வண்ணங்கள் தாண்டிய என் மொழியில்…!
-கவிஜி
உதிர்தலில்
இளவேனில் முன்பனி…
பகர்தலில்
முதுவேனில் பின்பனி…
காலம் சருகுகள்
மிதிக்கிறது
படாமல் படும்
பாதங்களில்
நான் மட்டும் கேட்கும்
மெட்டிச் சத்தம்…
துளியாய்த் தொலைந்த
காட்டுக்குள்
மரமாகி நிற்கிறது
நினைவுகள்…!
நிழல் மறையும்
நேரங்களில்
மீண்டும் மீண்டும்
உயிர்த்தலே
பெரும் சுவாசம்…!
மூடு மந்திரக்
கோட்பாட்டில்
சித்திரமாகி நிறைகிறது
உதிர்தலின் ஓர் இலை…!
அது நானாகி
யோசிக்கும் பிழையில்
என் காட்சி
வண்ணங்கள் தாண்டிய
என் மொழியில்…!