எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா 
கடவுள் ஒருநாள் தமிழரைப் பார்க்கத்
தமிழ்நாடு வந்தாராம்
தமிழர் வெறியாய் ஓடித்திரிவதைத்
தெரிவினில் கண்டாராம்
காரணம் புரியா நிலையில் கடவுள்
கைகட்டி நின்றாராம் !

தோரணம் கட்டித் தமிழர்கள் எல்லாம்
துடிப்புடன் நின்றாரும்
ஆரது ஆட்சியைப் பிடிக்கிற தென்று
அடிபட்டுக் கொண்டாராம்
வாயிலே வந்ததை வார்த்தைகள் கொட்டி
வாக்குகள் கேட்டனராம் !
தோழமை என்றவர் சொல்லிலே சொல்லி
சொத்தெலாம் குவித்தனராம்
நாளைய வளர்ச்சி எதனையும் எண்ணா
நல்லதைச் சுருட்டினராம்
வேரொடு களைவோம் ஊழலை என்றவர்
விண்ணென உயர்ந்தனராம்
வியர்வையில் நின்றவர் அத்தனை பேருமே
விக்கித்து நின்றனராம் !
மதுவினை ஒழிப்போம் என்றுமே சொன்னவர்
மதுக்கடை திறந்தனராம்
மதியினை இழந்து மற்றவர் நின்றிட
மரமென இருந்தனராம்
நீதியைக் கையில் எடுத்துமே நின்று
நிட்டூரம் செய்தனராம்
சாதியைக் காட்டி சமயத்தைக் காட்டிய
சரித்திரம் படைத்தனராம் !

வேதனையில் மக்கள் வாழ
விதம்விதமாய் வீடு கட்டி
காதலுடன் கார் வாங்கி
கணக்கின்றிப் பணம் பதுக்கி
உலக வங்கி அனைத்திலுமே
உழைப்பின்றி வந்த பணம்
உபயோகப் படும் என்று
ஒதுக்கி வைப்பார் பக்குவமாய் !
படிப்பறியார் உடுப்பறியார் படுத்திருக்க இடமறியார்
பசியாற வழியின்றி பரிதவிக்கும் நிலையினிலே
துடித்தெழுந்து ஓடிவந்து துயர்துடைக்கும் மனமின்றி
அடித்தெழுந்து பேசுகின்றார் ஆட்சியிலே அமர்வதற்கு !
காந்திபோட்டி போடவில்லை கவிதாகூர் விரும்பவில்லை
சாந்திமனம் கொண்டவர்கள் சண்டைதனை விரும்பவில்லை
சரியான தேர்தலெனின் சண்டைக்கே இடமில்லை
சனநாயகம் தளைக்கச் சரியான வழிசமைப்போம் !
குத்து வெட்டு அத்தனையும்
சுத்தி வந்து பார்த்துவிட்டு
சத்தியமாய் தமிழ் நாட்டை
தான் நினைப்ப தில்லையென
உத்தமராம் எம் கடவுள்
உடனடியாய்ச் சென்று விட்டார்
அத்தனைபேர் மனம் மாற
அவர் இரங்க வேண்டுவமே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *