நான் அறிந்த சிலம்பு – 89 (16.09.13)
*புகார்க்காண்டம்- 09. கனாத்திறம் உரைத்த காதை*
**
*தேவந்தி கூறிய தேறுதல் உரை*
**
கண்ணகி மொழி கேட்ட
தேவந்தி கூறினாள்:
“பொன்னாலான வளையணிந்தவளே!
நீ உன் கணவனால்
வெறுக்கப்பட்டவள் அல்லள்;
நின் முற்பிறப்பில் நின் கணவனுக்காய்க்
காத்து நின்றிருக்க வேண்டிய
நோன்பு ஒன்றினைச்
செய்யத் தவறிவிட்டாய்!
அதன் காரணமாய்
இன்று அவனைப் பிரிந்திருக்கின்றாய்;
அக்குற்றம் இன்றே நீங்கி விடட்டும்;
காவிரி கடலுடன் கலக்கும்
சங்கமத் துறையில்
பூக்கள் மடலவிழ்க்கும்
நெய்தல் நிலக் கானலிடத்துச்
சோமகுண்டம் சூரியகுண்டம் என
இரு பொய்கைகள் உள்ளன.
அவற்றின் துறைகளில் மூழ்கியெழுந்து
மன்மதக்கோட்டம் சென்று காமதேவனை
வழிபடும் மகளிர்
இப்பிறவியில் தம் கணவனைப் பிரியாது
கூடி வாழ்ந்து இன்புற்று,
மறு பிறவியிலும் இன்பம் தரும் பூமியில் பிறந்து
கணவனுடன் இன்புற்று மகிழ்வர்.
எனவே நாம் இருவரும்
அங்கு ஒரு நாள் சென்று
நீராடி வருவோம்” என்றாள்.
*கண்ணகியின் மறுமொழி*
அது கேட்ட கண்ணகி,
“அத்தகைய செயல்
எமக்குப் பெருமை தருவதன்று”
எனக்கூறி மறுத்துவிட்டாள்.
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 55 – 63
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html


சிலம்போசை தொடர்ந்து கேட்டு மகிழ்ந்து வருகிறேன். மிக அருமையான பகிர்வு!!. கண்ணகியின் கூற்று, அவளது ஆழ்ந்த சிந்தனைத் திறனைப் புலப்படுத்துகிறது. தொடர்ந்து கேட்க ஆவலோடு காத்திருக்கிறேன்.
உங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி தோழி..