வஞ்சித்தல்!
-ரோஷான் ஏ. ஜிப்ரி, இலங்கை
கண்கொத்திப் பாம்பின்
சாயல் ஒத்த
உன் பார்வைவிழ
என் கிளை பிரிகிறது!
தனித்த தண்டவாளமாய்
இழுபட்டுப் போயிற்று
வாழ்வின் இருப்பு!
கூட்டுப் பிரார்த்தனையின்
அதிஉச்ச நம்பிக்கையை
நீ வீசிய சிறுகல் சிதைத்திற்று!
இந்த வதைகளில்
எந்த ரசமும் இருப்பதற்கான
சாத்தியமும் இல்லை இனி…
அது வெறும் மெழுகுச் சிலையாய்
உருகி வடிந்து உறைகிறது
என்பதைத் தவிர!
தவத்தின் உச்சகட்டங்களைத் தாண்டி
மனம் விரும்பியதென்று மார்தட்டிப்
பசி மறந்து, துயில் துறந்து
பெருக்கிய முற்றம்
இன்றுன் ஆக்கிரமிப்பின்
அத்துமீறல்களுக்குள் அகப்பட்டுச்
சீர்குலைந்து சிதறிய வாசலாய்!
பொறிகலங்க வைக்கும் அறங்களைப்
புகட்டவும், போதிக்கவும்
சாத்தியமாகும் உன்னால் என்பதைச்
சாட்சி பகிர்ந்திற்று
சமகால நடவடிக்கைகள்!
வார்த்தைகளால் தீயிட்டுக் கொளுத்தவும்
வஞ்சித்தலால் கூந்தல்கட்டி விரட்டவும்
அறியுமாயிருந்த உனக்கு
இழப்பு, தவிப்பு எதையும் நீ
அறிந்துணர அவகாசம் எடுக்கவில்லை!
சுவைமிகு என் மனசின் துணுக்குகளைப்
படித்துப் பார்க்கத் தவறும் எல்லாக்காலத்திலும்
ரசம் வடியும் தேனீயாய்
இறுதிக்கணம்வரை
நான் சுற்றி அலைவேன்
நீ கலைத்துவிட்ட இவ்வெளியில்!
