வருணன்

கோடுகளின்றி வெறும்
வண்ணங்களாய் மட்டுமே
உன் வாழ்க்கை.

உன் உணர்வுகளின்
சவக் குழியாய்
நின் தேகம்.

இரை தேடும் வேடருக்கு
இனித்திடும்- உன்
அதே தேகம்.

காலை மலர்ந்த மலர்
பூசையறையில்
அந்தியில் ஆடவர் மிதித்திட
புழுதியில்.

உனக்கும் கண்டிப்பாய்
இருக்கும்
ஒரு குடும்பம்.

உடன் குடித்தனம் நடத்தும்
சில நாழிகை கணவர்களுக்கும்
இது தெரிந்தேயிருக்கும்.

கிளையாய் நீயிருக்க
வாசம் செய்யும் மந்திகள்
மட்டும் மாறிக்கொண்டே !

பெண்டிரனைவருக்கும்
தாய்மையோர் வ்ரம்
உனக்கோ பாரம்

உன் மகவுக்கோ பிறப்பிலேயே
பழிச்சொல்
இலவச இணைப்பாய்.

உன் வாழ்வுதனில்
வசந்தமென்பது வெறும்
வார்த்தை… அவ்வளவே!

வனப்பு எண்ணெய்
தேக விளக்கில் உள்ளவரை
எரியும் சுடர் தேடி உன்னை
மொய்க்கும் சில்வண்டுகள்

சுடரில் வீழும்
வண்டுகள் வாழ
சுடர் அணையும் முரண்
உன்னுலகில் மட்டும் சாத்தியம்

நீ உண்ண- நாடுவோர்க்கு
உணவாய் தருகிறாய் நின்னையே

அணைவதற்கென்றே ஏற்றப்படும்
அதிசய சுடர் நீ !

   படத்திற்கு நன்றி           

http://www.moillusions.com/2007/01/can-you-see-hidden-face.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *