’’தசாவதாவது அவதாரம் ”(கல்கி)….!
”க்ரேஸி” மோகன்
”நீ சொல்வது மெய்யாலுமே நிஜமா?….எங்கே தில்லிருந்தால் கற்பூரத்தைக் கொளுத்தி உள்நாக்கில் ஒரு மணி நேரம் ஊற வைத்து எச்சப்பண்ணாம அணைத்து முழுங்கு….மேல் துண்டைப் போட்டு அது மிதி படாமல் பின்பக்கமாக எகிறித் தாண்டு ” என்றெல்லாம் சில்லறைத்தனமான சத்தியங்களைச் செய்யச் சொல்லி என்னை சிரம தசைக்கு ஆளாக்காமல் நான் சொல்லப் போகும் இந்தக் கதையை….IN FACT இது கதை கூட அல்ல….ரகசியம்!….அதுவும் தேவ ரகசியம்!….வெயிட்டாகச் சொல்லப் போனால் இந்த தேவ ரகசியத்தோடு ஒப்பிட்டால் அந்த ”தங்க மலை ரகசியமே” தண்டோரா போட்டு தெருத் தெருவாக சொல்லும் அளவுக்கு சொத்தையாகி விடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்….”தாது புஷ்டியான பீடிகை போதும் ” என நீங்கள் கிசுகிசுப்பது என் காதில் குடைகிறது….பலான ரகசியத்திற்கு வருகிறேன்….
சில பல வருட மாத நாட்களுக்கு முன்பு (உண்மைக் கதையில் நாள், கிழமை ,தேதி, திதி கமிட் செய்யாமல் இருப்பதே உத்தமம்) த்ரில்லர், க்ரைம், ஹாரர், செக்ஸ் படங்களாகப் பார்த்துப் பார்த்து கற்பிழந்து கிடந்த எனது டி.வி.டிஐ மடியாக்க ”திருமால் பெருமை”, ”திருவிளையாடல்”, ”ஸ்ரீ சக்கிரதாரி” போன்ற பக்திப் படங்களைப் போட்டு (எனது வேலூர் பாட்டிக்காக பிரத்யேகக் காட்சிகள்) வயதான கிழங்கள் சமேதராகப் பார்த்தேன்…. ஏதோ ஒரு தெலுங்கு டப்பிங் படத்தின் இறுதிக் காட்சியில், வெண் குதிரையில் ”வனமாலி கதி சார்ங்கி சங்கி ச நந்தகியாக” தசாவதாவது அவதார (கல்கி அவதாரம்) விஸ்வரூப தரிசனத்தை கேவலமான க்ராஃபிக்ஸில் ஒருவன் கொடுக்க ( நடித்த ராவ் ஜலமோகினியில் நால்வரை கற்பழித்தது வேலூர் பாட்டிக்குத் தெரியாது), வேலூர் பாட்டிக்கு உடம்பில் பெருமாள் ஆவேசம் வந்து விட்டது…. ” கண்ட கதைகளைப் படிக்கற…. கண்ட கதைகளை எழுதற…. கண்ட கண்ட சினிமாக்களை பாக்கற…. கடங்காரா… .கலி முத்திப் போச்சு…. கல்கி அவதாரம் எடுத்துதான் உங்களைக் கரையேத்தணும்…. போ…. பிரபந்தம் படி…. போ” என்று உச்சஸ்தாயியில் கத்திவிட்டு, ஒரு நிமிடம் மயக்கம் போட்டு, உடனே தெளிந்து, ஒன்றரை சொம்பு மோர் குடித்து விட்டு, ஒன்றுமே நடக்காதது போல தனது பேத்தியின் சீமந்தத்தைப் பற்றி பேச ஆரம்பித்தாள்….
வேலூர் பாட்டியின் பாதிப்பால் ஆழ்வார்கள் நாலாயிரத்துக்கு அண்ணங்கராச்சாரியார் எழுதிய நோட்ஸை எடுத்துக் கொண்டு நான் பன்னிரெண்டு திருமண் இட்டுக் கொண்டு பக்திப் பரவசத்தோடு பால்கனிக்கு ஓடினேன். தசாவதாவது.. அதாவது.. பத்தாவது அவதாரம் கல்கி பற்றிய ஆழ்வார் பாசுரங்களைத் தேடிப் பிடித்து படித்துக் கொண்டிருந்ததில் நேரம் போனது நினைவில்லை. மழைத்துளி மேலே பட்டு நிமிர்ந்த என்னைச் சுற்றி ஹிட்ச்காக்கின் மர்ம இருட்டு. அப்போது வானத்தில் ஈசான்ய மூலையில் பி.ஸி. ஸ்ரீராமின் காமிராவில் எபெக்ட் லைட்டிங் ஒன்று தோன்றி மறைந்தது. கூடவே ரஹ்மானின் எலக்ட்ரானிக் இடியோசை. அந்த ஒளியும் ஒலியில் கண் மூடித் திறந்த போது, பால்கனி விளிம்பில் பெருமாளின் மோகினி அவதார போஸில் ரவிவர்மா வரைந்தது போல ஒரு ஸ்திரி. சாதாரண ஸ்திரி அல்ல. மடிப்பு கலையாத இஸ்திரி… ஒரு மோனோலிஸா மந்தகாசத்தை உதிர்த்து விட்டு என்னைப் பார்த்து, “அஜஹ குஜஹ ஆகச்சதி கரிஷ்யாமி லம்போதர கோடீ ரோஜ்வல தாம்பூல ப்ரவசதி…” என்று புரியாத தேவநாகிரியில் சம்பாஷிக்கத் தொடங்கினாள். நான் முழிப்பதைப் பார்த்து முறுவல் பூத்து, “ஏ மனிதா! நான் சொல்லப் போகிறேன், கேள்..” என்று பால்கனியிலிருந்து குதித்து செந்தமிழுக்குத் தாவினாள்.
தான் ஒரு தேவ தூதி (தேவ தூதனுக்கு பெண் பால்) என்று பகர்ந்தவளின் பெயரைக் கேட்டதுக்கு, “மச்ச நாகேந்திர கச்சபர்லிகா; சொச்ச நச்ச கஜ தந்திர நாபிகா; பக்க லாவண்ய படுபுஷ்டி சாமுத்திரிகா” என்று ஆரம்பித்து ஏழு காண்டங்களுக்குக் குறையாமல் அரை மணி நேரம் ஒரு அமரகோசமே பாடினாள். இந்திரன் சபையில் மேனகா, ஊர்வசி, ரம்பா ஆடும்போது ‘அட்மாஸ்பியரு’க்காக ஆடும் ‘எக்ஸ்ட்ரா’ ஜாதி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“விக்ர மயூர விரக படீர காமகாசாம் புய…” என்று ஆரம்பித்து, அரை மணி நேரம் கழித்து முடியும் பெயர் கொண்ட கந்தர்வ காதலன் அவளைத் “தனபாக்யம்” என்று சுருக்கமாக செல்லமாக விளிப்பதாகக் கூறி என்னை வியப்பில் ஆழ்த்தினாள்.
ஊடலின் உச்சகட்டத்தில் ஓட்டை வாய் கந்தர்வ காதலன் கல்கி அவதாரம் பற்றிய தேவ ரகசியத்தை தனபாக்கியத்திடம் உளறிக் கொட்டியிருக்கிறான். என்னதான் தேவலோகத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் தனபாக்கியமும் கேட்ட ரகசியத்தை காப்பாற்றாமல் பரப்ப வேண்டும் என்ற அனிச்சை செயலின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட ‘ஆர்டினரி’ பெண்தானே!
தனபாக்யம் சொல்லக் கேட்டு நான் உங்களிடம் கூறப் போகும் இந்த தேவ ரகசியத்தை தயவு செய்து யாரிடமும் கூறி விடாதீர்கள்.
“சொன்னால் எங்கள் தலை வெடித்து ஆயிரம் சுக்கல்களாக சிதறும்” என்று விடாமல் விட்டலாச்சார்யா படம் பார்த்த பாதிப்பில் நீங்கள் நினைப்பது என் வலது ஞானச் செவியில் விழுகிறது.
பி.எஸ். வீரப்பா பாணியில் புருவத்தைப் பர்பண்டிகுலராக கண்ணையே குத்தும் அளவிற்கு நிமிர்த்தி, ஒரு ரீல் ஓடும் நேரத்திற்கு எக்காளமாக சிரித்து விட்டு சொல்கிறேன்: “உங்கள் நினைப்பு தவறு . நீங்கள் நினைப்பது போல தேவ ரகசியத்தை சொன்னவன் தலையை வெடித்துச் சிதறுவது துவாபரயுகத்தோடு சரி. கலியுகத்தை பொறுத்தவரை ரகசியத்தை சொன்னவன் தலைக்கு பதிலாக கேட்டவன் தலைதான் ஆயிரம் சுக்கல்களாக வெடித்துச் சிதறுமாம். பத்தாத குறைக்கு ரகசியம் கேட்டவன் ரெட்டை மண்டைக்காரனாக இருந்தால் ரெண்டாயிரம் சிக்கல்கள். தேவலோகத்தில் சிலபஸ் இப்போது வெகுவாக மாறி விட்டதாம். நான் சொல்லவில்லை. தனபாக்யம் சொல்கிறாள். ‘என்ன எழவுடா இது.. நீ சொல்லப் போற ரகசியத்தைக் கேட்டு தலை வெடிச்சு கபால மோட்சம் (மோட்சமா? நரகமா? தனபாக்யம்கிட்ட கேட்டியா?) எங்களுக்கு கிடைக்கும்கறது தெரிஞ்சும் மூதேவி மகாகாரியமா ஏன் எங்ககிட்ட சொல்ற? எங்கள்ள யார்கிட்டயானு கடன் வாங்கியிருக்கியா?” என்று நீங்கள் நினைப்பது எனது இடது ஞானச் செவிக்குக் கேட்கிறது.
“நான் என்ன பண்ணுவேன்? ஏற்கனவே எனக்கு கந்தர்வக் காதலன் மாதிரி ஓட்டை வாய்.. இந்த ரகசியத்தை இத்தனை நாள் பாதுகாத்து பாதுகாத்து எம் மண்டை வெடிச்சுடும் போலிருக்கே. இது எப்படி? ரகசியத்தை சொன்னாலும் சொல்லாட்டாலும் மண்டை வெடிக்கப் போறது என்னவோ என் விஷயத்துல நிச்சயம். நம்ம ரெண்டு பேர் மண்டையும் வெடிக்காது. ஏன்னா அந்த தனபாக்யம்கிட்ட என் தலை வெடிக்காதுன்னு வரத்தை அவ என் தலையில அடிச்சு சத்தியமா வாங்கிண்டதுக்கப்புறமாத்தான் ரகசியத்தையே கேட்டேன். உங்க தலைக்கு வருவோம். ரகசியத்தை நான் செல்லி நீங்க கேட்டாத்தானே மண்டை உடையும். நான் எழுதி மனசுக்குள்ளதானே நீங்க படிக்கப் போறீங்க. அப்புறம் என்ன பயம்? தைரியமா படியுங்க. மேலும் இதைப் படிக்கற ஆண்களில் யார் சம்சாரமாவது உம்மனாமூஞ்சியா இருந்து நீங்க எது செஞ்சாலும், ‘வந்து சேர்ந்தேளே, நீங்க அடிக்கற கூத்தைப் பாக்கறதை விட பேசாம நிம்மதியா உங்களுக்கு முன்னாடி சுமங்கலியா போயிடலாம்’ அது இதுன்னு ப்ளாக் மெயில் பண்ணற பட்சத்துல மனசை கல்லாக்கிண்டு, காதும் காதும் வச்சா மாதிரி இந்த ரகசியத்தை சம்சாரம்கிட்ட சொல்லிடுங்க. அவ ஆசைப்படி சுமங்கலியாவும் போயிடலாம். உங்க விருப்பப்படி தலை வெடிச்சு சுக்குநூறாவும் போயிடலாம்.
எப்படி வசதி? என்ன ரகசியத்தைக் கேக்காமலேயே யார் யார் கிட்டல்லாம் ரகசியத்தைச் சொல்லலாம்னு லிஸ்ட் எழுத ஆரம்பிச்சாச்சா? வர தீபாவளிக்கு வேண்டாத நரகாசுரன்களையெல்லாம் வரவழச்சு நான் சொல்லப் போற ரகசியத்தை அள்ளி வுடுங்க.
சிங்கம், புலி மார்க் மாதிரி தனபாக்யம் மார்க தேவ ரகசிய வெடி திரி கிள்ளாம வச்சா வேண்டாதவங்க மரிமரி உங்க முன்னே.. தேவ ரகசியத்துக்கு வருவோமா? கமா, புள்ளி நீங்கலாக தனபாக்யம் சொன்னதை அப்படியே அச்சுப்பிழை இல்லாம சொல்றேன். கேளுங்க. ஸாரி… படியுங்க.
கந்தர்வக் காதலன் உவாசிச்சதை தனபாக்யம் உவாச: (உவாச என்றால் உரைத்தல்)
படைக்கும் கர்த்தா பிரம்ம தேவர் தலைமையில் பாற்கடலில் அன்று நாங்கள் – அதாவது இந்திரனில் தொடங்கி என் வரை (என் கந்தர்வக் காதலன் கடைசி ‘ரோ’) உள்ள முப்பது முக்கோடி தேவர்கள் தம்பூரா நாரதர், தர்பை வசிட்டர் உட்பட முப்புரி நூல் முனிவர்கள், அசுர கணங்கள், ஈரெட்டு திக்கு அஷ்ட ப்ளஸ் டூ பாலகர்கள் (தென்மேற்கு, வடகிழக்குக்கெல்லாம் புதிதாக இப்போது பாலகர்களை போஸ்ட் செய்து இருக்கிறார்களாம்). காமதேனு, கற்பக விருட்சம்… அது தவிர மண்ணிலிருந்து சொர்க்கம் எய்திய மகாத்மா காந்தி, நேரு, மோகனின் தாத்தா கூடினோம்.
திருமகள் பாதம் வருட, கருநாகம் குடை பிடிக்க, முகில் வண்ணன் கொண்டையா ராஜு போஸில் துயில் கொண்டு இருந்தார். “எங்கள் நாராயணா!” சப்தம் கேட்டு முகுந்தன் தனது மோனத் துயிலைக் கலைத்து கண் மலர்ந்தான்.
“பிரம்மதேவா… என்ன இது கும்பல், அமளி? இவ்வளவு பேரும் நின்று பாற்கடலைக் குடைந்து தயிர்க்கடலாக ஆக்கி விடுவீர்கள் போலிருக்கிறதே!” என்று கோகுல கிருஷ்ணன் என்.எஸ். கிருஷ்ணன் ஸ்டைலில் விஷமமாக விட்டடித்தார்.
“பிரபோ! நாராயணா! ஸம்பவாமி யுகே…யுகே! இது நீ அளித்த உறுதி இல்லையா? எப்போ தர்மம் தாழ்ந்து அதர்மம் தலையெடுக்குமோ, அப்போதெல்லாம் அவதாரம் எடுத்து பூவுலகை ரட்சிப்பேன்’ இது உன் வாக்கன்றோ! இதை மறந்து நீ கண் அயருதல் முறையோ?” என்று நான்கு தலைகள் மோதும் அவஸ்தையைக் கூட பொருட்படுத்டாமல் ஆவேசமாக புலம்பினான்.
“பிரம்ம தேவா, பூவுலகில் தர்மத்திற்கு வந்த அபாயம் என்ன? அதர்மம் புரியும் அசுரன் யார்? ராவணனா, துரியோதனனா, பஸ்மாசுரனா இல்லை சிசுபாலனா? சொல்” என்று கேட்ட பகவானின் முகத்தில் பத்து அவதாரம் எடுத்த அலுப்பு தெரிந்தது.
”கோபாலா! இது வரை நீ பார்த்து அழித்த அதர்மங்கள் உருவங்களாக இருந்தன. ஆனால் கலியுகத்தில் அவை அருவங்களாக உள்ளன. பொய், புனை, வஞ்சம், சூது, சுருட்டு, பீடி, கஞ்சா, அபின்… அடுக்கிக் கொண்டேப் போகலாம். மொத்தத்தில் பூலோகத்தில் “மனிதர்கள் ஜாக்கிரதை” என்று பலகை தொங்க விட வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது” என சரஸ்வதியின் புருஷன் சளைக்காமல் பேசினார்.
அனந்தசயனன் அலைமகளைப் பார்த்து விஷமமாக சிரித்து விட்டு, “படைக்கும் கர்த்தாவே, இதுவரை எல்லா யுகங்களிலும் உன் படைப்பில் ஏற்பட்ட சிறு தவறுகளால் தோன்றிய அசுரர்களை அழிக்க அவதாரம் எடுத்தேன். ஆனால் கலியுகத்தில் நீ தவறுகளைப் படைப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளாய். நான் என்ன செய்வது? என்று கேட்ட கேள்விக்குப் பதில் தெரியாமல் பிரம்மா பரப்பிரம்மாவானார்.
நல்ல சமயத்தில் நாரதர் முன் வந்து, “நாராயணா, நீ எடுக்கப் போவதாக இருந்த தசாவதாவது அதாவது பத்தாவது அவதாரமான ‘கல்கி’ அவதாரத்தை ஏன் இன்னும் எடுக்காமல் இருக்கிறாய்? இதுவே தக்க தருணம்.. ‘கல்கி’ அவதாரம் எடுத்து கலியுகத்தைக் காப்பாற்று” என்று நினைவுபடுத்தினார்.
அழகிய வெண் புரவியில் அமர்ந்த படைவீரனாக, தான் எடுப்பதாக இருந்த ‘கல்கி’ அவதாரம் பகவானின் கண்களில் ‘ப்ளாஷ் பேக்’காக தோன்றி மறைந்தது. “பிரம்ம தேவா, இன்றிலிருந்து பத்து நாட்களுக்குள் ஒரு நல்ல நாளாக பார்த்து குறித்து வை. அன்று நான் கல்கி அவதாரம் எடுக்கு பூலோக பிரவேசம் செய்யப் போகிறேன்” பத்மனாபனின் குரல் பாஞ்ச சன்யமாக ஒலித்தது.
பிரம்ம தேவன் குறித்த நாளும் வந்தது. பெருமாளின் பூலோக பிரவேசத்தைப் பார்க்க எல்லோரும் வைகுந்தத்தில் ஆஜர் ஆனார்கள்.
ஆதிசேட மெத்தையைச் சுருட்டி வைத்து விட்டு, அலர்மேல் மங்கையிடம் அரிமுகுந்தன் சிறிது தாமதித்தான்.
” ராமாவதாரத்தில் கோசலையின் குமாரன்; கிருஷ்ணாவதாரத்தில் அரசி – வசுதேவியின் மகனாய்ப் பிறந்து ஆய்ச்சி யசோதையின் மகனாய் வளர்ந்தேன். கலியுகத்தில் யாருக்கு குழந்தையாய் பிறப்பது?” கண்ணனின் முகத்தில் கேள்விக்குறி. பூமியை உற்றுப் பார்த்து விட்டு உற்சாகமாக திருவாய் மலர்ந்தான்.
“பிரம்மதேவா! நான் எடுக்கப் போவது ‘கல்கி’ அவதாரம் வெண்குதிரையில் ஏறி வினைகளை வேகமாக விரட்டப்போகும் வீரன். அங்கு பார்”
கண்ணன் காட்டிய இடம் கிண்டி ரேஸ் கோர்ஸ்! பலத்த கரகோஷத்திற்கு நடுவே ஒரு வெண்குதிரையில் அமர்ந்து அன்றைய ஜாக்பாட் வீரன் ஜெயபால் ரேஸ் மைதானத்தை வளைய வந்தான். பகவானின் சித்தம் பிரம்மதேவன் பக்கம் நின்ற சிவனுக்கே புரியவில்லை!
“பிரம்மதேவா! நீ பார்த்தாயே இப்போது ஜெயபால், வெண் குதிரை வீரன், அவன்தான் எனது ‘கல்கி’ அவதாரத் தந்தை. ஆம் – அவன் மனைவி சுதா என் தாய். இன்று நான் சுதாவின் வயிற்றில் அணுவிலும் சிறிய கருவாக நுழையப் போகிறேன். இன்றிலிருந்து பத்தாவது மாதம் சுதா என்னைப் பெற்றெடுப்பாள்” பகவான் கூறி முடித்து மூவுலகையும் அளந்த தன் உருவை அணுவாக மாற்றிக் கொண்டான்.
விண்ணுலகில் “நாராயணா” கோஷம் அதற்கு மேல் உள்ள உலகை பிளந்தது! மகாவிஷ்ணு என்ற தத்துவம் ”கடவுள் துகள்(BIG BANG THEORY) அணுவாகி” சுதா ஜெயபால் குடியிருக்கும் மயிலாப்பூர் வீட்டை நோக்கி விரைந்தது.
ஜாக்பாட்டில் பெற்ற வெற்றியைக் கொண்டாட ஜெயபால் மனைவி சுதாவுடன் சயன அறைக்குள் நுழைந்தான். அறைக்கதவை ஜெயபால் மூடினான். திருமால் அணுவாக சாவி துவாரம் வழியாக சயன அறைக்குள் நுழைந்தார். உணர்ச்சி வசப்பட்டு வழக்கம் போல பூமாரி பொழிய வந்த தேவர்களாகிய எங்களை பிரம்மா ‘உஷ்’ என்று தடுத்து நிறுத்தினார்.
சயன அறைக்குள் சுதா நைலக்ஸ் புடவையோடு சேர்ந்து நால்வகை குணங்களையும் களைந்தாள். சுதாவின் சிரிப்பு… ஜெயபாலுக்கு சிலிர்ப்பு. ‘அணுமால்’ அடி மேல் அடி வைத்து அவர்களை நெருங்கினார்.
திருமால் அருகில் இருந்ததால் சுதா தெய்வீகமாக முனகினாள். ஜெயபால் திவ்யமாகக் களித்தான். தேவர்கள் நாங்கள் டென்ஷனாக விண்ணுலக விளிம்பில் விரல் கடித்தபடி நின்றோம்.
சுதா ஜெயபால் இருவர் முகத்திலும் களைப்போடு கூடிய சந்தோஷம். இல்லை; பரிபூரண திருப்தி.
திருமாலின் அணுவைக் காணவில்லை! ஆம். அது அப்போது சுதாவின் வயிற்றில் கருவாக ஜொலித்தது. ‘கல்கி’ அவதாரம் ஆரம்பம். தேவர்கள் எங்கள் முகத்தில் சோமபான சந்தோஷத்தை உண்டாக்கியது. கல்கி அவதார ஆரம்பத்தைப் பார்த்த நாங்கள் அதன் வளர்ச்சியை ஞான பைனாகுலரால் பார்க்க முண்டியடித்துக் கொண்டு வானத்தில் ஒரு மேகம் விடாமல் வசதியாக அமர்ந்து கொண்டோம்.
அணுவாக நுழைந்த திருமாலின் கரு சுதாவின் வயிற்றில் சிசுவாக விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.
அன்று ரேஸ் கிடையாது. வீட்டுக்குள்ளே இருந்த ஜெயபாலை மயக்கம் போட்டு உசுப்பினாள் சுதா. மயக்கம் தெளிந்தவள் வெண்ணெயாக வாந்தி எடுத்தாள்.(வயிற்றில் உள்ளவன் கண்ணன் அல்லவா) திருமாலின் பிரதிபலிப்பு சுதாவின் முகத்தில் நீலமாக பாரித்தது. இது அறியாத ஜெயபால் டாக்டரைப் பதறியபடி வரவழைத்தான்.
சுதாவின் கையைப் பிடித்து நாடி பார்த்த லேடி டாக்டரின் கண்களில் சினிமா டாக்டர் மலர்ச்சி தோன்றியது. ஜெயபால் அப்பாவாகப் போகும் சேதியை லேடி டாக்டர் வழக்கம் போல் கண்ணாடியைக் கழற்றி விட்டுக் கூறினாள். திருமாலின் கரு வளர்ச்சியைக் கேட்ட தேவர்களாகிய நாங்கள் கரகோஷம் செய்தோம்.
அன்று மாலை சுதாவும், ஜெயபாலும் லேடி டாக்டர் சந்தான லட்சுமி நர்ஸிங் ஹோமுக்கு சென்றனர். ‘எங்க வீட்டு பிள்ளை’ திருமாலின் தாய் தந்தையர் சம்பாஷணையை தேவர்களாகிய நாங்கள் ஞானக் காதால் கேட்கத் தீட்டிக் கொண்டோம்.
முதலில் சுதா, “அத்தான்.. இது ஒண்ணும் தப்பில்லையே?” என்றாள். “சேச்சே.. ரொம்ப சர்வ சாதாரணம் சுதா.. தோ பார்.. நமக்கு கல்யாணமாயி ஏழு மாசம் கூட ஆகலை.. இன்னும் நாம் அனுபவிக்க எவ்வளவோ இருக்கு.. இப்பப் போயி இடைஞ்சலா இது வேற சனியன்” என்று ஜெயபால் சுதாவின் வயிற்றைத் தொட்டுப் பேசினான்.
“குழந்தையைப் போய் சனியங்கறேளே.. நீங்க சொல்றது வாஸ்தவம்தான்.. இருந்தாலும் இது பாவமில்லையா?” – இது சுதா.
“பாவமாவது புண்யமாவது.. பெரிசா என்னவோ கிருஷ்ணரையே பெத்துடப் போற மாதிரியில்லே பேசற.. தைரியமா இரு. எல்லாம் ஒரு வருஷம் கழிச்சு பாத்துப்போம்.. எல்லாம் அன்னிக்கு நான் இருந்த ‘மூட்ல’ முன்னேற்பாடு இல்லாம இருந்துட்டேன்.. பரவாயில்லை விடு.. இடிமே நான் மறந்தாலும் நீ அதை ஞாபகப்படுத்து” ஜெயபால் காட்டிய திசையில் தடுப்பு சாதன விளம்பரம். சுதாவின் சிவந்த முகம் வெட்கத்தில் வெளுத்தது.
டாக்டர் சந்தான லட்சுமியின் நர்ஸிங் ஹோமுக்குள் அவர்கள் நுழைந்தனர். அவர்கள் பேசிய பேச்சு விஞ்ஞானத்தில் பின் தங்கிய தேவர்களாகிய எங்களுக்கு சுத்தமாக புரியவில்லை. தான் படைத்த மனிதனின் போக்கு பிரம்மதேவனுக்கே புரியவில்லை.
நர்சிங் ஹோமில் அவர்கள் ஒரு மணி நேரம் இருந்தார்கள். காலத்தைக் கடந்த தேவர்களாகிய எங்களுக்கே அந்த ஒரு மணி நேர சஸ்பென்ஸ் ஒர் கல்ப கோடி காலமாகப் பட்டது. முதன் முறையாக சொர்க்கத்தில் ஒரு நரக வேதனை.
நர்ஸிங் ஹோம் கதவு வைகுந்த வாசல் போல திறந்தது. ஜெயபால் சுதாவை கைத்தாங்கலாக அழைத்து வந்தான். சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி மயிலாப்பூருக்கு மிதிக்கச் சொன்னான். ரிக்ஷா நகர்ந்து சந்து பொந்தில் மறைந்தது.
என்ன நடந்தது என்பது புரியாமல் ஞானக் கண்களால் நாங்கள் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்தோம். சந்தான லட்சுமி நர்சிங் ஹோம் சன்னல் வழியாக எங்களுக்கு பரிச்சயமான ஒரு ஒளிப்பந்து (பாரதியார் பாஷையில் அக்னி குஞ்சு) விண்ணுலகை நோக்கி வாட்டத்துடன் வந்தது. ஆம், அந்த ஒளிப் பந்து… அக்னி குஞ்சு…கடவுள் துகள்….
எங்கள் அண்ணலின் கல்கி அவதார அம்பது நாள் கரு. இப்படியாக கருவிலேயே கலைந்தது ‘கல்கி’ அவதாரம்.
வைகுந்தம் வந்த விஷ்ணு பிரம்மதேவனைப் பார்த்து நரசிம்ம அவதார ஆவேசத்தில், “பிரம்மதேவா, இப்போது புரிந்து கொண்டாயா? கலியுகத்தில் நான் ஏன் கல்கி அவதாரம் எடுக்காமல் இருந்தேன் என்று. நீ படைத்த மனிதன் என்னை கருவிலேயே கலைத்து அனுப்பி விட்டான்” விஷ்ணுவின் வதனத்தில் சீதையைப் பிரிந்த சோகம் தெரிந்தது.
“பிரம்மதேவா! அவதாரம் எடுப்பது எனக்கு பெரிதல்ல. ஆனால் அவதாரங்களின் பெற்றோரைப் படைப்பதில் நீ ஒத்துழைக்க வேண்டும். இராமாவதாரத்தில் என் அவதார அன்னையாக இனியவள் கோசலையைப் படைத்தாய். கிருஷ்ணாவதாரத்தில் என் தாயாக நல்லவள் வசுதேவியையும், என் வளர்ப்புத் தாயாக களங்கமில்லா ஆச்சி யசோதையையும் படைத்தாய். ஆனால் கலியுகத்தில் நீ படைத்ததெல்லாம் சுதா, போன்ற குழந்தைகள். முதலில் நான்முகரே நீங்கள் அன்னையைப் படைப்பீர்கள்…. அவர்கள் குழந்தைகளைப் படைப்பார்கள்…. எனக்கு கோசலையைப் போல், வசுதேவி போல், யசோதையைப் போல் ஒரு தாயைப் படைத்து பூலோகத்தில் உலவ விடுங்கள்…. அதன் பிறகு கல்கி அவதாரம் பற்றி பேசுங்கள்” உணர்ச்சிப் பெருக்கில் பேசி விட்டு உலகளந்தவர் ஆதிசேட மெத்தையைத் தட்டிப் போட்டு அமர்ந்தார்….!
பிரம்ம தேவன் வெட்கத்தால் தனது நான்கு தலைகளும் குனிய தேவர்களாகிய எங்களோடு வைகுந்தத்தை விட்டு விலகினான்.
மறுபடி பழையபடி திருமகள் பாதம் வருட, கருநாகம் குடை பிடிக்க, கார்முகில்வண்ணன் கண்களை மூடி முடிவில்லா யோகமாம் நித்திரையில் மூழ்கினான்….கிரேசி மோகன்….!
——————————————————————————————————————————————————————————————————————————–

