மீ.விசுவநாதன்

ஒரு எளிய மனிதனின் சுயசரிதை

அத்தியாயம் : எட்டு

இவர்களிடம் அவன் என்ன கற்றான்?

அவனுக்கு அந்த கிராமத்தில் மிகவும் பிடித்த இடங்களாக, விளையாட்டுத் தலங்களாக இருந்தது முக்கியமாக சிவன் கோவிலும், லெஷ்மீபதி கோவிலும், அதன் பிராகாரங்களும்தான். பள்ளி விடுமுறை நாட்களில் அவனையும் அவனது நண்பர்களையும் அங்கேதான் பார்க்கமுடியும்.

aaa

விடுமுறை நாட்களில் காலை பதினோரு மணிக்கு அவனும் அவனது நண்பர்களும், முக்கியமாக குட்டிசங்கர், நீலகண்டன், யக்ஞமணி, சன்னதித்தெரு கண்ணன், கபாலி சகிதமாக சிவன் கோவில் தோட்டத்தில் உள்ள அரிநெல்லி மரத்திற்குச் செல்வார்கள். எப்படித்தெரியுமா? ராமச்சந்திரபுரம் தெருவில் உள்ள “சச்திரத்தின்” பக்கத்து வீட்டு மாடி வழியாக ஏறினால் சிவன் கோவில் அரிநெல்லி மரம் பக்கமாக இருக்கும்.

“முத்தையாப்பிள்ளை”

கோவிலில் முத்தையாப்பிள்ளை இருந்தால் பார்த்து விடுவாரே. அதனால் இந்த ஏற்பாடு. அப்படியே அந்த மரத்தில் அவர்களுக்குத் தேவையான அரிநெல்லிக் காய்களைப் பறித்து டிராயர்ப் பைகளிலே அடைத்துக் கொண்டு அந்த மரம் வழியாக மெதுவாகக் கீழே இறங்கி நெல்லிக் காய்களைக் கடித்துச் சுவைத்துக் கொண்டே கோவிலின் வடக்குப் பிராகரத்தில், கன்னடியன் கால்வாய்க்கரைக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு பெரிய மாமரத்தை நோக்கி அவர்களின் கவனம் திரும்பும். நெல்லிக் காய் சுவை என்றால், அந்தச் சிவன் கோவில் மாங்காய்கள் அமிர்தமாக இருக்கும். கொத்து கொத்தாகக் காய்த்து உலுப்பும் அந்த மரம். கல்லெடுத்து அந்த மரத்தில் எறிந்தால் நிச்சயம் ஓரிரு மாங்காய்கள் கீழே விழத்தான் செய்யும். அதுவும் சில சமயம் வாய்க்காலிலும் விழுந்து விடும்.

அவனும், நண்பர்களும் விரைந்து பெண்கள் படித்துறை வழியாகச் சென்று வாய்க்கால் பாலத்தில் இறங்கி சரியாக அந்தக் காய்களை எடுத்துப் பைக்குள் போட்டுக் கொள்வதைப் படித்துறையில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்கும் வேலைக்காரிகள்,” இருங்க இருங்க முத்தையாப்பிள்ளை வரட்டும் சொல்லிக் கொடுக்கறோம்” என்று கத்துவார்கள். அந்த வார்த்தைகளை எல்லாம் அவர்கள் லட்சியம் செய்ய மாட்டார்கள். காரணம் முத்தையாப்பிள்ளை அநேக மாக அந்த நேரத்தில் கிராமத்தில் வீடுகளுக்கு விறகு வெட்டச் சென்றிருப்பார். அதனால்தானே அவர்களுக்கு இந்தக் கொண்டாட்டம். ஆனால் மரத்தில் எத்தனை காய்கள் இருக்கிறது, கோவில் கதவுகளும், பெண்கள் படித்துறைக் கதவும் தான் பூட்டியபடி இருக்கிறதா என்றும் முத்தையாப்பிள்ளை திரும்பி வந்ததும் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொண்டு விடுவார்.

அவனுடைய வீட்டிற்கும் முத்தையாப்பிள்ளைதான் விறகு வெட்டிக் கொடுப்பார். அப்படி ஒருநாள் அவர் விறகு வெட்டிக் கொண்டிருக்கும் பொழுது, அவனுக்கு அம்மா ஒரு சொம்பில் நீர்மோரும், வெல்லமும் அவனிடம் தந்து முத்தையாப்பிள்ளையிடம் தரச் சொன்னாள். அவரும் தன் உடம்பு வியர்வையைத் துடைத்துக்கொண்டே அதைக் குடிக்கத் துவங்கினார். “முத்தையாப் பிள்ளை …மோருக்கு உப்பு வேணுமா…” என்று அம்மா கேட்டாள். ” வேண்டாம் தாயி…உப்புப் போட்டுக் குடிச்ச வீட்டுக்குத் துரோகம் செய்யக் கூடாதுல்ல …நம்ம வீட்டுப் புள்ளைங்க ஏதாவது தப்புத் தண்டாப் பண்ணினா என்னால சத்தம் போட முடியாது.. அதனால நான் கிராமத்துல வேலைக்குப் போற வீட்ல உப்பு சேக்கரதில்லை…” என்று சொல்லிக் கொண்டே அந்த மோரைக் குடித்து, அந்த வெல்லத்தையும் ஒரு வாய் போட்டுக் கொண்டார். பக்கத்தில் நின்றிருந்த அவன், “முத்தையாப்பிள்ளை எனக்குக் கொஞ்சம் வெல்லம் தாங்கோளேன் ” என்றான். அதைக் கேட்ட அவனுக்கு அம்மா,”அவர்ட்டப் போய்த்தான் வாங்கித்தின்னணுமா….” என்றுஅதட்டினாள். அதுகேட்ட முத்தையாப்பிள்ளை,”அம்மா…சாமி நல்லவருதான்…ஆனா அவரு கிரகமுல்லா இப்படிப் படுத்துது…கோவில்ல வந்து மாங்காய், நெல்லிக்காய் எல்லாம் பறிக்கறது எனக்குத் தெரியாதுன்னா நெனைக்கீறு..ஒரு நா ஒங்க எல்லாத்தையும் அந்த மரத்தோட வெச்சுக் கட்டிபுடறேன் பாத்துக்கிட்டேரும்….” என்று கர்ஜனை செய்தார். “சொல்லாதேயும் கட்டிவெச்சு உரியும்” என்றாள் அவனுக்கு அம்மா. அவன் ஒன்றுமே தெரியாதவன் போல அப்பாவியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

முத்தையாப்பிள்ளைதான் இரவில் கோவிலுக்குக் காவல். கிராமத்தை விட்டு வெளியில் வாய்க்கால்கரை ஓரமாகக் கோவில் இருப்பதால் இரவில் ஒன்பதுமணிக்குமேல் யாரும் தனியாக அந்தப் பக்கம் செல்ல மாட்டார்கள். இப்பொழுதைப் போல முன்பெல்லாம் அந்த வழிக்கு விளக்குகள் கிடையாது. ஏதோ ஒன்றிரண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும். முத்தையாப்பிள்ளைக்கு நல்ல தைரியம் உண்டு. ஒருநாள் யாரோ ஒருவன் இரவில் மாங்காய்ளைத் திருட வந்த பொழுது தனி ஆளாக அவனைப் பிடித்து அடித்த அடியில் அவன் தன் வேட்டி அவிழ்ந்து விழுந்தது கூடத் தெரியாமல் ஓடிவிட்டான். அந்த வேஷ்டியை அவர் அதே மாமரத்தில் தொங்க விட்டு, கோவில் வாசலில் அவரிடம் கேட்போருக்கு,”இனிமேல் எவனாவது சிவன்கோவில் சொத்தைத் திருடினால் அவனுக்கும் இதே கதிதான்…” என்று உரக்கச் சொல்லும் போது, அவனும் அவனது நண்பர்களும் ஆற்றங்கரைக்குக் குளிக்கச் சென்று கொண்டிருந்தனர். உள்ளுக்குள் அவனுக்கு அது மந்திரம் போலத்தான் பதிந்தது.

வேதம் ஓதுவதிலும், ஒழுக்க நெறியிலும் எப்படி ப்ரும்மஸ்ரீ மகாதேவ கனபாடிகள் வாழ்ந்தாரோ அதேபோலத்தான் “முத்தையாப்பிள்ளையும்” நாணயமாக சிவன்கோவிலுக்குத் தொண்டு செய்தார். அவர்கள் இல்லாத சிவன் கோவிலை அவனால் இன்றும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவன் எப்பொழுதெல்லாம் அந்தக் கோவிலுக்குச் செல்கிறானோ அப்பொழுதெல்லாம் அந்த சிவ ரூபமாகவே அவர்களை அவன் மனதாலே வணங்கி வருகிறான்.

“ஈஸ்வர கிருஷ்ண ஐயர்”

ஆதிவராகப் பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம் மிக விமர்சையாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அந்த மாதம் வரும் நான்கு சனிக்கிழமைகளில் முதல் சனிக்கிழமை R. s. A. சங்கர ஐயர் (ஒருவருடம்), காசி ஐயர் (மறுவருடம்), சஹஸ்ரநாம ஐயர் (மறுவருடம்) என்றும், இரண்டாவது சனிக்கிழமை Royal Enfield K. R. சுந்தரம் ஐயர் (முதல் வருடம்), Easun Eng. ஈஸ்வர கிருஷ்ண ஐயர் (இரண்டாவது வருடம்), மூன்றாவது சனிக்கிழமை இந்தியா சிமிண்ட்ஸ் S .S .N. சங்கரலிங்கம் ஐயர் குடும்பத்தினர், நான்காவது சனிக்கிழமை நடேச ஐயர் குடும்பத்தினரும் கட்டளைக் காரர்களாக இருந்து பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்து வருகின்றனர். ஐந்தாவது சனிக்கிழமை வந்தால் முன்பு பட்டாம்பிச் சங்கர ஐயர் சில வருடங்களும், அதன் பிறகு ஜவுளிக்கடை இசக்கியாபிள்ளையும், அவருக்குப் பின்னல் காயங்குளம் அத்தை (சங்கரநாராயண ஐயர்) குடும்பத்தினரும் கட்டளைக்காரர்களாக இருந்தனர். சமீபகாலத்தில் காருகுறிச்சி ஆடிட்டர் ரெங்கசாமி ஐயங்கார் குடும்பத்தினர் கட்டளைக் காரராக இருந்துவருகின்றனர்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளின் வண்டிச் சப்பரம் தள்ளிக்கொண்டு செல்வதில் அவனுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அவனுடைய அந்த ஆசைக்குப் பெற்றோர் தடை சொன்னதே கிடையாது. முந்தியதினம் வெள்ளிகிழமை மூலஸ்தான ஆதிவராகப் பெருமாளுக்கு மாக்காப்பு அணிவிப்பார்கள். சனிக்கிழமை அன்று காலையில் பெருமாளுக்கு அபிஷேகம், அர்ச்சனைகள் முடிய மதியம் ஒரு மணி ஆகிவிடும். அதன் பின்பு பஞ்சாமிர்தமும், சக்கரைப்பொங்கலும் பிரசாதமாகத் தருவார்கள். அவனுக்கு ஈஸ்வர ஐயர் வீட்டுக் கட்டளை என்றால் தனி குஷிதான். காரணம் அவரது கம்பீரமான குரலும், தோற்றமும், கனிவான குணமும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் அவரைப் பக்கத்தில் நின்று பல முறை உன்னிப்பாக கவனித்து வந்திருக்கிறான்.

“ஈஸ்வர ஐயர்”தான் தன் கைகளாலேயே பக்தர்களுக்குப் பிரசாதம் தருவார். அதுவும் சென்னையில் இருந்து வரவழைக்கப் பட்ட அழகிய ஆழமான தொன்னைகளில் நிறையத் தருவார். வரிசையில் ஒழுங்காக வரவேண்டும் என்று விரும்புவார். ஒரு முறை அவனுக்கு நண்பன் கபாலி ஒரு கையில் வாங்கியதை மறைத்துக் கொண்டு, மறுகையை நீட்டினான். உடனே அவனை அப்படியே தூக்கி பக்கத்தில் நிறுத்திவிட்டார். எல்லோருக்கும் கொடுத்தபிறகு மீண்டும் அவனுக்குக் கொடுத்து விட்டு, “ஒரு முறை வாங்கிவிட்டால் மறுமுறை கேட்காதே..எல்லோருக்கும் கொடுத்துவிட்டு இருந்தால் உனக்கு இரண்டாவது முறையும் தருவார்கள்…சரியா..” என்று கபாலிக்கு மீண்டும் தந்தார்.

aaa1

இரவில் கருடசேவை. சுவாமி புறப்பாடு ஒன்பது மணிக்குத் துவங்கும். தெற்கு மாடத் தெரு, மேலமாடத் தெரு, வடக்கு மாடத் தெரு, சன்னதித் தெரு வழியாக மகாமேரு வந்து பெரிய அழகான வண்டிச் சப்பரத்தில் சுவாமியை எழச் செய்து ரதவீதி சுற்றி வந்து மீண்டும் கோவிலுக்குள் சுவாமி வரும் பொழுது மறுநாள் காலை நான்கு மணி ஆகிவிடும். கூடவே சென்று வர ஆனந்தமாக இருக்கும்.

aaa2அப்படி ஒருமுறை ஈஸ்வர ஐயர் சுவாமிகூடவே மிகவும் ரசித்துக் கொண்டும், மாட வீதிகளில் சுவாமி வரும் பொழுது ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் நின்று சுவாமி தரிசனம் செய்யும் பெரியவர்களை கனிவோடு விசாரித்துக் கொண்டு அவர்களுக்குத் தன் கைகளாலேயே நல்ல வாசனையுள்ள சந்தனத்தை அவர்களின் கைகளிலும், மார்பினிலும் தடவி விடுவார். கம்பீரமாக வாய்விட்டுச் சிரித்து மகிழ்வார். அது அப்போது சுவாமிக்குக் காட்டப்படும் மத்தாப்பூ போல அழகாக இருக்கும். அவரது கட்டளை என்றால் பன்னிரெண்டு பெரிய தீவட்டிகளை, சுவாமிக்கு முன்னால் வரிசைக்கு ஆறுபேர்களாக சுமந்து கொண்டு வருவார்கள். பல நேரங்களில் ஈஸ்வர ஐயேரே தன் கைகளால் அந்தத் தீவட்டிக்கு எண்ணை விடுவார்.

அப்போது சுவாமி சன்னதித் தெருவில் வந்து கொண்டிருந்தார். திடீரென ஈஸ்வர ஐயர், தீவட்டி பிடித்துக் கொண்டிருந்த ஒருவரின் கையைப் பிடித்துக்கொண்டு,” ஏய்…நீ மாடசாமி தானே…நான் ஒங்கூடப் படிச்சேண்டா…ஞாபகம் இருக்கா…நீ என்ன இப்ப “டேய்..ஈஸ்வரா”ன்னு கூப்புடு..” என்று அவரின் கைகளிலும் மார்பிலும் சந்தனத்தைத் தடவினார். தீவைட்டி பிடித்துக் கொண்டிருந்தவர் கூச்சத்தில் நெளிந்தார். ஈஸ்வர ஐயர் அவரை விடுவதாக இல்லை. அவரை அப்படியே கட்டிக் கொண்டார். அந்த மாடசாமி நண்பருக்கு மகிழ்ச்சி தங்கவில்லை. இதை எல்லாம் பக்கத்தில் இருந்து அவன் கவனித்து வந்ததால் இன்றும் ஈஸ்வர ஐயரின் எளிமையையும், தான் பிறந்த கல்லிடைக்குறிச்சி ஊரின் மீதும், வாழும் மக்கள் மீதும் அவர் கொண்டிருந்த அன்பை எண்ணியும் பெருமிதம் கொள்வான்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தி ஏழில், தேசியத் தலைவர் ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்கள் சென்னைக்கு வந்திருந்த பொழுதில் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் தேசிகாச்சாரி சாலையில் உள்ள ஈஸ்வர ஐயர் வீட்டில்தான் தங்கி இருந்தார்.

தூர்தர்சன் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் ,”நீங்கள் பெரிய தொழில் அதிபர். உலகமெல்லாம் சுற்றி இருக்கிறீர்கள். உங்களுக்குப் பிடித்த ஊர் எது” என்ற கேள்விக்கு,” பிறந்த கல்லிடைக்குறிச்சிதான் எனக்குப் பிடித்த ஊர். ஆத்தங்கரைக்குக் குளிக்கப் போகும் பொழுது வயல் காட்டின் வரப்புகளில், என் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடந்து செல்வேன். அந்த சுகம் எனக்கு எந்த ஊரில் கிடைக்கும்…” என்று பளிச்செனச் சொன்னார் ஈஸ்வர ஐயர். அவர் உள்ளத்தாலும் உயர்ந்த மனிதர். அவரது ஆளுமையை அவன் மிகவும் நேசித்தான். இன்றும் நேசித்துக் கொண்டிருக்கிறான்.

(16.04.2015) இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.