ஜெயலலிதா
-தமிழ்த்தேனீ
இவரைப் போல் படித்த தைரியமான விவேகமுள்ள நிர்வாகத்திறன் படைத்த மனதிடமுள்ள ஆற்றல் நிறைந்த முதல்வர் இனிக் கிடைப்பாரா தமிழ் நாட்டுக்கு…? இறைவன் யோசித்திருக்க வேண்டும்.
இறைவன் எப்போதுமே நல்லவர்களைத்தான் தேர்ந்தெடுத்து சீக்கிரம் அழைத்துக் கொள்கிறான்.
அவருக்கு நல்லதைச் செய்துவிட்டான் இறைவன்; ஆனால் நாட்டுக்கு?
வெற்றி மட்டுமே கண்டு வந்த
உண்மைக்கே உண்மையான
உன்னை வெற்றி கொண்டது யார்?
எதையும் தாங்கும் உன் இதயம்
உன்னை ஜெயிக்க யாரால் முடியும்
என்றெண்ணிப் பூரித்தோமே
உன்னை ஜெயித்தது யாரென்று
சொல்லாமல் உன் புன்னகையை
உறைய வைத்தாயே!
உண்மைக்கு உரைவடித்த நீ
புன்னகையை ஏன் உறைய வைத்தாய்?
உள்ளொன்று வைத்துப் புறமொன்று
பேசத் தெரியாதே உனக்கு!
உன் உள்ளே எதுவந்து உனைச் சாய்த்தது?
பொன்போன்ற திருமகளே எது உனை மாய்த்தது?
யாருக்கும் அடங்காத பெரும் பெண்மை நீ
யாருக்கு இப்போது அடங்கிப் போனாய்?
உன் பேருக்கே நெருங்காதே ஒரு தோல்வியும்
உன்னை நெருங்கி உன்னை மயக்கி விழிக்க
விடாமல் செய்தவர் யாரென்றே சொல்லாமல்
உள்ளுக்குள் உறைந்தாயே மக்கள்
மனதுக்குள் நுழைந்தாயே!
உறைகின்ற புன்னகையில் ஓராயிரம்
ரகசியம் அத்தனையும் ஒரு அசைவில்
சொல்லுவாயே அசையவிடாமல் உன்
புன்னகையை உறைய வைத்தது யாரென்று
சொல்லாமல் போய்விட்டாய்!
இனி ஒருகணமும்
மக்களுன்னை நினைவிலிருந்து
தள்ளவிடாமல் போய்விட்டாய்!
துள்ளுகின்ற குழந்தை முதல் தள்ளாத
கிழவி வரை மறக்க மாட்டார் மக்களுன்னை
நீயளித்த இலவசங்கள் அத்தனையும் உனதன்பை
உன் புகழை உலகிற்கே பறைசாற்றும்!
சந்தனப் பேழையில் செந்தமிழ்ப் பாவை
இந்திய நாட்டின் முப்படைச் சேவை
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
என்றே முழங்கிய வீரத் தமிழ்ப்பாவை
ராணுவ மரியாதை துப்பாக்கி முழக்கம்
மலரஞ்சலி எல்லாமே நினைவிடத்திலே அடக்கம்
செய்த சேவைக்கு மக்களின்
கண்ணீர் அம்மா அம்மா என்றே
கன்றுகள் கதறல் கிடைக்குமா எவர்க்கும்!
உனையன்றி மற்றோர்க்கு
வாராதுபோல் வந்த மாமணியே
அமைதியாய் இறைவனடி சேர்ந்தே ஆசியை வழங்கு
அமரர் உலகுக்கெய்து இரும்பு மனுஷியா
நீ வானிலே மின்னும் தங்கத் தாரகை!