டாக்டரும் பீ.பியும்
மாதவ. பூவராக மூர்த்தி
உலகத்தில் தனியாக இருக்கும் எதுவும் அவ்வளவு சிறப்பு பெற்றதாக இருக்காது. ஒரு துணை வேண்டும் அப்போதுதான் அதன் சிறப்பு இன்னும் அதிகமாகும். உதாரணம் பாலும் பழமும், பாயும் தலைகாணியும், கீத்தும் கழியும், வெற்றிலையும் பாக்கும். ஆணும் பெண்ணும். இப்படித்தான் நானும் பீ பியும். முதலில் அப்படித்தான் தலைப்பிடுவதாக இருந்தேன். அதன் பிறகு நான் என்னும் அகங்காரம் வேண்டாம் என்று தோன்றியது. போனமுறை “அப்பரும் நானும்” என்று ஒரு கட்டுரை எழுதினேன்.
மறுபடியும்” நான்” “தான்” இதெல்லாம் எதற்கு என்று எனக்கே தெரியாமல் என்னுள் இருந்த பீ.பி யை கண்டுபிடித்து சொன்ன டாக்டரை அதனுடன் சேர்த்து இந்த தலைப்பை உருவாக்கினேன். உங்களுக்கு B.P இருக்கிறதா? அதற்கான மாத்திரை எல்லாம் எடுக்கிறீர்களா? இல்லையென்றால் உடனே போய் செக் பண்ணி மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள். செக் எல்லாம் பண்ணியாயிற்று நார்மல் என்றால் சந்தோஷம்.
சிலபேரிடம் யதேட்சையாக உங்களுக்கு பீ.பி இருக்கிறதா என்று கேட்டால் அவர் இரத்த அழுத்தம் மேலும் “அதிகமாகி இருந்தா என்ன பண்ணப் போறீங்க ? இல்லேன்னா என்னப் பண்ணப் போறீங்க” என்று நம்மிடம் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து விடுவார். ஆசாமிக்கு அது இருக்கிறது என்பது அவர் சொல்லாமலேயே நமக்குப் புரிந்து விடும்.
அந்த காலத்தில் எல்லாம் விரிவாக சொன்ன காலம். என் பெரிய மாமாவுக்கு (பீ.பி என்று தமிழில் அடிப்பது கஷ்டமாக இருப்பதால் அதை “அது” என்று வைத்துக் கொள்வோம்.) அது இருந்தது. அவர் எல்லோரிடமும் அதைப் பெருமையாக சொல்லிக் கொண்டிருப்பார். எனக்கு இரத்தக் கொதிப்பு இருக்கு டாக்டர் கிட்ட காட்டி மருந்து சாப்பிட்டுகிட்டு இருக்கேன் என்பார். சில சமயம் அதை பிளட் பிரஷ்ர் என்பார் பலசமயம் பிளட் பிளஷர் என்பார்.
இந்த கட்டுரை நீங்கள் முழுவதுமாக ரஸிக்க வேண்டுமென்றால் என்னைப் பற்றியும் என் தைரியத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் எனக்கும் ஆஸ்பத்திருக்கும் வியாதிக்கும் காத தூரம். நான் பிறந்ததும் கிராமத்தில் பாட்டி வீட்டில்தான். அதன் பிறகு மாந்தம், கணை பெரளி வாயு ஜலதோஷம் ஜுரம் எல்லாவற்றிற்கும் கை வைத்யம்தான். ஜுரத்துக்கு கஷாயம், இருமலுக்கு சித்தரத்தை, மாந்தத்துக்கு வேப்பெண்ணெய், அஜீரணத்துக்கு ஓமவாட்டர், தலைவலிக்கு சுக்கு பட்டைதான். மஞ்சகாமாலைக்கு அஞ்சு ஊசி மந்திரிப்பு சுளுக்குக்கும் தேள்கடிக்கும் அப்பாவே மந்திரிப்பார்.
இப்படி நாளொரு வியாதியும் பொழுதொரு வைத்யமாய் வளர்ந்தேன். பள்ளி கல்லூரி காலத்தில் எங்கள் ஊர் மாயவரம் ராம்மூர்த்தி டாக்டர்தான் வைத்யர். அவர் என் சகல வியாதிக்கும் பத்து ரூபாயிக்கு மிகாமல் மருந்து எழுதி கொடுத்து சரி பண்ணிவிடுவார்.
ஆஸ்பத்திரி பக்கமே போகாமல் தப்பித்து வந்தேன். வேலையும் கிடைத்தது. கல்யாணமும் நடந்தது. ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய கட்டாயம் சிசேரியன் பண்ணி பிறந்த இரண்டு குழந்தைகளைப் பார்க்க அப்பாவாக (அப்பாவியாகப்) போய் வந்தேன்.
பெட்டில் படுத்திருக்கும் வியாதியஸ்தர்களை நண்பர்களை பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போவதை தவிர்த்து முக்கியமான கட்டங்களில் மட்டும் போனேன்.
இன்ச்ஜெக்ஷன் கூட ரொம்ப கம்மிதான். போடுவதற்கு முன்பே கண்ணை மூடிக்கொண்டு முகம் அஷ்ட கோணலாக்கி (சாதாரணமாகவே முகம் சப்தகோணல்) பயந்துகொண்டு போட்டு பஞ்சை பதினைந்து நிமிடம் போட்ட இடத்தில் வைத்துக் கொண்டு சோகமாக இருப்பேன்.
சென்னையில் சீனிவாசன் டாக்டரும் நல்லவர். என் டி.வி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர் அன்போடு கவனித்து என் உபாதைகளுக்கு மாத்திரை சிரப்போடு நிறுத்திக் கொள்வார். சில சமயம் வியாதியின் தீவிரத்தைக் கருதி என்னிடம் நிலமை விளக்கி ஊசி போட வேண்டிய கட்டாயத்தில் தான் இருப்பதாகவும் என் ஒத்துழைப்பு அவசியம் என்றும் வேண்டுகோள் விடுப்பார். நானும் அவருக்காக ஒத்துக்கொண்டு அந்த அவஸ்தைக்கு ஆளாவேன். நல்ல உயரம் பருமன் அவர் உள்ளே போய் அந்த ஊசியை கையில் பிடித்தவுடன் என் லப்-டப் ஜாஸ்தியாகிவிடும். அந்த சில நிமிடங்கள் நான் நானாக இருக்க மாட்டேன். அவர் போட்ட ஊசி மருந்து போட்ட இடத்திலேயே அசையாமல் இருப்பது போல் எனக்கு பிரமை.
நான் நாற்பது வயது வந்தவுடன் வாக்கிங் போக ஆரம்பித்தேன். ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் ஆஸ்பத்திருக்கு நான் போக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டேன். தொடர்ந்து வயிற்று வலி போக்கு அடி வயற்றில் வலி. இரண்டு நாள் சீனிவாச டாக்டர் மருந்து கொடுத்துப் பார்த்தார். இடது தொடையில் வீக்கம்போல் இருந்து வலித்தது. நான் நரிகட்டியிருக்கும் என்று நினைத்தேன். எதற்கு இருக்கட்டும் என்று அவரிடம் சொல்லி வைத்தேன். வைத்யரிடமும் வக்கீலிடமும் உண்மை சொல்ல வேண்டும் அல்லவா?
அவர் யோசனையில் ஆழ்ந்தார். தலையை இந்த பக்கமும் அந்த பக்கமும் ஆட்டினார். உள்ள வந்து படுங்க என்றார். இருமச்சொன்னார். மர்மதேசத்தில் டார்ச் அடிச்சு சோதனை செய்தார்.. வாங்க என்று கையலம்பினார். உங்களுக்கு ஹிரண்யா. ஆபரேஷன் பண்ண வேண்டும் என்றார்.
இடியோசை கேட்ட நாகம்போல் என்று ஒரு பிரயோகம் உண்டல்லவா அதை இங்கே உபயோகப்படுத்தத் தோன்றுகிறது. என் மனைவி கூட நின்றாள். பயத்தில் என் முகம் வெளிறிவிட்டது. தொண்டை வறண்டது. குரல் கம்ம ஸார் இதுக்கு என்ன மருந்து என்றேன். மருந்து கிடையாது ஆபரேஷன் தான் என்றார்.
அடுத்த நாள் அவரிடம் போனபோது பிரஷர் செக் பண்ணினார். பயத்தில் அது தாறுமாறாக எகிறியது. சீனிவாச டாக்டர்.பி பி சோதனை மெஷினை அடிக்கடி பம்ப் செய்தார். என் கையை சுற்றியிருந்த துணி கையை நெருக்கியது. இரண்டு வேளை செக் செய்து உங்களுக்கு பி.பி இருக்கு ஆபரேஷனுக்கு முன் ஹார்ட் ஸ்பெஷ்லிஸ்டைப் பார்த்து விடுங்கள் என்று ஒரு டாக்டரின் முகவரியும் தந்தார். அவரிடம் போனிலும் சொல்ல டாக்டர் அர்த்த நாரி என்னை அவர் பொறுப்பில் எடுத்துக் கொண்டார்.
முதல் நாள் அனுபவம் மறக்க முடியாது. நல்ல நாள் பார்த்து ஒருநாள் பிளாட் பிள்ளையாருக்கு அஞ்சு ரூபாயும், வெங்கடாஜலபதிக்கு ஒரு மஞ்சள் துணியில் ஐந்து ரூபாய் காசை மீசல் கட்டிவைத்துவிட்டு சகுனம் பார்த்து புறப்பட்டோம்.
நிறைய பேர் கையில் எக்ஸ்ரே முகத்தில் கவலையுமாக இருந்தார்கள். ஒரு பக்கம் மாவு மிஷின் அரைக்கறமாதிரி சத்தத்தில் ஒரு பலகையில் ஒருவர் நின்ற இடத்திலேயே நடந்து கொண்டிருந்த்தார். எனக்கு முன் ஒரு பத்து பேர் இருந்தார்கள். இன்னும் இரண்டு பேர் சந்தோஷமாக இருந்தார்கள். விஜாரித்த்தில் அவர்கள் எல்.ஐ.சி பாலிசி வாங்கியவர்களுக்கு டாக்டர் சர்டிபிகேட் வாங்க வந்தவர்கள் என்று தெரிந்தது.
ஒரு பெரியவர் தன்பக்கத்தில் இருந்தவரிடம் எனக்கு மூணு இடத்திலே பிளாக்.98 ,90 ,95% என்று ஏதோ பிளஸ் டூ பையன் வாங்கின மார்க் போல சொல்லிக்கொண்டிருந்தார்.
என் முறை வந்த பொழுது நான் பயத்தோடு அவர் முன் நின்றேன் பி பி பார்த்தார். திரும்பச்சொன்னார். மறுபடியும் அவர் பக்கம் திரும்பசொல்லி ஒரு எக்ஸ்ரேயும் ஈ.சி.ஜியும் எடுத்துடுங்க என்றார். அடுத்த ரூமில் இருந்த சுமதி என்னை இருட்டறையில் வைத்து எக்ஸ்ரே எடுத்து, உயரமான டேபிளில் படுக்க வைத்து வாட்சு மோதிரமெல்லாம் பறித்துக் கொண்டு உடல் முழுவதும் ஒரு பிசினைத் தடவி அதில் ரப்பர் குமிழியை ஒட்டி மிஷினுடன் இணைத்து ஒரு பேப்பரை உருவி அட்டையில் ஒட்டி என் கையில் திணித்தாள்.
அதற்குள் இரண்டு பேர் டாக்டரைப் பார்த்துவிட்டு ஈ.சி.ஜிக்கு வரிசையில் நின்றார்கள். டாக்டர் என்னை பார்த்து அது பற்றியும் அதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் விரிவாக என்னிடம் கூறி உணவுப் பழக்கம், வாழ்க்கை முறைகளை மாற்றி கொள்ளவேண்டும் என்று சொல்லி ஒரு மாதத்திற்கு மருந்து எழுதிக் கொடுக்க, சுமதி அதை காலை மாலை என்று இரண்டு கவரில் போட்டு மொத்த பில் தொகையும் வாங்கிக் கொண்டாள்.
வெளியே வரும்போது இருட்டி விட்டது. மனைவி கவலையோடு பக்கத்தில் வந்து நீங்க இனிமே ரொம்ப கத்தக்கூடாது என்றாள். நான் அவளை முறைத்தேன். ஒருவாரம் சாப்பிட்டேன். வாழும் நாளில் வலியில்லாமல் வாழ வேண்டும் என விரதம் பூண்டேன். காபியை நிறுத்தினேன். எண்ணெய் பதார்த்தங்களை அறவே ஒழித்தேன். வறுவல் முறுக்கு சீடை பூரி எல்லாவற்றையும் தியாகம் செய்தேன்.
ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்த்து. அது ஒரு தனிப்பதிவிற்கு உகந்தது. ஆனால் பீ.பி தொடர்ந்தது. மாத்திரை தொடர்ந்தது. தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது எப்போது அதிகமாகும் எப்போது குறையும் என்று இன்னும் எனக்கு பிடிபடவில்லை.
இப்போது உணவு விஷயத்தில் கொஞ்சம் தளர்த்திவிட்டேன். அவ்வப்போது பஜ்ஜி, போண்டா சாப்பிடுவதுண்டு. சில மாதம் செக்கப் போகும்போது டாக்டர் வழக்கம்போல் அன்போடு நலம் விசாரித்து எப்படியிருக்கீங்க என்று கேட்பார். நல்லா இருக்கேன் என்பேன். பார்த்துடலாம் என்று சினிமா டிராமா பற்றியெல்லாம் கேட்டுக் கொண்டே பிரஷர் மானியை என் கையில் சுற்றி பம்ப் பண்ணுவார். இந்த மாதம் சாப்பிட்ட போண்டாவெல்லாம் மனதில் வரும். சாப்பிட்டுருக்க வேண்டாமோ என்று தோன்றும். அவர் மீட்டரை அவர் பக்கம் வைத்து காற்றை இறக்கி மறுபடியும் ஏற்றி பார்ப்பார். ஒன்றும் சொல்லாமல் எழுத ஆரம்பிப்பார்.
எட்டிப் பார்த்தால் 130/84 என்று இருக்கும். மனம் நிம்மதியாக இருக்கும். சில சமயம் ரொம்ப குறைவாக போண்டா சாப்பிட்டு அதைவிட குறைவாக சத்தம் போட்ட மாதத்தில் 140/100 காட்டும். கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கே என்று மாத்திரை மாற்றி கொடுப்பார்.
ஊருக்குப் போகும் போது ஜட்டி பனியன் எடுத்து கொள்கிறேனோ இல்லையோ மாத்திரைகளை மறக்காமல் எடுத்து கொண்டுவிடுவேன். மாத்திரை இல்லையென்றால் மனதில் பயம் வந்து விடும்.
இந்த பீ.பி ஒரு வியாதி என்று ஆபீஸில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். டோமிசலிரி மருத்துவ வசதி அளிக்கப்படுவதில்லை. உங்களுக்கு அது இருப்பதையோ அதற்கு நீங்கள் மாத்திரை எடுப்பதையோ உங்கள் உரையாடல்களில் இடம்பெறச் செய்யாதீர்கள்.
கேட்கும் சிலர் இலவசமாக அறிவுரை வழங்கி சிலசமயம் அதிகம் எச்சரிப்பார்கள். ஸார் அதுக்கு ரெகுலரா மாத்திரை எடுத்துங்கோ இப்படித்தான் என் ஃபரண்டு ஒருத்தன் இரண்டு நாள் மாத்திரையை மறந்துட்டான். ஒரே அடியா அடிச்சுடுத்து.கிழங்கு மாதிரி இருந்தவன் பட்னு போயிட்டான் ஜாக்ரதை.
ஏண்டா இவருடன் பேசினோம் என்று பண்ணிவிடுவார்கள். அதனால் இப்போது நான் அது பற்றி யாரிடமும் பேச்சு வைத்துக் கொள்வதில்லை.
ஆமாம் உங்களுக்கு b.p இருக்கா?