அனுமன் அறுபது – (ஒரு கவிதை மாலை) (4)
க.பாலசுப்பிரமணியன்
நான்காம் பத்து
சாந்தமூர்த்தி உனக்குச் சாந்தினிலே காப்பிட்டால்
சங்கடங்கள் நீக்கிடுவாய் சகலமும் தந்திடுவாய்
காந்தமென இழுத்துக் கைபிடித்துக் காப்பவனே
காலமெல்லாம் காத்திடுவாய் காகுத்தன் சோதரனே !
மல்லோனின் மதம் அடக்கியது கால்வலிமை
வில்லோனின் மனம் வென்றது அன்புடைமை
வைதேகி துயர்நீக்க வளர்ந்தது தோள்வலிமை
வணங்கி நின்றோரின் நலம்காக்கும் அருளு டமை !
வால்வளர்ந்த நெருப்பை வள்ளலாய் தந்தவனே
வான்வியந்த இலங்கையின் வாசத்தை அழித்தவனே
வனம்காத்து வைதேகி நலம்காத்து வந்தவனே
வரும்துயர் காத்து வினைதீர்க்கும் வல்லவனே !
மங்கிடும் பார்வையும் மயங்கிடும் மதியும்
மறைந்திடும் நினைவும் மருண்டிடும் உறவும்
மடியினில் ஏந்தி மலரடி அடைந்தேன்
மடிந்திடும் வரையில் மாருதி காப்பாய் !
பிறவிப் பெருங்கடல் கடந்திட எளிதில்
பிறவாப் பெருமை பெற்றிட விரைவில்
பூரண நிலவாய் ஒளிர்விடும் மாருதி
பொழுதினில் வருவாய் போற்றினேன் திருவடி.!
தாயினைத் தேடிடும் கன்றினைப் போல்
சேயென வந்தேன் சந்நிதி முன்னே
பேயென அலையும் மனதினைக் காத்து
தாயெனத் தருவாய் அன்புடன் அருளை !
பின்னோக்கி ஆர்ப்பரிக்கும் இளமையின் இழுப்பும்
முன்னோக்கி மோப்பமிடும் மூப்பின் தவிப்பும்
உள்நோக்கா உதிரிப்பூ வாழ்க்கை உருமாற
உலகளந்த நாயகனே ! உள்ளிருந்து அருள்வாய்!
கள்ளுண்ட வண்டாகக் களம்நாடும் கள்ளமனம்
காலத்தின் இரையாகி காமத்தின் கோலமிடும்.
கள்ளமில்லா நெஞ்சுடையோய் ! கருணைக் கடலே !
காகுத்தன் வழிகாண காமத்தை அழித்துவிடு!
கருவோடு வந்தது எருவோடு போகுமென்றும்
உருவான வண்ணம் தெருவோடு செல்லுமென்றும்
அறியாத மனத்தில் அடங்காத ஓலத்தின்
தணியாத தாகத்தை தணித்திடு தந்திரா.!
வந்தது அறியா வாழ்வென்று அறிந்தும்
செல்வது அறிந்த உண்மையை மறந்தும்
அறிந்தும் அறியா அரங்கமோ வாழ்க்கை ?
அறிவின் சிகரமே ! அனுமனே வழிகாட்டு !