-துஷ்யந்தி

காத்திருந்து கன்னியிவள்
கரம்பிடித்தாள் மன்னவனை
நிலையில்லாத வாழ்க்கையாய்
ஆனதிந்த வாழ்க்கையே…!

தோற்றுவிட்ட கனவுகளாய்                             faded dreams
எண்ணமெல்லாம் மாறிவிடப்
பேதையிவள் என்செய்வாள்?
வாடியே நின்றிடுவாள்…!

விதவையென பெயர்தந்து
வெண்ணிற உடை தந்து
கை வளைகள் தானுடைத்துக்
கைவிலங்கு போட்டுவைக்க
என்பிழை இவள் செய்தாள்?

கன்னியிவள் காலங்கள்
தன்னந்தனியாய்க் கழிந்ததனால்
உலகிவளுக்குத் தந்தபெயர்
முதிர்கன்னி என்றிருக்க…

கல்யாணக் கோலம் கண்ட
பின்னே நேர்ந்த விபத்தால்
இவள் கணவன் உயிரிழக்க
இப்போது இவள் பெயர்
விதவையென்றானதோ?

ஏற்றுக்கொள்ள முடியாத
காரணங்கள் பல சொல்லி
மூலையிலே ஒதுக்கிவிட்ட
சாக்கடைச் சமுதாயமே!

சுமங்கலியை அமங்கலியாய்
மாற்றியதும் நீரல்லவா…?
அவள் எதிரிலே வருதல்
ஆகாதென்று காரணம்
சொல்வதும் நீரல்லவா…?

போற்றுவதும் தூற்றுவதும்
பெரிதில்லை உமக்கெல்லாம்
மனம் பட்டிடும் பாட்டை
எவரும் கொஞ்சம் நினைத்தீரோ…?

சாத்திரங்களும் சம்பிரதாயங்களும்
வகுத்துத்தந்த உண்மைகளை
வாய்க்கு வந்தாற்போல
சொல்வதை நிறுத்திடுவீர்…!

மாயவன் தந்த உடல்
பூமிக்குப் போகும் வரை
அவன் பார்வையிலே யாவரும்
சமமென்று உணருங்கள்!

வாழ்விலே சாதனைகள்
என்செய்தோம் என்பதனை
யாவரும் ஒருமுறை
தனக்குள்ளே கேட்டுடுவீர்!

அதனால் தோன்றிடும் விடைகளே
விருட்சங்களை உருவாக்கும்
அன்று அனைவரின் மனதிலும்
ஒரே எண்ணம் உருவாகும்!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “களைந்த கனவுகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.