பெண்ணே உனக்காக

சித்ரப்ரியங்கா ராஜா

 

பெண்ணாய் பிறந்ததற்கு நீதான்

பெருமைப் பட்டுக்கோ – அடி

கண்ணே நல்லன சில சொல்வேன்

வாங்கிக் காதில் போட்டுக்கோ

மகளாய் நீதான் பிறந்தவுடனே

குலமும் தழைத்திடும் – நீ

வளர்ந்து அறிவால் உயர இந்த

உண்மை விளங்கிடும்

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்

நீயும் வாழ்ந்திடுவாய்

கல்வியில் சிறப்பாய் புலமை பெற்றே

மடமையை வென்றிடுவாய்

பெண்ணே நீதான் ஜீவசக்தி

இதனை உணர்ந்து கொள்

புவியில் இதை நீ நிலைப்படுத்த

உன் நலம் பேணிக் கொள்

பழகும் ஆடவர் குணம் அறிந்திட

வேண்டும் எச்சரிக்கை – வாழ்வில்

எதையும் வென்று சாதித்திடவே

வைப்பாய் நம்பிக்கை

குட்டக் குட்ட நீ குனிந்தாலோ

உன்னை ஏய்த்திடுவார் – நீ

குனியும் நேரம் குனிந்தால்தானே

உன்னைப் போற்றிடுவார்

சமுதாயத்தில் உன் நிலை உயர்த்தி

சகத்தினை வென்றிடு – நீ

இழிசொல்லுக்கு ஆளாகாமல் நாளும்

இளமையாய் வாழ்ந்திடு

எத்துறையிலும் பெண்கள் என்ற

நிலை வந்தாலும் நீ

என்றும் ஆணின் அன்பின் கீழென

அனுசரித்தே வாழ்ந்திடு.

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *