மீன்கள் பெயர் நிலாக்கள்
ராஜகவி ராகில்
‘ இந்தச் சூரியன் இப்படியே நிற்கக் கூடாதா ?’
என் ஏக்கம் பெருமூச்சானது.
இன்று ‘யூனிவர் சிட்டி ‘ வாழ்க்கை
எனக்கு முற்றுப் புள்ளி தினம் .
சோகத்துடன் அவிழ்ந்து கொண்டிருந்தது
பிரியாவிடை விழா .
எல்லோரும் செயற்கைப் புன்னகை தேடி
தோற்றுக் கொண்டிருந்தார்கள் .
ஒருகடல் கண்ணீர்
எனக்குள் .
சில வருடங்களின் சேமிப்பு
தீர்ந்து போகிறது இன்றோடு .
என் உடல் விழா மண்டபத்தில் இருந்தாலும்
இதயம் அலைந்தது .
எனது உடலில் எதுவுமே துடிக்கவில்லை
உன்னைத் தவிர .
‘ இப்பொழுது ஒரு கவிதை ‘
‘துளியாக வந்தேன்
கடலாகச் செல்கிறேன்
இந்த வானம்
வெற்றிடமாகச் செல்கிறது
என் நிலா இன்றி ‘
ஒரு நண்பனின் காதல்
கண்ணீராக வடிந்து முடிந்தது .
என் அருகே நீ பூத்திருந்தாய் .
‘ எனக்குள் பூத்திருப்பதை நீ பார்க்காமல்
இருக்கிறாயே ‘
என் இதயம் நீர் சுரந்தது .
‘ கவிதை சூப்பர் ‘
என்றாய் நீ .
‘ இது கவிதை இல்ல ….அவன் தன் உயிரை
அவளிடம் பரிமாறியிருக்கிறான்’ என்றேன் .
‘ எப்போ திருமணம் ?’
திடீரெனக் கேட்டேன் .
‘யாரோடு ?’
‘ என் வாழ்க்கையில திருமணமே கிடையா …’
நான் வெடித்துப் போனேன்
துடித்துப் போனேன் .
பிரியா விடை
பிரிந்தது .
ஒரு மரத்தடியில் சோகத்துடன் ஒதுங்கினேன்
நீ பக்கத்தில் வந்தாய் .
‘ நான் செல்லட்டா …’
திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தாய் நீ .
‘ திருமணம் செய்யுறதில்ல எண்டு ஏன் சொன்னீங்க …?’
‘ ஏற்கனவே எனக்குத் திருமணம் ஆகிட்டு ‘
நான் மீண்டும் துடித்துப் போனேன் .
‘ உங்களை மனசால மணமுடிச்சி ரண்டு வருசமாச்சி ‘
நான் உயிரால் உன் கை பற்றினேன் .
‘ நாம் பெஸ்ட் கிளாஸ்ல பாசாகிட்டோம் ‘
என்றாய் நீ .
‘ காதல விட கஷ்டமான எக்ஸாம்
வேறொண்டும் இல்ல ‘
இனி
வாழ்க்கை இனிப்புதான் என்றாய்
முத்தத்தால்.