மார்கழி மணாளன் 11 ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் – வடபத்ரசாயி
க. பாலசுப்பிரமணியன்
மலர்வனத்தில் மலர்ந்த மழலை
மாலனைத்தேடி மண்வந்த மங்கை
மாதர் மனம் கவர்ந்த கோதை
மார்கழிப் பாவை மாதருக்கு கீதை !‘
விஷ்ணுசித்தன் அறியாத மாயை
விஷ்ணுவின் சித்தம் அறிந்த ராதை !
விடியலிலே கண்ணனைக் காணும் போதை
வேங்கடனை நாடிச் சென்றாள் இந்த சீதை !
கோகுலனுக்குக் கோர்த்து வைத்த மாலை
கோதை அணிந்தே கேட்டாள் நித்தம் காலை
“குறையோ? கண்ணா !! உனக்கிணை இது சரியோ?
இறையே ! உயிரே ! இதயத்தில் இடம் உளதோ ?”
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி கண்டு
சொல்லிழந்து உணர்விழந்து சித்தனுமே
செயலிழந்து நிலையிழந்து நின்றான்
சோதனையோ? மாதவனேயென வியந்தான் !
ஆண்டவளின் அன்பில் வளர்ந்த அரங்கனும்
ஆதவனின் ஒளிபோல் அவளை அணைத்தான்
ஆயிரம் பாசுரங்கள் அண்டங்களில் ஒலிக்க
அரங்கனின் அருளாட்சி ஆண்டாளின் சந்நிதியில் !!
கோவிந்தனிடம் கோதை கொண்ட காதல்
குவலயமே வியந்திடும் உறவின் தேடல் !
பாவையவள் பாசமுடன் பாடிட்ட பாவை
பாரினிலே பாவையர்க்குக் காதல் பாதை !