-மேகலா இராமமூர்த்தி

 

boomboom maadu

அழகிய அலங்காரத்தோடு பூம்பூம் மாடும் அதனருகே மாட்டுக்காரரும் நிற்கும் இக் காட்சியைப் படம்பிடித்தவர் திருமதி. பவளசங்கரி. இப்படத்தைப் படக்கவிதைப்போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். வல்லமைமிகு பெண்மணிகள் இவ்விருவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

தன் வயிற்றுப்பாட்டுக்காக மாட்டோடு அலைந்து திரியும் மனிதனைக் காண்கையில் மனம் வேதனையில் கனக்கின்றது. மாடே செல்வமாய் இருந்த அன்றைய நிலைமாறி, மாட்டை அலங்காரப்பொருளாக்கி மனிதன் பொருள்தேடும் அவலநிலை இன்று! காலம்போடும் கோலங்கள்தாம் எத்தனை எத்தனை!

இனி, இப்படத்துக்குக் கவிபாடக் காத்திருக்கும் கவிஞர்களை வாழ்த்தி வரவேற்கின்றேன்!

ஒல்லும் வகையெல்லாம் அறவினை செய்யவேண்டும் என்றார் வள்ளுவர். வாயில்லா சீவனோடு தன் வயிற்றுப்பாட்டுக்குப் போராடும் இம்மனிதனின் துயர்தீர்க்க உதவுவதே உண்மையான மனிதநேயம் என்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

பூம், பூம் மாட்டுக்காரன் வாசலில் வந்து நின்றான்
வீடுதோறும் நல்ல சேதி சொல்லி அழைத்தான்
வளர்க்கும் காளை மாட்டிற்கு அலங்காரம் செய்தான்!
அதனை வீட்டில் உள்ளவர்க்கு வணக்கம் செய்ய சொன்னான்!
நிலம் காய்ந்து போனதால் பிழைப்புத் தேடி மாட்டுடன் செல்கின்றான்!
கால் வயிற்றுக் கஞ்சி குடிப்பதற்கு அதனை காட்டி பிழைக்கின்றான்!
ஈட்டிய பொருளில் தானும் உண்டு அம்மாட்டினையும் காக்கின்றான்!
நல்லெண்ணம் கொண்டு அவன் கூறுவதைச்சற்றே நம்புகின்றான்!
அவன் கேட்பதோ பழம் துணியும், சிறிது அரிசியும், பணமும்
அவன் வந்ததைக் கண்டு நாய் விரட்டுவது போல் அதிகாரமும்,
கடன்காரனைப் பார்த்தது போல் அவனை விரட்டி அடிப்பதும்,
ஏனோ முன் ஜென்மத்தில் பயனாய் நம்மிடம் கையேந்தி நிற்பதும்!
அவனும் மனிதன்தான் என்ற எண்ணம் வேண்டும்
மனிதநேயம் கொண்டு அவன் குறை தீர்க்கவேண்டும்
அவன் நிலைகண்டு உதவ முன்வர வேண்டும்!
அந்த ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணவேண்டும்!முடிந்த வரையில் பிறர்க்குக் கொடுத்து உதவ வேண்டும்
உனது தர்மம் சிறிது எனினும் பின் உன் தலைமுறையைக் காக்கும்
ஒல்லும் வகையான் அறத்தை செய் என்கிறார் வள்ளுவர்
ஒரு மனிதனும் வாயில்லா ஜீவன் வாழ்கிறது என நினைக்கவேண்டும்!

*****

”சின்னப்பிள்ளைகள் மனமகிழ்ந்து சிரிக்கும்படிப் பூம்பூம் மாட்டோடு அலைந்து திரியும் மனிதனின்  பசி போம்படி அவன் வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

எல்லாமே…

மன்னர் வேடம் போட்டால்தான்
மறுநாள் உண்ண வழிபிறக்கும்
தன்மை எங்கும் பொதுவேதான்
தாங்காப் பசியை ஆற்றிடத்தான்,
தின்ன உணவு தேடியேதான்
தெருவி லெங்கும் அலைவதுவும்,
சின்னப் பிள்ளைகள் மனமகிழ்ந்து
சிரித்திட பூம்பூம் மாட்டுடனே…!

*****

”வீட்டுவாசலில் நல்வரவை நோக்கும் மாந்தருக்கு நல்வார்த்தை சொல்லும் மனிதர் யாம்; எல்லாருக்கும் நல்வாக்கைச் சொல்லும் எமக்கு என்றுதான் அமையும் நல்வாழ்க்கை?” என்று கழிவிரக்கத்தோடு மொழியும் பூம்பூம் மாட்டுக்காரனைக் காண்கின்றோம் பெருவை திரு. பார்த்தசாரதியின் கவிதையில். 

மங்களேஸ்வரி மங்களமா அருள்வா..பூம் பூம் மாட்டுக்காரன்

கற்பனைவளத்தோடு கல்லிலே கலைவண்ணம் காட்டி
—கல்லையும் பேசச்சிரிக்க வைத்தான் தம்கைத்திறத்தால்!
வாழும்கலையறிந்து கலாசார வழியறிந்து வகையாய்
—வாயில்லா ஜீவனையும் பேசவைத்தான் தன்சைகையால்!

அரிய பழந்தமிழ்க் கலையாய் பூம்பூம் மாடுண்டு!
—அருகிவரும் கலையாக ஆனதுவு மெங்கள்கலையே!
அலங்கார ஆடையுடன் ஆரூடம் சொல்லும்ஜீவன்!
—அருங்கலை வளர்க்கும் மாட்டை வாங்கவிற்கமுடியாது!

மக்களப்பெத்த மவராசி!..புள்ளயப்பெத்த புண்ணியவதி!
—மங்களேஸ்வரி வந்துருக்கா! மங்களமாவுன வாழ்த்துவா!
பாட்டுடன் இதுபோல வீடுவீடாய்ச்சென்று நற்குறிநல்கும்
—மாட்டுடன்பேசும் மனித நேயமுடையது ஆதியனெனுமினம்!

குலத்தொழிலாய்க் குறிசொல்லிக் குடும்பம்பல காப்பதற்கு..
—கொடுப்பதையே தானமாய்ப்பெறக் கொம்புடன் பழக்கினான்!
வீடுவீடாய்ச் சென்றுதலையாட்டி வித்தைபல காட்டி..
—விருப்பமுடன் மனமுவந்து மனிதருடன் பேசவைத்தான்!

நல்லகாலம் வருமென நல்வார்த்தை சொல்வோம்யாம்!
—வாழ்க்கை விளிம்பிலேயே வாழ்நாள் முழுதும்நின்று..
வீட்டுவாசலில் நல்வரவை எதிர்நோக்கும் மனிதர்களுக்கு..
—வாழ்வியல் நலம்சொல்லும் நல்லமனிதர்கள் நாங்கள்!

சிற்றன்னைக் கொடுமைபோல் பலகாலம் நாங்களும்
—இயற்கையன்னை பரிவின்றி எம்ஜீவனுக்கு வழியில்லை!
அடிமாடாய் ஆகாமல் அரசுதானதைக் காக்குமா..?
—ஆண்டியாய்த் திரியுமெங்கள் வேதனை யாருக்கும் புரியுமா?

குடும்பமுண்டு ஆனால் குடும்பஅட்டை இல்லை?
—வாக்குரிமையுண்டு வாக்காளர் அட்டை இல்லை?
மரபுசார்ந்த யெம்வாழ்வின் மேலரசுமனம் வைக்குமா?
—தனிக்கவனம் செலுத்த தலைசாய்க்குமா அரசு..?

ஐந்தறிவில் பூம்பூம் மாடுனக்குக் கலையில் பங்குண்டு!
—ஆறறிவில் பூம்பூம்மாடெனப் பட்டம் பெற்றவருமுண்டு!
அனைத்துக்கும் ஆம் இல்லை தெரியுமானால்..
—அருங்கவிதைக் கேள்விக்கும் பதில்சொல் மங்களேஸ்வரி!

*****

பூம்பூம் மாட்டுக்காரனின் பசிப்பிணி போக்கவும், அவன் வாழ்வில் மகிழ்ச்சி பூக்கவும் தம் கவிதைகளில் அக்கறையோடு குரல்கொடுத்திருக்கும் கவிஞர்களுக்கு என் நன்றியும் பாராட்டும்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

நல்ல சேதி

கல்யாணச் சேதி சொல்ல காளை வந்தது!
கழுத்தில் தாலி ஏறும் வேளை வந்தது!
மாப்பிள்ளை காசு கேட்டதால் கல்யாணம் நின்றது!
கல்யாணச் சந்தையில் மாப்பிள்ளை பாருங்கள்!
பிள்ளையை விற்கும் பெற்றோரைப் பாருங்கள்!
தன்மானம் விற்று, சன்மானம் கேட்கின்ற விபரீதம் பாருங்கள்!
பிள்ளையின் படிப்பும், வேலையும் சந்தைப் பொருளான
சங்கடம் பாருங்கள்!
கரும்புதின்னக் கூலி கேட்கும் கேவலம் பாருங்கள்!
வரதட்சணை உங்களை,
மனைவி பேச்சுக்குத் தலையாட்டும்
பூம் பூம் மாடாய் மாற்றிய அவலம் பாருங்கள்!
வரும் காலத்தில் வரதட்சணை எனும் வார்த்தைக்குத்
தடை விதியுங்கள்!
பெண்ணின் இதயத்தைத் தட்சணையாய்க்
கேட்டிடுங்கள்!
உங்கள் அன்பைப் பெண்ணுக்குக் கைம்மாறாய்க்
கொடுத்திடுங்கள்!
இனி வரும் நாட்களில் பூம் பூம் மாடுகள்
கல்யாணச் சேதி சொல்லும்!
வரதட்சணை வேண்டாம் , வாழ்க்கைத் துணை
போதும் என்று சொல்லும் இளைஞர்களின்
புகழ் சொல்லும்!

”பூம்பூம் மாடுகள் சொல்லும் சேதிகள் மாறட்டும்!
திருமணச் சந்தையில் தன்மானம் விற்றுச் சன்மானம் கேட்கும் கேவலம் ஒழியட்டும்! தட்சணை வேண்டாம்; வாழ்க்கைத்துணையின் காதல் இதயமே போதும் என்றுகூறும் உத்தம இளைஞர்களின் இனிய புகழைப் பூம்பூம் மாடுகள் நித்தம் பேசட்டும்!” எனும் உணர்ச்சிமிகு வரிகளால் தன் கவிதையை மிளிரச் செய்திருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 115-இன் முடிவுகள்

  1. நான் “நல்ல சேதி ” என்ற தலைப்பில் எழுதிய இந்த
    கவிதையை, இந்த வாரத்திற்கான சிறந்த கவிதையாக தேர்வு செய்த திருமதி மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும், வல்லமை ஆசிரியருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *