மீ.விசுவநாதன்

vallamai111-300x15011111

ஆத்திரம் , ஆணவம் , ஆசை , அதெல்லாமே
கோத்திரம் பார்த்தா குவிகிறது – ஆத்திகன்
நாத்திகன் யார்க்குமே ஞானம் பொதுச்சொத்து!
மாத்திரைப் போதில் வரும். (101) 10.04.2015

மழைத்துளி ஆச்சர்யம் ; மண்புழு நண்பன் ;
பழையபடம் ஆனந்தம் ; பண்ணும் பிழையிலாப்
பாட்டுக் கொடுப்பினை ; பாரமே ஏதுமில்லாக்
கூட்டுக் களிதான் குஷி. (102) 11.04.2015

ஓவியம் பார்ப்பதும் , ஓர்கவிதை உள்ளத்தில்
தாவி உதிப்பதும் , தாமரைப் பூவிலே
ஆவி கலப்பதும் , ஆண்டவன் ஆசியைத்
தூவித் தெளிக்கும் துளி. (103) 12.04.2015

கவிழ்ந்தும் நிமிர்ந்தும் கனிந்தும் சிரித்தும்
தவழ்ந்தும் விழுந்தும் தளிராய் எழுந்தும்
தவறாத நம்பிக்கை சக்தியுடன் பிள்ளைத்
தமிழாய் வளர்தல் தவம் (104) 13.04.2015

படிப்பது நன்கு பதிவதும் , நாடித்
துடிப்பெலாம் என்றும் துடிப்பாய் முடிகொண்ட
சங்கத் தமிழ்போல சத்தாய் ஒலிப்பதும்
எங்கள் குருவருள் ஈர்ப்பு (105) 14.04.2015

மீன்நீந்தும் ஆறுமாய் விண்மீனின் வானுமாய்
“நான்”நீந்தும் ஆழ்மனதில் ஞானமே வீண்தானே !
ஏனென்றால் ஆணவம் என்றுதான் ஓயுமோ ?
ஏனத்தில் ஓட்டை எனில். (106) 15.04.2015

ஓடும் ரயிலில் ஒருநாள்ப் பயணமாய்
நாடும் உறவினை நான்காண ஓடினேன் !
போடும் உணவிலும் பூசலைப் பேசினார் !
காடுவரை நீங்காத காய். (107) 16.04.2015

பெரிதான கோவில் ! பிரும்மாண்ட சிற்ப
அரிதான காட்சி ! அழகாய் எரியும்
விளக்கில்லை பூஜை விளக்கங்க ளில்லை !
பளபளப்பி லேது பரம். (108) 17.04.2015

குடுகுடுப்பைப் காரனைக் கூட்டிவா இங்கே !
கடுகடெனப் பேசும் கலியில் , படுகுஷியாய்
“நல்லகாலம் ஐயா ! நடப்பது நல்லதென்பான் !”
பொல்லாப்பு வேண்டாப் புகழ் (109) 18.04.2015

வெளிநாடோ உள்நாடோ வேடங்கள் ஒன்றே ;
துளிகூட மாறாத தோற்றம் வெளிவேஷம் !
உள்ளே கலகமும் ஊர்முன் சிரிப்புமாய்
கள்ளனாய் வாழும் கலி. (110) 19.04.2015

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காலம் (11)

  1. ரொம்ப அழகான கருத்தும் கற்பனையும் விரவிவந்த வெண்பாக்கள்.
     விசுவின் சொலெல்லாமே வில்! 
     கவியோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.