வேர்பறித்துக் கிடக்கும் மரங்கள்!
-சிவ. விஜயபாரதி
நனைந்த பறவையின்
சிலிர்ப்பில் தெறிக்கும்
துளிகளின் பரவசம்போல்
எங்கள் இதயங்கள்!
வாழ்க்கைச் சாளரம் வழி
வந்துவிட்ட வசந்தங்கள்!
பட்டாம்பூச்சி சிறகடிக்க
வானம் விரித்த உறவுகளின்
கதகதப்புகள்!
சூரிய உக்கிரத்தில்
கடும் காற்றில்
மழைப் பொழிவில்
பனி உதிர்வில்
சிக்கிச் சிறகு விரிக்க
எத்தனித்த குருவிகளின்
ஏக்கப் பெருமூச்சுகள்!
இழுத்துக் கட்டப்படும்
கன்றின் ஏக்கமென
மடிபார்த்தே பழகிவிட்ட
வியாபாரிகளிடம்
கட்டவிழ்க்கப்படும்
எங்கள் பெண்மை குறித்த
சிலாகிப்புகள்!
இருப்பினும் கலவரப்படுத்தி
மிரட்சியூட்டும் மனப்பிரமைகள்!
உயர்பதவி
கல்வியின் உச்சம் எனப்
பூத்துக் குலுங்கினாலும்
வேர் பறித்துக் கிடக்கும்
மரமாகத்தான்
இன்னும்…