மயான வெட்டியான் தொழில் புனிதமா? சாபமா?

0

து. ஆர்த்தி சரவணன்

மரணத்தைப் பற்றி நான் என்றுமே சிந்தித்துப் பார்த்ததில்லை. பெண்ணாகப் பிறந்தகாரணத்தால் மயானம் செல்லும் வாய்ப்பு கிட்டியதில்லை. நகரத்தில் பிறந்ததாலே இறப்பிற்குப் பின் செய்யப்படும் சடங்குகளைக் கூட முறையாகப் பார்த்ததில்லை. ஆனால் என் திருமணத்திற்கு பின்பு நகரத்தில் இருந்து தென்மாவட்டம் வந்து விட்டேன். ஒரு முறை இங்கு ஓர் இறப்பில் கலந்து கொள்ளும் போதுதான் வெட்டியான் தொழில் செய்பவர்களை இப்பகுதி மக்கள் நடத்தும்விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இச்சடங்கிற்காக அவர்கள் பணம் பெற்றதைப் பார்த்தேன். அந்த வெட்டியான் தன் தோளில் இருந்த துண்டை தன் கையில் ஏந்தி அந்த பணத்தை மிகப் பணிவோடு பெற்றுக் கொள்ள, அதைப் போட்ட பெரியவரோ சற்று தள்ளி நின்று அதை அந்தத் துண்டில் போட்டதைப் பார்த்து அதிர்ந்து போனேன். அன்றுதான் என் மனதில் இவர்கள் செய்யும் தொழில் புனிதமா? இல்லை சாபமா? என்ற வினா எழும்பியது.

இந்த நிலையைப் பார்த்தபோது இவர்களைப் பற்றி இவர்களின் வாழ்க்கையின் சில அவலங்களைப் பகிர விரும்பி இக்கட்டுரையை நான் எழுத விளைகிறேன்.

பொதுவாக இந்த வெட்டியான் தொழில் செய்பவர்களைப் பற்றியக் கட்டுரைகள் சிலவற்றை நான் படித்திருக்கிறேன். அதில் அவர்கள் செய்யும் தொழில் புனிதமான தொழில், இறந்த உடலை முறையான எரியூட்டுவது மிகவும் சிறந்த ஒரு செயல் என்றெல்லாம் நான் படித்திருக்கிறேன்.

ஆனால் ஒரு கேள்வி? ஏன் இதை ஐந்தாறு தலைமுறைகளாக தொடர்ந்து ஒரு சமூக மக்களே செய்து கொண்டு வரவேண்டும்? ஒரு வெட்டியானின் மகன் ஏன் ஒரு மருத்துவராகவோ, மாவட்ட நிர்வாகியாகவோ, ஒரு மந்திரியாகவோ, ஒரு முதலமைச்சராகவோ ஆகக் கூடாது. ஏன் ஆகவில்லை? ஏன் ஒரு வெட்டியான் சொந்த வீடு, நல்ல உணவு, நல்ல உடை என்ற ஒரு வாழ்க்கையை வாழ இயலவில்லை?

எனக்குத் தோன்றிய இக்கருத்துகள் அனைத்தும் இப்போது உங்கள் மனதிலும் எழுகிறது அல்லவா!

நம் தமிழகத்தில் வெட்டியான் தொழில் செய்பவர்களில் 98 சதவிகிதம் பேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் பல தலைமுறைகளாகத் தொடர்ந்து இத்தொழிலை மட்டுமே செய்து வருகின்றனர். அவர்களின் வறுமையின் காரணமாகவோ அல்லது மாற்றுத் தொழில் பெறும் வாய்ப்பு குறைவாக இருப்பதாலோ ஏனோ இதே தொழிலை தொடர்ந்து செய்ய வேண்டிய அவலத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.

பிணம் எரிப்பதற்கு அனுபவம் அவசியம் தேவை. பிணம் சீராக எரிய சில நுணுக்கங்களை இவர்கள் கையாளுகின்றனர். எனவே பிணம் எரிப்பது எளிதானது அல்ல. வருடத்தில் எல்லா நாளும் இவர்களுக்குத் தொழில் இருக்குமா என்றால் அது கேள்விக்குறிதான். சில முறை தொடர்ந்து 42 நாட்கள் கூட தொழில் இல்லாமல் இருப்பதும் உண்டு.

பிணம் எரிக்கும் தொழில் தவிர இவர்கள் எதற்கெல்லாம் அமர்த்தப்படுகின்றார்கள் என்றால், இறந்த விலங்குகளை அகற்றவும் (மாடு, ஆடு, பூனை, நாய்) சாலைகளில் விபத்தால் இறந்த உடல்களை அகற்றவும், இரயிலில் அடிபட்டு இறந்த விலங்குகள் மற்றும் மனித உடல்களை அகற்றவும் பயன்படுத்தப்படுகின்றனர். இதற்கு அவர்களுக்கு அளிக்கப்படுவது 100 லிருந்து 150 ரூபாய் மற்றும் ஒரு கால்பாட்டில் மதுபானமும் வழங்கப்படுகிறது.

அது மட்டுமின்றி பிணவறைகளில் பிரேத பரிசோதனை செய்யவும் பல நாட்களாகப் பல மாதங்களாக யாராலும் வாங்கப்படாத உடல்களை நல்லடக்கம் செய்ய இன்னும் சில நேரங்களில் இயற்கை சீற்றத்தால் இறந்த உடல்களை எல்லாம் அகற்றவும் பயன்படுத்தப்படுகின்றனர். மொத்தத்தில் மிகவும் மோசமான பாதுகாப்பற்ற தொழிலை மேற்கொண்டு வருகின்றனர் என்பது மறக்க முடியாத உண்மை.

மேற்கூறிய எந்த வேலையும் இல்லாத நிலைகளில்; கல்லுடைத்தல், மண் வெட்டுதல் போன்ற கூலி வேலைகளுக்கும் இவர்கள் செல்வதுண்டு. மொத்தத்தில் வாழும் காலத்தில் கைக்கும் வாய்க்கும் போதாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விடுகின்றனர். இத்தொழில் செய்பவர்கள் பலர், மயானத்தின் உள்ளோ அல்லது மயானத்தில் மிக அருகிலேயோ குடியிருக்கும் நிலையில் உள்ளனர். எனவே இவர்களுக்கு மற்றவர்களோடு இணையும் வாய்ப்பும் மிகக் குறைவாக இருப்பதாலோ என்னவோ தாழ்த்தப்பட்ட சமூகத்தின் அரசாங்க சலுகைகள் கூடக் கிடைப்பதில்லை என்பதே உண்மை.

அவர்களுடைய குடும்பத்தில் உள்ள பெண்கள் குழந்தைகள் யாவரும் பிணம் எரிக்கும்போது உதவுவது என்பது தலைமுறை தலைமுறையாக ஏற்படும் ஒரு நிகழ்வாகவே உள்ளது. எனவேதான் இவர்களது தலைமுறையினர் வெகு சுலபமாக இத்தொழிலைக் கையிலெடுத்து கொண்டு குடும்ப வறுமை காரணமாக சம்பாரிக்க துவங்குகின்றனர். வெட்டியான்களின் மனைவிகள் கூட கணவரின் உதவியே இல்லாமல் இரண்டுபேர்கள் மட்டுமே இணைந்து பிணத்தை எரிப்பதும் உண்டு என்று கேட்ட தகவல் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

அரசு தரப்பில் இவர்களுக்கான நலத்திட்டங்கள் என்று பார்த்தால் மிகவும் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே உள்ளது. நடைமுறையில் இத்திட்டங்கள் உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம், திரு.ஸ்டாலின் அவர்கள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த போது சென்னை மாநகராட்சியில் நிரந்தரப் பணியில் இல்லாமல் தற்காலிகப் பணியில் இருந்த 173 பிணம் எரிக்கும் தொழிலாளிக்கு ‘மயான உதவியாளர்கள்’ என்று பணிநியமனக் கடிதம் வழங்கப்பட்டது. மாதச் சம்பளமாக ரூ.5,000 வழங்குமாறும் பண நியமனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இம்மயான உதவியாளர்களுக்கு சென்னை மாநகராட்சியில் பணிநியமனம் அளித்தது போல கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் கிராமங்களில் இருக்கும் பிணம் எரிக்கும் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அப்படி நடக்கவில்லை. இந்த 173 தொழிலாளர்களை தற்போதைய நிலை என்ன என்பதைக் குறித்த சரியான விவரமும் தற்போது இல்லை. இதைத் தொடர்ந்து, “மயான வெட்டியான்கள்” சங்கம் என்று ஒரு சங்கம் நிறுவப்பட்டு அதன் முதல் மாநில அளவிலான மாநாடு, 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரையில் நடந்தேறியது. இம்மாநாட்டில், பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. மாத ஊதியம், வெட்டியான் தொழில் செய்யும் பெண்களுக்கான பிரசவ கால உதவித்தொகை, மருத்துவக் காப்பீடு, தடுப்பூசிகள் போடுவது, மருத்துவ பரிசோதனைகள், மாற்றுத் தொழில் வழங்குவது போன்றவை.

ஆனால், அதற்குப் பின் அந்த சங்கத்தைப் பற்றியோ கோரிக்கைகள் பற்றியோ தொடர்ந்து செய்திகள் வரவில்லை என்பதே உண்மை. இத்தொழிலாளர்கள் பலருக்கு இச்சங்கத்தைப் பற்றியே தெரியவில்லை. இந்த மாநாடு அப்போது இருந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரிய அமைச்சர் திருமதி.ஏ. தமிழரசி முன்னிலையில் நடந்தது என்பது கூடுதல் தகவல். அரசாங்கத்தில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் அரசாங்கத்தின் பல சலுகைகள் கிடைக்கப்படுகின்றன. தலைமை பதவியில் இருப்பதில் இருந்து கடை நிலை ஊழியர் வரை அனைவரும் சம்பளம் சார்ந்த மற்றும் சம்பளம் சாராத பல உதவியைப் பெறும் நிலையில், (மயானங்களில்) தலைமுறை தலைமுறையாக பணிபுரியும் ஊழியர்களில் நிலைதான் என்ன? சமூக நீதியில் இருந்து இம்மக்களுக்கு சமஉரிமை கிடைக்கவில்லை (என்பதுதானே உண்மை).

மனிதக் கழிவினை அகற்றும் ஊழியர்கள் இருக்கக் கூடாது என்பதற்காகவும், மனித கழிவகற்றும் ஊழியர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்காகவும் அரசாங்கத்தால் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பிணங்களை எரிக்கும் தொழில் செய்பவர்களுக்கும் இப்படிப்பட்ட மறுவாழ்வு திட்டங்களும், நலவாழ்வு திட்டங்களும் நிச்சயம் வேண்டும். இறந்தவர்கள் பல காரணங்களுக்காக இறந்திருக்கலாம். தொற்று நோய்கள், ரேபிஸ் என்று சொல்லக் கூடிய நாய்க்கடியால் கூட இறந்திருக்கலாம். இறந்தவரின் உறவினர்கள் இதைப் பற்றி வெட்டியான்களிடம் தெரிவிப்பது மிகவும் அரிதே என்ற நிலையில் பாதுகாப்பு சாதனங்களான கையுறை, காலுறை போன்றவை அல்லாமல் இவர்கள் அப்பிணங்களைக் கையாண்டு எரிப்பதனால் இவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

தொடர்ந்து இப்பிணவாடைகளை சுவாசிப்பதாலும் இவர்களில் பலருக்கு சுவாச சம்பந்தமான பிரச்சினைகள் அதிகமாகவே இருக்கிறது. பல காரணங்களுக்காக இறந்து போன உடல்களையும் சில சிதைந்து போன எரிந்து போன உடல்களையும் தகனம் செய்யும் போது இவர்களுக்கு மன ரீதியான பாதிப்புகள் கூட ஏற்படலாம் என்பதே உண்மை. இதனால் தான் இவர்களில் அனைவருமே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். 25 பிணம் எரிக்கும் தொழிலாளர்களில் ஒருவர் கண்டிப்பாக நுரையீரல் பாதிப்புக்குள்ளாகின்றார்(என்பது உண்மை).

திண்டுக்கல் மாவட்டம், குமரன் நகரைச் சேர்ந்த நடராஜன் என்ற இளைஞர் தனது தந்தை இறந்த பின் தனது 17 ஆவது வயதில் இருந்து இத்தொழிலைச் செய்து வந்தார். அவர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி நோய்வாய்ப் பட்டு சிகிச்சை அளிக்க பணம் இல்லாத காரணத்தால் தனது 37 வயதில் இறந்து போனார் என்பதையும் அவர் சகோதரி தற்போது தான் அனாதையாக நிற்பதைக் கண்ணீரோடு கூறியபோது அது நெஞ்சை உருக்கச் செய்தது. சிலர் இறப்பிற்குக் காரணம் கூடத் தெரிவதில்லை. அவர் தொற்று நோயால் கூட இறந்திருக்கலாம் என்பதை விழிப்புணர்வு இல்லாமல், வெள்ளந்தியாக இம்மக்கள் கூறுவது மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது.

மயானங்களைப் பராமரிப்பது, மயானங்களை ஏற்படுத்துவது, அரசாங்கம் மற்றும் அரசாங்கங்களின் பணி என்றால் மயான பணியாளர்களை நியமிப்பது அவர்களுக்கான சலுகைகள் வழங்குவதும் அரசாங்கத்தின் பணி என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்படி பிணம் எரிக்கும் தொழில் செய்யும் ஊழியர்களுக்கான பணி நியமனம், மாதச்சம்பளம், மருத்துவப் பரிசோதனை முறைகள், தடுப்பு ஊசிகள், எரிப்பதற்கான தற்காப்பு சாதனங்கள் போன்ற அனைத்திற்கும் வழி வகுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

தலைமுறை தலைமுறையாக இப்பணியைச் செய்யும் தொழிலாளிகளின் இன்றைய தலைமுறையினருக்காக கல்வி உதவி, மாற்றுத் தொழிலுக்கான உதவிகளையும் அரசாங்கம் மனதில் கொள்ள வேண்டும்.பிணம் எரிப்பதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பவர்களின் மனநிலை பாதித்து குடிப்பழக்கத்திற்குப் பலியாகாமல் இருக்க மனநிலை நிபுணர்களைக் கொண்டு சிறப்பு கலந்தாய்வு கூட வழங்கலாம் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.

ஐந்தறிவு படைத்த யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கப் புத்துணர்வு முகாம் நடத்தும் போது, இறந்து போன நமது உறவினரையும் நமது நண்பர்களையும் நமது உற்றார்களையும் சீராக தகனம் செய்யும் நம் வெட்டியான் நண்பர்களுக்கான அனைத்து அடிப்படை மற்றும் நிதி வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துவது நம்மைப்போன்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடமை என்பதை உணர்ந்து இக்கட்டுரையை வழங்குகிறேன். நிச்சயம் மாற்றம் உருவாகும் என்ற நம்பிக்கையோடு!.

__________________________________

து. ஆர்த்தி சரவணன்
ஆராய்ச்சியாளர்
காந்திகிராம பல்கலைக் கழகம்
[அரசியல் அறிவியல் துறை]
திண்டுக்கல்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.