அன்னையர் தினம்
கலையரசி
“அம்மா! நாந்தாம்மா கெளரி பேசறேன்.”
“என்னம்மா? காலங் கார்த்தால போன்? மாப்பிள்ளை, குழந்தை எல்லாரும் செளக்கியம் தானே?
”எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க. ஒங்கக் குரல் ஏன் ஒரு மாதிரியா இருக்கு? உடம்பு, கிடம்பு சரியில்லையா? இரத்த அழுத்தம் நார்மலாத் தானே இருக்கு?
”அதெல்லாம் ஒன்னுமில்லை. மணி எட்டாவுது. இப்பத்தான் படுக்கையிலேர்ந்து எழுந்திருச்சேன். அதான் குரல் கம்மியிருக்குது. விடிகாலையில எழுந்திருச்சி நான் யாருக்குச் சாப்பாடு கட்டப் போறேன்? நீங்கல்லாம் போன பிறகு எனக்குச் சமைக்கப் புடிக்கலே. சாப்பிடப் புடிக்கலே. வர வர வாழ்க்கையே ரொம்ப வெறுமையா இருக்கு கெளரி!”
”ஏம்மா சலிச்சிருக்கிறீங்க? இவ்ளோ நாள் ஓடியாடி வேலை செஞ்ச வரைக்கும் போதும். இனிமே நீங்க ஓய்வெடுக்கிற வயசு. நல்லாத் தூங்கிச் சாப்பிட்டுட்டு சந்தோஷமா இருங்க. சொல்ல வந்த விஷயத்தை விட்டுட்டு என்னென்னவோ சொல்லிக்கிட்டுருக்கேன். இன்னிக்கு அன்னையர் தினம்! ஒங்களுக்கு வாழ்த்துச் சொல்லத் தான் கூப்பிட்டேன்.”
”அப்பிடியா? வர வர நாள், கெழமை எதுவுமே ஞாபகத்துல இருக்க மாட்டேங்குது. வாழ்த்துக்கு ரொம்ப நன்றிம்மா”.
”சரிம்மா. அவசரமா ஆபீசுக்குக் கிளம்பிக்கிட்டுருக்கேன். அப்பாவைக் கேட்டதாச் சொல்லுங்க. அப்புறமா போன் பண்றேன்.”
”சரிம்மா.”
”யாரு போன்ல?”என்று கேட்ட கணவர் மணியிடம்
”நம்ம கெளரி தான். இன்னிக்கு அம்மா தினமாம். வாழ்த்துச் சொல்லக் கூப்பிட்டா,” என்றாள் காவேரி.
”அது சரி. வெள்ளைக்காரனுங்க தான் ஒவ்வொன்னுக்கும் ஒரு நாளை ஒதுக்கி வைச்சிக் கொண்டாடுறாங்கன்னா
நம்ம புள்ளைகளும் அதை அப்படியே காப்பியடிக்க ஆரம்பிச்சுட்டுதுங்களே. இந்த மாதிரி பெத்த அம்மாவுக்கு வருஷத்துக்கு ஒரு நாள், போனாப் போவுதுன்னு அப்பாவுக்கும் ஒரு நாள்னு ஒதுக்கி, அன்னிக்கு அவசர அவசரமா ஒரு போன் பண்ணி வாழ்த்து சொல்றதோட தங்களோட கடமை முடிஞ்சிடுதுன்னு நினைக்குதுங்க. இந்த அவசர உலகத்துல பாசம், நேசம் எல்லாமே வெறும் சம்பிரதாயமா மாறிட்டு வருது காவேரி!
”சரி வுடுங்க. அதுங்களுக்கும் ஆயிரத்தெட்டு வேலை. இந்த மாதிரி ஒரு நாளை ஒதுக்கி வைச்சிருக்கிறதினாலேயாவது பசங்களுக்கு நம்ம ஞாபகம் வருதே, அதை நினைச்சி சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.”
”அதுவும் சரிதான். அவ்ளோ வேலையிலேயும் எம் பொண்ணு எவ்வளவு ஞாபகமா போன் பண்ணுது பாரு? ஒம் பையனும்
இருக்கானே! இதெல்லாம் அவனுக்கெங்கே ஞாபகம் இருக்கப் போவுது?
”சும்மா இருக்கிற என்னைத் தூண்டிவிட்டு என் வாயைப் புடுங்கிறதுல, அப்பிடி என்ன சந்தோஷம் ஒங்களுக்கு? அவனுக்கு என்ன வேலையோ? இந்த மாதிரி சம்பிரதாயமா வாழ்த்து சொல்றதெல்லாம், அறவே அவனுக்குப் புடிக்காது.”
”என்னமோ போ. பையனை விட்டுக் கொடுக்காம பேசக் கத்துக்கிட்டே. மூணு வருஷத்துக்கு முன்னாடி வந்துட்டுப் போனவன் தான். குழந்தையும் பொறந்து ரெண்டு வயசு முடிஞ்சிட்டுது. பேரக்குழந்தையை இன்னும் நாம கண்ணாலேயே பார்க்கல. போட்டோவிலேயும் கம்ப்யூட்டரிலேயும் பார்த்துத் திருப்திப்பட்டுக்கிறதோட சரி. ஒரு தடவை வந்து காட்டிட்டுப் போடான்னு சொன்னா, விமான டிக்கெட்டுக்குக் கணக்குப் பார்த்துட்டுப் பயணத்தை ஒத்திப் போட்டுக்கிட்டே போறான். எப்பத்தான் வரான்னு பார்ப்போம்.”
“சரி சரி.. போயி வேலையைப் பாருங்க. அவனை ஏதாச்சும் குத்தம் சொல்லலேன்னா, உங்களுக்குப் பொழுது போகாது.”
கணவரிடம் மகனுக்காகப் பரிந்து பேசினாலும், பையன் இப்போது மிகவும் மாறிப் போய்விட்டான் என்ற உறுத்தல், அவள் உள்மனதிலும் இல்லாமலில்லை. வெளி நாடு போன புதிதில், இரண்டு நாட்களுக்கொரு முறை போன் பண்ணி அம்மாவிடம் பேசவில்லையாயின், அவன் தலை வெடித்துவிடும்.
சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுகிறான், எல்லாரையும் பிரிந்து தனிமையில் வாடுகிறான் என்று காவேரி தான்
அவனை வற்புறுத்தி 26 வயதாகும் போதே, பெண் பார்த்துத் திருமணம் செய்து வைத்தாள். திருமணத்திற்குப்
பிறகு இரண்டு நாட்களுக்கொரு முறை இருந்த தொலைபேசி அழைப்பு, வாரத்திற்கொரு முறை என்றாகி இப்போதோ மாதத்துக்கொரு முறை என்றாகிவிட்டது.
வேலை, குடும்பம், குழந்தைகள் என்றான பிறகு, அம்மாவுக்குப் போன் செய்ய அவனுக்கு நேரமின்றிப் போனது.
“நான் பேசணும்னு நெனைக்கிறப்ப, உங்களுக்குப் பாதி ராத்திரி ஆயிடுது. சரி காலையில பண்ணிக்கலாம்னு நெனைப்பேன். வேலைப் பளுவில மறந்துடுதும்மா” என்பான் சமயத்தில்.
மதியச் சாப்பாடு முடிந்து படுத்திருந்த போது, அழைப்பு மணி ஒலித்தது. எழுந்து சென்று கதவைத் திறந்தவளுக்கு ஆச்சரியத்தில் தலைகால் புரியவில்லை. ஆம். அவளது அன்பு மகன், தன் மகளுடன் வாசலில் நின்றிருந்தான்.
”என்னப்பா திடுதிப்பென்று சொல்லாமல் கொள்ளாமல்?”
“அன்னையர் தினத்திற்கு உங்களுக்கு நேரிலேயே வாழ்த்துச் சொல்லணும்னு வந்தேன்மா”
அப்பாவின் கால்களைக் கட்டிக் கொண்டு, எட்டிப்பார்த்த குழந்தையைக் கண்டவள், “இது தான் நம்ம வீட்டுக் குட்டி தேவதையா? வாடாச் செல்லம்” என்று ஓடிப் போய் குழந்தையை வாரியெடுத்து உச்சி முகர்ந்து கன்னத்தில் முத்தம் பதித்தாள்.
’இப்போதாவது வந்து அம்மாவைப் பார்க்கணும்னு தோணிச்சே” என்று செல்லமாகப் பையனைக் கடிந்து கொண்டாள்.
இரண்டாவது முறை மணி அடித்து விழிப்பு வந்த போதுதான், தான் கண்டது கனவென்று உணர்ந்தாள் காவேரி.
கண நேரம் மகிழ்ச்சியில் திளைத்த மனதில், மறுபடியும் வெறுமை வந்து குடி கொண்டது. ஒரு வேளை கனவில் கண்டது போலவே, மகன் உண்மையாகவே வந்து நின்றிருந்தால்? அவசர அவசரமாக எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
வாசலில் பால்காரன் நின்றிருந்தான்.
”என்ன வேணும்? பாக்கெட்டைப் போட்டுட்டு போக வேண்டியது தானே? எதுக்கு மணி அடிச்சே?”‘
”எக்ஸ்டிரா பாக்கெட் வேணுமான்னு கேட்கத்தான்,”.
”ஒன்னும் வாணாம் போ”
”சும்மா போனா, ’எப்பவும் மணியடிச்சி கேட்டுட்டுப்
போன்னு சொல்றீங்க? கேட்டாக் கோவிச்சிருக்கிறீங்க.
இன்னிக்கு என்ன வந்துச்சி ஒங்களுக்கு?,” முணுமுணுத்துக் கொண்டே சென்றான் பால்காரன்.
திரும்பி வந்து படுத்த போது, தூக்கம் முற்றிலுமாக விடைபெற்றுப் போயிருந்தது.
”இந்தக் குழந்தைகள் வளராமல் தன்னுடனே இருந்திருக்கக் கூடாதா?” என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. மகனை உடனே நேரில் பார்க்க வேண்டும் போலிருந்தது. என்ன தான் கணிணி காமிராவில் பார்த்தாலும், நேரில் பார்த்து ஆசையாய்த் தொட்டு அரவணைக்கும் ஆனந்தம் வருமா?
மகனுக்குத் தன் மேலுள்ள பாசத்தைக் கிண்டல் செய்யும் கணவரின் வாயை அடைப்பதற்காகவாவது, அவனிடமிருந்து இன்று போன் வர வேண்டும் என அவள் மனம் ஏங்கியது. எனவே மற்ற நாட்களில் போன் வரும் சமயங்களில் “முட்டி வலிக்குது, நீஙக் போய் எடுங்க,”. என்று அலுத்துக் கொள்பவள், அன்றுமுழுக்க ஒவ்வொரு முறை மணியடிக்கும் போதும் ஓடி ஓடிப் போய் எடுத்து ஏமாந்தாள்.
வேகமாக ஊன்றி ஊன்றி நடந்ததினால், முழங்கால் வீங்கிக் கொண்டு வலிக்கத் துவ்ங்கியது. மணி இரவு எட்டரைக்கு மேலாகி விட்டது. சாதாரணமாக பையனிடமிருந்து எட்டு மணிக்குள் போன் வந்து விடும். நேரமாக ஆக, இனி போன் வராது என்ற எண்ணத்தில் மனம் சோர்ந்தது.
”ஏங்க! மணி ஒம்பது ஆகப் போவுது. தோசை ஊத்தி வைச்சிட்டேன். சீக்கிரம் சாப்பிட வாங்க. ரொம்ப அசதியாயிருக்கு. படுத்தாப் போதும்னு இருக்கு உடம்பு”
”ஏன் கல்லை இறக்கிட்டே? ஒனக்குத் தோசை ஊத்திக்கலையா?”
”எனக்கு வேணாம். பசியில்லை”
”இராப்பட்டினி கூடாது. அதுவுமில்லாம வெறும் வயித்துல மாத்திரை போடக் கூடாது. ஒரு தோசையாவது சாப்பிடு காவேரி,”
”ஒன்னும் வேணாம். நீங்க கம்முனு சாப்பிட்டுட்டுப் போயி படுங்க. இது வல்லமையான கட்டை. ஒரு நாளைக்கு மாத்திரை போடலேன்னா, உசிரு போயிடாது.”
மணி பதினொன்றிருக்கும்.
”ஏங்க ஏங்க. போன் அடிக்குது. கொஞ்சம் ஏந்திரிச்சி போயி யாருன்னு பாருங்க.”
கணவரைத் தொட்டு எழுப்பினாள் காவேரி. ஆனால் அவரிடம் எந்த அசைவையும் காணோம்.
”அதுக்குள்ளே தூங்கிட்டீங்களா? படுக்கறதுக்குள்ளே எப்படித்தான் ஒங்களுக்குக் குறட்டை வருதோ?”
சலித்துக் கொண்டே எழுந்து சென்று ரிசீவரை எடுத்தவளின் முகம் மலர்ந்தது.
”எப்படிப்பா இருக்கே? உமா எப்படியிருக்கா? கொழந்தை நல்லாயிருக்காளா? ரொம்ப சந்தோசம்பா. காலையில கெளரி கூட போன் பண்ணி வாழ்த்து சொன்னா. இன்னிக்குக் கண்டிப்பா நீ போன் பண்ணுவேன்னு ஒங்கப்பாக்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தேன்.
எப்பப் பார்த்தாலும் வேலை வேலைன்னு சரியாச் சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்காதே. ஒரு தரம் கொழந்தையை அழைச்சிட்டு வந்து கண்ணுல காட்டிட்டுப் போ. வாரத்துக்கு ஒருவாட்டியாவது மறக்காம போன் பண்ணு. சரிப்பா. வைச்சுடு. எல்லாரையும் கேட்டதாச் சொல்லு.”
”ஏங்க ஒங்களைத்தானே. லண்டன்லேர்ந்து தம்பி போன் பண்ணி ரொம்ப…….. நேரம் பேசிக்கிட்டிருந்தான்.
காலையிலேர்ந்து கடுமையான வேலையாம். நேரமே இல்லியாம். இன்னிக்கு எப்பிடியாவது எனக்கு வாழ்த்து சொல்லணுங் கிறதுக்காகவே ஞாபகம் வைச்சிருந்து இராத்திரி ஆனாலும் பரவாயில்லன்னு போன் பண்ணினானாம். பாவங்க எம்புள்ளை. இப்பவாச்சும் ஒத்துக்கிறீங்களா, அவனுக்கு என்மேல பாசம் ஜாஸ்தின்னு”
”சரி. சரி. ஒத்துக்கறேன். மனுஷனை நிம்மதியாத் தூங்க விடு. நீயும் நிம்மதியாப் படுத்துத் தூங்கு. எங்க எழுந்திருச்சிப் போறே?”
”சாப்பிடப் போறேன்.”
”பசியே இல்லேன்னு சொன்னே?”
”அப்ப இல்லை. இப்ப ரொம்பப் பசிக்குது.”
மனைவியின் உற்சாகத்தைப் பார்த்துச் சிரிப்பு வந்தது மணிக்கு.
காலையிலிருந்து மனைவி தவித்த தவிப்பைக் கண்டு வேதனைப்பட்டவர், ’அம்மாவுக்குப் போன் பண்ணி அன்னையர் தின வாழ்த்தைச் சொல்,’ என்று பையனுடைய அலைபேசிக்குக் குறுஞ்செய்தி அனுப்பியது தாம் தான், என்று கடைசி வரை அவளிடம் சொல்லவேயில்லை.
எந்திர வாழ்க்கை ஆகிவிட்ட உலகில் பந்த பாசம் என்பது மைக்ரோ அளவில் போய்விட்டது. பெற்றோர்கள் தான் இன்னும் அதே பரிதவிப்பில் இருப்பவர்கள். இந்தக் தாயின் மனசையும் பிள்ளைகளின் குணத்தையும் காட்டிய கலையரசி கடைசியில் ஸ்கோர் செய்தது தந்தையால். குடும்ப தலைவர் அல்லவா, நல்ல கதை அதைவிட நல்ல நடை. வாழ்த்துக்கள்.