காலைத்தூக்கி நின்றாடும் தெய்வமே

0

விசாலம்

சமீப காலமாய் எனக்குக் கோவை மண்ணில் கால் பதித்து அங்கு இரண்டு மாதங்கள் தங்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. அதுவும் மருதமலை அருகே என்றால் என்ன ஒரு ஆனந்தம்! கோவையில் இருக்கும் மலைகளெல்லாம் ஆன்மீகச் சிறப்புப் பெற்றவைகள்தான்.

ஆனைமலை போயிருந்தேன், அங்கே படுத்தபடி அருள் புரியும் அருள்மிகு மாசாணியம்மனின் அழகே அழகு. அவள் சக்தியைச் சொல்ல முடியாது, தவறு இழைத்தவர்கள் அவள் கண்ணிலிருந்து தப்ப முடியாது. தண்டனை ஏதாவது வழியில் நிச்சயம்.

தவிர களவு போன பொருட்கள் மனமுருகி வேண்டக் கிடைத்து விடும். அம்மனுக்கு மிளகாய் அரைத்துப் பூசும் வழக்கமும் உண்டு. ஒரு காய்ந்த மிளகாய் எடுத்தாலே கமறித் தும்மும் நாம் அங்கு கிலோ கிலோவாக மிளகாய் எடுத்தாலும் ஒன்றும் ஆகாதது மிக வியக்கத்தக்கது தான்.

நான் வெள்ளியங்கிரி மலைக்கும் போய் வந்தேன். தற்போது அங்கு ஸ்ரீஜக்கிவாசுதேவ் அவர்களால் நிறுவப்பட்ட ஈஷா யோக மையமும், தியானம் செய்யக் குகை போல் தகுந்த மண்டபமும், தியானலிங்கம், லிங்கபைரவி போன்ற அமைப்புக்களும் மனதுக்கு அமைதியையும் பரவசமும் தருகின்றன. மிகப்பழமையான சிவன் கோயிலும் மலையடிவாரத்தில் உள்ளது.

மருதமலையில் அருள் புரியும் வேலன் அழகோ அழகு. அதுவும் அவன் தங்கத்தேரில் பவனி வர வேண்டுமே. அந்தத் தேரைப் பார்ப்பவர்கள் அப்படியே கண் கொட்டாமல் தங்களை மறந்து நிற்பது சர்வ சகஜம். அத்துடன் அருகே ஒரு குகைக்குள் இருக்கும் பாம்பாட்டிச்சித்தரின் சமாதியும் நம் உடலுக்கு மேலும் சக்தியை அளிக்கிறது. “மருதமலை மாமணியே முருகய்யா” என்ற பாடலும் அதைப்பாடிய திரு. மதுரை சோமு அவர்களையும் மறக்க முடியுமா என்ன! அப்படியே மருதமலை முருகன் அந்தப் பாடலில் நமக்குக்காட்சி அளித்து விடுவார்.

திருமூர்த்தி மலையில் அமண லிங்கேஸ்வரர், அதாவது மும்மூர்த்திகள் சேர்ந்து ஒருவராக நமக்குத் தரிசனம் தந்து அருள் புரிகிறார். வைணவர்கள் கூட்டம் வரும் இடம் பாலமலை. இங்கு ஶ்ரீரங்கநாதர் பள்ளி கொண்டபடிக் காட்சியளிக்கிறார்.

கோவை நகர ஆரம்பத்தில் இருக்கும் கோயில் தான் “ஈச்சநாரி வினாயகர். எதைக்கேட்டாலும் அள்ளி வழங்கும் கணபதி அவர். நானும் அந்தப்பிள்ளையார் கோயிலில் தான் முதலில் காலை வைத்தேன். பின் வரிசையாகப் பல கோயில்களின் தரிசனம் எனக்குக் கிடைத்தது. கோனியம்மன், தண்டுமாரியம்மன், காமாட்சியம்மன், சாரதாம்பிகை. உக்கடம் ஶ்ரீ லட்சுமி நரசிம்மர். கன்னிகாபரமேஸ்வரி, சௌடேஸ்வரி, ஶ்ரீவேணுகோபாலசுவாமி, ரத்ன வினாயகர், என்று பட்டியல் நீண்டு என் மனதிற்கு மன நிறைவும் ஆனந்தத்தையும் அளித்தன.

இந்தக் கோயில் வரிசையில் கொழுமம் என்ற இடம் என் மனதில் நின்றது. ஏனென்றால் அது ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் கொடை வள்ளல் குமணன் ஆண்ட நாடு. தன் தம்பிக்காகத் தன் தலையும் கொடுத்த உத்தமர் அவர். இங்கேதான் அமராவதி நதியும் ஓடி வந்து அந்த இடத்திற்கு மேலும் பெருமையைச் சேர்க்கிறது. மிக அதிகமானப் பெயர்கள் கொண்ட இடம் இதுதான் என நினைக்கிறேன். ஒருவர் இதை குழுமூர் என்று அழைத்தார். சிலர் நல்லூர் என்று அழைத்தனர்.

நானும் விடவில்லை. அங்கு இருந்த ஒரு பெரியவரிடம் “இந்த ஊருக்குப் பல பெயர்கள் இருக்கின்றனவா? இதைப்பற்றி அறிந்தால் சொல்லுங்கள்” எனக் கேட்க அவரும் மிகப்பெருமையுடன் கூற ஆரம்பித்தார்.

“பல அந்தணர்கள் வாழ்ந்து நான்கு வேதங்களையும் ஓதி வந்ததால் இந்த இடம் “விக்கிரம சதுர்வேதி மங்கலம்” என்று அழைக்கப்பட்டது. அத்துடன் உலகுடைய பிராட்டியார் சதுர்வேதிமங்கலம், விக்கிரம சோழநல்லூர், கேரளகேசரி நல்லூர், திருவளர்துறை, தென்னூர், என்றும் அழைக்கப்பட்டன.

பின் வியாபார நிமித்தமாகப் பல வணிகர்கள், சேர நாட்டு வணிகர்கள் என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டமாக வியாபாரத்தில் ஈடுபட்டு ஒரு இடத்தில் குழுமியதால் இதைக் “குழுமூர்’ என்றும் அழைத்தனர்”. இந்த ஊரில் உறையும் மகேசனும் பல பெயர்கள் கொண்டுள்ளான். சோழர் காலத்தில் ஆண்டு வந்த வீரசோழன், இங்குச் சிவன் கோயிலைக் கட்டியதால் இங்கிருக்கும் லிங்கத்திற்குச் ‘சோழீஸ்வரர் ‘என்ற பெயர் ஆனது. மேலும் இவருக்குப் பட்டீச்வரர், கொங்கீச்வரர், தாண்டீச்வரர் என்ற பெயர்களும் உண்டு. ஆனால் பலர் இதைச் சோழீச்வரர் என்றே அழைக்கின்றனர்.

இங்கிருக்கும் நடராஜர் தாண்டேச்வரர் என்ற பெயரில் மிக அழகாக நடனம் ஆடும் நிலையில் உள்ளார். மிகப்பெரிய மூர்த்திதான், இதைப்பார்க்க “காலைத்தூக்கி நின்றாடும் தெய்வமே” என்ற யதுகுலகாம்போதியில் திரு. மதுரைமணி அவர்கள் பாடும் பாட்டு மனதில் வந்தது. அவருடன் இருக்கும் சிவகாமி அன்னையின் அழகோ அழகு.

மேலே நடக்க காலபைரைவர், பூதேவி நீளாதேவி சமேத கல்யாண வரதராஜப்பெருமாள், வினாயகர், தட்சிணா மூர்த்தி என்று பலரை நாம் தரிசித்து அருள் பெறலாம்.

அக்னீச்வரர் சோழீச்வரர் கருவறைக் கட்டுமானங்கள் சோழ காலப் பாணியை நினைவுக்குக் கொண்டுவருகின்றன. கொழுமம் என்றாலே நித்தம் ஆடும் தாண்டவேச்வரர் தான் என் மனதில் அப்படியே பதிந்து நிற்கிறார். கண்களை மூட அவர் கம்பீரத்தோற்றமும் நடனமும் மறக்க முடியாத ஒன்று.

 

மருதமலைப் படங்களுக்கு நன்றி:http://www.covai.com/temples/maruthamalai.htm

தாண்டேஸ்வரர் திருக்கோயில் படத்திற்கு நன்றி:http://temple.dinamalar.com/en/new_en.php?id=47

மாசாணியம்மன் படத்திற்கு நன்றி:http://www.kovaizone.in/coimbatore-tourist-attraction/coimbatore-temples/masani-amman-temple-pollachi.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.