காக்கைகள் மட்டும் கரைகின்றன…!
-தாரமங்கலம் வளவன்
தங்கள்
மௌன மொழியைக் கலைக்க
காற்சலங்கைகள் காத்திருக்கின்றன
வீணைக் கம்பிகள்
விரல்களின் ஸ்பரிசத்திற்காக
ஏங்கித் தவிக்கின்றன!
வேகமாய்ப் படியும் தூசி
புல்லாங்குழலின் அனைத்துத்
துளைகளையும் அடைத்துக் கொள்ள,
காக்கைகள் மட்டும் தங்கள் அகன்ற
வாயுடன் கரைந்து கொண்டே இருக்கின்றன!