இலக்கியம் சுட்டும் நீா்ச்சூழலும் சுகாதாரமும்
-முனைவர் மா.பத்ம பிரியா
நீர்க்கோளம் (Hydrosphere) என்பது மாறுபட்டது. இதில், புவியிலுள்ள அனைத்து நீர்நிலைகளும் இடம்பெற்றுள்ளன. பெருங்கடல் (Ocean,) கடல் (Sea), ஏரி (Lake), ஆறு (River), குட்டை (Pond), நிலத்தடி நீர் (Underground Water) ஆகியன. இவையனைத்தும் நீராதார வகையில் அடங்கும். நீர்ச்சூழல் பயன்பாட்டு அடிப்படையில் இரண்டு வகைப்படும். அவை,
நீர்வாழ் சூழல் மண்டலம்
(ஆறு, ஏரி, குளம், கடல்)
1. நன்னீர் சூழல் மண்டலம்
2. உவர்நீர் சூழல் மண்டலம்
சங்க இலக்கியம், ‘நீா்’ உயிர்களின் வாழ்வியல் ஆதாரம். நீா்வளம் இல்லையெனில் இவ்வுலகம் இயங்குவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
“நீர் இன்று அமையா உலகம்…” (நற்றிணை. 1)
நீா் வளமே உயிரியப் பன்மை பல்கிப் பெருக வகை செய்யும் முக்கிய அங்கம், நீர் பல்வேறு அம்சங்களைக் கொண்டு அனைத்து உயிரினங்களும் வாழ தேவையாகின்றது எனவும்,
“மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே” (புறநானூறு. 107)
நீர்ச்சூழல் குறித்த சிந்தனைகளைப் பதிவு செய்துள்ளது. பழந்தமிழா்கள் நன்னீராதாரங்களின் பரப்பளவைக் கொண்டு அதனை பல்வேறு பெயரிட்டு அழைத்துள்ளனா். பழந்தமிழகத்தில் நன்னீராதாரங்கள் குளம், குட்டை (கூவல்), நீரோடைகள், அருவி, சுனை, கேணி என்று அழைக்கப்பட்டன. பழந்தமிழர் நீர்வளத்தைச் சுகாதரத்துடனும் பேணியுள்ளனர். பழந்தமிழ் இலக்கியங்கள் நன்னீராதாரங்களைப் பாடுபொருளாக்கி மாந்தர்களின் நீர்ச்சூழலறிவைப் பறைசாற்றுகின்றன என்பதே ஆய்வுரை.
நீரும் மனித நாகரிகமும்
நாகரிகங்களின் தோற்றுவாய் நீா்நிலைகளையொட்டியே என்பதற்குப் பல்வேறு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. நீரானது புவியிலிருந்து சில கி.மீ. உயரம் வரை நீர்மமாகவோ (Liquid), திண்மமாகவோ (Solid) இருக்கும். நீர்க்காரணி இருக்கும் இடங்களைப் பொறுத்துப் பல்வேறு நாகரிகங்கள் தோன்றின. ஆறு, ஏரி, குளம், கடல் இத்தகைய நீராதரங்கள் வழியே மனிதர்களின் வாழ்வியல் மாறுபட்டு இருப்பதை “மனித நாகரிகம்” குறித்த ஆய்வில் காணமுடிகிறது.
- “மிசிசிபி மிசெளரி ஆற்றங்கரையில் உள்ள அமெரிக்க நாகரிகமும்
- தேம்சு ஆற்றங்கரையில் உள்ள ஆங்கிலேய நாகரிகமும்
- டான், வால்கா நதிக்கரையிலுள்ள உருசிய நாகரிகமும்
- ரைன் ஆற்றங்கரையில் உள்ள செர்மானிய நாகரிகமும்
- போ ஆற்றங்கரையில் உள்ள இத்தாலிய நாகரிகமும்
- யாங்கஸ்டியாங் நதிக்கரையில் உள்ள சீன நாகரிகமும்
- நைல் நாகரிகமும்
- கங்கை ஆற்றங்கரையில் உள்ள ஆரியர் நாகரிகழமும்
- காவிரி ஆற்றங்கரையில் உள்ள தமிழா் நாகரிகமும்
ஒன்றல்ல.”1 நாகரிக வேறுபாடு நீா் நிலையின் பாற்பட்டதே என்பது புலனாகின்றது. தமிழ் இலக்கியத்தில் கங்கை, காவிரி, வையை, பேரியாறு, சேயாறு, அயிரி, பெண்ணை, பொருநையாறு, பஃறுளியாறு, குமரியாறு, சோணையாறு பதிவுசெய்யப்பட்டுள்ளன.
நீர் வளத்தின் அவசியம்
பூமியில் உள்ள நீரைப் பாதுகாக்கத் தவறினால் நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டு பூமியே மாண்டுபோகும். “நன்னீர் தங்கத்திரவம் ஆகும். உலகில் 97.3% உப்பு நீர் உள்ளது. ஆனால் நன்னீர் 2.7% மட்டுமே உள்ளது. 2.7% நன்னீரில், 2.03% பனிக்கட்டியில் உறைந்து காணப்படுகிறது. நன்னீர், நிலத்தின் மேல்மட்ட நீரிலும், நிலத்தடி நீரிலும் காணப்படுகிறது. நிலத்தின் மேல்மட்ட நீரில் 2.09%மும் நிலத்தடி நீரில் 0.6%மும் காணப்படுகிறது.”2 நாம் நன்னீர் ஆதாரங்கள் பற்றிய விழிப்புணா்வு பெற்றிருத்தல் அவசியம்.
நீர்வளம் புவியமைப்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தவல்லது என்பதை வள்ளுவம் சான்று பகரும்.
“விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண்ப தரிது”3
வான்மழை பெய்யாது போனால் புவியில் உயிர்ச்சுழற்சி இல்லை. ஆவியாதல் முறையில் வளிமண்டலத்துடன் நீர் அமைப்பு மறைமுகமாகத் தொடர்பு கொண்டுள்ளது என்பர் அறிவியலார். “நீர் என்பது வானத்திலிருந்து வருவது என்பதால் அதனை, ‘அமிழ்தம்’ என்றே வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.”4 ஆதலால், இலக்கியங்களில் பல பெயர்களில் நீர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.
நீரின் சுழற்சி பற்றிய சூழலியலறிவு
பூமிக்குத் தேவையான தண்ணீர் நீரியல் சுழற்சி மூலம் கிடைக்கின்றது என்பது அறிவியல் உண்மையாகும். “இந்த நீரியல் சுழற்சியில், நீராவி குளிர்ந்து மேகமாக மாறுகிறது. காற்று இம்மேகங்களை எடுத்துச் சென்று உலகம் முழுவதும் நீராவியைப் பரவச்செய்கிறது. மேகங்களால் ஈரப்பதத்தை தாங்கிக் கொள்ள முடியாதபோது அது மழை அல்லது பனிவடிவில் விடுவிக்கப்படுகிறது. இந்நீர் நிலத்தினடியில் ஊடுருவிச்சென்று தண்ணீர்ப் பற்றாக்குறையை நிவா்த்தி செய்கிறது அல்லது நேரடியாக ஏரிகள், ஓடைகள் மற்றும் ஆறுகளில் கலக்கிறது.”5 இத்தகைய நீரியல் சுழற்சி அறிவினைப் பழந்தமிழா் பெற்றிருந்தனா். இதனை நற்றிணை சான்று பகா்கின்றது.
“குணகடல் முகந்து, குடக்குபு ஏர்பு இருளி,
மண்திணி ஞாலம் விளங்க, கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி, எவ்வாயும்
தன்தொழில் வாய்த்த இன்குரல் எழிலி” (நற்றிணை.153:1-4)
‘கதிரவன் கடல்நீரை முகந்து மழை பொழிதல்’ என்னும் அறிவியல் நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
“கடல்நீர் முகந்த கமஞ்சூல் எழிலி
குடமலை யாகத்துக் கொள்ளப்(பு) இறைக்கும்”( கார்நாற்பது, பா.33)
என்ற பாடற்குறிப்புகள், கடல்நீர் மேகமாக மாறி, மேற்குமலையில் மழையைத் தந்த செய்தியைத் தெரிவிக்கிறது.
“பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடுகொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி”
(முல்லைப்பாட்டு.4-5)
“நிறையிரும் பௌவம் குறைபட முகந்து கொண்டு,
அகல்இரு வானத்து வீசுவளி கலாலின்” (குறிஞ்சிப்பாட்டு.47-48)
“திரையிரும் பனிப்பௌவம் செவ்விதா அறமுகந்து,
உரஉரும் உடன்று ஆர்ப்ப, ஊர்பொறை கொள்ளாது”
(பரிபாடல்.7:1-2)
என்ற பாடலடிகள் நீரியல் சுழற்சிக்கான சான்றாதாரங்கள் ஆகும்.
நீர்மாசு போக்குதல்
நிலத்தால் திரிந்துபோன நீரின் சுவையை மேம்படுத்த தமிழர்கள் நெல்லிக் கனியினைப் பயன்படுத்தினர். கிணற்றுநீர் உவராக இருப்பின் அதனுள் நெல்லி வேரினை இட்டுள்ளனர். ஊருணியின் கரைகளில் நெல்லி மரத்தை வளர்த்துள்ளனர். நீரைத் தூய்மைப்படுத்திப் பருகியுள்ளனா். இயற்கை சுவையேற்றுத்திறன் அன்று இல்லை. “இன்று நீரைச் சுத்தப்படுத்த இரசாயன வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. படிகாரம், குளோரின் போன்றவை இவற்றுள் அடங்கும். பொட்டாசியப் படிகளும் மருத்துவத்தின் புண்களை ஆற்றவும், காகிதத் தொழிலிலும் நீரைச் சுத்தமாக்கவும், பெட்ரோலியத்தின் நாற்றத்தை அகற்றவும் பயன்படுகிறது….”6 செயற்கையான நீர் சுவையூட்டல் ஆபத்து என்பதை மறந்துவிட்டோம்.
பழந்தமிழர்கள் செம்மண் நிலத்தில் ஊறிய நீரைச் சிறிய பானையில் வைத்து தெளிந்த நீராக பிரித்தெடுத்துப் பயன்படுத்தியுள்ளனா்.
“பூவிற் படுவில் கூவல் தோண்டிய
செங்கண் சில்நீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி
யாம் கஃடு உண்டென, வறிது மாசு இன்று” (புறநானூறு.319:1-4)
“மாசு இன்று” என்ற அடிகள் கவனம் பெறுவன. மண்ணால் கலங்கிய நீரைத் தூய்மை செய்யவேண்டித் தேற்றா வித்தினை இட்டுள்ளனர். அவ்விதை நீரைத் தெளிவாக்கியுள்ளது. அதன் பின்னே நீரைப் பயன்படுத்தியுள்ளனர்.
“கலம்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக்
கலங்கிய நீர்போல் தளிந்து” (கலித்தொகை.142:62-63)
கலித்தொகையில் நீர் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு சுட்டப்படுகின்றது. தற்போது தண்ணீரைச் சுத்தம்செய்து வழங்குவதாகப் பல வியாபார நிறுவனங்கள் விளம்பரம் செய்தாலும், பெரும்பாலும் அவை கெடுதலையே செய்கின்றன. “நிலத்தடி நீரையெடுத்து அதனை ‘ரிவர்ஸ் ஓஸ்மாசிஸ்’ என்ற முறையின் கீழ் சுத்திகரிக்கும்போது இயற்கையாகத் தண்ணீரில் இருக்கும் அனைத்துத் தாது உப்புகளும் பிரிக்கப்பட்டு தண்ணீரின் இயற்கையான சுவை குறைந்துவிடுகின்றது. சுவை குறைந்த தண்ணீரைச் சுவையாக்குவதற்காக ‘ஓசோனைஸ்’ செய்து சுவையேற்றுகின்றார். இந்த ‘ஓசோனைஸ்’ செய்யப்பட்ட தண்ணீரைத் தொடர்ந்து பயன்படுத்தினால் பற்கள், எலும்புகள் பொடிந்துப்போகும் எனவும், உறுதித்தன்மை குறைந்துபோகும் எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.”7 நீர் பற்றாக்குறையும், தரமற்ற குடிநீரும் இன்றைய வாழ்வுக்குச் சாபக்கேடு. உடல் நல மேம்பாட்டினை முன்னிட்டு இயற்கை சுத்திகரிப்பு முறையை கையாளப் பழந்தமிழ் நூல்கள் வழிகாட்டுகின்றன.
நீர்நிலைப் பாதுகாப்புக்கான தெய்வநம்பிக்கை
பழந்தமிழர், நீர்நிலைகளை மாசுபடுத்தாமல் பாதுகாக்கக் கருதியே அங்குத் தெய்வங்கள் உறைவதாக நம்பிக்கை வைத்திருந்தனா். தெய்வ அச்சத்தின் காரணமாக நீா்மாசு தடுக்கப்பட்டுள்ளது. “மலைக்காடுகளில் உள்ள சுனைகளில் ‘சூர்மகள்’, ‘அரமகள்’ என்னும் அணங்குகள் (மோகினிகள்) வாழ்கின்றனர் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆகையால், நீரைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தினர் என்பதை அறிய முடிகின்றது. மேலும், தெய்வங்களின் இடப்பெயர்ச்சிக்கும் நீர் ஊடகமாக இருந்துள்ளது.”8 நீர்நிலைகளில் உலவக்கூடியவா் ‘நீரரமகளிர்’ ஆவர். அங்கு வரையரமகளிர், பாவைமகளிர் என்னும் அணங்குகள் இருந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.
“உண்துறை அணங்கு……..” (ஐங்குறுநூறு. 28)
“அணங்குடைப் பனித் துறைத் தொண்டி…..” (ஐங்குறுநூறு.. 174)
“அருந்திறற் கடவு ளல்லன்
பெருந்துறைக் கண்டிவ……” (ஐங்குறுநூறு. 182)
“எக்கா் நண்ணிய எம்மூர் வியன் துறை
………………………………………..
சூரர மகளிர்………………………” (குறுந்தொகை. 53)
“நிலைத்துறைக் கடவுட்கு…………” (அகநானூறு.156)
“அணங்குடைப் பனித்துறை கைதொழுது ஏத்தி” (அகநானூறு. 240)
“நீர்இழி மருங்கில் கல்அளைக் கரந்தஅவ்
வரையர மகளிரின் அரியள்” (அகநானூறு. 342)
என்ற பாடல்கள் விளம்புகின்றன. அனைத்து உயிரினங்களும் வாழ நீர் முக்கியம். ஆதலால், நீர்நிலைகளில் தெய்வங்கள் குடியிருப்பதாக அச்சமுண்டாக்கி நீரினைப் பாதுகாத்துள்ளனா் என்பது தெளிவாகின்றது.
தொகுப்புரை
- மழையே நீர்வளத்துக்கு அடிப்படை. பண்டைத் தமிழகத்தில் மலைவளமும், காட்டுவளமும் சிறப்பாக இருந்தமையால் மழைவளம் குறைவின்றி இருந்தது. மழையினால் நீர்வளம் செழித்து இருந்தது.
- நீர்ச்சூழலறிவும்,நீர்நிலைப் பாதுகாப்பும் பழந்தமிழகத்தில் மேம்பட்டிருந்தன.
- நீர்வாழ் கடவுள் நம்பிக்கை கூட நீர்ப்பாதுகாப்புக் கருதியே எனலாம்.
உசாத்துணை நூல்கள்
- கடலூர் மணிமாறன், தமிழ்வளம், ப.120.
- என். ஆறுமுகம், வி. குமரேசன், சுற்றுச்சூழல் கல்வி, ப.228
- திருக்குறள்.16
- தொ. பரமசிவன், பண்பாட்டு அசைவுகள், ப.13.
- சா.சுரேஷ் (தமி.), நீராதிபத்தியம், ப.24
- கலைக்களஞ்சியம், தொகுதி6, ப. 533.
- கி. வசந்தராணி, பாட்டில் தண்ணீர் தொடரும் அபாயம், ப.7
- தொ. பரமசிவன், பண்பாட்டு அசைவுகள், ப.13.