பட்டினத்தடிகளின் பாடல்கள் – 4ம் பகுதி
தஞ்சை வெ. கோபாலன்
திருத்தில்லை – தொடர்ச்சி…
அடியார்க்கு எளியவர் அம்பலவாணர் அடிபணிந்தால்
மடியாமல் செல்வ வரம் பெறலாம் வையம் ஏழு அளந்த
வெடியோனும் வேதனும் காணாத நித்த நிமலன் அருள்
குடிகாணும் நாங்கள் அவர் காணும் எங்கள் குலதெய்வமே. 11.
அடியார்களுக்கு மிக எளிதில் கைவசமாகக்கூடிய பொன்னம்பல வாணரின் பாதங்களைப் பணிந்து எழுந்தால் அழியாத செல்வங்களை வரமாகப் பெறலாம்; ஏழு உலகங்களையும் தன் திருவடியால் அளந்த திருமாலும், வேதங்களைத் தன் முகங்களாகக் கொண்ட பிரம்ம தேவனும், அடிமுடி காண முயன்றும் முடியாத சிவபெருமானின் திருவருளைப் பெற்ற அவன் அடியார்களாக விளங்குகின்றோம்; அந்த சிவனே எங்கள் குலதெய்வமும் ஆகும்.
உடுப்பானும், பால் அன்னம் உண்பானும், உய்வித்து ஒருவர் தம்மைக் கெடுப்பானும்
மேதென்று கேள்வி செய்வானும், கெதி அடங்கக் கொடுப்பானும், தேகி என்று
ஏற்பானும், ஏற்கக் கொடாமல் நின்று தடுப்பானும் நீ அல்லையோ
தில்லை ஆனந்தத் தாண்டவனே. 12.
பட்டும் பீதாம்பரமுமாக வேளைக்கொரு உடையை உடுப்பவனும், வேளைதோறும் பால் அன்னம் உண்பவனும், சிலரை வாழவைத்தும் சிலரது வாழ்வில் துன்பம் கொடுத்துச் சோதித்துக் கெடுப்பானும், செய்யும் கிருத்தியங்களையெல்லாம் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்பவனும், நேரிடும் கேடுகளை நீக்கி நல்லனவற்றைக் கொடுப்பானும், பிட்சாந்தேகி என்று வாயிலில் நின்று இரப்பானும், கொடு என்று கேட்பவனுக்குக் கொடுப்பவனைத் தடுப்பவனும் நீதானே ஐயா! தில்லையம்பலத்தில் ஆனந்தத் தாண்டவமிடும் தாண்டவனே, நடராஜப் பெருமானே!
வித்தாரம் பேசினும், சோங்கு ஏறினும், கம்ப மீதிருந்து
தத்தா வென்று ஓதிப் பவுரி கொண்டு ஆடினும், தம்முன் தம்பி
ஒத்தாசை பேசினும் ஆவதுண்டோ தில்லை உண்ணிறைந்த
கத்தாவின் சொற்படி அல்லாது வேறில்லை கன்மங்களே. 13.
வாசாலகமாக வக்கணையாகப் பேசினாலும், கடலில் மரக்கலத்தில் ஏறிப் பயணித்தாலும், கம்பத்தில் ஏறி கழைக்கூத்து ஆடினாலும், இளையவன் ஓடிவந்து தான் இருக்க பயமேன் என்று துணை நலம் பேசினாலும், அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் அந்த தில்லைத் தலமாடும் தாண்டவன் எண்ணப்படியன்று வேறெதுவும் நடைபெறுமோ?
பிறவாதிருக்க வரம் பெறல் வேண்டும், பிறந்து விட்டால்
இறவாதிருக்க மருந்து உண்டு காண், இது எப்படியோ?
அறமார் புகழ் தில்லை அம்பலவாணர் அடிக்கமலம்
மறவாது இரு மனமே! அது காண் நன்மருந்து உனக்கே! 14.
ஓ மனமே! உன் பிணிக்கு ஏற்ற நல்ல மருந்து எது தெரியுமா? எத்தனை பிறவிகள் மீண்டும் மீண்டும் பிறந்து வருந்துவதைத் தவிர்த்து இனி பிறவாத வரம் வேண்டுமென்றால், அப்படிப் பிறந்து விட்டால் புகழோடு இப்புவியில் வாழவேண்டுமென்றால் அதற்கொரு மருந்து இருக்கிறது. அது எப்படி முடியும் என்று கேட்கிறாயா? ஒரு நல்ல மருந்து இருக்கிறது, அது, அறமும், புகழும் மண்டிக் கிடக்கும் தில்லை நடராஜப் பெருமானின் சிற்சபை இருக்கிறதே அங்கு ஆனந்த நடனமிடுபவரின் மலரடியாம் ‘குஞ்சிதபாதத்தை’ மட்டுமே கதியெனக் கொண்டு சரணமடைந்தால் முடியும். அதுதான் உனக்கு நல் மருந்து.
தவியாதிரு நெஞ்சமே, தில்லை மேவிய சங்கரனைப்,
புவி ஆர்ந்திருக்கின்ற ஞானாகரனைப், புராந்தகனை,
அவியா விளக்கைப், பொன்னம்பலத்து ஆடியை ஐந்தெழுத்தால்
செவியால் நீ செவித்தால் பிறவா முத்தி சித்திக்குமே. 15.
ஓ மனமே! என்ன செய்வேன், எப்படிச் செய்வேன் என்றெல்லாம் தவித்து அலையாதே. தில்லையில் குடிகொண்ட சிவபெருமானை, இந்தப் புவியெல்லாம் நிரம்பியிருக்கின்ற ஞான சொரூபமானவனை, திரிபுராந்தகனை, அனவரதமும் அணையாமல் ஒளிவீசும் பொற்சுடரை, பொன்னம்பலம் மேவி ஆனந்த நடனம் புரிகின்றவனை, பஞ்சாட்சர மந்திரத்தை வாய்விட்டு உச்சரிக்காமல் மனதுக்குள் உன் உட்செவிக்கு மட்டும் கேட்கும்படியாக சதா சொல்லி வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கும், முக்தியும் சித்திக்கும் என்பதை உணர்.
நாலின் மறைப் பொருள் அம்பலவாணரை நம்பியவர்
பால் இல்லொருதரம் செவிக்கொணாதிருப் பார்க் கருங்கல்
மேல் எடுத்தவர் கைவிலங்கைத் தைப்பர் மீண்டுமொரு
காலினில் நிறுத்துவர் கிட்டியும் தாம் வந்து கட்டுவரே. 16.
சதுர் வேதங்களாம் ரிக், யஜுர், சாம, அதர்வண ஆகியவற்றின் உட்பொருளாக விளங்குகின்ற சிவபெருமானை மனத்திடை கொண்டு, அவன் ஞானசபையின் முன்னே சென்று ஒரு முறையாயினும் வழிபடாமல், மற்றைய விவகாரங்களில் ஈடுபட்டு வீண் பொழுது போக்கி வாழ்பவனை அந்த காலனுடைய தூதர்கள் வந்து அவர்கள் தலைமீது பெரும் பாறாங்கல்லை வைத்து அழுந்தும்படி செய்து, அது போதாதற்கு கைகளில் விலங்கையும் மாட்டிப் பூட்டி விடுவார்கள். அது மட்டுமா? ஒற்றைக் காலில் நிற்கும்படிச் செய்து விடுவர். எமனுடைய பாசக் கயிறு அவர்களை இறுகப் பிணித்துவிடும்.
ஆற்றோடு தும்பை அணிந்து ஆடும் அம்பலவாணர் தமைப்
போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில்
சோற்று ஆவியற்றுச் சுகமற்றுச் சுற்றத் துணியும் அற்று
ஏற்றாலும் பிச்சை கிடையாமல் ஏக்கற் றிருப்பர்களே. 17.
தலையில் தனது ஜடாமுடியில் கங்கையோடு தும்பைப் பூவையும் அணிந்து, திரு நடனம் புரியும் அம்பலவாணனைத் துதித்துப் போற்றாதவர்களுக்கு இந்த பூவுலகில் சில அடையாளங்கள் உண்டு; அப்படி என்ன அடையாளங்கள்? சோறு மட்டுமல்ல, சோற்றின் மணம் கூட எட்டாதபடியும், சுகம் என்பது என்னவென்றே தெரியாதபடியும், இடையில் அணியத் துணிகூட இல்லாமலும், பிச்சை எடுக்கலாம் என்று சென்றால் கூட பிச்சை கிடைக்காத படியும் ஏங்கித் தவிப்பார்கள்.
அத்தனை முப்பத்து முக்கோடி தேவர்க்கு அதிபதியை
வித்தனை அம்மை சிவகாமசுந்தரி நேசனை எம்
சுத்தனைப் பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காணக் கண்கள்
எத்தனை கோடி யுகமோ தவம் செய்திருக்கின்றனவே. 18.
உயிர்களுக்கெல்லாம் தந்தையானவனை, முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் முதன்மையானவனை, என்றும் நிலையாய் இருப்பவனை, அன்னை சிவகாமசுந்தரியைத் திருமணம் புரிந்தவனை, நமக்கெல்லாம் இறைவனை சிதம்பரம் சிற்சபையில் நடம் புரியும் அண்ணலைக் காண்பதற்கு நம் கண்கள் எத்தனை கோடி யுகங்கள் தவம் செய்தனவோ அறியேனே.
(திருத்தில்லை விருத்தம் நிறைவு.)