மார்கழி மணாளன் 21 – நைமிசாரண்யம் – தேவராஜப் பெருமாள்
க. பாலசுப்பிரமணியன்
நான்முகன் விடுத்த சக்கரம் நைமிசாரண்யம் வந்தது
நானிலம் போற்றும் வண்ணம் விடியலைத் தந்தது
நான்மறை போற்றிட நல்லோருக்குப் புகல் தந்தது
நாதங்கள் முழங்கியே நாரணன் புகழ் சொன்னது !
மலர்வண்ணம் கனிவண்ணம் எழில் பொங்கும்
வான்மின்னும் கான்வண்ணம் மனம்கொள்ளும்
இறைபோற்றும் வேள்வி பெருக்கும் ஒளிவண்ணம்
இசையோடு இயல்சேர்க்கும் வேதியர் ஒலிவெள்ளம் !
வான்விட்டு மண் வந்து தவம்செய்த விண்ணவரும்
ஊன்விட்டு உயிர்தொட்டு மனம் காக்கும் யோகியரும்
இறைமட்டும் தேடி அமர்ந்த இனிய நைமிசாரிண்யம்
இயற்கையை இசைத்து இறைவன் படைத்த காவியம் !
மரணத்தை வெல்ல வரம்பெற்றான் விருத்தன்
மதம்கொண்ட களிறுபோல் மயக்கம் கொண்டான்
மனமுடைந்த இந்திரனும் மாலனின் சொல்கேட்டு
மாதவத்தோன் ததீசியிடம் எலும்பைப் பெற்றான் !
வஜ்ராயுத்தில் வளைந்தது விருத்தனின் ஆணவம்
வானவர் யோகியர் மோனத்தில் மலர்ந்தது கானகம் !
மறைகளை போற்றிடும் மாதவர் காண மாலனும் வந்தான்
மங்கலம் பொங்கிட மானுடம் தழைத்திட மார்கழி மணாளன் !