உள்ளத்தால் உயர்ந்துநிற்பார் !

0

   ( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா )

 

உடல்குறையை உளமிருத்தா

ஊக்கமதை உளமிருத்தி

செயற்கரிய பலவாற்றி

திறலுடனே விளங்கிநின்று

நலமுடனே இருக்கின்றோம்

என்றுலகை வியக்கவைக்கும்

மாற்றுத்திறன் மிக்காரை

மனமார வாழ்த்திநிற்போம் !

 

ஆண்டவன் படைப்பினிலே

அரைகுறையாய் பிறந்தாலும்

ஆண்டவனே வியந்துநிற்க

அவர்செயல்கள் ஆற்றுகிறார்

வேண்டாதார் எனவொதுக்கும்

நிலையதனைத் தகர்த்தெறிந்து

வியக்கவே  வைத்துநிற்கும்

மேனிலையை வாழ்த்திடுவோம் !

 

ஊனமுற்றார் எனவழைக்கும்

வார்த்தைதனை பொய்யாக்கி

வானமென உயர்ந்துநின்று

வகைதொகையாய் பலவாற்றி

தேர்ந்தெடுத்த வாழ்க்கைதனை

சிறப்புடனே வாழவெண்ணி

சீராகவாழும் அவர்

செம்மையினை வாழ்த்திடுவோம் !

 

நெஞ்சமதில் உறுதிகொண்டு

துஞ்சாமல் பலதொட்டு

வஞ்சமிலா மனத்துடனே

வாழவெண்ணி வாழுமவர்

ஊனமுற்றோர் எனக்கூறும்

வட்டமதை விட்டுவிட்டு

வாழ்நாளை மகிழ்வாக்கும்

மனத்திடத்தை வாழ்த்திநிற்போம் !

 

ஊனமது உடலில்லை உள்ளத்தில் இருக்கிறது

ஞானமது வந்துவிட்டால் நம்முணர்வும் விழித்துவிடும்

உள்ளமெலாம் ஊனம்வைத்து ஊனமதை நாம்பழித்தால்

ஊனமுற்றார் ஊனமுறார் உள்ளத்தால் உயர்ந்துநிற்பார் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *