ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 2

0

சி. ஜெயபாரதன்.

 

kahlil-gibran

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே !

 

என் ஆத்மாவே ! நீ
ஏன் அழுகிறாய் ?
என் பலவீனத்தை நீ
அறியாயோ ?
உன் கண்ணீரின் கூர்மை
காயப் படுத்தும்
என்னை ஊடுருவி !
காரணம்
என்பிழை தெரியா தெனக்கு !

எதுவரை நீடிக்கும்
உன் அழுகை ?
நின் கனவுகள், ஆசைகள்,
அறிவுரைகள்
எவற்றையும் கலைக்க என்னிடம்
எதுவு மில்லை
மனித வார்த்தைகள் தவிர !
என் மீது கண்ணோக்கு
என் ஆத்மாவே !

உன் உபதேசங்களைக்
கவன மாய் நான்
பின்பற்றி
இரை யானது
என் வாழ்வு முழுவதும் !
எப்படி நோகிறது பார்
என் இதயம் ?
களைத்துப் போனது
என் வாழ்க்கை
பின்பற்றி உன்னை !

உன்னதம் பெற்றது
என் இதயம்
உன் ஆசன பீடத்தில் !
அடிமை யானது உன்னிடம்
இப்போது
பிணைத்துக் கொண்டு ! எனக்குத்
துணைவனாய் இருந்த
என் பொறுமை
இப்போது எனக் கெதிராய்ப்
போட்டி போடுது
பகைவனாய் !

வாலிப வயதெனக்கு
வழங்கியது
வாழ்வில் ஓர் நம்பிக்கை !
கண்டிக்கும் அது என்னை
இப்போது
கவனக் குறைவால்
பேணிப் பாராததால் !
எப்போதும் ஏன் என்னை
வற்புறுத் துகிறாய்
என் ஆத்மாவே ?

எனது இன்பங்களை எல்லாம்
புறக்க ணித்தேன் !
உன் அறிவுரைக் குடன்பட்டு
என்மீது புகுத்திய
உன் நியதியைப் பின்பற்றி
வாழ்வின் பூரிப்பைத்
துறந்தேன் !
நீதி வழங்கு நீ எனக்கு !
அல்லது
கொடு மரணத்தை
விடுவிக்க என்னை
நியாயமே உனது உன்னத
நெறியான தால் !

என் மீது பரிவு காட்டு
என் ஆத்மாவே !
என் மீது அன்பை
ஏற்றி இருக்கிறாய்
என்னால்
சுமக்க முடியாப் பளுவாய் !
நீயும் அன்பும்
இணை பிரியா வல்லினம் !
ஆனால்
நானும் செல்வமும்
இணை பிரியா பலவீனம் !
எப்போ தாவது
போராட்டம் நின்று விடுமா
வல்லினத் துக்கும்
மெல்லினத் துக்கும் இடையே ?

என் மீது பரிவு காட்டு
என் ஆத்மாவே !
என் பிடிக்கு அகப்படாத
அதிர்ஷ்டத்தை
எனக்கு அளித்தி ருக்கிறாய் !
நீயும் அதிர்ஷ்டமும்
உச்சி மலையில் மீது
உட்கார்ந் திருக்கிறீர் ! ஆனால்
நானும் இடர்களும்
பள்ளத்தில்
தள்ளப் பட்டுள்ளோம்
ஒன்றாக !
எப்போ தாவது கூடி
ஐக்கிய மாகுமா
மலையும் பள்ளமும் ?

என் மீது பரிவு காட்டு
என் ஆத்மாவே !
எழில் மயத்தை காட்டினாய்
எனக்கு ! ஆனால்
ஏனோ அதை ஒளித்து வைத்தாய் !
நீயும் எழிலும்
ஒளிச்சுடராய் வாழ்கிறீர் !
ஆனால்
நானும் அறியாமையும்
இருள் வெளியில்
சிறைப் பட்டோம் !
எப்போ தாவது
படையெடுத்து வெல்லுமா
ஒளி யானது
இருளின் மீது ?

முற்றுப் பெறுவதில் தான்
உந்தன் பூரிப்பு
வந்தடையும் உனக்கு ! அதை
எதிர்பார்த்து நீ
இன்பம் அடைகிறாய்
இப்போது !
ஆயினும் இந்த உடல்
வாழ்க்கையில் துன்புறுகிறது
வாழ்ந்திடும் போது !
இதுதான் என்னைக் குழப்பும்
என் ஆத்மாவே !

முடிவற்ற நீடிப்பை நோக்கி
துரிதமாய்ப் போகிறாய் நீ !
ஆயினும் இந்த உடல்
மெதுவாகச் செல்லுது
மரணத்தை நோக்கி !
காத்து நிற்ப தில்லை நீ
அவனுக்கு !
விரைவில் அவனும்
மறைவ தில்லை !
இது சோக மளிக்கும் எனக்கு
என் ஆத்மாவே !

சொர்க்க புரி உன்னை
ஈர்ப்பதால் நீ
உயரத்தில் ஏறுகிறாய் !
ஆயினும் இந்த உடல்
கீழே வீழ்கிறது
பூமியின் ஈர்ப்பால் !
ஆறுதல் அளித்திடாய் நீ
கடவுளுக்கு !
அவரும் உனைப்
பாராட்டுவ தில்லை !
இதுதான் என் அவலநிலை
என் ஆத்மாவே !

மெய்ஞானக் களஞ்சியம் நீ
ஆயினும் இந்த உடல்
அறிவைப் புரிவதில்
பரம ஏழைதான் !
விட்டுக் கொடாதவன் நீ !
கீழ்ப்படி யாதவன்
அவனும் !
இதுதான் எனக்கு வேதனை
என் ஆத்மாவே !

இரவின் மௌன வேளையில்
தேவனைக் காணச் சென்று
இனித்திடும்
தெரிசனம் பெறுவாய் !
ஆயினும் இந்த உடல் என்றும்
முடங்கிக் கிடக்கும்
பிரிவிலும்
நம்பிக்கை இழப்பிலும்
கசப்ப டைந்து !
இதுதான் எனக்குச் சித்திரவதை
என் ஆத்மாவே !
பரிவு காட்டு என்மீது
என் ஆத்மாவே !

 

 

“நானிங்கு பிறந்தது எல்லோரோடும் இருப்பதற்கு, எல்லோருக்கும் உதவுவதற்கு!
எனது ஏகாந்தத்தில் இன்று நான் புரிவது நாளைக்குப் பல்வேறு மாந்தரால் எதிரொலிக்கப்படும்.”

 

நானிங்கு பிறந்தது
அனைவ ரோடும் வாழ்வதற்கு !
அனைவ ருக்கும் உதவுதற்கு !
எனது தனிமையில்
இன்று நான் புரிவதை
ஏனைய மாந்தர்
எதிரொலிப்பார் நாளை !
– கலில் கிப்ரான்

என் ஆத்மாவைக்
கவர்ந்து கொள்ளும்
மிருதுவான முரட்டுக்
கரங்கள் யாருடையவை ?
கசப்பான களிப்பும்,
இனிப்பான வலியும்
கலந்து என் இதயத்தில்
ஊறிப் போயிருக்கும்
ஒயின் எது ?
இரவின் மௌன வேளையில்
என் தலையணை மேல்
பறக்கும் அந்தச்
இறக்கைகள் யாவை ?
என் தூக்கம் கலைக்கும் அவை !
என்ன நடக்கு தென்று
எவரும் அறியக்
காணாது !
ஆனந்தக் களிப்பை விடப்
பேருன்னத மான
சிரிப்பின்
பிரதிபலிப்பை விடப்
பேரழகுத் துயரம்
கலந்திருக்கும் எனது
பெரு மூச்சில் !
– கலில் கிப்ரான்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.