என் உயிர் நின்னதன்றோ…

2

புவனா கோவிந்த்

 

“இந்த மனுசன எங்க இன்னுங்காணோம்… வெய்ய நேரத்துல செவனேன்னு ஊட்டுல இருக்கறத உட்டுப்போட்டுக் களத்து மேட்டுக்கு போகலைனு யாரு அழுதா? ” என புலம்பியபடி வாசலில் நின்றிருந்தார் ராஜம்மாள் பாட்டி

கண் பார்வை மங்கி விட்டபடியால் நெற்றியில் கை வைத்து வெய்யிலை மறைத்து தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்த ராஜம்மாள் பாட்டியை நெருங்கிய அவள் கணவர் ராமசாமி தாத்தா “என்னத்துக்கு இப்படி காயறவ… முன்னியே தொட்டு  பொட்டு வெச்சுக்கற நெறம்” என கேலியாய்ச் சிரித்தார்

“ஆமா… இவிக சுண்ணாம்பு வெளுப்பு நாங்கதேன் கறுப்பாக்கும்… இந்த வெய்ய நேரத்துல எந்த மெயில புடிக்க போனிய?”

“ஆம்பள ஆயிரம் எடம் போவான்… எல்லாத்தையும் பொம்பளகிட்ட ஒப்பிக்கோணுமாக்கும்”.

“போவீக போவீக… போக்கத்தவ வாச்சுருந்தா போவீக” என்ற  பாட்டியின்  குரலில்  ஸ்ருதி கூடி இருந்தது .

“ஏங்கெழவி ஊர கூட்டுறவ…?”

“ஹும்க்கும்… நான் கெழவி… இவரு இன்னும் பதினாறு வயசு கொமரன்” என முகவாயை தோளில் இடித்தார் பாட்டி

“இல்லாம பொறவு… ஏதோ ஏமாந்து போய் உன்ரகிட்ட சிக்கிட்டனாக்கும்”

“பேசமாட்டீக….? என்ர அப்பங்கிட்ட ஒத்த காலுல நின்னு கட்டுனா உன்ர பொண்ணத்தான் கட்டுவேன்னு சொல்லிக் கட்டுனது மறந்து போச்சாக்கும் கெழவனுக்கு”

“என்ன செய்ய? வயசுக் கோளாறு… மேலத்தெரு மோகனசுந்தரி எம்புட்டு ஆசையா பேசுவா… என்ன யோசிச்சு என்ன இப்ப?” என்றார் பொய்யான சோகத்துடன்.

“வாய்ல வந்துரும் மாமா… மோகனசுந்தரியாவது சொப்பனசுந்தரியாவது…” என்ற பாட்டியின் கோபத்தை பார்த்த தாத்தா, பொக்கை வாய் மலர சத்தமாய் சிரித்தார்.

இந்த காட்சியை பார்த்த அவர்களின் பேரனின் புது மனைவி நித்யா “என்ன அத்த இது… தாத்தாவும் பாட்டியும் இப்படி சண்டை போட்டுக்கறாங்க” என்றாள் தன் மாமியார்  சாவித்ரியிடம் .இந்த கேள்வியை எதிர்பார்த்தவர் போல் சிரித்த சாவித்திரி “நீ இப்பதானே புதுசு… அதான் இப்படி கேக்குற… ஆனா இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு கொஞ்சிக்கறத… இந்த வீட்டுக்கு கலியாணமாகி வந்த இத்தன வருசத்துல நானும் பாத்துட்டேன்… இவிங்க இப்படித்தேன்” என்றார் .மதிய உணவுக்கு தாத்தாவை சாப்பிட அழைத்தாள் நித்யா

“கெழவி சாப்ட்டுச்சா?” என்றார் தாத்தா

“நீங்க வாங்க தாத்தா… அப்புறம் பாட்டிய கூப்பிடறேன்”

“இல்ல கண்ணு… நேரத்துக்கு சோறுங்கலைனா பசி தாங்க மாட்டா… போய் மொதல்ல அவளுக்குப் போடு” என்றார்

பாட்டியை சாப்பிட அழைக்க, பாட்டியும் அதே போல் தாத்தாவை முதலில் சாப்பிடச் செய்யுமாறு கூற, நான் சொன்னேன் இல்லையா என்பது போல் அர்த்த புன்னகை பூத்தார் சாவித்திரி.ஒருவழியாய் இருவரும் சேர்ந்தே சாப்பிட்டனர்.உண்ட மயக்கத்தில் ஆளுக்கொரு திண்ணையின் பாயில் சாய்ந்தனர். வேப்பமரக் காற்றும், தூரத்தில் கழனி வேலை செய்யும் ஆட்களின் குரலும், தாலாட்டு போல் இசைக்க, உறக்கம் கண்களைத் தழுவியது

ஒரு வாரம் ஒரு நிமிடமாய் ஓடியது. உச்சி வெய்யில் மண்டையை பிளக்க, திண்ணையில் அமர்ந்து  தன் கண் கண்ணாடியுடன் போராடியபடி செய்தித்தாளில் ஆழ்ந்திருந்தார் தாத்தா.

“கலெக்டர் பரிச்சயாக்கும்… அத்தன பாடுபட்டு அந்த பேப்பரை படிக்காட்டாத்தேன் என்ன?” என்றார் பாட்டி

“ஏன்? உன்ரமாறியே நாட்டுநடப்பு தெரியாம இருக்கோணுமாக்கும்”

“நாட்டு நடப்பு தெரிஞ்சு இப்ப எந்த பட்டணத்துக்கு ராஜாவாக போறீக ?”

“ராஜாவா போயிருக்க வேண்டியவந்தேன்… உன்ன கட்டிக்கிட்டு இப்படி காட்டுலயும்  மேட்டுலயும் முடிஞ்சு போச்சு பொழப்பு”

“ஏன்? நான் கைய புடிச்சு தடுத்தனாக்கும்?”

“அததுக்கு ஒரு குடுப்புன வேணும் புள்ள… எங்கப்பன் சொன்னாப்ல அந்த சித்தூர்காரிய கட்டி இருந்தா ராஜாவாகி இருப்பனோ என்னமோ” என வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தார் தாத்தா.

“ஹும்க்கும்… அவளக் கட்டியிருந்தா பொறவு தெரிஞ்சுருக்கும் சங்கதி… கண்ண கெடுத்துகாதீகன்னு சொன்னா பேச்ச பாரு பேச்ச…” என முறைத்தார் பாட்டி.

அதற்குள் யாரோ வரும் அரவம் கேட்க “ஆரது…?” என கண்ணைச் சுருக்கிப் பாட்டி பார்த்தாள்.

“அம்மோய்… பெத்த மவள ஆருன்னு கேக்கறியே” என்றபடி அருகில் வந்து அமர்ந்தார் பாட்டியின் மகள் சரோஜா.

அருகில் வந்ததும் மகளை கண்டுகொண்டவர் “அடியாத்தி, வா கண்ணு…வா வா… கண்ணு சுத்தமா தெரியறதில்ல அம்மணி” என்றார் அங்கலாய்ப்பாய் .

“அதான் அண்ணன் ஆபரேஷன் பண்ணிக்கோன்னு சொல்லுதில்ல” என சரோஜா கூற “இம்புட்டு வயசுக்கு ஆஸ்பத்திரி பக்கம் போகாமையே இருந்தாச்சு… இனி காலம் போன கடைசீல  என்னத்துக்கு அம்மணி மருந்து மாத்திரைனு” .

“அது சரி…” எனச் சிரித்தாள் மகள்.

“ஏனம்மணி… கொஞ்ச நேரமே வந்துருக்கோணும்… இல்லாட்டி போனா கொஞ்ச வெய்ய தாழ வரோணும்… எதுக்கு கண்ணு இப்படி உச்சி வெயில வேத்து வடிய வர்றவ?” என தன் முந்தானையில் மகளின் நெற்றி வியர்வையைத் துடைத்தார் பாட்டி .

“இப்படி நீ தொடைக்கற சொகத்துக்கு தாம்மா” என வாய் வரை வந்த வார்த்தைகளை சொல்லாமல் விழுங்கினார் சரோஜா .

தான் பேரன் பேத்தி எடுத்துவிட்ட  இந்த அறுபது வயதிலும் கூட தன்னைச் சிறு குழந்தை போல் நடத்த தன் அன்னையால் மட்டுமே முடியும் எனத் தோன்றியது எத்தனை வயது தான் ஆனால் என்ன? அன்னைக்கு பிள்ளை தான்.  நம் பெற்றோர் உள்ள வரை மட்டும் தானே நமக்கு இந்த உணர்வு சாத்தியம் எனத் தோன்றியது, அதன் பின்….. என அதற்கு மேல் நினைக்க இயலாமல் கண்ணில் நீர் நிறைந்தது அதை மறைக்க தோட்டத்தை ரசிப்பவள் போல் பார்வையை வேறுபுறம் செலுத்தினார் சரோஜா .

பெற்றோரை தன்னுடன் அழைத்துச் சென்று சில நாட்களேனும் வைத்து கொள்ளும் ஆசையில் “ஏம்மா? நீயும் அப்பாவும் ஒரு பத்து நா எங்கோட வந்து இருங்களேன்… எப்பக் கேட்டாலும் இதோ வரேன் அதோ வரேங்கற,. அண்ணன் தான் உனக்கு புள்ளயா? நான் இல்லையா?” எனச் சண்டை போடுபவள் போல் சரோஜா கேட்க,

“உங்கம்மாள வேணும்னா கூட்டிட்டு போ அம்மணி… நானுங்கொஞ்சம் அவ தொண தொணப்பில்லாம  நிம்மதியா இருப்பேன்” எனத் தாத்தா கூற, பாட்டி அவரை முறைத்தார்.

“அப்பனுக்கு தான் இந்த தோட்டம் காட்ட உட்டுட்டு வர மாட்டாக… அப்படின்னா நீ மட்டுமாச்சும் வாயேம்மா…” என மகள் கேட்க,

“இல்லம்மணி… அது… வெய்ய காலம் முடியட்டுங்கண்ணு… பொறவு வாறன்”

“போம்மா நீ… இப்படி சொல்லிச் சொல்லியே பல காலம் ஓடிப் போச்சு” எனவும் “அடடே… சரோவா? ஏன் வந்தவ வெளியவே உக்காந்துட்டவ… உள்ள வா, மோர் குடிப்பியாமா” என தன் நாத்தனாரை அழைத்தார் சாவித்திரி “அப்படியே பேசிட்டே இருந்துட்டேன் அண்ணி… இதோ வரேன்” என உள்ளே சென்றார் சரோஜா.உள்ளே சென்றதும் “பாத்தீங்களா அண்ணி… அப்பன உட்டுபோட்டு ஒரு பத்து நா வந்திருக்க மாட்டேங்குது அம்மா” என்றார் சரோஜா.

“நீ வேற சரோ… அத்தைய கொஞ்ச நேரம் காணோமுன்னா போதும், மாமாவும் உசுர வாங்கிருவாக. அன்னைக்கி உங்க சின்னமாமன் சம்சாரம் போயிருச்சுன்னு அத்த உங்க அண்ணங்கோட போயிட்டாக… வர்ற வரைக்கும் மெயின் ரோடுலையே நின்னுட்டு இருந்தாக மாமா.ஆனா தெனமும் நாலு சண்டைக்கு கொறயில்ல” என சிரித்தார்.

“ரெண்டு பேருக்கும் எம்பதுக்கு மேல வயசாய்டுச்சு அண்ணி… ஒருத்தர் போய் ஒருத்தர் இருந்தா என்ன செய்வாகளோனு நெனச்சாலே பயமா இருக்கு” என்றார் சரோஜா நிஜமான கவலையுடன். அதையே தானும் பல முறை நினைத்தது தான் என மௌனமானார் சாவித்திரி. ஐப்பசி முடிந்து கார்த்திகை தொடங்க, வெயில் குறைந்து குளிரத் தொடங்கியது.

“முன்னயெல்லாம் தை மாசம் தரையெல்லாம் நடுங்கும்னு பழமொழி சொல்லுவாக. இப்ப கார்த்திகைலையே மண்டை குளிராவில்ல இருக்கு… உங்க தாத்தன் கயித்து கட்டில திண்ணைல இருந்து உள்ள எடுத்துப் போடு ரமேசு” என்றார் பாட்டி, பேரனிடம். “எனக்கொண்ணும் குளிரல… நான் இங்கயே இருக்கேன்” என்றார் தாத்தா வெளியில் இருந்தபடியே.”மேலுக்கு வந்தா தெரியுமப்பறம்” என்றார் பாட்டி  அக்கறையில்  விளைந்த  கோபத்துடன். “எல்லாம் எங்களுக்கு தெரியும்…நீ சும்மா இரு” என அடக்கினார் தாத்தா.

“மனுசனுக்கு சொன்னா வெளங்குதா? பட்டு எந்திரிச்சா புத்தி வரும்” என முணுமுணுத்தார் பாட்டி.

“நேத்தைக்கு சமஞ்சு இன்னைக்கி வந்தவளாட்டம், என்ன அங்க முணுமுணுக்கறவ? சத்தமாச் சொல்லு புள்ள” என தாத்தா கேட்க, பேரன் ரமேசும் அவன் மனைவி நித்யாவும் சிரித்தனர். பாட்டிக்கு ஒரே வெட்கமாய் போய் விட “கெழவனுக்கு எப்ப என்ன பேசுறதுன்னே இல்ல… வெக்கம் கேட்ட மனுஷன்” என்றார்.

அன்றிரவு பாட்டிக்கு ஏனோ நல்ல குளிர் காய்ச்சல் வந்து விட அனத்தி கொண்டே இருந்தார். காலை நேரம் சற்று காய்ச்சல் மட்டுப்பட்ட போதும் முகத்தில் இருந்த சோர்வு விலகவில்லை.டாக்டரிடம் செல்லலாம் என மகன் அழைக்க “அட போடா… அதெல்லாம் கஷாயம் குடிச்சா ஓடிப் போயிரும்” என மருமகளிடம் பக்குவம் சொல்லி கஷாயம் வாங்கிக் குடித்தார். அன்று முழுதும் தாத்தா வீட்டை விட்டுக் கொஞ்சமும் நகரவில்லை.அடிக்கடி மனைவியை வந்து பார்ப்பதும், ஏதேனும் கேலி செய்து சிரிக்கச் செய்வதுமாய் நேரத்தைக் கடத்தினார்.

மற்றவர் எல்லாம் உறங்கச் சென்று விட, தாத்தா பாட்டியின் அருகில் அமர்ந்திருந்தார். “எனக்கு எதுனா ஆகிப்போச்சுனா என்ன செய்வீக?” என பாட்டி தயக்கமாய்க் கேட்க, ஒரு கணம்  மௌனமாய் இருந்தவர். “வேறென்ன புள்ள… மோகனசுந்தரி இன்னும் கலியாணம் கட்டாம தான் இருக்காளாமா… போய் பாக்கறது தான்” என்றார் சிரிப்போடு.வேண்டுமென்றே பேச்சை மாற்றுகிறார் என்பதை உணர்ந்த பாட்டியால்  அவரோடு சேர்ந்து வழக்கம் போல் நகைக்க இயலவில்லை. மாறாக எதுவும் பேசாமல் கணவனை பார்த்தார்.சற்று நேரத்தில் உறங்கியும் போனார். தாத்தா அங்கேயே அமர்ந்து வெகு நேரம் மனைவியை கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தார்.

மறுநாள் காலை….

“பாட்டி… எழுந்திரிங்க… காபித்தண்ணி கொண்டு வந்திருக்கேன்” என பாட்டியை எழுப்பினாள் நித்யா.

பாட்டி கண் திறக்காமல் போக, சற்று பயந்தவளாய் விரைந்து சென்று தன் கணவனை அழைத்து வந்தாள். வந்து பார்த்த ரமேஷ், சில்லிட்டிருந்த பாட்டியின் உடலை  தொட்டு  அதிர்ந்தவனாய் “பாட்டி…. ” என சத்தமாய் அழுதான். சற்று நேரத்தில் அழுகை சத்தம் கேட்டு  அக்கம் பக்கம் கூடி விட, தாத்தாவிடம் எப்படி இந்த விசயத்தை சொல்வது என்பதே இப்போது எல்லோரின் பெரிய கவலை ஆனது. மனதைத் தேற்றிக் கொண்ட பாட்டியின் மகன், தந்தையின் கட்டில் அருகில் சென்று நின்றார்.

புன்னகை தேங்கிய முகத்துடன் உறங்கி கொண்டிருந்த தந்தையை கண்டதும் அழுகை பீறிட “அப்பா…” என்றார் அழுகையூடே. எப்போதும் ஆழ்ந்து உறங்கும் பழக்கம் உள்ளவர் தன் தந்தை என்பதால் “அப்பா…” என்றார் மீண்டும் சற்று குரலை உயர்த்தி. அதற்கும் பதில் இல்லாமல் போக தந்தையின் கையை தொட்டவர் அதிர்ச்சியுடன் கையை இழுத்து கொண்டார். தான் நினைத்தது தவறு என நினைத்தவர் போல் மீண்டும் தந்தையின் மூக்கின் அருகில் கை வைத்து பார்த்தவர், முகம் வெளிற நின்றார்.

அருகில் வந்த அவரின் மனைவி “என்னங்க ஆச்சு?” எனக் கேட்க, “சாவித்திரி… அப்பா…அப்பா… அப்பாவும்….” என அதற்கு மேல் கூற இயலாமல் “அப்பா….” எனத் தன் தந்தையின் உடலை கட்டிக் கொண்டு கதறினார். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாய்த் தாக்க நம்ப இயலாமல் ஸ்தம்பித்தது உறவுகள். சாவித்ரிக்கு தன் மாமியார் ராஜம்மாள், போன மாதம்  வீட்டுக்கு வந்திருந்த உறவு பெண்மணி  ஒருவரிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. “சுமங்கலியாப் போகோணுமின்னு நீ சொல்லுறவ… எனக்கு அந்த ஆசையில்ல ஆத்தா… நானில்லாம இந்த மனுஷன் என்ன பாடு படுவாரோனு ஆன்ம சாந்தி இல்லாம சுத்துறத விட தனியா இருக்கற வேதனைய நான் அனுபவிச்சுக்கறேன்… எப்படியும் அதுக்கு பொறவு  நான் வெகு நாள் இருக்க மாட்டேன்” என்றார் பாட்டி அன்று.

அவர்களின் உண்மையான அன்புக்குப் பரிசாய் கடவுள் இருவரையும் ஒன்றாய் அழைத்துக் கொண்டார் போலும் என நினைத்தார் சாவித்திரி.

“பாட்டிக்காச்சும்  அப்பப்ப மேலுக்கு முடியாமப் போகும்… தாத்தா ஒரு நோக்காடும் இல்லாம தெம்பா இருந்த மனுஷனாச்சே… எம்புட்டு இணக்கம் இருந்தா ஒரே ராவுல தூக்கத்துலயே உசுரு போகும் ரெண்டு பேருக்கும்… எத்தன பேருக்கு கெடைக்கும் இந்த பாக்கியம்…” என ஊரே பேசிப்பேசி மாய்ந்தது.

அன்றில் பறவைகளாய் ஒரு கணமும் பிரிய மனமற்ற அந்த அன்பு உள்ளங்கள் ஒன்றாய் மேலுலகில் இணைந்தன.

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “என் உயிர் நின்னதன்றோ…

  1. அன்பு புவன்,

    கதை தெரிந்திருந்தாலும் நடை புதிது. அழகான கொங்கு தமிழ். இந்தப் பாட்டி தாத்தா மாதிரி எல்லோரும் போக முடிந்தால் நன்றாகத்தான் இருக்கும். மனம் நிறைந்த வாழ்த்துகள். வல்லமையிலும் வென்ற அப்பாவிக்கு:)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.