு.  ஆனால் மாநில ஆளுநராக இருந்த அனுபவம் நாட்டின் ஜனாதிபதி ஆவதற்குப் போதுமா என்றால் இல்லை என்ற பதில்தான் சரி.  அதனால் ஆளுநர் பதவியில் கிடைத்த அனுபவம் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கைகள் பற்றி அறிந்து கொள்ள இவருக்கு உதவியதாகத் தெரியவில்லை.  அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பற்றித் திட்டவட்டமாக இவர் எதுவும் சொல்வதில்லை.  ராணுவ பட்ஜெட்டை நான்கு சதவிகிதம் கூட்டுவேன் என்று மட்டும் சொல்கிறார்.  ஏற்கனவே கடனில் தத்தளிக்கும் அமெரிக்காவில் அதற்கு எங்கிருந்து பணம் கிடைக்கும் என்று கூறவில்லை.  ஈரானை ராணுவ பலத்தால் வீழ்த்த வேண்டும் என்ற இவருடைய கொள்கையும் ஏற்கனவே இரண்டு யுத்தங்களில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்காவிற்கு சாத்தியப்படுமா என்று தெரியவில்லை. 

மேலும் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு விதமாகப் பேசுவார் என்ற கருத்தும் இவரைப்பற்றி நிறையப் பேருக்கு இருக்கிறது.  மாசசூசெட்ஸ் மாநிலத்தில் எல்லோருக்கும் மருத்துவ இன்சூரன்ஸைக் கொண்டு வந்த இவர், ஒபாமா கொண்டு வந்த, அமெரிக்காவில் எல்லோருக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் வழங்கக் கூடிய சட்டத்தைத் தான் ஜனாதிபதியாக வந்தால் ரத்து செய்வேன் என்கிறார்.  மாசசூசெட்ஸ் மாநில மக்களுக்கு இருக்கும் மருத்துவ வசதி ஏன் எல்லா அமெரிக்கர்களுக்கும் கிடைக்கக் கூடாது என்று இவர் விளக்கவில்லை.  பெண்களுக்கு கருச் சிதைவு செய்து கொள்ளும் உரிமை இருக்கிறதா என்பது பற்றியும் இவர் எப்போதும் ஒரே மாதிரியாகப் பேசுவதில்லை என்கிறார்கள். 

அமெரிக்கா தன் வசமிருக்கும் போர்க் கைதிகளை தண்ணீருக்குள் மூழ்கி இறந்து போவது (waterboarding)  போன்ற, சித்திரவதை செய்யும் ஒரு யுத்தியைக் கையாள வேண்டுமா என்பது பற்றி இவர் எதுவும் சொல்வதில்லை.  புஷ் காலத்தில் நடந்து வந்த இந்த சித்திரவதையை ஒபாமா பதவிக்கு வந்தவுடனேயே நிறுத்தி விட்டார்.  இந்தச் சித்திரவதையால் அமெரிக்காவின் நிலை உலக நாடுகளிடையே மிகவும் மோசமாகி இருந்தது.   அதனால் அடுத்த தேர்தலில் பதவி ஏற்கப் போகும் ஜனாதிபதி அது பற்றி என்ன நினைக்கிறார் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.  இவருடைய மௌனம் பலரிடம், குறிப்பாக அமெரிக்காவின் மதிப்பை உலக நாடுகளிடையே பழைய மாதிரி உயர்த்த வேண்டும் என்று விரும்புபவர்களிடம் கலக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது. 

அடுத்ததாக முன்னாள் கீழவைத் தலைவராக இருந்த நியூட் கிங்க்ரிச் (Newt Gingrich) பற்றிப் பார்ப்போம்.  இவர் பில் கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்த சமயத்தில் கீழவைத் தலைவராக இருந்து அவருக்குப் பல தடவைத் தலைவலியைக் கொடுத்தவர்.  மிகப் பெரிய பழமைவாதி.  அமெரிக்க முதலாளித்துவத்தில் மிகுந்த பிடிப்பு உண்டு.  அமெரிக்க வறியவர்கள் பற்றி இவருக்குக் கவலையில்லை.  கம்பெனிகளுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களுக்குத் தொடர்பு ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அவர்களோடு கம்பெனிகளுக்குச் சாதகமாகப் பேசுவதற்கு என்று மில்லியன் கணக்கில் பணம் வாங்கியிருக்கிறார்.  கேட்டால் “நான் அமெரிக்காவின் வரலாறு தெரிந்தவன், அரசியல் தரகன் (lobbyist)  அல்ல” என்கிறார்.  பில் கிளிண்டனின் பதவி நீக்க விசாரணையில் இவர் முன்னணியில் இருந்தபோதே இவர் இன்னொரு பெண்ணோடு கள்ளத் தொடர்பு வைத்திருந்தார்.  மனைவிக்குப் புற்றுநோய் என்று தெரிந்த பின் அவரை விலக்கியவர்.

அடுத்ததாக இப்போதைய டெக்ஸாஸ் ஆளுநராக இருக்கும் ரிக் பெரி (Rick Perry).  மாநில ஆளுநர்களாக இருப்பவர்கள் பரந்த அறிவு இருந்தாலொழிய ஜனாதிபதி பதவிக்கு வரக் கூடாது என்பதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம்.  தான் ஜனாதிபதியாக வந்தால் மத்திய கல்வித் துறை, வணிகத்துறை, சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டுத் துறை ஆகியவற்றை முதலில் ஒழிப்பேன் என்று சொன்னவர் குடியரசுக் கட்சி வேட்பாளர்களிடையே நடந்த விவாதத்திற்குப் பின் நிருபர்கள் அது பற்றிக் கேட்டபோது இரண்டு துறைகளைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு மூன்றாவதை நினைவு கூர முடியாமல் திணறினார்.  பாகிஸ்தானில் இருப்பதாகக் கருதப்படும் தாலிபான்களை எப்படி ஒழிப்பீர்கள் என்ற கேள்விக்கு அமெரிக்கா இந்தியாவிற்கு F-16 விமானங்களை விற்க வேண்டும் என்றார்.  இந்தியா அவற்றை வாங்க விரும்பவில்லை என்பது கூட இவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

அடுத்ததாக ஹெர்மென் கெயின் (Herman Cain).  இவருக்கு அரசியல் அனுபவம் எதுவும் கிடையாது.  எந்தத் தேர்தலிலும் நின்று ஜெயித்ததில்லை.  ஒரு பிட்ஸா சங்கிலித் தொடர் கடையில் பெரிய பதவி வகித்திருக்கிறார்.  பெரிய பணக்காரர்.  அதைத் தவிர வேறு எந்தத் தகுதியும் இவருக்கு இல்லை.  உஸ்பெகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி யார் என்று தெரியவில்லை.  லிபியா நாடு கடாஃபியிடமிருந்து எப்படி விடுபட்டது, அதில் அமெரிக்காவின் பங்கு என்ன என்றால் தெரியவில்லை.  ஜனாதிபதிக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை, அவருடைய உதவியாளர்கள் அவற்றையெல்லாம் பார்த்துக் கொள்வார்கள் என்று வாதம் வேறு செய்கிறார்.  அரசியல் அனுபவம் இல்லை என்பதே இவருக்கு ஒரு சாதகமான தகுதி என்று அரசியல்வாதிகளை வெறுக்கும் மக்கள் நினைக்கிறார்களாம்.  இதை நம்பி ஜனாதிபதி தேர்தலில் நிற்கிறார் போலும்.  அதோடு நாலைந்து பெண்கள் தங்களிடம் இவர் தகாத முறையில் நடந்து கொண்டதாகப் புகார் கொடுத்திருக்கிறார்கள்.  ஜனாதிபதி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அமெரிக்காவைப் பொறுத்த வரை இந்த விஷயத்தில் மிகவும் சுத்தமானவராக இருக்க வேண்டும்.  இவர் போட்டியிலிருந்து சீக்கிரமே விலகிக் கொள்ளலாம்.  (இப்போதைக்குப் போட்டியிடும் எண்ணத்தை இவர் நிறுத்தி வைத்திருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன.)

ஜான் ஹன்ட்ஸ்மென் (Jon Huntsman) என்பவர் ஒபாமாவினால் சீனாவுக்கு அமெரிக்கத் தூதராக அனுப்பப்பட்டவர்.  அதைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு ஜனாதிபதிப் போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கிறார்.  இவருக்கு அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பற்றித் தெரியும்.  போர்க் கைதிகளை இம்சை செய்வது தவறு என்று ஒப்புக் கொள்பவர்.  ஆயினும் ஒபாமா அளவிற்குப் பொருளாதாரக் கொள்கைகளில் ஆழ்ந்த அறிவு கிடையாது.  ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கா முரட்டுத்தனமாக சண்டை போட்டுச் சீக்கிரமே அங்கு தாலிபான்களை ஜெயிக்க வேண்டும் என்று கூறுபவர். அரசியல் நடைமுறை அறிவு அவ்வளவு போதாது என்று கூறலாம்.

ரிக் ஸாண்டோரம் (Rick Santorum)  என்பவரும் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கா இன்னும் தீவிரமாகச் சண்டை போட வேண்டும் என்று சொல்பவர்.  இவருக்கு அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பற்றி எல்லாம் எதுவும் சரியாகத் தெரியாது.  இவர் உலக நாடுகளின் மத்தியில் அமெரிக்காவின் நிலையை உயர்த்துவது பற்றி எல்லாம் எதுவும் யோசிப்பதில்லை.  இவருக்கு எந்த அனுபவமும் இல்லை.

மிஷல் பாக்மென் (Michele Bachmann) என்பவர் கீழவை உறுப்பினர்.  இவர் அரசியலுக்குப் புதியவர்.  அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது.  போர்க் கைதிகளைச் சித்திரவதை செய்து அவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்க வேண்டும் என்பதும் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைபவர்களை எந்தக் கொடிய வழியானாலும் சரி, தடுத்து நிறுத்த வேண்டும் என்பதும் இவருடைய தாரக மந்திரங்கள்.  ஒபாமா இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக வரக்கூடாது என்று எல்லாக் கூட்டங்களிலும் அடித்துக் கூறுவார்.

கடைசியாக வருபவர் ராண் பால் (Ron Paul) .  இவர் கொஞ்சம் புத்திசாலித்தனமாகப் பேசுவார்.  அமெரிக்கா உலக விவகாரங்களில் சிக்கக் கூடாது, மற்ற நாடுகளின் விஷயத்தில் தலையிடக் கூடாது, தன் துருத்தியை மட்டும் ஊத வேண்டும் போன்ற கருத்துக்களை உடையவர்.  ஆனால் மிகவும் பழமைவாதி.  ஏழைகளுக்காக அரசு எதுவும் செய்யத் தேவையில்லை, முதலாளித்துவப் பொருளாதாரத்தில் எல்லோருக்கும் முன்னேற வாய்ப்பு உண்டு என்ற கொள்கைகளை உடையவர்.  இவருடைய போக்கு இப்போதைய சூழ்நிலையில் எடுபடாது.

இந்த ஏழு பேரில் யாருக்கும் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிடும் தகுதி இல்லை.  வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம், உலக அரசியல் சூழல் போன்ற எதிலும் ஒபாமாவிற்கு உள்ள ஆழ்ந்த அறிவு இவர்களுக்கு இல்லை.  உலகின் கண்களில் அமெரிக்காவை உயர்த்த வேண்டும் என்ற  நாட்டமும் இல்லை.  அமெரிக்காவில் மத்திய தர மக்கள் மறைந்து வருகிறார்கள், ஏழை, பணக்காரன் என்ற இரண்டு வர்க்கங்கள் மட்டுமே இருக்கும் என்ற அபாயம் பெருகி வருகிறது என்பதெல்லாம் இவர்களுக்குப் புரியவில்லை, புரிந்து கொள்ளவும் இவர்கள் விரும்பவில்லை.  ஒபாமா அழகாகப் பேசுவார், ஆனால் அது மட்டும்தான் தெரியும் என்று அவரின் பேச்சுத் திறனைக் கேலி செய்யும் இவர்கள் ஒபாமாவிற்குச் செயல் திறனும் உண்டு என்று ஒப்புக்கொள்வதில்லை.  இவர்களில் யார் பதவிக்கு வந்தாலும் அமெரிக்காவிற்கும் அது நல்லதல்ல; உலகிற்கும் நல்லதல்ல.  நல்ல வேளை இவர்களில் யாருக்கும் ஒபாமாவை வெல்லும் திறன் இல்லை.

 

 படத்திற்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/United_States_presidential_election,_2012

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.