ஹரி கிருஷ்ணன்

பாரதிக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்பது இணையத்தில் நெடுங்காலமாக விவாதப் பொருளாக இருந்து வருகிறது. விக்கிபீடியா பாரதிக்கு 29 இந்திய மொழிகளும் 3 வெளிநாட்டு மொழிகளும் தெரிந்திருந்தது என்று சொல்கிறது. https://en.wikipedia.org/wiki/Subramania_Bharati இது மிகவும் தவறான தகவல். என்னதான் பாரதி நம் நேசத்துக்குரியவன் என்றாலும் இப்படிப்பட்ட மிகைநவிற்சிகள், சொல்லப்படுவதன் நம்பகத் தன்மையைப் பெரிதும் பாதிக்கின்றன. இந்தியாவின் அலுவல் மொழிகள் (official languages) மொத்தமே 22 என்னும்போது, இவற்றைத் தாண்டி வேறு என்னென்ன ஏழு மொழிகளை பாரதி அறிந்திருக்கக்கூடும் என்ற கேள்வி பிறக்கிறது.

இது ஒருபுறமிருக்க. பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் பின்வருமாறு சொல்லியிருப்பதாக ஃபேஸ்புக்கில் ஒரு தகவல் உலவிக் கொண்டிருக்கிறது:

https://www.facebook.com/note.php?note_id=124816804709

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடிய பாரதிக்கே நான்கு மொழிகள்தான் தெரியும். பதினெட்டு மொழிகள் தெரிந்த பேரா. ஹார்ட் சொன்னது அதிகாரபூர்வமாகவும் நடுநிலையாகவும் மிகச் செம்மையாகவும் உள்ளத்தைத் தொடும் வகையிலும் அமைந்திருக்கிறது” என்று நெகிழ்கிறார் பேரா. மறைமலை.

இப்போது இவற்றில் எது நடுநிலை, எது நம்பத் தகுந்தது என்றால், பாரதி எழுத்துகளின் அகச்சான்று, பாரதியுடன் நெருங்கிப் பழகினவர்களின் அகச்சான்று மூலமாகத் தொகுப்பதுதான். சற்று கடினமாக உழைக்க வேண்டிய பணி. இதற்கு சற்று காலம் பிடிக்கும் என்றாலும், ஆதாரப்பூர்வமான விவரங்களைத் தொகுக்கத் தலைப்பட்டிருக்கிறேன். இங்கே ஒரு நினைவுக் குறிப்பாக இட்டு வைக்கிறேன். எங்கெங்கே தேடவேண்டும் என்பதற்கு எனக்கே உதவக்கூடிய குறிப்புகள் என்பதால் இதை இப்போதைக்கு இங்கே போட்டு வைக்கிறேன். இந்த விவரங்களைத் தொகுத்து முடிக்கும் வரை இதில் விவாதங்கள் எழுந்தால் என்னால் விடை சொல்ல இயலாது. தொகுத்து முடிந்ததும் சொல்கிறேன் என்று இப்போதைக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

இதுவரையில் மேற்போக்காகத் தொகுத்திருப்பதே ஐந்து மொழிகள். இன்னமும் இருக்கின்றன. தேடித் தருகிறேன்.

இதுவரை தொகுத்தது:

பாரதிக்குத் தெரிந்த மொழிகள் ஒண்ணொண்ணா ஆதாரப்பூர்வமா சொல்லிட்டே வரேன்.

பாரதிக்குத் தமிழும் ஆங்கிலமும் தெரியும் என்பதற்கு ஆதாரம் தேவையில்லை. கீதை உட்பட பல உபநிஷத்களை மொழிபெயர்த்திருக்கிறார். வேதரிஷிகளின் கவிதை போன்ற மொழிபெயர்ப்புகள் உள்ளன. பதஞ்சலி யோக சூத்திரத்தை மொழிபெயர்த்திருக்கிறார். ஈஸாவாஸ்யோபநிஷத், கேநோபிநிஷத் ஆகியவற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார். பாஞ்சாலி சபதம் வரிக்கு வரி வியாச மூலத்தின் மொழிபெயர்ப்பே என்பதை என் உரைகளின் மூலம் நிரூபித்திருக்கிறேன். ஆகவே வடமொழிப் புலமையைப் பற்றி ஐயத்துக்கிடமில்லை.

ரெயில்வே ஸ்தானம் என்ற கட்டுரையில் பாரதி பின்வருமாறு குறிப்பிடுகிறான்: ‘எனக்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது பாஷை நன்றாகத் தெரியும்.’

பாரதி தன் கவிதையை ஃப்ரெஞ்சில் மொழிபெயர்த்து ஃப்ரெஞ்ச் பத்திரிக்கைக்கு அனுப்பியதாக பாரதிதாசன் கூறுகிறார். இடத்தை பிறகு மேற்கோள் காட்டுகிறேன்.

பாரதியே தான் எழுதிய சீட்டுக் கவியில்,

பிரான் ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டிலுயர்
புலவோரும் பிறரு மாங்கே
விராவுபுக ழாங்கிலத்தீங் கவியரசர்
தாமுமிக வியந்து கூறிப்
பராவி யென்தன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப்
போற்றுகின்றார்;பாரோ ரேத்துந்
தராதிபனே!இளசை வெங்க டேசுரெட்டா!
நின்பால்அத் தமிழ் கொணர்ந்தேன்

தன் கவிதை ஃப்ரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறான். லா மார்ஸே கீதத்தை ஒட்டித் தமிழில் ஒரு பாடல் செய்திருக்கிறான். இவையெல்லாம் என் நினைவுக்குறிப்பாகச் சொல்லி வைக்கிறேன். இதற்குரிய ஆதாரங்களையும் எடுத்துத் தருகிறேன்.

இதுவரைக்கும் ஐந்து மொழிப் புலமை வெளிப்பட்டிருக்கிறது. மேலும் சொல்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *