புலவர் இரா. இராமமூர்த்தி.

ஒருவனுக்கு அறிவு இயல்பாகவே இருக்கும். அதனைத் திருவள்ளுவர் உண்மையறிவு என்கிறார்!

“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்” (373)

என்ற திருக்குறள் அதனைக் குறிக்கிறது! உயிர் மரபு வழிப்பட்ட அறிவினைப் பிறவிதோறும் தொடர்ந்து பெறும். ஆனால் கல்வி கேள்விகளால் ஒரு மனிதன் பெறுகின்ற அறிவு அவனை இம்மையில் உயர்த்தும். மறுமைக்கும் உதவும். இந்த அறிவைப் பற்றித் திருவள்ளுவர், கல்வி, கல்லாமை , கேள்வி ஆகிய மூன்று அதிகாரங்களில் மிகவும் செப்பமாகக் கூறுகிறார்!

அவர் கல்வி என்ற அதிகாரத்தின் முதற் குறட்பாவாக,

”கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக ”(391)

என்ற பாடலைக் கூறுகிறார். இந்தக் குறட்பாவுக்கு உரை வரைந்தோர் அனைவரும் மிகச்சிறப்பாகவே உரையெழுதியுள்ளனர். அவற்றுடன் இங்கு நான் அளிக்கும் புதிய பொருளும் அன்பர்களுக்குச் சுவையுடையதாகவே அமையும் என நம்புகிறேன். திருவள்ளுவர் முதலில் ‘கற்க’ என்று விருப்பத்துடன் கேட்டுக் கொள்கிறார்! அவர் கற்க என்று சொல்வது யாரை? அக்காலத்தில் அரசனும், அமைச்சனும், அந்தணனும் கல்வி கற்பார்கள்! அவர்களையே கற்க என்று வள்ளுவர் கூறினார் ஆனால், இக்காலத்தில் எல்லாருமே அரசுபுரியும் தகுதி பெறலாம்; அமைச்சுப்பணியைப் புரியலாம்; அந்தணராக வேதம் ஓதலாம்; அனைத்துத் தொழில்களையும் வாணிகத்தினையும் கற்றறியலாம்! ஆகவே கல்வி எல்லாருக்கும் உரியது என்று இன்று ஆகிவிட்டது.

ஆகவே ‘கற்க’ என்பது இப்போது கட்டாயம் ஆக்கப் பெற்றது அவ்வகையில் எந்த எதிர்வினாவுமின்றிக் கற்க என்கிறார் வள்ளுவர். அதாவது நம் ஆரம்பக் கல்வியில் ஆசிரியர் சொல்லவதை அப்படியே கேட்டுக் கற்கிறோம். ஆகவே கற்க என்பதன் பொருள் ஆரம்பக் கல்வியைக் குறிக்கிறது!

அடுத்துக் ‘கசடறக் கற்’ என்கிறார்! இதற்கு இருவகையான பொருள் உண்டு. கற்கும் கல்வியை ஐயம் திரிபின்றித் தெளிவாகக் கற்க என்பதொன்று; கல்வியால் நாம் உள்ளத்தின் மாசுகள் நீங்கும்படிக் கற்க என்பது மற்றொன்று. இது உயர்பள்ளிக் கல்வியில் சாத்தியமாகும். ஆகவே கசடற என்பது, உயர்நிலைப் பள்ளிக் கல்வியைக் குறிக்கும்; இக்கல்வியின் தொடர்ச்சி மேல்நிலை, மற்றும் கல்லூரிக் கல்வி. ஆதலால் கற்பவை கற்க என்ற வள்ளுவர் விழைவு, நம் அறிவுக்குத் தேவையான, நமக்கு ஏற்றக் கல்வி பகுதியைத் தேர்ந்தெடுத்துக் கற்கும் மேல்நிலை, மற்றும் கல்லூரிக் கல்வியைக் குறிக்கிறது! அடுத்து ‘கற்றபின் நிற்க அதற்குத் த’ என்பது பட்டமேற்படிப்பு , மற்றும் வாழ்க்கைப் பணி குறித்தது.

இவ்வகையில் கற்க என்பது தொடக்கக் கல்வியையும், கசடற என்பது உயர்பள்ளிக் கல்வியையும், கற்பவை என்பது மேல்நிலை, மற்றும் கல்லூரிக் கல்வியையும், கற்றபின் நிற்க அதற்குத் தக என்பது பட்டமேற்படிப்பு, மற்றும் வாழ்க்கையையும் தொடர்ச்சியாகக் குறிக்கிறது! இந்தப் பொருள் பதிய கல்விநிலைக்குப் பொருத்தமாக உள்ளதல்லவா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *